ஜவஹர்லால்

வரவு செலவு

ஜவஹர்லால் தேர்தலுக்கு நிற்காதது ஏன்?

“காங்கிரஸ்காரர்கள்தான் மூளையில்லாதவர்கள்”

காங்கிரஸ் தலைவர் “வந்தார்” “போனார்”

உள்ளதும் போச்சு

காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லாலினது வரவால் ஜனங்களுக்கு ஒன்றும் பலனேற்படா விட்டாலும் ஜனங்களினுடைய நல்லபிப்பிராயத்தை யாவது இவர் பெற்றிருக்கலாம். அப்படியும் ஒன்றும் இல்லாமற் போனதோடு, ஜனங்கள் இவரைப் பற்றி இவர் வருவதற்கு முன் என்ன மதிப்பு வைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த மதிப்பும் இல்லாமல் போகும்படி நடந்துகொண்டார். அரசியல் சம்பந்தமாகவோ கட்சி சம்பந்தமாகவோ அவருடைய அபிப்பிராயங்கள் எப்படியிருந்தபோதிலும் ஜவஹர்லால் என்பதற்காக ஜனங்கள் கொஞ்சம் மரியாதை வைக்கும்படியான விளம்பரம் பெற்றிருந்தார். எப்படி என்றால் (தோழர் சத்தியமூர்த்தி சொன்னது போல்) இவருடைய தகப்பனாரை உத்தேசித்தேயாகும். அதனாலேயே இவரை முக்கிய புருஷர்களில் ஒருவராகவும் கருதி இருந்தார்கள். இவருக்கு இந்தியாவைத் தவிர மற்ற உலக அனுபவங்கள் இருக்குமென்றும் கருதியிருந்தார்கள். மற்றும் இவர் ஒரு உண்மையான உழைப்பாளியென்பதை இவருடைய எதிரிகள் கூட ஆட்சேபிக்கப் பயந்து வந்தார்கள். இவருடைய சமதர்ம அபிப்பிராயங்களைப் பார்த்தவர்கள் பொதுஜனங்களிடத்தில் இவருக்கு உண்மையான கவலை யிருக்கிறதென்றே கருதியிருந்தார்கள். அதனாலேயே மற்ற தலைவர்களை விட இவரைக் கொஞ்சம் விசேஷமாக மதித்தார்கள். ஆனால் இவருடைய தென்னிந்திய சுற்றுப் பிரயாணமானது மேல்கண்ட மதிப்புகளை அடியோடு மாற்றிக்கொள்ளும்படி செய்து விட்டதால் உள்ள மதிப்பும் போய்விட்டது.

~subhead

பண்டிதர் சமதர்மம்

~shend

அவருடைய சுற்றுப்பிராயணமே ஒரு கெட்ட எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

அதாவது ஒரு சமதர்மவீரர் வரும்போதே ஊரார் முதலில் ஒரு தனி ஸ்பெஷல் டிரெயினில் வந்ததும் உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் மோட்டாரில் பிரயாணம் செய்ததுமான தன்மையில் அவரது பிரயாணம் துவக்கப்பட்டதி லிருந்தே அவரது சமதர்மம் இன்னதென்பது விளங்கக்கூடியதாய் விட்டது.

தொண்டர்களுக்கும் பொதுஜனங்களுக்கும் அவமதிப்பு

அவருடைய சுற்றுப் பிரயாணம் வளர வளர காங்கிரஸ் தொண்டர் களுக்கு அவமதிப்பை அதிகரிக்கச்செய்து கொண்டே வந்தது. ஏனென்றால் இவர் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தொண்டர்களை வைவதே இவரின் முதல் வேலையாகி விட்டது. இவரைப் பார்க்க வேண்டுமென்று வந்த பொது ஜனங்களை “ஆட்டுமந்தை”களென்றும் “புத்தியில்லாத ஜனங்க”ளென்றும் வைவது இரண்டாவது வேலையாக இருந்தது. சுயமரியாதைக்காரரையும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரையும் வைவது மூன்றாவது வேலையாக இருந்தது. இவர் தங்கியிருந்த இடத்தில் இவரைப் பார்க்க வந்த வாலிபர்களையும் இவர் மதித்து இவரது ஞாபகார்த்தமாகக் கையெழுத்துக் கேட்ட மாணவர்களையும் பரிகாசமாகவும் இழிவாகவும் பேசுவது நான்காவது வேலையாயிருந்தது. கடைசியில் பார்ப்பனரல்லாதார் சமூகத்தையே வைதார். மொத்தத்தில் இவர் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் பாக்கி விடவில்லை.

