தற்கால அரசியல்
தலைவரவர்களே! தோழர்களே!! இன்று தற்கால அரசியல் என்பது பற்றி நான் பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்கால அரசியல் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். அரசியல் என்கின்ற வார்த்தை புதிய வார்த்தை. நம் நாட்டில் முன் காலத்தில் அரசியல் என்கின்ற பிரஸ்தாபம் இருந்ததாக யாரும் சொல்ல முடியாது. அரசியல் என்று பேசுவதே தோஷமான காரியமாகும். ஏனென்றால் இந்துமத வேத ஆதாரப்படி அரசர்கள் கடவுள்களாவார்கள். அதாவது அரசன் விஷ்ணு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவோ புராணங்களிலும் அரசர்களின் அநீதிக்காகப் பிரஜைகள் அரசியல் என்று பேர் வைத்து இயக்கம் உண்டாக்கி கிளர்ச்சி செய்ததாக ஒரு வார்த்தையும் காண முடியாது. ஆதலால் அரசியல் என்கின்ற வார்த்தை மேல் நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்ததாகும். மேல்நாட்டுக்கார மேதாவி ஒருவரே அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்று சொல்லி இருக்கிறார். அரசியல் என்கின்ற வார்த்தை எப்படி மேல்நாட்டில் இருந்து இறக்குமதி ஆயிற்றோ...