இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!
சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...