~subhead

நாட்டு ஞானம் இல்லை

~shend

இது எதைக் காட்டுகிறதென்றால் இந்திய ஜனங்களைப் பற்றி ஜவஹர்லால் தெரிந்து கொண்ட யோக்கியதை எவ்வளவென்பதையும் தென்னிந்தியாவிலுள்ள அரசியல், சமுதாய இயல், சமூக நிலை ஆகியவை களைப்பற்றி இவருக்குள்ள அறிவு எவ்வளவு என்பதையும் தெளிவாய்க் காட்டிவிட்டது. முதல் கோணல் முற்றுங்கோணல் என்பதற்கிணங்க, இவரது பிரயாணம் எந்த லக்ஷணத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லக்ஷணத்திலேயே முடிவு பெற்றது.

~subhead

தொழிலாளர் விஷயம்

~shend

திருச்சியில் தொழிலாளருடைய கூட்டத்தில் பேசுகிற பொழுது சமதர்ம வீரராகிய காங்கிரஸ் தலைவர் கொஞ்சங்கூட முன்பின் யோசனையில்லாமல், “காங்கிரஸ் தொழிலாளருக்காக என்ன செய்யப் போகிறதென்பது எனக்குத் தெரியாது; ஆனதினால் உங்களுக்குச் சொல்லுவதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டார். மற்றும் இவர் பேசினதாக சென்ற சனிக்கிழமை “இந்து”ப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் ஒரு சேதியில் காணப்படுவதாவது:

“நீங்கள் என்னைத் தொழிலாளர்கட்குக் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறதென்று கேட்கிறீர்கள். நான் காங்கிரஸல்ல; நான் எப்படி அதற்குப் பதில் சொல்ல முடியும்? ஒரு தனிப்பட்ட மனிதன் காங்கிரஸ் ஆக மாட்டான். காங்கிரஸ் ஒரு பெரிய ஜனநாயக ஸ்தாபனம். அதில் எல்லா வகையான மக்களும் எல்லா விதமான அபிப்பிராயக் காரர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் இந்தியா விடுதலைபெற வேண்டும் என்பதில் மாத்திரம் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமுடையவர்களா யிருக்கிறார்கள். ஆனதினால் தொழிலாளர்கட்கு காங்கிரஸ் என்ன செய்யவேண்டுமென்று முடிவு செய்யுமென்பதை என்னால் இப்பொழுது சொல்ல முடியாது”

என்று சொல்லி இருக்கிறார். ஆகவே காங்கிரஸ் பிரசிடெண்டு வார்த்தை யிலிருந்தே காங்கிரஸ் தொழிலாளர்கட்கு என்ன செய்யக் கூடும் என்பதை தொழிலாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

~subhead

“நான் காங்கிரசல்ல; என்னைக் கேட்காதீர்கள்”

