பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்

 

காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?

சு.ம. இயக்கம்

மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?

தோழர்களே!

தோழர்கள் பொன்னம்பலம், அழகிரிசாமி ஆகியவர்கள் பேசுகையில் நீங்கள் சிரித்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்.

~subhead

நமது இழி நிலை

~shend

நமது கேவல நிலைமையையும், முட்டாள்தனத்தையும் நம்மைப் பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும்போது நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்.

நமது இழிவானது நேற்று இன்று என்று இல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால் நமது ரத்தம் வெட்கப்படுவதிற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.

~subhead

புரட்சி வேண்டும்

~shend

மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும் ஆளாகிவருகிறோம். நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒருநாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு ஆண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும் கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான்.

~subhead

மூடநம்பிக்கை

~shend

இந்த மூடநம்பிக்கை தான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக்கொண்டு வருகிறது.

சாதாரணமாக மனிதப் பிறவியில் கீழ் ஜாதி, மேல் ஜாதி அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளதுவரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

ஏனெனில் செய்யமுடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான்.

ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக்கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால் தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப்பற்றி சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப்பற்றி நம்பிக்கை யாகவும், மேன்மையாகவும் கற்பித்துக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான். சாஸ்திரங்களில் மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான். புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான்.

இந்தக் குணம் பார்ப்பான் இடமாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது.

ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விவசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். தயவு செய்து நடுநிலையுடன் கவனியுங்கள். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்று செய்யப்பட்டு வந்த முயற்சிகளால் இதுவரை ஜாதி வித்தியாசங்கள் குறைந்ததா அதிகப்பட்டு வந்ததா என்று யோசித்துப்பாருங்கள். நாகரீகம் என்பதே புது புது ஜாதிகள் உற்பத்தி செய்வதாகத்தான் இருந்து வருகின்றது.

ஆதலால் ஜாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பலஜாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தாலோ அவர்களும் தாங்கள் எப்படியாவது மேல் ஜாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண்டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன. ஜாதி இல்லாதவர்களும் கலப்பு ஜாதிக்காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற ஜாதியை சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களே ஒழிய, தங்களைப் பொறுத்தவரை ஜாதி ஒழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்த தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இடமிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும். மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியானாலும் காரியத்திற்கு உதவவே உதவான்.

உதாரணமாக ஆசார சீர்திருத்தம் என்னும் பேரால் இந்தியாவில் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பிருந்தே பல அறிஞர்கள், மகாராஜாக்கள், பெரும் பதவியாளர்கள் முதல் எத்தனையோ பேர்கள் பாடுபட்டார்கள். ஒருவராலும் ஒரு சிறு காரியமும் செய்யமுடியவில்லை.

~subhead

முந்திரிக்கொட்டை காந்தியார்

~shend

எல்லாவற்றிற்கும் மேல் முந்திரிக்கொட்டை மாதிரி தோழர் காந்தியார் புறப்பட்டார். ஜாதியைப் பற்றி பேசாமல் ங்பேசினால் பார்ப்பனர் நிஷ்ட்டூரம் வருமே என்று பயந்துசி தீண்டாமையை ஒழிக்கிறேன் என்று புறப்பட்டார். 10, 15 வருஷம் விளம்பரம் பெற்றார். பல பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்தார். இன்று வரையில் அவர் வாயில் ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக ஜாதிகளை (வர்ணாச்சிரம முறையை) காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்று சொல்லிவிட்டார்.

காரணம் என்ன? தனது மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் அவர் “ஜாதிகளை காப்பாற்றுகிறேன்” என்று சொல்லித்தானாகவேண்டும் என்கிற நிலைக்கு வந்து விட்டதேயாகும்.

சுயமரியாதை இயக்கம் துணிந்து சகல ஜாதியும் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்று சொல்லுவதற்கு காரணம் அது மனித சமூகத்தினிடமிருந்து எவ்வித பெருமையையும் மதிப்பையும் எதிர்பார்க்கவில்லை. ஜாதி ஒழிப்புக்கு தடையாகக்கொண்டு வந்து போடப்படும் எந்த முட்டுக் கட்டையையும் லட்சியம் செய்வதில்லை.

மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களின் எவ்வித சூழ்ச்சித் தொல்லை யையும் சமாளிக்கத் தயங்குவதில்லை. இந்தக் காரணங்களாலேயே சுய மரியாதைக்காரர்களால் சிறிதளவாவது வேலை செய்ய சாத்தியமாகின்றது.

நாளதுவரை ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்கு எதிரிகளால் ஏதாவது ஒரு யோக்கியமான காரணம் சொல்லப்பட்டதா என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

ஜாதி எப்படி உண்டாயிற்று

~shend

கடவுளால் ஜாதிகள் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும், மத சாஸ்திரங்களில் ஜாதிகள் இருக்கின்றன என்பதும் தவிர வேறு ஏதாவது சொல்லப்பட்டதா என்று யோசித்துப்பாருங்கள்.

சமீபத்தில் சென்னையில் ஒரு பார்ப்பனர் சங்கராச்சாரி என்ற பட்டத்தை உடையவர் மாத்திரம் ஜாதிக்கு இயற்கையில் ஆதாரமிருக்கிற தென்றும், பார்ப்பானையும் பறையனையும் அவனது ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்து கண்டுபிடித்து விடலாம் என்றும் சொன்னதாகப் பத்திரிகையில் பார்த்தேன்.

இதைத் தவிர வேறு யாரும் ஜாதி வித்தியாசத்துக்கு ஆதாரம் சொல்லவே இல்லை.

மற்றபடி அனேக ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜாதி சங்கிரகம் என்னும் நூலில் வருணாச்சிரம முறைப்படி ஏற்பட்ட நான்கு ஜாதிகள் ஒன்றோடொன்று கலந்தும், மாறியும், கலப்பு முறையிலும், விவசாரித்தனத் தாலும் ஏற்பட்டவைகள் என்று கூறி இன்ன இன்ன ஜாதி கலந்து புணர்ந்ததால் இன்ன ஜாதி உண்டாகி இருக்கிறது என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது சங்கராச்சாரி என்பவர் கூறிய அயோக்கியத்தனத்தை விட மோசமான அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இன்று உள்ள சகல உட்ஜாதியும் விவசாரித்தனத்தால் ஏற்பட்டது என்றால் இதை யார் தான் சகிக்க முடியும்?

அன்றியும் இந்த இரண்டு காரியமும் இன்று அமுலில் இல்லை. ஜாதி மாறிய புணர்ச்சிகள் தினமும் லட்சக்கணக்காக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவைகளால் எவ்வித ஜாதியும் புதிதாய் உண்டாவதில்லை.

ஆகவே இந்த தத்துவம் வருணாச்சிரம ஜாதியான நான்கு ஜாதியின் கீழ் வராதவர்களுக்கு பெரிய இழிவை உண்டாக்குவதற்கும் பயன்படக் கூடியதாய் இருக்கின்றதே தவிர மற்றபடி ஜாதி பிரிப்பதற்கோ, அதனால் ஏதாவது பயன் உண்டாவதற்கோ பயன்படுவதில்லை.

~subhead

சங்கராச்சாரி

~shend

மற்றும் ரத்தத்தைக் கொண்டு ஜாதி கண்டுபிடித்து விடலாம் என்பதும் மற்ற மக்களின் சுயமரியாதை அற்ற தன்மையை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படுவதே தவிர கேட்பவர்களுக்கு மானம், ஈனம், ரோஷம், அறிவு இருக்கும் என்று ஒருவன் கருதி இருந்தால் இவ்வளவு பெரிய அயோக்கியத் தனமான வார்த்தைகள் பேச இடமே இருந்திருக்காது. இந்தப்படி ஒரு சாதனம் இருக்குமானால் ரத்தத்தை பார்த்து பரீட்சிக்கக்கூடுமானால் அப்பரீக்ஷையின்படி அந்த சங்கராச்சாரியாரே “கீழ்” ஜாதியில் குறிக்கப்பட வேண்டியவராகி விடுவார் என்பதோடு இன்றைக்கு 100க்கு 99 பார்ப்பனர்கள் கதியும் அப்படித்தான் ஆகவேண்டி வரும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் உள் ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் கலப்புப் புணர்ச்சி என்று மற்றொரு சாஸ்திரம் சொல்லுவதேயாகும்.

