ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் கட்டியுள்ள புதிய தலைமையகத்தின் வாகன நிறுத்துமிட வசதிக்காக, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் துணைகொண்டு இந்த ‘கர’சேவையை நடத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ். இந்துக்கள், ஆலயங்கள் என்றெல்லாம் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் பேசுவது வெறும் அரசியலுக்காகத்தானா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றித்தான் கோயில் இடிக்கப்பட்டுள்ளது இதில் எந்த விதிமீறலும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறது பாஜக தரப்பு. நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டன. விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்த கோயில்களையும் அதிகாரிகள் இடிக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவாதிகள் விட்டார்களா? ஜெய்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது தங்கள் தேவைக்காக கோயிலை இடித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்தியைப் பரப்பும் இயக்கமல்ல, பாகுபாட்டை விதைக்கும் நஞ்சு. அதற்கு பக்தியை பகடைக்காயாக பயன்படுத்துகிறது, அந்த இயக்கம் ஆன்மீகத்திற்கானது அல்ல, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கானது மட்டுமே என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 04122025
