24. கடவுள் சங்கதி
கடவுள் சங்கதி என்று இவ்வியாசத்துக்குத் தலைப்புக் கொடுத்ததின் காரணம் என்னவென்றால், கடவுள் உண்டா? இல்லையா? என்பதல்ல இவ்வியாசத்தின் கருத்து என்பதை விளக்கவேயாகும். கடவுள் என்பதாக ஒன்று இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலே போகட்டும். இருந்தால் உயர் குணங்களும் நற்பண்புகளுமே கடவுளாக இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒரு வஸ்து அய்ம்புலன்களோடு இருந்து கொண்டு நினைத்துக் கொண்டும், செய்துகொண்டும், கவனமாய் கவனித்துக்கொண்டும், பலாபலன்களை அளித்துக்கொண்டும் இருக்கட்டும், அல்லது குணமில்லாமல், உருவமில்லாமல், விளக்கிச் சொல்ல வகையும் ஆதாரமும் இல்லாமல் ஒரு அரூபி வஸ்துவாக இருந்தாலும் இருக்கட்டும். அறிவுக்கும் மனத்துக்கும் எட்டினதாகவோ அல்லது அறிவுக்கும் மனத்துக்கும் எட்டாததாகவோ இருக்கட்டும். புத்த பகவானுக்கு அறிவு வழிகாட்டிய கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது கிறிஸ்துநாதருக்கு அருள் சுரந்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது மகம்மது நபியை உலகுக்கு அனுப்பி மக்களுக்குத் தனது நீதியை எடுத்துச் சொல்லும்படி செய்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும். மற்றும் ஆகாயமாய், நீராய்,...