‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை
‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!
1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது.
71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும்.
கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன.
பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன.
இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்.
அங்குள்ள மாமாங்கக் குளம் என்பது வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அதில் உள்ள தண்ணீரும் வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அப்படி இருக்க அன்று (மக நட்சத்திரத் தினத்தன்று) மாத்திரம் அக்குளத்திற்கும் தண்ணீருக்கும் எப்படிப் புதுயோக்கியதையோ பெருமையோ உண்டாகிவிடும் என்பதை அறிவுள்ள மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தமிழனின் மதி ஈனத்தைக் கை முதலாக வைத்து வாழும் பார்ப்பனர் கூட்டம், தங்கள் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக எதைக் கற்பித்தா லும், தமிழன் அதற்கு அடிமையாவ தென்பது இழிவான காரியமல்லவா?
கும்பகோண மாமாங்கத்திற்குப் பார்ப்பனர் ஏற்படுத்தி இருக்கும் கதை என்னவென்பது எவரும் அறியாத தல்ல.
அதாவது, “சப்த நதிகளும் சிவனிடம் சென்று உலக மக்கள் தங்கள் தங்கள் பாவத்தைக் கழிப்பதற்கு ஆகத் தங்களிடம் வந்து குளித்து முழுகிப் பாவங்களைக் கழுவிவிட்டுக் கொண்டே இருப்பதால் அப்பாவங்கள் தங்களால் சுமக்க முடியவில்லை” என்று அழுதார்கள். அதற்குச் சிவன் அந்நதிகளைத் தேற்றி, “12 வருஷத்திற்கு ஒரு முறை கும்பகோணத்திற்கு வந்து அங்குள்ள ஒரு குளத்தில் தீர்த்தத்தை உற்பத்தி செய்கிறேன். அக்குளத்திற்கு வந்து நீங்கள் குளித்தால் உங்களின் பாவங்கள் அதில் கழுவப்பட்டுப் போகும்” என்றும் சொன்னார். அதற்கு ஆக அந்த நதிகள் அங்கு வந்து குளித்து, தங்கள் மீதுள்ள பாவங்களை அதில் கழுவி விடுகின்றன. ஆதலால், மனிதர் களும் அன்று வந்து அதில் குளித்தால் அம்மனிதர்களின் பாபமும் அங்குக் கழுவப்பட்டுவிடும்” என்பது புராணக் கதை.
இதுதான் மாமாங்கக் கதையின் சுருக்கம்.
இதை எந்த மனிதனாவது நம்ப முடியுமா? மனிதன் உணர்ந்த ஜீவப் பிராணி என்பதற்குக் காரணம் அவனுக்கு உள்ள ஆறாவது (பகுத்தறியும்) அறிவேயாகும்; அதாவது சிந்தித்துப் பார்க்கும் தன்மையேயாகும். அப்படிப்பட்ட ஆறாவது அறிவுப்படிப் பார்த்தால் இந்த மாமாங்கக் கதையை எந்த மனிதனாலாவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.
ஒரு நதியில் ஒரு மனிதன் குளித்த மாத்திரத்தில் அவனது பாபம் அதில் கழுவப்பட்டுப் போகும் (தொலையும்) என்பது எப்படி அறிவுக்குப் பொருந்தும் என்பதும், அந்த நதி அந்தப் பாவத்தைச் சுமக்காமல் சிவனிடம் சென்று அழுவது என்பதும், அதற்கு ஆக (அந்த நதிகளின் பாவபாரம் குறைவதற்கு ஆக) வேறு ஒரு குளத்தைக் கடவுள் சிருஷ்டிக்கிறது என்பதும், அந்தக் குளத்திற்கு இந்த (ஏழு) நதிகள் வருவது என்பதும் ஆகிய சங்கதிகள் மனிதர்களுக்குச் சொல்லக் கூடியவைகளா அல்லது மடையர்கள், மனிதத் தன்மை அற்ற, மனித உருக்கொண்ட, மிருகங்களுக்கும் மரஞ்செடிகளுக்கும் சொல்லக் கூடிய கதையா என்று வாசகர்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
12 வருஷத்திற்கு ஒரு முறை அந்தக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.
தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லாது, பொங்குகிற வ°துவை அதில் போட்டாலல்லாது தண்ணீர் எப்படிப் பொங்க முடியும்? மாமாங்கத் தினத்தன்று தண்ணீர், குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாகச் சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள். மக்களைத் தண்ணீருக்குள் இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, பிறகு தண்ணீரைப் பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக்கணக்கான மக்களை, இலட்சக்கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு, அதன் பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படித் தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப் போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்? ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு நீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்; அந்தச் சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்துவிட்டால் அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடையாகுமா என்று கேட்கிறோம்.
அன்றியும் சப்த நதிகளுக்குமே தங்களிடம் மக்கள் கழுவிவிட்ட பாபம் தாங்காமல் அங்கு (மாமாங்கக் குளத்திற்கு) வந்து குளித்து பாவங்களைக் கழுவி விட்டு விட்டுப் போக வேண்டிய அவசியம் வந்ததென்றால், பிறகு இந்த நதிகள் கழுவிவிட்ட பாபத்தை இந்த மாமாங்கக்குளம் கழுவி விடவே, எந்தக் குளத்திற்கு வருஷத்திற்கு வருஷம் அல்லது 12 வருஷத்திற்கு ஒரு தரமாவது அது சென்று வந்தது என்று கேட்கின்றோம்.