~subhead

ஏழ்மைக்கு பரிகாரமில்லை

~shend

இவை நிற்க, ஆண் பெண் உயர்வு தாழ்வு தன்மைகளும், முதலாளி கூலிக்காரன் தன்மைகளும் இதுபோலவே கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர வேறில்லை.

பெண் மக்களின் நிலைமையும், கூலிக்கார ஏழை மக்களின் நிலைமையும் இன்று ஒரு மனிதனால் சகிக்கக்கூடியதாய் இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுளும் மதமும் இல்லாதிருந்தால் இவர்கள் நிலைமைக்கு வேறு ஏதாவது சமாதானம் சொல்ல முடிந்திருக்குமா?

எந்த மகானாலும், எந்த அவதார புருஷனாலும் ஏழ்மைத் தன்மைக்கும், அடிமைத் தன்மைக்கும் நமது நாட்டில் பரிகாரம் சொல்லப்படவே இல்லை. மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருகின்றன.

இந்த இருபதாவது நூற்றாண்டில் கூட பழமையை எதாஸ்திதியைக் காப்பாற்ற பலமான முயற்சிகள் நடைபெறுகின்றதே ஒழிய அவற்றை மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் இல்லை. ஆதலாலே தான் சுயமரியாதை இயக்கம் ஒன்றே தான் பழமைத் தொல்லைகளை ஒழித்து எதாஸ்திதித்து வத்தை அடியோடு அழிக்கவேண்டும் என்கின்றது.

~subhead

காங்கிரசு

~shend

சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதம் எல்லாவற்றையும் விட காங்கிரசே யாகும். அது ஒரு மத பாதுகாப்பு ஸ்தாபனமே ஒழிய மற்றபடி மனித சமூகத்துக்கு அதனால் கடுகளவு பிரயோஜனமும் ஏற்படப்போவ தில்லை என்பது உறுதி. இந்த நாட்டுக்கு இயற்கையாய் ஏற்பட வேண்டிய முற்போக்கைக்கூட காங்கிரஸ் தடுத்து தேசத்தை பின்னணிக்கு கொண்டு போய்விட்டது. மற்ற நாடுகளில் இந்த 20 வருஷத்தில் ஏற்பட்ட முற்போக்குகளில் 1000ல் ஒரு பங்குகூட நமது நாட்டில் ஏற்படவில்லை. ஒரு பணக்காரத்தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக யாதொரு காரியமும் செய்யவிடாமல் இந்த நாட்டில் தடுத்து காப்பாற்றி வருவது நமது நாட்டு மத ஸ்தாபனமாகிய காங்கிரசேயாகும். காங்கிரசுக்கு ஜாதிமதச் சண்டை தவிர வேறு என்ன கொள்கை இருக்கிறது? வேறு என்ன வேலைதான் அது செய்து இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

காந்தியார் காங்கிரசுக்குள் அடி வைத்தது முதற்கொண்டு ஜாதி மதச் சண்டைகளும், ஜாதி மத பாதுகாப்புகளும், ஜாதி மத உணர்ச்சிகளும் அல்லாமல் வேறு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன்.

~subhead

காந்தித் திட்டம் – தீண்டாமை விலக்கு

~shend

காந்தியார் 1920ல் மனித சமூக நன்மைக்கு என்று நான்கு திட்டங்கள் வகுத்தார். அதாவது தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, மது விலக்கு, கதர் இந்த நான்கும் என்ன கதி அடைந்தது.

தீண்டாமை விலக்கு என்பது தீண்டாதவர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு விலகினால் ஒழிய தீண்டாமை விலகாது என்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. 1923ல் நான் இதை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சொன்னபோது என்னை எல்லோரும் வெறுத்தார்கள். 1928, 29ல் நான் சொல்லும்போது சிலர் பொறுமை காட்டினார்கள்; சிலர் கஷ்டப்பட்டார்கள். ஆனால் அது இன்று இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் முடிந்துவிட்டது. தீண்டாமை போக வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்துகொண்டு முடியாது; காங்கிரசிலும் முடியாது; காந்தியாராலும் முடியாது. இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு அதுவும் முஸ்லீம் மதத்துக்குப்போனால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது சரியா தப்பா என்பது ஒரு புறமிருந்தாலும் காந்தியாரின் தீண்டாமை விலக்கு தத்துவம் இன்று இந்தியாவில் இந்த நிலையை உண்டாக்கிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

~subhead

இந்து முஸ்லீம் ஒற்றுமை

~shend

அதுபோலவே இந்து முஸ்லீம் ஒற்றுமையும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் ஏற்படுவதா? முஸ்லீம் ராஜ்யம் ஏற்படுவதா என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. 20 வருஷத்துக்கு முன் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருந்த ஒற்றுமை கூட இன்று அடியோடு ஒழிந்துபோய் இந்து ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று முஸ்லீம்களும், முஸ்லீம் ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று இந்துக்களும் சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது.

தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் ஏற்படாதென்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் ஏற்படாதென்றும், தீண்டாமை ஒழியாமலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமலும் சுயராஜ்யம் கிடைத்தாலும் நான் ஏற்கமாட்டேன் என்றும் சொன்ன காந்தியார் இன்று பெரியதொரு கரணம் போட்டு தலைகீழ் மாற்றமடைந்து “சுயராஜ்யம் வந்த பிறகுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை தானாகவே ஏற்படும்” என்றும் “தீண்டாமையும் தானாகவே ஒழியும்” என்றும் சொல்லிவிட்டார்.

இந்த மாதிரி அவர் சொன்ன பிறகே முஸ்லீம்களும், தீண்டாதவர்களும் ஒன்று சேர்ந்து “சுயராஜ்யம் கிடைத்தால் நம் இரு சமூகமும் இந்துக்களால் அழுத்தப்பட்டுவிடும்” என்று பயந்து “எங்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு சுயராஜ்யப் பேச்சைப் பேசுங்கள்; இல்லாவிட்டால் சுயராஜ்யமே வேண்டாம்” என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.

இதன் பயனே இன்று தீண்டாதவர்கள் இந்துமதத்தை விட்டு விலகுவதும் முஸ்லீம் மார்க்கத்தில் போய்ச்சேருவதுமாய் ஆகிவிட்டது. தினம் தினம் பலர் சேர்ந்தும் வருகிறார்கள்.

இந்த இரண்டோடு அல்லாமல் தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முற்கூறிய இரண்டு பிரச்சினைக்கும் சிறிதும் இளைத்ததாக இல்லாமல் வளர்ந்துகொண்டே வருகிறது.

இவை எல்லாம் எந்தக் காலத்தில் வெடித்து இரத்தக் களரியை உண்டாக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயப்படவேண்டியதாய் இருக்கிறதே தவிர, ஏதாவது ஒரு வழியில் சிறிதாவது அடங்கிற்று என்று சொல்லும்படியான மாதிரியில் இல்லை.

ஆகவே காந்தியார் அரசியல் போர்வையை போர்த்திக்கொண்டு மத இயல் வேலையைச் செய்துவரும் ஒரு கபட சன்யாசி என்றே முஸ்லீம்களும், இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் உறுதியாய் நம்பிவிட்டார்கள். இதற்கு ஆதாரம் பார்ப்பனர்களும், இந்து மத வெறியர்களும் காந்தியாரை ஆதரிப்பதும் அவரை மகாத்மாவாக்குவதும் ஆகிய ஒன்றே போதுமானது.

~subhead

மதுவிலக்கு

~shend

மற்றப்படி காந்தியார் மதுவிலக்குப் பிரச்சினையில்தான் ஆகட்டும் எந்த அளவுக்கு வெற்றிப்பெற்றார் என்பதை யோசித்துப் பாருங்கள். மதுவிலக்கு மறியலுக்காக ஜெயிலுக்குப் போனோம். காந்தியார் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜெயிலுக்குப் போனோம். எங்கள் குடும்பத்தில் மாத்திரம் சுமார் 1000க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி எறியப்பட்டன. குடும்ப சகிதம், மனைவி தங்கை சகிதம் மறியல் செய்தோம். மற்றும் பதினாயிரக்கணக்கான பேர்களை மறியல் செய்யும்படியும் செய்தேன். எல்லாம் ஏமாற்றமாய் முடிந்தது. அரசியல் காரியங்களுக்காக நம்மை ஏமாற்றிவிட்டதாக காந்தியாரே, அவரது பிரதம சிஷ்யர்களே பெருமை அடையும்படியாக ஆகிவிட்டது. மதுவிலக்குத் திட்டம் போடும் போது நமது நாட்டில் செலவான கள்ளு, சாராயத்தைவிட இப்போது அதிகமாகவே செலவாகின்றது.

