சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு
தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் – லூர்துசாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக் கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6 – வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 – மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்கவேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்பவருக்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என் அனுபவத்தில் 5,6 முறை சிறை சென்றிருக்கின்றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து முத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில் தான். அவ்வளவு கொடுமையாவிருந்தது; கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கரஸ்காரர் சிறை சென்ற...