கார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’
கோழி முட்டைகளை வாங்கும் வசதியில்லை; காக்காய் இடும் முட்டைகளை திருடி, அப்படியே முட்டைபோல் விழுங்கலாம்; இது விலை இல்லாத முட்டை. இதேபோல் கோழி, ஆட்டுக்கறியை விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு, அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டுக்கறி. ஆனால், ‘மதவெறி’ ஆட்சியாளர்கள் மாட்டுக் கறிக்குத் தடைப் போட்டு, எளிய மக்களின் உணவு உரிமையைப் பறிக்கிறார்கள். நல்லவேளை, கருப்பு காக்காய் வணங்கப்படும் ‘புனித’ப் பறவையாக இல்லை. இல்லையேல், ‘காக்கா முட்டைக்கும்’, காவிக்காரர்கள் தடைகேட்டுப் போராடக் கிளம்பியிருப்பார்கள். ‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை வந்து விட்டாலே, சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதிகள் அதிகரித்து, அதனால் இந்தியா வுக்குள் நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வந்து சேரும். ஜாதிய தீண்டாமைகள், பழமை வாதங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று கணித்தவர்கள் உண்டு. ஆனால், என்ன நடந்தது? ஜாதிய-சமூக இடைவெளியை மேலும் அகலப் படுத்தி, விளிம்பு நிலை மக்களை வேகமாக மய்ய நீரோட்டத்திலிருந்து விரட்டி அடித்து விட்டது....
