பட்டம் துறந்த பதி விரதைகள்
காங்கிரசின் பேரால் சட்டசபை தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட பட்டங்களை துறந்துவிடவேண்டும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு நாணயமானது என்பது நமக்கு இன்னமும் விளங்கவில்லை. இந்த நிபந்தனை சென்னை மாகாணத்துக்கு மாத்திரமா அல்லது இந்தியா பூராவுக்குமா அல்லது தோழர் ராமலிங்க செட்டியார், ரத்தினசபாபதி முதலியார் ஆகிய இருவர்களுக்கு மாத்திரமா என்பது விளங்கவில்லை. தோழர் சுப்பராயன் அவர்கள் இன்னமும் அரசாங்க நியமனம் சில வகித்து வருகிறார். ஏதேதோ கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். காங்கிரசைச் சேர்ந்த வேறு சில அங்கத்தினர்களுக்கும் சில நியமனங்கள் இன்னும் இருக்கின்றன. அதிக தூரம் போவானேன் திவான் பகதூர் பட்டம் துறந்த தோழர் மாஜி திவான்பகதூர் ராமலிங்க செட்டியார் அவர்களுக்கு சென்னை அரசாங்கத்தாரில் அதுவும் மந்திரிமார்களால் நியமனம் செய்த சில பதவிகள் இருக்கின்றன. தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கும் மந்திரிகளால் நியமனம் பெற்ற சில பதவிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ராஜினாமா செய்யாமல்...