முத்தைய முதலியாருக்கு பாராட்டு

சென்னை மாகாண தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராயிருந்த மாஜி மந்திரி தோழர் எஸ்.முத்தைய முதலியாரவர்களுக்கு சென்னை முதலியார் சங்கத்தார் சென்ற மார்ச்சு 29ந் தேதி ஒரு உபசார விருந்து நடத்தினார்கள். அப்பொழுது தோழர் செய்துள்ள தேசத்தொண்டுகளைப் பாராட்டிப் பேசப்பட்டன. முதலியார் மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராய் இருந்து செய்த சேவைகளை தென்னாட்டார் நன்கறிவர். ஒரு பிரதிநிதி தொகுதியை மாகாணக்கமிட்டியார் சிபார்சு செய்தனராயினும் ஹாமண்டு கமிட்டியார் பல மெம்பர் தொகுதிகளையே ஆதரித்தனர். எனினும் சென்னைச் சட்டசபை அபிப்பிராயத்தைத் தழுவி ஒரு பிரதிநிதி தொகுதியை பார்லிமெண்டு ஆதரித்து விட்டது. தமிழர் க்ஷேமத்துக்காக தோழர் முதலியார் பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறார். அவர் மந்திரியாகவிருந்த போது தான் வகுப்புவாரி வீதாசார உத்தியோக உத்தரவு பிறந்தது. பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு அதனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை நாம் விளக்கிக் கூறத் தேவையில்லை.

குடி அரசு செய்தி விளக்கம் 05.04.1936

You may also like...