~shend

மற்றும் காங்கிரஸானது தொழிலாளர்களின் நிலைமையை விருத்தி செய்வதற்காகவும் அவர்களுடைய தினசரி வாழ்க்கையை உயர்ந்த திட்டத்துக்குக் கொண்டுவருவதற்காகவும் என்ன முறைகளை அனுசரிக்கப் போகிறது என்பதான கேள்விக்குப் பண்டித ஜவஹர்லால் என்ன சொல்லு கிறாரென்றால் “அதைப்பற்றி என்னை யொன்றும் கேட்கக் கூடாது. நான் காங்கிரஸ் ஸ்தாபனமல்ல. ஆகையால் காங்கிரஸானது என்ன செய்யுமென்று நான் சொல்ல முடியாது. காங்கிரஸில் எவ்வளவோ பேர்களிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் போய் காங்கிரஸ் தொழிலாளர்கட்கு என்ன நன்மையைச் செய்யுமென்று கேளுங்கள். அவ்விதம் கேட்ட பிற்பாடு, காங்கிரஸ் உங்களுக்கு இன்னதுதான் செய்யுமென்று நீங்களே உங்கள் சொந்த முடிவுக்கு வாருங்கள். நான் காங்கிரஸ் தலைவர் என்ற ஹோதாவில் என்ன சொல்லக் கூடுமென்றால் காங்கிரஸ் இன்னதுதான் உங்களுக்குச் சொல்ல முடியுமென்பது எனக்கு ஏதும் திட்டமாகச் சொல்லத் தெரியாது” என்பதே.

இங்கிலீஷ்காரர் ஏகாதிபத்தியத்தை அடியோடு அழித்து இந்தியர்களுக்கு நன்மை உண்டு பண்ணுவதற்கு ஏற்பட்டிருக்கிற இந்திய நேஷனல் காங்கிரஸின் தலைவரென்பவரே இந்த மாதிரி தொழிலாளிகளுக்கு காங்கிரஸ் இன்னது செய்யுமென்பதில் தனக்கொன்றும் தெரியாதென்று ஒத்துக்கொண்டிருக்கிற தன்மையைக் கவனிக்கும்போது அது ஒரு பெரிய விபரீதமாகத்தானிருக்கிறது! காங்கிரஸானது தொழிலாளிகட்கு இன்ன அளவுக்குத்தான் நன்மை செய்ய வல்லமையுடையதென்றோ, இன்னதைத்தான் செய்யுமென்றோ கூட அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் பண்டிதரின் தொழிலாளர் அனுதாபம் எப்படிப்பட்டது என்று தொழிலாளர்கள் தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

~subhead

சட்டசபை

~shend

மற்றும் புத்தூர் மைதானத்தில் பண்டிதர் பேசும் போது “காங்கிரஸ் அபேட்சகர்கள் சட்டசபை மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அடித்து வீழ்த்தி விடுவதற்காக சட்ட சபைக்குப் போவதால் வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் அவர்களையே ஆதரிக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் தன்னைப் பொறுத்தவரையில் அவர் சட்டசபை தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை என்று சொல்லுகிறார். சட்டசபைக்கு போவதன் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துவிடக்கூடும் என்பதாகவோ, அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க சட்ட சபைக்குப்போக வேண்டியது அவசியமென்றோ பண்டிதர் உண்மையாகவே நம்பி இருப்பாரேயானால் தான் ஏன் சட்டசபைக்கு போக இஷ்டப்படவில்லை என்கிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரஸ் பிரசிடெண்டு என்கின்ற முறையில் காங்கிரஸ் படைக்கு இவரே வழிகாட்டியாய் இருக்க வேண்டி இருக்க சட்டசபையில் மெம்பர்கள் செய்யும் போருக்கு இவர் முன்னணியில் இருக்க வேண்டி இருக்க, இவர் மறைந்துகொண்டு மற்றவர்களைப் பிடித்து தள்ளி முன்னால் விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் இவர் எப்படி உண்மையான தலைவராகவோ வழிகாட்டியாகவோ இருக்க முடியும் என்பதை யோசித்துப் பார்த்தால், ஒன்றா, இவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தகர்க்க சட்டசபையே தான் சரியான ஸ்தாபனம் என்று கருதாமல் இருக்க வேண்டும், அல்லது சட்டசபை பிரவேசத்தில் அவருக்கு நாணயமான நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

