இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!
காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். ‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம். சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம்...