பகுத்தறிவும் கடவுள் வாக்கும்

வினா: மதம் என்றால் என்ன?

விடை: உண்மையில் நம்பிக்கை.

வினா: உண்மை என்றால் என்ன?

விடை: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை.

வினா: உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?

விடை: அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லக்ஷ்யத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும்.

வினா: உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது?

விடை: தன் உயர்வான தெளிந்த அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதினால் நிரூபித்துக் காட்டலாம்.

வினா: உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது?

விடை: அநுபவத்தினாலும், பயிற்சியினாலும் அடையலாம்.

வினா: வேறு வழியில்லையா?

விடை: இல்லை.

வினா: மதத்தைப்பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வியாக்கியானம் தானா?

விடை: தெய்வ நம்பிக்கையும் தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது.

வினா: தெய்வீகம் என்றால் என்ன?

விடை: தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம் பானவைகளெல்லாம் தெய்வீகமானவைகளே.

வினா: அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?

விடை: அவைகளை நாம் எதிர்க்கக்கூடாது. அவைகளைப் பற்றி தாராளமாக விவாதிக்க இடம் கொடுக்க வேண்டும்.

வினா: இதர வழிகளில் அறிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?

விடை: எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்த வேதம் உண்மையான கடவுள் வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

வினா: வேதங்களில் சிலவற்றைக் கூறுக.

விடை: ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பௌத்த வேதம், யூத வேதம், கிறிஸ்தவ வேதம், முகமதிய வேதம், மார்மண் வேதம்.

வினா: இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டுகின்றனவா?

விடை: ஆம்.

வினா: அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்யம் செய்கின்றனவா?

விடை: இல்லை. மாறாக ஒவ்வொன்றும் மற்றவை பொய்யென்று கண்டிக்கின்றன.

வினா: அதை விளக்குக.

விடை: “எனக்கு நிகராக உலகத்திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன்” என்று புத்தர் கூறியிருக்கிறாராம்.

வினா: வேறொரு உதாரணம் கூறுக?

விடை: “நானே உண்மையான வழிகாட்டி; எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது” என்று இயேசு கூறியிருக்கிறாராம்.

வினா: இதை விட முக்கியமாக மதிக்கக்கூடிய ருசு வேறு ஏதாவதுண்டா?

விடை: ஒவ்வொரு மதஸ்தரும் பிற மதஸ்தரை தம் மதத்துக்கு இழுக்க முயல்கிறார்கள்.

வினா: மதமாற்றம் என்றால் என்ன?

விடை: நாம் நம்புவது போல் பிறரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்.

வினா: அதன் நோக்கம் என்ன?

விடை: நோக்கம் பலவாக இருக்கலாம். எனினும் அவற்றுள் முக்கியமானது நம்மைப் போல் மற்றவர்கள் நம்பாவிட்டால் நரக தண்டனை பெறுவார்கள் என்பதே.

வினா: மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?

விடை: ஒன்றாவது முழுதும் மெய்யானதோ பொய்யானதோ அல்ல.

வினா: அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது?

விடை: பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.

வினா: அப்படியானால் வேதங்களை விடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா?

விடை: ஆம். ஏற்படத் தான் செய்யும்.

வினா: அவ்வளவு உயர்வான பகுத்தறிவு நம்மிடம் இருக்கையில், மேலும் நமக்கு மதங்களும் வேதங்களும் வேண்டுமா?

விடை: நமக்கு வேண்டாம். பகுத்தறிவுக்குப் பொருத்தமான வேதங்களைத்தான் ஒப்புக்கொள்ள முடியும்.

வினா: ஒரு புஸ்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால் அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் நீ அதைப் பூரணமாக நம்ப வேண்டியது தானே?

விடை: நம்பத் தேவை இல்லை.

வினா: அது எப்படி?

விடை: நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக்கு மதிப்பேயில்லை. கட்டாயத்தின் பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக்கையுமல்ல. பகுத்தறிவால் தூண்டப்பட்டு நான் நம்பினால் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானது என் பகுத்தறிவேயன்றி வேதமல்ல.