கள்ளு, சாராயக் கடை வியாபாரிகள் வீட்டிலேயே காந்தியார் தங்கவும், அவர்களையே இன்று எலக்ஷன்களில் நிறுத்தி வெற்றியை உண்டாக்கிக் கொடுக்கவும் காங்கிரஸ் உழைக்கின்றது.

சர்க்காரால் செய்த மதுவிலக்குப் பிரசாரத்தையும் காங்கிரஸ் பழிகூறி ஒழித்து விட்டது.

கடைசியாக காந்தியாரும் காங்கிரசும் இப்போதுதான் தான் இதுவரை செய்துவந்த காரியங்கள் மறியல்கள் இது விஷயமாய் சர்க்கார் உத்திரவு முதலியவைகளை மீறியவைகள் எல்லாம் முட்டாள் தனம் என்று கருதி எந்த இடத்தில் தவறு செய்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது.

காந்தியாரின் இன்றைய நிலை 1916ம் வருஷத்தில் இந்தியா எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்குப் போயிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.

இந்த 20 வருஷ ஊக்கம், உழைப்பு, உணர்ச்சி ஆகியவை எல்லாம் அடியோடு பாழாக்கப்பட்டது. காந்தியார் இனி புதிதாக திட்டம் போட வேண்டிய நிலைக்கு வந்து மயக்கத்தில் இருக்கிறார்.

1916ம் வருஷத்தில் இருந்த அரசியல் சுதந்திரத்தை விட இன்று மோசமாகவும், மக்களுக்கு வரி அதிகமாகவும், செலவு அதிகமாகவும் இருக்கிறதே தவிர காந்தியாலோ காங்கிரசாலோ கடுகளவாவது முற்போக்கு ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை.

~subhead

கதர்

~shend

கதர் விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தோழர் காந்தியாரின் திட்டம் அடியோடு தோல்வி அடைந்து விட்டது, அவனவனுக்கு வேண்டிய உடை அவனவன் நூற்று நெய்து அணிந்துகொள்ள வேண்டுமென்பதே கதர் திட்டத்தின் தத்துவமாகும். அந்தப்படியே நானும் பிரசாரம் செய்து நானும் நூற்றுப்பார்த்தேன். லக்ஷõதிபதி தாய்மாரையும், மனைவிகளையும், மக்கள்களையும் நூற்கச் செய்தேன். கடைசியாக அக்கொள்கை மக்களை காட்டுமிராண்டித் தனமான காலத்துக்குக் கொண்டு போவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர பொருளாதாரத்துக்கும், வேறு தேச முன்னேற்றத்துக்கும் சிறிதும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை நன்றாய் உணர்ந்தேன். இன்று அதன் யோக்கியதையும் அப்படியே ஆகி விட்டது.

இன்று கதருக்குள்ள யோக்கியதை யெல்லாம் எலக்ஷனுக்கு ஒரு சூழ்ச்சியாகவும் சில தனிப்பட்ட ஆட்களுக்கு வயிற்றுப்பிழைப்புக்கு மார்க்கமாகவும், பகுத்தறிவும் சுயமரியாதையும் உடைய மக்களை காங்கிரசில் சேர்க்காமல் இருப்பதற்காகவும், சில அடிமைகளை வளர்ப்பதற் காகவும் ஒரு சாதனமாய் இருந்துவருகிறதல்லாமல் வேறு என்ன காரியத்துக்கு பயன்படுகின்றது என்று யோசித்துப் பாருங்கள்.

கெஜம் 2லீ அணாவுக்கு கிடைக்கும் மில் துணிக்கு பதிலாக கெஜம் 12 அணா 14 அணா போட்டு கதர் வாங்கினாலும் அதற்கு ஈடாக்க முடியாத நிலையில் இருந்து வருவதும், 18 வருஷ காலமாக கோடிக்கணக்கான ரூ. செலவு செய்து பிரசாரம் செய்தும் இந்தியா முழுதும் 1000க்கு ஒருவர் வீதம்கூட பெண்களில் 10000க்கு ஒருவர் வீதம்கூட மக்கள் வாங்கிக் கட்ட அமலுக்கு கொண்டுவரமுடியாமல் இருக்கிறதென்றால் 10000க்கு ஒரு பெண்கூட வாங்கிக்கட்ட உதவாமலும் முடியாமலும் இருக்கிறதென்றால் கதர் திட்டம் வெற்றியடைந்ததா என்று பாருங்கள்.

