நூற்றாண்டு அநீதியை ஒழித்த பெரியார் இயக்கம்!
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். அன்னூர் நல்லிச்செட்டிபாளையத்தில் நடந்த போராட்டம் குறித்த கட்டுரை. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள சுற்றுவட்ட கிராமங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வந்தன. பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத் தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக் குவளை முறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத் தடை, பொது சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரை புதைக்கத் தடை, மோட்டார் பைக் ஓட்டத் தடை என விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியிருந்தனர். 2000-க்குப் பிந்தைய நவீன உலகிலும்கூட இத்தகைய ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை சகித்துக்கொள்ள முடியாமல், இவற்றுக்கெதிராகப் போராட வேண்டுமென்ற எண்ணம் அங்குள்ள நல்லிசெட்டிபாளையம் பகுதி இளைஞர்களுக்கு ஏற்பட்டது. ஈஸ்வரன், ஜோதிராம், ராமன்...
