ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்து, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளே மத்திய காங்கிரஸ் ஆட்சி, அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை வாங்கியது. வழக்கு மாநிலம் தொடர்பானது என்பதால் கலந்தாலோசனைக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.மத்திய அரசோ கலந்தாலோசனை என்றாலே மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்று வாதிடுகிறது. இரண்டும் ஒன்று என்றால், இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளை சட்டம் உள்ளடக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியை தோழர் தியாகு எழுப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ஜூலை 18இல் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கு குறித்த விளக்கங்களை முன் வைக்கிறது இந்த கட்டுரை. திருப்பெரும்புதூரில் கடந்த 1991 மே 21ஆம் நாள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், இது தொடர்பான கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததும், உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்து, மூவருக்குத் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனை ஆக்கி, நால்வருக்குத் தூக்கை உறுதி செய்ததும், அவர்களிலும் நளினிக்கு மட்டும் தமிழக அரசு முடிவின்படி ஆளுநர். தூக்கை ஆயுளாகக் குறைத்ததும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் மறுதலித்ததும், இதற்கெதிராகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்ததும், தமிழகச் சட்டப் பேரவையே தீர்மானம் இயற்றியதும், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கிலிடுவதை நிறுத்தித் தடையாணை வழங்கியதும், கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க 11 ஆண்டுக் காலத் தாழ்வு ஏற்பட்டதைக் காரணமாகக் காட்டி இந்திய உச்ச நீதிமன்றம் மூவருக்கும் தூக்கை ஆயுளாகக் குறைத்ததும் பழைய செய்திகள் என்றாலும் நாம் நினைவிற்கொள்ள வேண்டியவை. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைப்பதை எதிர்த்து இந்திய அரசு தொடுத்த மீளாய்வு வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான ஆயம் (பெஞ்சு), ஆயுள் தண்டனை என்றால் ஆயுட்காலச் சிறைதான் என்ற போதிலும், மாநில அரசு இவர்களைக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் தண்டனைக் குறைப்பு விதிகளைப் பயன் படுத்தி விடுதலை செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியது. இதையொட்டித் தமிழக முதல்வர் கடந்த 2014 பிப்ரவரி 19ஆம் நாள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்புச் செய்தார்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்றுக் கடந்த 23 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் விடுதலை செய்வதென தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது, உரிய சட்ட விதிகளின் படி இந்த முடிவு நடுவணரசுக்குத் தெரிவிக்கப்படும், மூன்று நாளைக்குள் தில்லியிலிருந்து மறுமொழி வரவில்லை என்றால் நாமே அவர்களை விடுதலை செய்வோம் என்றார் முதல்வர். இந்திய அரசு தமிழக அரசுக்கு எவ்வித மறுமொழியும் அனுப்பாமல் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பிப்ரவரி 20ஆம் நாள் தமிழக அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து விட்டது. இந்திய அரசு தொடுத்த வழக்கோடு தமிழ்நாட்டுக் காங்கிரசார் சிலரும் சேர்ந்து கொண்டு புதுப் புது சிக்கல்களைக் கிளப்பினர்: தூக்குத் தண்டனையை ஆயுள சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், மீண்டும் ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி இப்படிச் செய்ய முடியும் என்றால் இந்தக் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளே செல்லாது என்று கூட சில காங்கிரசார் வாதிடுகின்றனர்! செத்தவர் ராஜிவ் என்பதால், இந்த