அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”
1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கப்பெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘குடிஅரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடிஅரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தியால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய்ப் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடிஅரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்காரவேலர், சாமி.சிதம்பரனார்,...
