எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!
பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.
சுயமரியாதை இயக்கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்கினாலும், சுயமரியாதைச் சிந்தனையானது பெரியாருக்கு இளமைக் காலத்திலேயே வந்துவிட்டது. அவர் அப்போதே அப்படித்தான்! அவருடைய சுயசரிதையை கொஞ்சம் பார்த்தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்சிகள் புரியும்!
ஆதிக்க ஜாதியினர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் அவமானப்படுத்தப்பட்டதும், தாழ்த்தப்பட்டோர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் சொந்த வீட்டில் அவமானப்படுத்தப்பட்டதும் சிறிய வயதிலேயே அவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயதிலேயே, 13 வயது பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்து விட்டார். மறுமணத்துக்கு குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதையெல்லாம் மீறி, அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைத்தார். மாற்றுச் சமூகத்தினரின் காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்தார்.
இடஒதுக்கீடு உரிமைக்காக சுயமரியாதை இயக்கம் கண்டார்! தெருக்களுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்கினார். நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த பெரியார், அப்போதும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் எல்லோருக்கும் சமமான உணவு தரப்படவேண்டும், வைக்கத்தில் எல்லோரையும் கோயில் தெருவிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போராடினார்.
இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடு களில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டது. அங்கேயும் உயர் ஜாதியினரின் ஆதிக்கம் இருப்பதைப் பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவை என்று அதிலிருந்து அவர் வெளியேறினார். அப்படி உருவானதுதான், இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற சுயமரியாதை இயக்கம்!
சமூகநீதி பெண்களுக்கு சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, பொது இடங்களில் பட்டியலினத்தவருக்கு தடை இருக்கக் கூடாது. நில உரிமை , கைம்பெண் மறுமணம, தமிழுக்கு முக்கியத்துவம் சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு, இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். மானமும் அறிவும் உள்ள மக்களாக்கிட ஓயாமல் உழைத்தார்!
இந்தக் கொள்கைகளுக்காக பெரியார் அலைந்த அலைச்சல் நினைத்தே பார்க்க முடியாதது, யாரும் அலையாதது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்றூர்களில், பெரியார் பேசி இருக்கிறார். 16.2.1962 அன்று மட்டும் 19 கூட்டங்களில் பெரியார் பேசி இருக்கிறார். அதுவும் அப்போது அவருக்கு என்ன வயது? 82 வயது! 82 வயதிலும் பேசியிருக்கிறார்! 95 வயதிலும் 98 நாட்கள் அலைந்திருக்கிறார் தந்தை பெரியார். இவ்வளவு உழைப்பு எதற்காக? நம்முடைய மண்ணில் வாழுகின்ற மனிதர்களைமானமும், அறிவும் உள்ள சுயமரியாதை மிக்க மக்களாக்கத்தான் அவர் ஓயாமல் உழைத்தார்.
ஆயுதம் தாங்காத, இரத்தம் சிந்தாத புரட்சிகள்
உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் இல்லாதப் பெருமையும், புகழும் பெரியார் இயக்கத்துக்கு உண்டு. பெரியாரின் இந்தச் சாதனைகள் எல்லாம், ஆயுதம் தாங்காத புரட்சிகள்! இரத்தம் சிந்தாத புரட்சிகள்!
அவருடைய சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம், சட்டங்கள் ஆவதை பார்த்த பெருமை பெரியாருக்கே உண்டானது! இது உலகத்தில்எந்தச் சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழ்!
நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சி பெற்று, வெகுசன மக்களிடம் பரப்புரை செய்து, அவர்களுடைய ஆதரவை வாக்குகளாகப் பெற்று, சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வைத்திருக்கிறது.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் பேரறிஞர்அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் “அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்று சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதைச் சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி. தந்தை பெரியாரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த தலைவர்கள்!
இது எல்லாவற்றையும்விட, நான் பெருமையோடு சொல்கிறேன், ஜாதியைக் கடப்பதற்காக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும்”, தலைவர் கலைஞர் அவர்கள் “சமத்துவபுரம்” திட்டத்தையும் கொண்டுவந்து, தந்தை பெரியாரின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறோம்!