வழக்கில் சட்டம் விதிமுறை என்பதெல்லாம்கூட இவர்களுக்கு கெட்ட வார்த்தையாகி விடுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட முழு ஆயம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்தியா முழுக்க நூற்றுக் கணக்கான ஆயுள் சிறைக் கைதிகளின் “முன்-விடுதலை” நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடுவணரசும் எல்லா மாநில அரசுகளும் விடையளிக்க வேண்டிய சில வினாக்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத் தின் உறுப்பு 72 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய அரசோ, உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசோ ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்கிய பின் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி மாநில அரசு மீண்டும் ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? அதாவது தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், ஆயுள் முழுக்க சிறையில் அடைத்து வைக்காமல் முன்-விடுதலை செய்ய இப்போதுள்ள சட்ட வழிவகைகள் நீடிக்கலாமா கூடாதா? ஆயுள் தண்டனைக் கைதியை முன்-விடுதலை செய்வதற்கான வழிவகைகள் ஒருசில வழக்குகளில் மட்டும் பொருந்தாதபடி செய்யலாமா? அதாவது என்ன நடந்தாலும் அந்த ஆயுள் கைதிகளை சாகும் வரை சிறையில் அடைத்து வைக்கலாமா? கொலை செய்ததாகத் தண்டிக்கப்பட்டவருக்கு கொலையுண்டவரின் குடும்பத்தினர் தரப்புக் கருத்தைக் கேட்காமலே தண்டனை குறைப்பு வழங்கலாமா? இந்த வினாக்கள் அனைத்தும் ஏதோ ஒரு ராஜிவ் கொலை வழக்குத் தொடர்பானவை மட்டுமல்ல, சிறைப்பட்டுள்ள கைதிகள் அனைவரின் மனித உரிமைகள் தொடர்பானவை, சிறைத் தண்டனையின் நோக்கங்கள் தொடர்பானவை, மாநில அரசுக்குள்ள அதிகாரங்கள் தொடர்பானவை. ஆனால், இந்த வினாக்களுக்கு இதுவரை விடை காணப்படவில்லை என்று நினைக்க வேண்டாம். இப்போதுள்ள சட்டங்களிலேயே போதிய விளக்கங்கள், விடைகள் உள்ளன. போதவில்லை என்றால் சிறை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. குறிப்பிடத்தக்க ஒன்று கிருஷ்ணய்யர் தலைமையிலான நீதிபதிகள் ஆயம் 1980ஆம் ஆண்டு மாருராம் வழக்கில் வழங்கிய தீர்ப்பு. கூட்டிக் கழித்துப் பார்த்தால், என்ன சொல்லியாவது, என்ன செய்தாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் 24 ஆண்டு சிறையடைப்புக்குப் பிறகும் விடுதலை ஆவதைத் தடுக்கத்தான் காங்கிரஸ் அற்பர்கள் குதியாய்க் குதிக்கிறார்கள். இதற்காக அவர்கள் மாநில அரசுக்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரங்களையே கேள்விக் குள்ளாக்கியுள்ளனர். இந்தப் பூசலின் மையம்… குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி மாநில அரசுக்குள்ள தண்டனைக் கழிவு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரங்களே. குறிப்பாகச் சொன்னால் பிரிவு 435 மாநில அரசுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்பதே. குறிப்பிட்ட சில வழக்குகளில் மாநில அரசு நடுவணரசைக் கலந்து கொண்ட பிறகே செயல்பட வேண்டும் என்று இந்தப் பிரிவு 435 சொல்கிறது. இதன் இரு உட்பிரிவுகள் இருவகையான வழக்குகளைக் குறிப்பிடுகின்றன. முதல் உட் பிரிவு 435(1) மூன்று கூறுகளைக் கொண்டது. இவற்றுள் முதல் கூறுதான் (435(1)(அ). இங்கு நம் கருத்துக்குரியது. தண்டனைக் கழிவு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு 432, 433 ஆகிய பிரிவுகள் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு – மத்திய புலனாய்வு நிறுவனம், புலனாய்வு செய்த வழக்கில் பயன்படுத்தும்போது, நடுவண் அரசிடம் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது. ராஜிவ் கொலை வழக்கை நடுவண் புலனாய்வு நிறுவனம் (ஊBஐ) புலனாய்வு செய்தது உண்மை. எனவே, எழுவர் விடுதலைக்கு இவ்விதி பொருந்தும் இதில் அய்யமில்லை. அதனால்தான் தமிழக முதல்வர் அவர்களை விடுதலை செய்யும் முடிவை