“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு
இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...
