தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’
1967 மார்ச் 6, அண்ணா தலைமையில் பார்ப்பனரல்லாத அமைச்சரவை கடவுள் பெயரால் உறுதி ஏற்காமல், ‘உளமாற’ என்ற உச்சரிப்போடு தமிழ்நாட்டில் பதவி யேற்று திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்டது. 55 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றன. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கான கூட்டணி என்ற நடைமுறையை உருவாக்கிக் காட்டியவர் அண்ணா. காமராசரை வீழ்த்த அண்ணாவைப் பயன்படுத்திக் கொள்ள இராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தது. பெரியார் உறுதியாக காமராசரை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, “பெரியாரின் கொள்கையிலிருந்து அண்ணா விலகி வந்து விட்டார்; ‘பெருங்காய டப்பா’வாகத்தான் இருக்கிறார். பெரியார் கொள்கையான ‘பெருங்காயம்’ இப்போது அண்ணாவிடம் இல்லை” என்று தனது பார்ப்பன சமூகத்துக்கு உறுதியளித்தார். தேர்தலில் 137 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆச்சாரியாரை கைவிட்டு அண்ணா பெரியாரை சந்திக்க திருச்சிக்கு தனது முக்கிய அமைச்சர்களுடன் வந்து விட்டார்....