அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை குறித்து வழக்கின் விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளன. தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. பெரியார் தனது வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்பதாகும். கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மதச் சுதந்திர உரிமை’யைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் தங்கள் ‘பிராமண’ பிறவி மேலாண்மையை சட்டப்படி உறுதியாக்கிக் கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயிலுக்குள் நுழையும் உரிமை, அனைத்து ஜாதியினருக்கும் வந்துவிட்டாலும், ‘கடவுளை’ தங்கள் மந்திரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பார்ப்பனர்கள், ‘கர்ப்பகிரக’ உரிமையை உறுதிப்படுத்த துடிக்கிறார்கள். 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவிட பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து, சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஜீயர்கள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் நேராக உச்சநீதிமன்றம் சென்றார்கள். ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. ‘அர்ச்சகர்...