ஆகவே, “எத்தனையோ காலமாக எத்தனையோ பேர் கழுவிவிட்ட பாபங்களைக் கொண்டு வந்து கழுவிவிட்ட” மாமாங்கக் குளப் பாவத் தண்ணீரில் மனிதன்போய் குளிப்பதானால், அவனுக்குப் பாவம் ஏறுமா? அல்லது கழியுமா? என்று அறிவுடைய மக்கள் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். எனவே, இந்த மாமாங்கப் புரட்டு பார்ப்பனர் பிழைக்க ஏற்படுத்திக் கொண்ட ஒரு சுங்கச்சாவடி, கட்டுக்கதை அல்லாமல் இதில் ஏதாவது நாணயமோ உண்மையோ அறிவுடைமையோ இருக்க இட மிருக்கிறதா? இதற்குப் பார்ப்பனப் பத்திரிகை உடையவும் காங்கிரசுக் காரர்களுடையவும் விளம்பரம் ஒருபுற மிருக்க, காங்கிரசுக்காரர்கள் அதைத் தங்கள் பிரச்சாரத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சி ஒருபுறம் இருக்க, இரயில்வேக் காரருடைய விளம்பரம் வேறு ஒரு பக்கம் இருந்து வருகிறது. (அன்று காங்கிர°, இன்று இந்து முன்னணி – ஆர்.எ°.எ°. – ஆர்)
இந்த வருஷம் மாத்திரம் “சண்டை நெருக்கடி காரணமாக இரயில்விட முடியாது” என்று சொல்லுகிறார்கள் என்றாலும், அந்த விளம்பரத்தின் மூலம் மக்களுக்கு மாமாங்கத்தை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள். இரயிலுக்கு எப்படியும் சென்ற மாமாங்கத்திற்குக் கிடைத்த வரும்படிக்குக் குறையாமல் வரும்படி கிடைக்கத்தான் போகிறது. இரயில்வே சிப்பந்தி பார்ப்பனர்களுக்கும் ‘பிரை°’ அடிக்கத்தான் போகிறது. மற்றும் பார்ப்பனர்களுக்குக் காப்பிக் கடை, ஓட்டல், தங்குமிட வசதி, பாட்டுக் கச்சேரி, சினிமா முதலிய காரியங் களாலும்; தர்ப்பணம், சங்கற்பம் முதலியவைகளாலும், மற்றும் பல சிங்காரச் சிற்றின்பக் காரியங்களாலும் இரும்பு, நூல், ஜவுளி வியாபாரிகள் அடித்த கொள்ளை இலாபத்தைப் போல் இலாபம் கிடைக்கத்தான் போகிறது. கடைசியில் கெட்டு நட்டமடைந்து இழிவடைந்த முட்டாள்களாகத் திராவிட மக்கள்தான் ஆகப் போகிறார்கள்.
மற்றும் தன் மனைவி மக்களை ஒரு மீட்டிங்கிற்கும், கான்பரன்சுக்கும் அனுப்பக்கூடப் பயந்து நடுங்கியவனும் – உறை போட்டு அறைக்குள் பூட்டி வைத்து, பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டு வெளியில் போய் வருகிறவனும்கூட, தன் மனைவி மக்களை மாமாங்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்க் கூட்டத்தில் சிக்க வைத்து நசுங்குண்டு பஞ்சாமிர்தம் போல் ஆவதைப் பார்த்து, “கழுத்து பத்திரம், காது பத்திரம்” என்று மாத்திரம் உரத்திக் கூறிக் கொண்டே இழுத்து வரப் போகிறான் என்பதைத் தவிர, மாமாங்கத்தின் முடிவு வேறு என்னவாக இருக்க முடியும்?
இந்தச் சர்க்கார் மநுதர்ம – புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக் கூடாது என்று 144 உத்தரவு போட்டு, அதற்குப் பதிலாக ஓர் உலகக் கண்காட்சியை நடத்தச் செய்து இருக்கும். “மக்கள் மடமையாய் இருக்கும் வரை அரசருக்கும் ஆரியருக்கும் ஆதாயம்” என்கிறது சாணக்கிய கொள்கை. ஆதலால், அறிவு வளர்ச்சிக்குச் சர்க்கார் தக்கது செய்யாமல் மாமாங்கம் முதலியவைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் இந்த மாமாங்கத்திற்குத் திராவிட மக்கள் – சிறப்பாகத் தமிழ் மக்கள் செல்லாமல் அதை வெறுத்துத் தள்ளி, போகிறவர்களுக்கும் விவரம் சொல்லி எவரையும் போகாமல் தடுத்துவிட வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
மாமாங்கக் கதையை நம்புவது கேடு! மதிகேடு!! மதிகேடு!!! என்று சொல்லுவதோடு, அங்குச் செல்வதும் தமிழ் மகனுக்கு (திராவிடனுக்கு) மானக்கேடு! மானக்கேடு!! மானக்கேடு!!! என்று பலதடவை சொல்லுவோம்.
– ‘குடிஅரசு’, தலையங்கம், 17.2.1945

பெரியார் முழக்கம் 25022016 இதழ்

You may also like...