பெரியார் குடும்பத் தோழர்கள் இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

திராவிடர்  இயக்கத் தமிழர் பேரவை யின் கொள்கை பரப்புச் செயலாளர் உமா, மகள் இலக்கியாவுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சிவராசு – மணிமேகலை இணையரின் மகன் கவுதமனுக்கும்  சனாதன எதிர்ப்பு,  ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்  02.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சௌபாக்கியா மகாலில் நடைபெற்றது.

புத்தர் கலைக்குழு மற்றும் நிமிர்வு கலையகம் பறை இசை முழக்கத்துடன் விழா துவங்கியது. இவ்விழா அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், பார்ப்பன சனாதன  சடங்குகள் எதுவுமின்றி தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தை புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய குரல் ஓவியா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இணையேற்பின் வரவேற்பு நிகழ்வு, 09.10.2022 அன்று காலை கோவை விக்னேசு மகாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுப.வீரபாண்டியன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின்  துணைத் தலைவர் மா.உமாபதி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொருளாளர் துரைசாமி, திராவிடர்  இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு   வாழ்த்துரை வழங்கினர். திருமண விழா அரங்கில் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதை விளக்கும்  புகைப்பட கண்காட்சியும் வைக்கப் பட்டது. தோழர்கள் உறவினர்கள் ஒவ்வொருவரும் கூர்ந்து கவனித்தனர்.

பெரியார் முழக்கம் 20102022 இதழ்

 

You may also like...