அடையாளங்களை அழிக்கும் வடமொழி
நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். ‘ஜாதி’ என்ற வடமொழிச் சொல்லை தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன். பண்டிதர்கள்தான் கூறட்டுமே. – பெரியார் உலகில் எந்த ஒரு மொழியும் தூய மொழியாக இருப்பதற்கான வாய்ப்பு என்பது அறவே கிடையாது. மனிதர்கள் இடம் பெயரும்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களின் மொழியும் இடம் பெயருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இடப்பெயர்ச்சியும், போர்களும், வர்த்தகமும் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தூயத்தன்மையும் இழக்கச் செய்திருக்கின்றது. மொழி கலப்படைதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் சில சமயம் பண்பாட்டு ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை பண்பாட்டு ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கும் இன்னொரு மக்கள் கூட்டத்தின் மொழி அதில் இரண்டற கலக்கும்போது நாகரிக நிலையில் இருக்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவிற்கு உள்ளாவதுடன் அந்த மக்களின் அறிவியல் சிந்தனை அழிக்கப்பட்டு...