‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.

சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன.

செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி : கூட்டம் 09.04.2022 சனி காலை 11.00 மணிக்கு சேலம் கருப்பூர் சக்திவேல் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டு 01.05.2022 ஞாயிறு சேலம் ஏற்காட்டில் துவக்க விழா நிகழ்ச்சி தொடங்குவதெனவும் அதனைத் தொடர்ந்து 04.05.2022 முதல் 06.05.2022 வரை சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி கிருட்டிணகிரி மாவட்டத்தில் நிறைவு விழா நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

பிரச்சாரப் பயணத்தில் பறை முழக்கம், இசை நிகழ்ச்சி, வீதி நாடகம் ஆகியவை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் 28 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவு கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். கலந்துரையாடல் கூட்டம் மதியம் 1.30 மணியளவில் முடிவடைந்தது.

கோவை – திருப்பூர் – திண்டுக்கல் : மாநில உரிமையைக் கல்வி உரிமையைப் பறிக்காத; மதவெறியை திணிக்காதே; நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக் கூட்டங்கள் மண்டல மாநாடு நடத்துவது பற்றிய கோவை மாநகர கலந்துரையாடல் கூட்டம் 10.04.22 ஞாயிறு கோவை நிர்மல் மதி இல்லத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர தோழர்கள் இராமச்சந்திரன், பன்னீர் செல்வம், வெங்கட், மாதவன் சங்கர், நிர்மல், நேருதாசு, கிருஷ்ணன், இராஜாமணி, புரட்சித் தமிழன், சக்கரவர்த்தி, சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் சுவர் எழுத்து விளம்பர பொறுப்பாளராக கிருஷ்ணன், மேடை ஒலிபெருக்கி அமைக்கும் பொறுப்பை நேருதாசு வரவு செலவு கணக்கு பொறுப்பு சூலூர் பன்னீர்செல்வம்  மாநாட்டுக்கான போட்டோ வீடியோ பொறுப்பு தோழர்கள் டிட்டோ சிவராஜ், ஆனைமலை கணேஷ், கிருஷ்ணன்,திருப்பூர் தனகோபால் பார்த்துக்கொள்வார்கள் என முடிவு செய்யப் பட்டது.

மேலும்,  சி.டி. வடிவில் ஸ்டிக்கர் தயார் செய்து இரு சக்கர வாகனத்தில் ஒட்டிக்கொண்டு விளம்பரப்படுத்துதல்; மேட்டுப்பாளையத்தில், கோவை மாநகரில் சுவர் விளம்பரம் செய்வது; தெருமுனைக் கூட்டங்களில் தோழர்கள் புரட்சித் தமிழன், கிருஷ்ணன், அமிலா பாடல் பாடுவது;

மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் அல்லது மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரை அழைப்பது மற்றும்  தெருமுனை கூட்டங்கள் மாநாடு நடத்துவதற்கான காவல்துறைக்கு அனுமதி கடிதம் தருவது;

தனிநபர் வசூலுக்கு குழுவாக செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற புரட்சித் தமிழன் 10ஆயிரம் ரூபாய்; இராஜாமணி பிளக்ஸ் அடிக்கும் செலவிற்காக 2000 ரூபாய் ; மாநாடு, தெருமுனைக் கூட்டங்களில் பயன்படுத்த விளம்பர டிசைன்களை அமிலாசெய்து தருகிறார்; இசைமதி பாடல் பாடுவது மற்றும் விளம்பரத்திற்கு குரல் வடிவில் பேசி இணைய தளங்களில் விளம்பரம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

எந்தெந்த இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என பட்டியல் தயார் செய்யப்பட்டது.

தனிநபர்களுக்கும் முன்கூட்டியே பட்டியல் தயாரித்து வைத்து அவர்களை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன்  பிறந்தநாள் பாடல் மற்றும் கடவுள் மறுப்பு கூறி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் : 7.4.2022 மாலை மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட நகர கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்கிற பிரச்சாரக் கூட்டங்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் 15 கூட்டங்கள் நடத்தி முடிப்பது எனவும் நிறைவு நிகழ்வாக மண்டல மாநாட்டை 4.5.2022 அன்று மயிலாடுதுறையில் சிறப்பாக நடத்துவது எனவும், கடலூர் நாகை மாவட்ட தோழர்களின் மூலம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி அவர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை தோழர்கள் முன்வைத்தனர்.

பெரியார் முழக்கம் 14042022 இதழ்

You may also like...