பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்–தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு உரை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.9.2025 அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகையில் “தந்தை பெரியார்தரணிமயமாகி விட்டார்” என்று உணர்ச்சிமேலிடக் குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:– பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்போது புளகாங்கித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் நிற்கிறேன்! இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.கழகத்தின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்கின்ற கம்பீரத்துடன் உங்கள் முன்னால் நான்நின்று கொண்டிருக்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்தப் படத்திறப்பு விழா!
பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக, அவருடைய படத்தைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம் இது! மனித உரிமையின் அடையாளம்! உலக அடையாளம்! அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாகும்!
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!
சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற எனக்கு, இதைவிடப் பெருமை எதுவும் இருக்க முடியாது. பெரியாருக்கு உணவு பரிமாறிய பெருமை எனக்குண்டு!தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவருக்கு உணவு பரிமாறிஇருக்கிறேன். இதைச் சொல்லும் போதே எனக்கு பெருமையாக இருக்கிறது!
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய பெருமை!
இங்கிலாந்தில் இருக்கின்ற செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி! நினைத்துப் பார்க்கிறேன்…1983 செப்டம்பர் 21ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!
தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை! “உலகத்தில் எந்த அகராதியைக் கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது” என்று சொன்னார் தந்தை பெரியார். “ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றி பெற்றிடுவான்” என்று சொன்னார்.
அதுமட்டுமல்ல, “உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதை தான்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.
மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும், மனநிறைவும் நான் பெறுகிறேன்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும், பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.இரா.வெங்கடா சலபதி அவர்களும், பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆய்வு செய்த பேராசிரியர் எஸ்.ஆனந்தி அவர்களும் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார்கள்.
இந்த விழாவுக்கு மகுடம் சேர்க்கின்றது போல, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர்ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களும், முனைவர்கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து உருவாக்கியிருக்கக் கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூல் வெளியீட்டு விழா அமைந்திருக்கிறது. இதை வெளியிடுகின்ற பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கிறது! பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதன் அடையாளம்!
இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுடைய முயற்சியால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகி விட்டார் என்பதன் அடையாளம்தான் இது!
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!
பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால்,அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னவென்றால்
சுயமரியாதை
பகுத்தறிவு
சமதர்மம்
சமத்துவம்
மானுடப்பற்று
இரத்த பேதமில்லை
பால் பேதமில்லை
சுய முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றம்
சமூகநீதி
மதசார்பற்ற அரசியல்
அறிவியல் மனப்பான்மை
– என்று பெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக் கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!
இந்தச்சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார். பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை! அவற்றை நான் சொல்லவேண்டும் என்றால், முதலில், சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது.
இரண்டாவது, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும்,பூமியும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும்.
மூன்றாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும்.
நான்காவது, ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்.
மக்கள் சுயமரியாதையுடன் வாழ, இறுதிக்காலம் வரை போராடியவர் தந்தை பெரியார்!
ஐந்தாவது, அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாகப் பயன்படுத்தவேண்டும்.
ஆறாவது, யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.
இதையெல்லாம் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதனால்தான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை என்று சொல்கிறோம்.
பழமைவாதம் நிரம்பிய மண்ணில் எழுச்சி பெற வைத்தவர்!
இவ்வளவு முற்போக்கான கருத்தியல்களை, நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, அதுவும் பழமைவாதங்களும், மூடநம்பிக்கைகளும் நிரம்பியிருக்கின்ற மண்ணில் பேசி, மக்களை எழுச்சி பெற வைத்தவர் தந்தை பெரியார்!
சுயமரியாதை இயக்கத்தை அவர் சாதாரணமாக தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்தார். உலகம் எப்படி இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சொன்னார்! தமிழ்நாடும் தலைநிமிர்ந்தது! அதனால்தான் அவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் உலகப் பயணங்களை சுருக்கமாக பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் என்றால், 1929–ல் – மலேசியா, சிங்கப்பூருக்கும்
1932–ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல்,சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழுவதும் பயணம் செய்தார். அப்போது, இந்த இங்கிலாந்து நாட்டில், ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். இங்கேதான், கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் எழுதிய ‘மதம்’ என்ற நூலை வாங்கினார்.
இங்கே இருக்கின்ற பார்ன்ஸ்லேவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலாகப் பேசினார். அந்தக் கூட்டத்தில் இருந்த நிறையபேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவர்கள். அப்போதும் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் ஆட்சி.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழிலாளர் நட்பு ஆட்சியை நடத்துவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் தொழிலாளர்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறீர்கள்” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தத் துணிச்சல்தான் தந்தை பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என்று எல்லோராலும் நினைக்கப்படுகிறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!
அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு” என்று சொன்னார் தந்தை பெரியார். அறிவியல் மனப்பான்மையை விதைத்தார் பெரியார்!
வெறும் நம்பிக்கையை கண்டுபிடிப்பாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்லி, எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார். எல்லாவற்றுக்கும் விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். எதையும் லாஜிக்கலாக அணுகவேண்டும். இந்த அறிவியல் சிந்தனை யைத்தான் பரப்பினார்; அறிவியல் மனப்பான்மையைத்தான் அவர் விதைத்தார்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அத்தனை அறிவியல் மாற்றங்களையும், ‘இனிவரும்உலகம்’ என்று தொலைநோக்குப் பார்வையுடன்சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார்.
பெரியார் முழக்கம் இதழ் 11092025