இந்த ஐரோப்பியப் பயணத்தில் நான் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறிவந்து ஏராளமான பேர் இங்கே நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், வாழ்க்கைத் தரத்தில், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம். உழைப்பின் சாதனை, உற்பத்திச் சாதனையாக மாறி இருக்கிறது.பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை!
பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். “பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கை” என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர் தந்தை பெரியார் மறைந்தபோது, அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பித்தார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அதற்காக, பெரியார் கண்ட கனவுகள் எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லமாட்டேன்.
இந்த நூறாண்டுகளில் ஒரு சமூகமாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சி என்பது, ஒரு குழந்தை நடை பழகுகின்ற மாதிரிதான்! நம்முடைய பயணம் நெடியது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இந்தப் பயணத்தில் ஏற்படுகின்ற தேக்கங்களை – தேவையற்ற இடைஞ்சல்களை – பழைய குளறுபடிகளை நாம் ஒதுக்கவேண்டும். போலிப் பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனைவிதமான தந்திரங்களையும் மேற்கொள்ளுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும், நம்முடைய அத்தனை உழைப்பும் கேள்விக் குறியாகிடும். ஜாதி வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமாக விலக்குகின்ற பயணத்தின் பல்வேறு படிநிலைகளை நாம் படிப்படியாகத் தாண்டி வரவேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதற்கான முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய திராவிட மாடல் அரசும் தொடர்ந்து பயணிக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு, சுயமரியாதை இயக்கம் எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் படிப்படியாக நிறைவேறி வருகிறது.
பிறந்த நாடு
பேசும் மொழி
வாழும் சூழ்நிலை
இன்றைக்கு உலகம் ஒப்புக் கொண்ட உண்மைகள்! இதற்கெல்லாம் கட்டுப்பட்டு அறிவுரை சொன்னவர்கள் மத்தியில், இதற்கெல்லாம் வெளியே நின்று அறிவுரை சொன்னவர் பெரியார். திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதினாலும், அது உலகப் பொதுமறையாக இருப்பதைப்போல, பெரியார் சிந்தனைகள் உலகம் முழுக்கத் தேவையானவை. உலகச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. உலகமே கூட்டுறவு மயம் ஆகவேண்டும் என்று சொன்னார் பெரியார். மனிதப்பற்று தவிர வேறு எந்தப் பற்றும் தேவையில்லை என்று சொன்னார். பெரியார். நிறபேதம் இல்லை! இரத்தபேதம் இல்லை! பால் பேதம் இல்லை! என்று பெரியார் சொன்னதெல்லாம் இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்ட உண்மைகள்..
அஃபிர்மேட்டிவ் ஆக்சன் என்று சில நாடுகளில் இப்போதும் இருக்கிறது. கேம்பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்சிட்டி என்று பல முன்னணி கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் இருக்கிறது. பல்வேறு உலக மொழிகளில் பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருப்பது போல, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும். அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளிப்படும்” என்று பெரியார் சொன்னார். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை வென்றெடுக்க இதுபோன்ற கருத்தரங்குகள் வழிவகுக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சராக எத்தனையோ வெளிநாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சி வயப்பட வைத்திருக்கிறது. அந்த உணர்ச்சி யாரென்றால் தந்தைபெரியார். காரணம், இது பெரியாருக்கான நிகழ்ச்சி! மானுடத் தன்மையை மதிப்பதாக உலகம் மாறட்டும்!’
இலண்டனில் இருக்கின்றேனா இல்லை, தமிழ்நாட்டில்தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
போலிப் பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனை விதமான தந்திரங்களையும் மேற்கொள்ளுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும், நம்முடைய அத்தனை உழைப்பும் கேள்விக் குறியாகிடும். ஜாதி வேறுபாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் முற்றிலுமாக விலக்குகின்ற பயணத்தின் பல்வேறு படிநிலைகளை நாம் படிபடியாகத் தாண்டி வரவேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி
