தலையங்கம் வகுப்பறையில் வன்மம்!
சென்னையில் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி ஆசிரியரை குத்திக் கொலை செய்த செய்தி, நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக காட்சி ஊடகங்களும் அச்சுஊடகங்களும் விரிவான விவாதங்களை நடத்தி வருகின்றன. மாணவர்களை வன்முறைக்குத் தூண்டும் சமூகச் சூழல், அவர்கள் மீது திரைப்படங்கள், இணையதளங்கள் திணிக்கும் வன்முறை கலாச்சாரம், குடும்பங்களில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளி, மனப்பாடம் – மதிப்பெண் போட்டிகளை ஊக்குவிக்கும் கல்வி முறை, ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் என்று பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. சமூகம் சார்ந்த இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவைதான். இப்படி ஏதேனும் கடுமையாக உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் நேரும்போது மட்டும், இத்தகைய விவாதங்கள் தலைதூக்கி, பிறகு படிப்படியாக மறைந்து போய் விடுவது வாடிக்கையாகிவிட்டது என்பதே உண்மை. முதலில் இப்படி ஒரு நிகழ்வை முன் வைத்து அதையே பொதுவான சமூகப் போக்கு என்ற...
