இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!
18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...
