நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின், தொடக்கத்தில் விரட்டு கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பகுத்தறிவுப் பாடல்களை நாத்திகன் பாடினார்.

கழகத்தின் மண்டல மாநாடு பரப்புரைக்காக நிமிர்வோம் வெளியீடாக வெளிவந்துள்ள 15 புத்தகங் களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, பேராசிரியர் சரஸ்வதி பெற்றுக் கொண்டார்.

கழகத் தோழர்களின் போராட்ட வழக்குகளை பெரிதும் சிரமேற்று தொடர்ந்து கவனித்தும், சில வழக்குகளில் முழு விடுதலையும் வாங்கித் தந்த வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, இளமாறன் ஆகியோருக்கு, மருத்துவர் எழிலன் பாராட்டி விருதை  அளித்தார்.

தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் திராவிட மாடல் குறித்து கருத்துரை யாற்றினர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் இராஜி மாநாட்டில், இயக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5000 பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார்.

19.4.2022 முதல் 28.4.2022 வரை ‘திராவிட மாடல் நமக்கான அடையாளம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மண்டல மாநாட்டை விளக்கி தெரு முனைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன.

இரா. உமாபதி, நாத்திகன், அய்யனார், எட்வின், தேன்மொழி, பிரகாஷ், தபசி. குமரன், அன்பு தனசேகரன்,  உதயா, ஜெயப்பிரகாஷ் ஆங்காங்கே கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினர். மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு உண்டியல் வழியாக நிதி உதவி வழங்கப்பட்டது. மக்களிடம் பேராதரவு காணப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற தெருமுனை கூட்ட பிரச்சாரத்திற்கு, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், ஏசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், ப. அருண் குமார், இராஜேஷ், கன்னியப்பன், செந்தில், சேத்துப்பட்டு வேலு, எழிலரசன், சூரியா, குகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மண்டல மாநாட்டின் சிறப்பு

ஈரோடு செயலவை வகுத்த திட்டத்தின்படி முதல் மண்டல மாநாட்டை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புடன் நடத்தி முடித்தது.

முன்னதாக நாள் ஒன்றுக்கு 3 கூட்டங்கள் வீதம் 21 தெரு முனைக் கூட்டங்கள் சென்னை முழுதும் நடத்தப்பட்டன.

20க்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், ஏழு நாட்கள் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் முழுமையாகக் கடுமையாக உழைத்தனர்.

தோழர்களிடையே மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி ஒருங்கிணைப்பும் உறுதிப்படுத்தியது.

விரட்டு கலைக் குழுவைச் சார்ந்த 10 தோழர்கள், ஆனந்த் தலைமையில் மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் கலை நிகழ்வுகளையும் புதிய பாடல் களையும் தலைமைக் கழகத்தில் 3 நாட்கள் தங்கி, உருவாக்கி பயிற்சி எடுத்தனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே கருத்துரை யாளர்கள் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர். கலைஞர்களுக்கு கழக சார்பில் ஆடைகள் போர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கவுரவித்தார். நிகழ்வுகள் அனைத்தை யும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஒருங் கிணைத்தார்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 05052022 இதழ்

You may also like...