~subhead

பார்ப்பனரல்லாதாரைப்பற்றி

~shend

தஞ்சாவூரில் தோழர் ஜவஹர்லால் பேசும்போது பார்ப்பனரல்லாதார் களைச் சமூகம் முழுவதையுமே சேர்த்து மிகவும் கேவலமாக இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார். பேசியது ஒரு சாதாரண அநாமதேய ஆளாகவோ அல்லது காலி கூலி என்று பேர் வாங்கினவராகவோ இருந்து பேசி இருந்தால் நாம் அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் சபைத் தலைவர் என்கின்ற முறையில் வந்த ஒருவர் அதுவும் ஒரு பார்ப்பனர் ஒரு சமூகத்தையே இப்படி கேவலமாக பேசினால் அதை எப்படி நாம் கவனிக்காமல் விட முடியும்? “மெயில்” பத்திரிக்கையில் கண்டுள்ளபடி அவர் பேசியதாவது: “இந்த மாகாணத்தில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பேத பிரச்சினை வெகு அற்பமானது; பரிகாசத்திற்கிடமானது. அப்படி இருக்க ஜனங்கள் இந்த விஷயத்துக்காக வெறிபிடித்து ஒருவருக்கொருவர் மண்டையுடைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படிப்பட்ட வெறும் தலையர்கள் (“மூடர்கள்”) மண்டை உடைபடுவதில் நான் அனுகூலமாகவே இருப்பேன். ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் ஒழிந்து போவதே நாட்டுக்கு நன்மையாகும்” என்று பேசி இருக்கிறார்.

~subhead

இதற்கு நமது பதில்

~shend

இதற்கு நாம் என்ன பதில் சொல்லுகிறோம் என்றால், “அய்யா பண்டிதரே!

இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிணக்கு இருப்பது வாஸ்தவம்தான். அது நீர் சொல்லுகிறபடி அற்ப விஷயமாகவோ மண்டை உடைத்துக்கொள்வதினால் ஒழிந்து போகத் தக்கதாகவோ இங்கு இல்லை. அது அனேக காலமாக இந்த நாட்டில் இருந்து கொண்டு மதத்திலும் சமூக வாழ்விலும் அரசியல் துறையிலும் ஆதிக்கம் செலுத்தி மக்கள் உழைப்பைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் வேலையில் முனைந்து நின்று அதற்கு (பார்ப்பனீயத்துக்கு) சாவுமணி அடிக்கும் நிலையை உண்டாக்கி விட்டது. இப்போது அதை சமாளித்துகொள்ளவும் அதற்கு உயிர்ப்பிச்சை அளிப்பதற்கும் ஆகவே உம்மை (பண்டிதரை) பார்ப்பனர்கள் இங்கு அழைத்து வந்து விஷமப் பிரசாரக் காரியம் நடத்து கிறார்கள். இதை நீங்கள் உணரவில்லையோ அல்லது உணர்ந்தே பார்ப்பனருடன் பார்ப்பனராய் ஆடுகிறீரோ தெரியவில்லை. அது எப்படி இருந்த போதிலும் இப்போது நீர் உம்முடைய கொள்கை என்று எதை எதை சொல்லுகிறீரோ அதைவிட ஒருபடி முற்போக்கானதும் முக்கியமானதுமான கொள்கையே பார்ப்பனரல்லாதார் இயக்கக் கொள்கையாய் இருந்து வருகிறது என்று உணருங்கள்” என்பதேயாகும்.

~subhead

பண்டிதர் சுயராஜ்யம்

~shend

ஆனால், பண்டிதரே! நீர் கோரும் சுயராஜ்யம் வெள்ளையர் ஆட்சியை ஒழித்து கபில நிற ஆட்சி அதாவது பூணூல் ஆட்சி (பார்ப்பன ஆட்சி) ஆக்கப் பார்ப்பதே தவிர வேறில்லை என்பதை நன்றாய் உணரும். எங்களுக்கு உண்மையான சுயராஜ்யம் வேண்டும். அந்த விஷயத்தில் நாங்கள் இந்நாட்டில் உள்ள எல்லோரையும் விட ஆவலுள்ளவர்களாகவும் அதற்கு ஆக தகுதியான எந்த காரியத்தையும் செய்ய முன்னணியில் இருப்பவர்களாகவும் இருக்கிறோம்.

எங்களுக்கு வேண்டிய சுயராஜ்யம் இந்நாட்டில் உள்ள எல்லா வகுப்பாருக்கும் விடுதலை ஏற்பட்டு சகலரும் சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடையத்தக்க சுயராஜ்யமே யாகும்.

