மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!
பீகாரில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க எண்ணமில்லாதவர்கள் 65 லட்சம் பேரை நீக்கிய கையோடு தமிழ்நாடு விரைந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்குப் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.). வாக்காளர் பட்டியலில் ஆட்களை குறைப்பதோ, சேர்ப்பதோ அரசியல் கட்சிகளின் பிரச்னை, தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத அமைப்புகளுக்கு அதைப்பற்றி என்ன கவலை என்று ஒதுங்கிவிட முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நீதித்துறையைக் கைப்பற்றுதல், அமலாக்கத்துறையைத் தன்வயப்படுத்துதல், எதிர்க்கட்சிகளை அழித்து அரசியல்வாதிகளை – சட்டமன்ற உறுப்பினர்களை – மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் என்பன போன்ற பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்குகள் இப்போது, ‘மக்களைத் தகுதிநீக்கம் செய்தல்’ என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தத் திருநாட்டில் வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தவிர வேறெங்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை. சேரியை விட ஊர் மேலானது, ஊரை விட அக்ரஹாரம் மேலானது என்ற மோசமான வருணாசிரம...
