வினாக்கள்… விடைகள்…!

அன்னை தெரசா – சமூகத் தொண்டுக்கு காரணம் மதம் மாற்றம் செய்வதுதான். – ஆர்.எஸ்.எஸ்.தலைவர்மோகன் பகவத்
அவராவது மதம் மாற்றுவதற்காகவாவது சமூகத் தொண்டு செய்தார்; நீங்கள் செய்யும் ஒரே சமூகத் தொண்டு மதம் மாற்றுவது மட்டும்தான்!

அஷ்டலட்சுமி கோயில் அர்ச்சகர் கராத்தேயில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கியவர். – செய்தி
அதுக்காக ‘கிராஸ் பெல்ட்டை’ கழற்றி வீசிடவாப் போறாரு?

இந்தியாதான் எனது மதம். – மோடி
அப்படியா! இதைப்போய் ஒரு நாடுன்னு நினைச்சு நாங்க முட்டாள்தனமா நினைச்சு கிட்டே இத்தனை காலமா, ஏமாந்துட்டோங்க….

இராஜபக்சேயின் ஆஸ்தான சோதிடர் கமனதாசா, தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். – செய்தி
குருநானக் கல்லூரியில் நடந்த மாநாட்டுக்கு வந்தாலும் வந்திருப்பார்; நல்லா தேடிப் பாருங்க!

ராகுல் காங்கிரசிலிருந்து விடுமுறை எடுத் துள்ளார். – செய்தி
காங்கிரசே நீண்ட விடுமுறையில தானே இருக்கு? இவுருக்கு மட்டும் எப்படி விடுமுறை கிடைச்சுது?

தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்க வில்லை. – முதல்வர் பன்னீர்செல்வம்
இப்படி எல்லாம் பேசாதீங்க சார்; அப்புறம் மிச்ச மிருக்கும் உங்க கவுரவமும் குறைஞ்சுடப் போவுது!

கரூர் கோயிலில் ஜெயலலிதா பிறந்த நாள் யாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு. – செய்தி
அரசு அதிகாரிகள் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாதுன்னு தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு என்னாச்சு? இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, அரசு சார்பில் ஒரு யாகம் நடத்துவீங்க போலிருக்கு!

பெரியார் முழக்கம் 05032015 இதழ்

You may also like...

Leave a Reply