தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி
‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...