உடனே செயல்படுத்தாமல் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார். முதல்வர் மூன்று நாள் கெடு விதிக்கலாமா? என்று கேட்பவர்களுண்டு. விதித்தால் என்ன? மூன்று நாள் போதாது என்று நடுவணரசு கருதியிருந்தால் மாநில அரசுக்குத் தெரிவித்துக் கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாமே! செய்தி தெரிவிப்பதை மட்டுமே கலந்தாய்வாக மதிக்க இயலாது என்றால், திறமான கலந்தாய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை நடுவணரசே எடுத்துரைக்கலாமே! மாநில அரசு எழுதும் மடல்களைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு மறுமொழியே இல்லாமல் காலங்கடத்துவதற்குப் பெயர்தான் திறமான கலந்தாய்வோ? எழுவர் விடுதலை தொடர்பில் முதல்வர் செயலலிதா செய்தது சட்டப்படியும் ஞாயப்படியும் சரி. கலந்தாய்வு என்ற கட்டுப்பாட்டைக் காரணங்காட்டி இந்திய அரசின் இசைவு பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று காங்கிரஸ் சொல்வது விபரீத அபத்தம்! கலந்தாய்வு (Consultation) வேறு, ஒப்புதல் (Concurrence) வேறு இதைத் தெரிந்து கொள்ளப் பெரிய சட்ட அறிவு ஏதும் தேவை இல்லை. எளிய ஆங்கில-தமிழ் அகராதியே போதும். இது வருகிற சூலை 15ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தில் தெளிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம். கலந்தாய்வு வேறு, ஒப்புதல் வேறு என்பதற்கு குறிப்பிட்ட சட்டப் பிரிவிலேயே அகச் சான்று உள்ளது. பிரிவு 432, உட்பிரிவு (2) இந்த வேறுபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறது. எவ்வாறான வழக்குகளில் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை மத்திய அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை இல்லாமல் நடைமுறைக்கு வராது என்று இந்த உட்பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதாவது நடுவணரசின் ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட வழக்குகளில் மாநில அரசு மட்டும் தண்டனைக் குறைப்பு வழங்கினால் போதாது, மத்திய அரசும் வழங்கினால்தான் அது செயல்வடிவம் பெறும்;அதாவது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு தண்டனைக் குறைப்புச் செய்ய முடியாது. கலந்தாய்வு என்றாலே ஒப்புதல்தான் என்றால் இந்த இருவேறு உட்பிரிவுகளே தேவைப்பட்டிருக்க மாட்டா. இரண்டும் சேர்ந்து ஒரே பிரிவாக இருந்திருக்கும். முதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒப்புதல் கோருகிறது. அதாவது மத்தியக் காவல்துறை நிறுவனம் (சி.பி.அய்.) தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுடன் கலந்தாய்வு தேவை. மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட குற்றங்களில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ராசீவ் கொலை வழக்கு முதல் வகையைச் சேர்ந்தது என்பதால், கலந்தாய்வே போதுமானது. இது முதல் வகையைச் சேர்ந்தது என்பதை இந்திய அரசோ காங்கிரசோ மறுக்கவில்லை. ஆனால் கலந்தாய்வு என்றாலும், இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று குதர்க்கம் பேசுகிறார்கள். குதர்க்கத்துக்குக் காரணம் குருட்டு பக்தி! முதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒத்த முடிவு, அதாவது ஒப்புதல் கோருகிறது. இந்த வேறுபாட்டைக் காண விடாமல் காங்கிரஸ் அற்பர்களைத் தடுப்பது எது? ராஜிவ் பக்தர்களாக இருப்பது காங்கிரசார் உரிமை. ஆனால் மனித உரிமைகள், மாநில உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்ட விதிகள் எல்லா வற்றையும் தங்களின் பழிவெறி ஆதாய அரசியல் யாகத் தீயில் போட்டுக் கொளுத் தும் அவர்களின் முயற்சிக்கு அரசுகளோ உச்ச நீதிமன்றமோ துணை போகாதிருக்க வேண்டும். மனித உரிமைகள் மகத்தானவை, எந்தப் பெரிய மனிதனை விடவும்! கட்டுரையாளர்: ‘தமிழ்த்தேசம்’ இதழ் ஆசிரியர்

பெரியார் முழக்கம் 16072015 இதழ்

You may also like...