தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும்

சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் உதவி எண்கள் உருவாக்க வேண்டும்

பத்திரிக்கை செய்தி

இந்த கொரானா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவ கொலைகள், காவல் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமானபடுத்துதல் போன்ற வன்முறைகள் தலித்துகள் மீது அதிகரித்து உள்ளன. அதுமட்டுமல்ல நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கின்றனர். சாதி ரீதியாக இழிவாக பேசுகின்றனர். பணி செய்யவிடாமல் சித்திரவதை செய்கின்றனர் என்று மூன்று பஞ்சாயத்து தலைவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் 4 தலித்துகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தலித்துகள் மீது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

தமிழக முதல்வர் இக்கொடுமைகளுக்கு எதிராக உரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் வன்முறை தடுப்புக்கு என்று உதவி எண்களை அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றின் மூலம் உரிய தீர்வு கிடைப்பது இல்லை என்று குற்றசாட்டு இருந்தாலும் குறைந்த பட்சம் உடனடி புகார் தெரிவிக்க மையமாவது இருக்கிறது. ஆனால் தலித்துகள் மீது நடக்கும் கொடுமைக்கு இது போன்ற அவசர கால புகார் எண்கள் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே. ஆகவே உடனடியாக சாதி வன்கொடுமைக்கு எதிராக புகார் தெரிவிக்க மாநில அளவில் உதவி எண்களை தெரியப்படுத்தும் திட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என்றால் புகார் தாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இந்த கொரானா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவசியம் இல்லை என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதாக ஜாமீன் பெற்று விடுகின்றனர்.

ஆகவே தமிழக அரசு வன்கொடுமை குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கிடையாது என்பதை கொள்கை முடிவாக விரைந்து எடுக்க வேண்டும். ஏன் என்றால் கொரானாவின் தாக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நான்கு மாதமாவது ஆகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நீதிமன்ற உத்தரவு நீட்டிக்க படுமானால் குற்றவாளிகள் முன்ஜாமீன் பெற்று வழக்கில் குறுக்கீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மாநில அளவிலான விழிக்கன் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவர் முதல்வர் பழனிசாமி. இவரது தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வன்கொடுமை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது வரை ஒரு கூட்டம் கூட நடத்தாமல் இருப்பது வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது. ஆகவே வன்கொடுமைகளை ஒழிக்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், எஸ். பி. ஆகியோர் பங்கு பெறுகிற கூட்டத்தினை வீடியோ காணொளி மூலம் நடத்த வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரானா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கப்படாமல் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் நிவாரண தொகை இன்னும் வர வில்லை என்று சொல்லுகின்றனர். இதற்கு என்று ஏற்கனவே பட்ஜெட் இருக்கிறது. ஆயினும் அரசு நிவாரணம் கொடுக்காமல் காலதாமதப்படுத்துவது விதிகளுக்கு எதிரானது. ஆகவே நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

எவிடென்ஸ் அமைப்பு கொரானா காலத்தில் நடந்த வன்கொடுமைகளை ஆய்வு செய்து இருக்கிறது. அவற்றின் சில சம்பவங்கள்.

1. கடந்த 29.03.2020 அன்று ஆரணி தாலுகா மொரப்பதாங்கல் என்கிற கிராமத்தில் சுதாகர் என்கிற இளைஞர் மிக கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். சுதாகரும் பரிமளா என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். கீழ் சாதியை சேர்ந்த பையன் எப்படி என் மகளை காதலிக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த பரிமளாவின் தந்தை மூர்த்தியும் உறவினர் ஜெய்குமாரும் சுதாகரை கொலை செய்துள்ளனர். கொலையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

2. செங்கம் காவல் எல்லைக்குட்பட்ட தோக்கவாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவுதம பிரியன். கடந்த 31.03.2020 அன்று குப்பநத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆதிக்க சாதியை சேர்ந்த தன் சகோதரியின் தோழியிடம் பேசி கொண்டு இருந்திருக்கிறார். இதனை கவனித்த காவலர் ஈஸ்வரன் அம்பேத்கர் பனியன் உடுத்தி இருந்த கவுதம பிரியனை சாதி ரீதியாக இழிவாகபேசி கடுமையாக அடித்து சித்ரவதை செய்து இருக்கிறார். வன்கொடுமையில் ஈடுபட்ட காவலர் ஈஸ்வரன் மீது எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யபட்டு இருக்கிறார்.