வினா: இதற்கு ஒரு உதாரணம் கூறுக.

விடை: பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்பமாட்டோம். ஏனெனில் நமது அநுபவத்திலும் ஆராய்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை.

வினா: பகுத்தறிவுப்படி தப்பானதையும் நம்ப வேண்டுமென்று வேதம் கட்டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத்தறிவுக்குக் கீழ்ப்படிவாயா?

விடை: பகுத்தறிவுக்கொத்தபடி நான் நடந்துகொள்ளாவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.

வினா: பகுத்தறிவு பொய் என்று கூறுவதை மெய் என்று நம்புவது சாத்தியமில்லையா?

விடை: சாத்தியமே அல்ல. பகுத்தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.

வினா: பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?

விடை: ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.

வினா: உதாரணம் கூறுக.

விடை: படைப்புக் கதை.

வினா: வேறொரு உதாரணம்.

விடை: பிரளயக் கதை.

வினா: மேலும் ஒரு உதாரணம்,

விடை: மனிதன் சபிக்கப்பட்டு பாபியான கதை.

வினா: அவைகளைப்பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?

விடை: வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாக வில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்க வில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

வினா: வேதங்களில் உள்ள வேறு தப்புக்கள் எவை.

விடை: சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. வேதங்களில் கூறப்பட்டவைகள் எல்லாம் பரஸ்பர முரணாக இருக்கின்றன. பாபகரமான பல விஷயங்களையும் வேதங்கள் போதனை செய்கின்றன.

வினா: வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?

விடை: மனிதன் தப்புச் செய்யக்கூடியவன் தானே!

வினா: அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்தது தானா?

விடை: வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், துர்க்குணங்களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.

வினா: அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

விடை: நம்மிடமுள்ள ஒளி வழிகாட்டுகிறபடி நடக்க வேண்டும்.

வினா: அது என்ன ஒளி?

விடை: அதுதான் பகுத்தறிவு.

வினா: பகுத்தறிவு நம்மை தப்பு வழியில் செலுத்தாதா?

விடை: ஆம். செலுத்தக்கூடும்.

வினா: அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்.

விடை: ஏனெனில் அதைவிடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.

வினா: வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?

விடை: வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங் கெட்டுவிடும் என்ற பயமே அதற்குக் காரணம்.

வினா: அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?

விடை: இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கர குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களையே நம்பாத அநேகர் உத்தமர்களாக இருந்திருக்கிறார்கள்.

வினா: எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா?

விடை: இல்லை. சுமார் 5000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.

வினா: அதற்கு முன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?

விடை: நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்குமுன் மக்களும் சமூகங்களும் தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன.

வினா: உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினானா?

விடை: இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.

வினா: அப்படியானால் உலக மக்களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்கமுடையவர்கள்.

விடை: இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டுமிக்க நாகரீகம் உடையவர்களாக யிருந்திருக்கிறார்கள்.

வினா: அதனால் விளங்குவது என்ன?

விடை: வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.

வினா: வேதங்களில்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்பதினால் நன்மை ஏற்படுமா?

விடை: ஏற்படாது. முதலில் வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெடாது. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமலாகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமலாகிவிடும்.

வினா: மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?

விடை: பிரதி பலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதி னாலும், விரும்புவதினாலும் வலுப்படுத்தலாம்.

வினா: நல்லொழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?

விடை: முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிறநல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி.

வினா: கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?

விடை: கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண்டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.

வினா: அத்தகைய மதபோதனையினால் விளையும் பயன் என்ன?

விடை: அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படு கிறார்கள். உத்தம வாழ்க்கையைப்பற்றி எண்ணும் போதும் பயமும் மனச் சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.

வினா: அவ்வளவுதானா?

விடை: துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.

வினா: கடமை என்பதற்கு சரியான பொருள் என்ன?

விடை: கடமை என்பது ஒரு சோதனை அல்ல. தியாகமுமல்ல. கடமை என்பது ஒற்றுமை, அழகு, மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும் போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.

குடி அரசு வினா விடை 19.04.1936

You may also like...