தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை!
உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...