3. தலித் மக்களை தரக் குறைவாக இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொண்ட நடராஜன், சக்திவேல் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடராஜன் கைது செய்யப்பட்டு உள்ளார். சக்திவேல் என்பவர் திட்டக்குடி அருகில் உள்ள கொரக்கவாடி பஞ்சாயத்து தலைவர் ஆவார்.

4. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் ஆதி சுரேஷ். அம்பேத்கர் உருவ படத்தை சாணம் பூசி கேவலப்படுத்திய சாதி இந்து வன்கொடுமை கும்பல் குறித்து பதிவு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாதி வெறி கும்பல் கடந்த 23.04.2020 அன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியது. கடுமையான இரத்த காயங்களுடன் ஆதி சுரேஷ் சிகிச்சை எடுத்து வருகிறார். குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

5. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பாச்சர் தண்டா கிராமத்தில் கடந்த 24.04.2020 அன்று 15 க்கும் மேற்பட்ட சாதி வன்கொடுமை கும்பல் தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 7 தலித்துகள் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகள் 12 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தலித் மக்கள் தங்கள் பயன்பாட்டில் இருந்த நிலத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றனர். தலித் மக்களும் உயிருக்கு பயந்து கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் கூட சாதி இந்து கும்பல் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து இருக்கிறது. இதை தட்டி கேட்டதற்குதான் தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து இருக்கிறது.

6. சிதம்பரத்தில் 25.04.2020 அன்று நடராஜன் என்கிற 55 வயது தலித் பெரியவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

7. நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கோட்டைபட்டி. இக்கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் தமிழ் செல்வன் ஆதிக்க சாதியை சேர்ந்த கவிதா என்கிற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு உள்ளார். கவிதாவின் உறவினர்களால் ஆபத்து என்பதினால் தம்பதியினர் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 16.04.2020 அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை எடுத்து கொண்டு 22.04.2020 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்து உள்ளனர். இதனை தெரிந்து கொண்ட கவிதாவின் சாதிக்காரர்கள் 50 பேர் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு 27.04.2020 அன்று தலித் குடியிருப்புக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 தலித்துகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

8. புதுக்கோட்டை, கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். எம்.பி.ஏ. பட்டதாரியான தலித் இளைஞர் முருகானந்தமும் ஆதிக்க சாதியை சேர்ந்த பானுப்பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து கடந்த 21.04.2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பானுப்பிரியாவின் உறவினர்கள் 15 பேர் முருகானந்தத்தை கடுமையாக தாக்கி பானுப்பிரியாவை கடத்தி சென்றனர். எவிடென்ஸ் அமைப்பின் நடவடிக்கையால் பானுப்பிரியா மீட்கப்பட்டார்.

9. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அய்யாபட்டி கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த தேவராஜ்(20), ஹரிஹரன்(21)ஆகியோர் கடந்த 24.4.2020 அன்று ஶ்ரீரங்கம்பட்டி அருகே சென்ற போது சாதி இந்துக்களான ராஜேஸ்வரன்(20) உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் சாதி ரீதியாக இழிவாக பேசி தாக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

10. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவடி கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மாந்தோப்பில் 28.04.2020 அன்று சாதி இந்துவான சுப்பையா உள்ளிட்ட 4 பேர் மாங்காய் திருடினர். இதுகுறித்து நியாயம் கேட்ட பாலகிருஷ்ணனை சாதி ரீதியா இழிவாக பேசி தாக்கினர். இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

11. திருநெல்வேலி, வள்ளியூர் அருகே உள்ள வேப்பன்பாடு கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் கடந்த 27.04.2020 அன்று வேலைக்கு சென்றுள்ளனர். இவர்களை முன்பகை காரணமாக சாதி இந்துக்களான சுபாஷ் உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சுபாஷ் கைது செய்யப்பட்டார்.

