நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன்

“1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக்குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர் தான் யாகூப் மேமன்.
” பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.
தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத் துறையினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் ‘ஆடிட்டர்’ யாகூப் மேமன்மூலம் குண்டு வெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாககூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான ‘கறை’யை துடைக்கும் பொருட்டு, 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக் குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர்தான் யாகூப் மேமன்.
இதுகுறித்து யாகூப் மேமனின் வழக்கறிஞர் ‘ஷியாம் கேஸ்வாணி’யின் விரிவான விளக்கம் : யாகூப் மேமனை ‘சரண்’ அடையச் செய்து ‘தடா’ நீதிமன்றத்தில் யாகூப் மேமனுக்காக நான் வாதாடிக் கொண்டிருந்த வேளையில், புலனாய்வுத்துறை உயரதிகாரி ஓ.பி. சத்வால், ‘மந்த்ராலயா’வுக்கு எதிரே அமைந்துள்ள அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து, ‘யாகூப் மேமனுக்கு ஜாமீன் மனு போடுங்கள்’ என்றார்.
‘சாதாரண வழக்குகளில்கூட நான் முதல் நாளே ஜாமீன் மனு போடுவதில்லை, மிகவும் சீரியசான இந்த வழக்கில் முதல் நாளே ஜாமீன் கிடைத்திடுமா?’ என கேள்வி எழுப்பினேன்.
யாகூப் மேமனின் ஒத்துழைப்பு அபாரமானது, 40 ஆண்டுகளாக நமது புலனாய்வு நிறுவனங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கான, பாகிஸ்தான் குறித்த பல தகவல்களை யாகூப் மேமன் வழங்கியுள்ளார். எனவே அவரது ஜாமீன் மனு மீது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றார், ஓ.பி. சத்வால். இதனை நம்பி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தபோது, அதனை ‘சிபிஐ’ கடுமையாக ஆட்சேபித்து ஜாமீன் கிடைக்காமல் செய்துவிட்டது.
புலனாய்வு அதிகாரி சத்வாலிடம் நான் இதுகுறித்து கேட்டபோது : கடந்த 12 மணி நேரத்தில் எல்லாம் ‘தலைகீழ்’ ஆகிவிட்டது, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் மாறி விட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்டார், சத்வால். இந்திய புலனாய்வு நிறுவனங்களை நம்பி நீ ‘மகாத்மா’வாக முயற்சிக்காதே என சரணடைவதற்கு முன்பே யாகூப் மேமனை அவரது சகோதரர் ‘டைகர் மேமன்’ தடுத்தும்கூட, சரணடைந்தவர்தான் யாகூப் மேமன்.
சரணடைவதற்கு முன்பு, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் செய்யப்பட்ட எல்லா (வாய்வழி) ஒப்பந்தந்தங்களையும் புறந்தள்ளிவிட்டு யாகூப் மேமனை நேபாள நாட்டிலிருந்து கைது செய்ததாகவும், புதுடெல்லி இரயில் நிலையத்திலிருந்து கைது செய்ததாகவும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை பரப்பி, கதை கட்டிவிட்டது சிபிஐ.
நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து, புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, 1994 ஜூலையில் சரண் அடைந்து, கடந்த 21 ஆண்டுகளாக ஜெயில்வாசம் அனுபவித்து வந்த நிலையில், இம்மாதம் 30ஆம் தேதி தூக்கில் போடப்படுகிறார் யாகூப் மேமன்.
இதைத்தான் ‘நீதித்துறையின் கேலிக்கூத்து’ என்கிறார், வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply