‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
கடவுள் – மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. ...
