தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்!
ஜாதி எதிர்ப்புக் கருத்துகளை மக்களிடையே பரப்ப திராவிடர் விடுதலைக் கழகம், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பரப்புரை இயக்கங்களைத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மய்யமாக ஜாதியமைப்பே இருக்கிறது. அதற்குள் வெடித்துக் கிளம்பும் முரண்பாடுகளே ஜாதியக் கலவரங்களுக்குக் காரணம். இந்த ஜாதியமைப்புக்கான கருத்தியலை வழங்கி, ‘புனித’ப்படுத்துவது பார்ப்பனியம். மதவாதம் – மதவெறியாக ஜாதியம் – ஜாதி வெறியாக மிக எளிதாக ‘உருமாற்றம்’ பெற்றுவிடுகிறது. பெரியார் இயக்கம் நடத்திய மண்ணில் – ஜாதி மதவெறி சீர்குலைவு சக்திகள் தலைதூக்குகிறதே என்று உண்மையில் வேதனைப்படுவோர் உண்டு. பெரியார் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று முத்திரை குத்தத் துடிப்போரும் உண்டு. ஆனால், பெரியாரைப் பேசும் அரசியல் கட்சிகளானாலும் பெரியாரை குறை கூறத் துடிக்கும் இயக்கங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் தலைதூக்கிட முயற்சிக்கும் ஜாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக ஏன், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முன் வரவில்லையே என்று வேதனையுடன்...