27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?
பார்ப்பன-மேல்சாதி இந்திய ஆளும் வர்க்கம் வன்னெஞ்சத்துடன், இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உயிருடன் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எழுவரின் விடுதலை, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் இழுத்தடிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இராசிவ் காந்தி 1991 மே 21 அன்று திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரான இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய...
