பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு
தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்