12. தூத்துக்குடி மாவட்டம், உடைகுளம் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் என்பவர் சாதி இந்துவான முத்துராஜ் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூபாய் 40,000 பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்ப பெறுவது குறித்து கடந்த 8.5.2020 அன்று பலவேசம் அவரது மருமகன் தங்கராஜ் ஆகியோர் முத்துராஜிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பலவேசம், தங்கராஜ் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13. கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாவது நுழைவு வாயில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரன் என்பவர் கடந்த 7.5.2020 அன்று அவரது வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் சாதிரீதியாக இழிவாகப் பேசி லத்தியால் ஈஸ்வரனை தாக்கி இடது முழங்கையை உடைத்துள்ளார்.

14. சேலம் மாவட்டம், ஓமலூர் புதுக்கடை காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் விஷ்ணுப்பிரியன் என்பவர் கடந்த 8.5.2020 அன்று சாதி இந்துக்களான செந்தில்குமார் உள்ளிட்ட வன்கொடுமை கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

15. திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்து தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வி என்பவரை கடந்த 4.5.2020 அன்று சாதி இந்துவான குப்புசாமி என்பவர் பணி செய்ய விடாமல் சாதிரீதியாக இழிவாகப் பேசியுள்ளார். இதுகுறித்து தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

16. புதுக்கோட்டை மாவட்டம், கரம் அபவிடுதி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த மனோகரன் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 7.5.2020 அன்று சாதி இந்துக்களான பால்ராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் தாக்கியுள்ளனர் இதுகுறித்து கரம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

17. புதுக்கோட்டை மாவட்டம், வேப்பன்பட்டி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் சாதி இந்து பெண் வீரலட்சுமி என்பவரை கடந்த 6.4.2020 அன்று திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி பெற்றோர்கள் தம்பதியரின் மிரட்டினர் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

18. கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தா நகர் காந்தி காலனியில் வசித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை கடந்த 2.5.2020 அன்று ஜெனிஸ்டன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது கைது செய்யப்பட்டார்.

19. சேலம் மாவட்டம், கோனகபாடி பஞ்சாயத்து தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவரை கடந்த 22.4.2020 அன்று சாதி இந்துவான மோகன் என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்து சாதிரீதியாக பேசியுள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

20. மதுரை மாவட்டம், கீழமாதரை கிராமத்தைச் சேர்ந்த தலித் வினோத் குமார் உள்ளிட்ட 3க்கும் மேற்பட்டோரை கடந்த 7.5.2020 அன்று சாதி இந்துக்களான நல்ல மாயன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் சாதி ரீதியாக இழிவாகப் பேசி தாக்கியுள்ளது. இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21. கடலூர் மாவட்டம், மே.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தலித் மக்களை என்.புதூர் பஞ்சாயத்து தலைவரும் சாதி இந்துவுமான அண்ணாதுரை உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் கடந்த 8.5.2020 கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்து வேப்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22. திருவண்ணாமலை மாவட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களின் வீடுகளை கடந்த 25.03.2020 அன்று சுமார் 17 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் அடித்து நொறுக்கி இரு சக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கீழ் வெட்டவலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

23. நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி தலித் சமூகத்தை சேர்ந்த சசி குமார் என்பவரை கடந்த 9.5.2020 அன்று சாதி இந்துக்களான கோபிநாத் உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் சாதி ரீதியாக இழிவாக பேசி கொடூரமாக தாக்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவிடென்ஸ் கதிர்
செயல் இயக்குனர்,
எவிடென்ஸ்

You may also like...