தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக
தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற வேண்டும்...