சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!
“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள்...
