வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 2/4
வைக்கம் போராட்டம் குறித்த குடி அரசு செய்திகள், பெரியாரின் கூற்றுகள் மட்டுமில்லாது சாமிசிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல், திராவிடர் கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணி மற்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.ஆனைமுத்து ஆகியோர் வைக்கம் குறிதது எழுதியுள்ள செய்திகளையும் தகவல்களையும் முன்வைத்தால் கூட ‘அது தி.கவின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்று ஜெயமோகன் மறுக்கக்கூடும். ‘வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல்பாடுகள்’ குறித்தும் காந்தியை விமர்சித்தும் தொடர்ச்சியாக ஜார்ஜ் ஜோசப் குடியரசு இதழில் எழுதி வந்தார். ஜார்ஜ் ஜோசப் குறித்த தகவல்களை திரு வி.கவின் வாழ்க்கைக்குறிப்புகள் 1,2, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், மபொசியின் ’விடுதலைப்போரில் தமிழகம்’, ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ ஆகிய நூல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் யாரும் ’அதிகாரப்பூர்வ தி.க வரலாற்றாசிரியர்கள்’ அல்ல. மட்டுமில்லாது இவர்களில் பலரும் காங்கிரஸ் சார்பு உடையவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியாரோடு முரண்பட்டவர்கள். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ஆய்வு...