இதற்கு விரோதமானவர்கள் ஒழியட்டும் என்று நீர் பிரசாரம் செய்வீரானால் அது உங்கள் சமூகமாகிய பார்ப்பன சமூகம் ஒழியச் செய்யும் பிரசாரமேயாகும். அதாவது தற்கொலைப்பிரசாரம் செய்கிறீர் என்றுதான் அருத்தம். அதைச் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

~subhead

ஜெயிலில் சுதந்திரம்

~shend

காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் பெற ஜெயிலுக்கு போனார்கள் என்கிறீர்கள். அவர்கள் ஜெயிலுக்கு போனது வாஸ்தவம்தான். ஆனால் அவர்கள் ஜெயிலுக்குப் போனதில் “இனிமேல் ஜெயிலுக்கு வருவதில்லை” என்று சொல்லி விட்டுத் தான் ஜெயிலில் இருந்து விடுதலை பெற்று வெளிவந்தார்களே ஒழிய, இதுவரை யாருக்கும் எவ்வித விடுதலையும் வாங்கிக் கொண்டு வெளிவந்தவர்கள் அல்ல. அப்படி இருக்க இப்போதுதான் அவர்களுக்கு ஒரு புது புத்தி தோன்றி, சுதந்திரம் பெற ஜெயிலுக்கு போவதில் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்து, சட்டசபைக்கு போக வேண்டுமென் கிறார்கள். நீரும் அதை ஆதரித்து பிரசாரம் செய்கிறீர்கள். இதைத்தான் பார்ப்பனரல்லாதாரும் ஆதி முதல் சொல்லிவருகிறார்கள். ஆனால் நீர் மாத்திரம் சட்ட சபைக்குப் போகப் போவதில்லை என்கிறீர். இதன் ரகசியம் “சிதம்பர ரகசியமாய்” இருக்கிறது. இது எப்படியோ ஆகட்டும். ஒன்றை மாத்திரம் உமக்கு ஞாபகப்படுத்தி விட்டு இதை முடிக்கிறோம்.

~subhead

பண்டிதரின் அப்பன்

~shend

அதாவது இதற்கு முன்பும் உம்மைவிட பெரியவர்களான உமது தகப்பனாரும் பெரியார் சி.ஆர். தாசும் மற்றும் பலரும் உம்மைப் போலவே சுதந்திரத்துக்கு ஆக ஜெயிலுக்குப் போய் ஜெயில் மூலம் சுதந்திரம் கிடைக்கமாட்டாது என்பதை உணர்ந்து வெளியில் வந்து, சட்டசபையில் முட்டுக்கட்டை போடுவது மூலம் சுதந்திரம் பெறலாமென்று கருதி சட்ட சபைக்கு போய் தங்களால் ஆனதை எல்லாம் செய்து பார்த்துவிட்டு தங்கள் முறைப்படி அங்கும் சுதந்திரம் பெற முடியாது என்று கருதி நடுத்தூக்கில் அதாவது காலாவதி வரையில் கூட இருந்து பார்க்க முடியாமல் வெளியில் வந்து விட்டார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

இப்படி இருக்க, இப்போதும் நீர் சுதந்திரத்துக்குச் சட்ட சபைக்குப் போகிறேன். அங்கு போய் சீர்திருத்தத்தை உடைக்கிறேன் என்றும் பார்ப்பனரல்லாதார்கள் வெறும் தலையர்கள் என்றும் அவர்கள் ஒழிந்து போவதே மேல் என்றும் கூறுகிறீர்கள்.

~subhead

யார் வெறுந் தலையர்?

~shend

ஆகவே இதிலிருந்து ஒரு விஷயத்தை நன்றாய் யோசித்துப் பாரும். அதாவது உமது பெற்றோர்கள் வெறுந்தலையர்களா? நீர் வெறுந்தலையரா? அல்லது பார்ப்பனரல்லாதார் வெருந்தலையர்களா என்பதே.

குடி அரசு கட்டுரை 25.10.1936

You may also like...