~subhead

உப்பு சத்தியாக்கிரகம்

~shend

உப்பு சத்தியாக்கிரகத்தின் யோக்கியதையும் உடும்பு வேண்டாம் கை விட்டால் போதும் என்கின்ற மாதிரியில் இர்வின் பிரபு இடம் மண்டி போட்டு இனிமேல் சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டுக்கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்ததோடு முடிவடைந்தது.

ஆகவே காந்தியாரின் திட்டங்கள் எல்லாம் அடியோடு தோல்வி அடைந்தும் அவரது மகாத்மா பட்டம் மாத்திரம் இன்று கோவில்களுக்குள்ளும், தேர்கள் மீதும், திருவிழாக்களிலும் விளங்கும்படி பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதில் குறைவில்லை.

இந்த நிலையில் வாலிபர்கள் பலருக்கு காங்கிரஸ் மயக்கமும், காந்தி பைத்தியமும் இன்னும் இருந்து வருவதை நான் பார்க்கிறேன்.

தேர்தல்களுக்கு காந்தி பெயரையும், காந்தியார் பேரால் வசூலித்த பணத்தையும் கொடுத்து வாலிபர்களை ஏற்படுத்தி மதப் பிரசார முறையில் வேலை செய்வதின் பயனே இந்த மயக்கத்துக்கும், பைத்தியத்துக்கும் காரணம் என்பதே எனதபிப்பிராயம்.

இப்படிப்பட்ட மூட ஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி குறைகூறுவதிலும், பழி சுமத்துவதிலும் அதிசயம் காணமுடியாது.

இந்த 10, 12 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்கம் செய்துவந்த வேலைகளை மக்கள் சரியானபடி உணராமல் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், மதமற்ற இயக்கம் என்று பார்ப்பனர்கள் செய்யும் விஷமப் பிரசாரத்தைத்தான் தெரிந்துகொண்டிருக்கிறது.

~subhead

கடவுளும் மதமும்

~shend

கடவுளும் மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது. கடவுளால் மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர சமூகம் தவிர மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன.

உருவமில்லாத பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும்பற்றி கவலைப் படாமல் தங்கள் தங்கள் வேலையை கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றி விட்டன.

தங்களுக்கு அதைப்பற்றிய கவலை யில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும் மதமும் வெகு மக்களால் கையாளப் படுகின்றதே ஒழிய வேறில்லை.

சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவது போலவே கடவுளிலும் மதத்திலும் கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள் மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை.

நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும் குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப்பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை.

மற்றபடி கடவுளைப்பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும் அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும் அதன் மீது பொறுப்பைச் சுமத்துவதும் மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறைகூறுகிறது. மற்றும் கண்டதெல்லாம், நினைத்த தெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும் ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது.

இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகின்றது என்றால் மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படு கிறது. புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகின்றது. மலத்தில் ஒரு கூட்டமும், பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும், மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும், பக்ஷியில் கருடன், காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும், கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும், காகிதங்களிலும் எழுத்துக்களிலும் ஒரு கூட்டமும், மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூஜை, வணக்கம், பலி முதலியவை செய்து ஏராளமான பொருள்கள் நாசமாக்கப் பட்டு வரப்படுகின்றது. இந்த முட்டாள் தனங்களையும் மோசடி கருத்துக்களையும் முதலில் ஒழிக்க வேண்டுமென்று தான் சு.ம. இயக்கம் சொல்லுகிறது.

இதை தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந் நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கனம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது.

நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்துகொள்ளப் போவதில்லை. கடைசிவரை அது உழைத்துத்தான் தீரும். மதவிஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும் காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரசாரத்துக்கும் ஏமாற்றும் பிரசாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

குறிப்பு: 23.03.1936 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பட்டுக்கோட்டை போஸ்டாபீசுக்கு எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் 24.03.1936 இல் முத்துப் பேட்டைக்கு அடுத்த புத்தகபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய சொற்பொழிவின் விளக்கம்.

குடி அரசு சொற்பொழிவு 05.04.1936

You may also like...