கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட முடிவுகள் தலைமைக் குழுவில் எடுக்கப்பட்டன.

2026 தேர்தல் நிலைப்பாடு
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலோடு சமூக மேம்பாட்டு கண்ணோட்டத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல், இந்திய ஒன்றியத்தையே ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரம், மொழி என அனைத்து நிலைகளிலும் பாசிசத் தன்மையைப் புகுத்தி ஆர்.எஸ்.எஸ்-ன் கனவான இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பாஜக அரசிற்கு எதிராக தேர்தல் அரசியல் களத்திலும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை, அடிப்படை தத்துவங்களைப் பற்றுறுதியுடன் கடைபிடித்து கருத்தியல் தளத்திலும் இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்திலேயே வலிமையான கட்சியாக விளங்கி பெரும்பான்மையான மக்கள் துணையோடு ஆட்சி புரியும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசுக்கு வரும் 2026 தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என தலைமைக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை ஒட்டி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1000 தெருமுனை கூட்டங்கள் மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக இக்கருத்துகளை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இணையதள செயல்பாடுகள்
நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றங்களினால் கருத்துப் பரப்பல் மூலம் கருத்துருவாக்கம் செய்வதிலும், செய்திகளைப் பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் இணையதளம் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை எட்டி இருக்கிறது என்பதால் இணையதள செயல்பாடுகளை இன்னும் வீச்சுடன் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான செயல்பாடுகளாக புதிய புதிய யுக்திகளோடு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் இணையதளத்தில் ஆர்வமுள்ள கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
தலைமைக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று சந்தித்து மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது,அதன் மூலம் இயக்கப் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 29 கோவை ஆர்ப்பாட்டத்தின் தாக்கங்கள்:
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டறிந்து அதனை ஆவணப்படுத்தி சான்றுகள் ஆவணங்களுடன் தலைமைக்கு அனுப்பும்படி கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை வடிவங்கள் குறித்து கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் அனுப்பிய செய்திகள், காணொளிகள் அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படும் அந்தந்த பகுதிகளில் அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்தி டிச-29 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியுடன் நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு பிறகு தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அச்சத்துடன் இருந்த நிலை மாறி அவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்வதற்கு இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு மன வலிமையை கொடுத்து இருக்கிறது என்கின்ற செய்தியை தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். ஏற்கனவே இதற்கு முன்பு கழகத்தின் சார்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் நடத்திய பகுதிகளில் இன்றளவும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இல்லாத நிலையை தோழர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் டிசம்பர் 29, 2025 கோவை போராட்டம் காரணமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட தேநீர்க் கடை மூடப்பட்டதையும் மக்கள் பயத்தை தயக்கத்தை உடைத்து தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து வெளியில் வந்து பேசுவதற்கு கழகத்தின் போராட்டம் தூண்டுகோலாக அமைந்திருப்பது நல்லதொரு முன்னேற்றமாக இருந்ததை தோழர்கள் குறிப்பிட்டனர். இன்னும் தொடர்ந்து பரப்புரைகள், போராட்டங்கள் வாயிலாக தீண்டாமைக்கு எதிராக கழகம் தொடர்ந்து களத்தில் பணியாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முழக்கம் சந்தா சேர்க்கை

கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் சந்தாக்களை அதிகப்படுத்து குறித்தும் முழக்கம் சந்தாதாரர்களுக்கு மிகச் சரியாக சென்று சேர்வதை உறுதிப்படுத்த மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் புரட்சிப் பெரியார் முழக்கம் இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நூலகங்களில் முழக்கம் இடம்பெறுவதையும் குறிப்பிட்டு மேலும் அந்தந்த மாவட்ட கழக பகுதிகளில் உள்ள அரசு நூலகங்களில் பெரியார் முழக்கம் இதழ் இடம் பெறுவதை உறுதி செய்து அவ்வாறு இடம் பெறவில்லை எனில் மாவட்டக் கழக நிர்வாகிகள் நூலக பொறுப்பாளர்களை சந்தித்து முழக்கம் நூலகங்களில் இடம்பெற ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய தலைமைக் குழு உறுப்பினராக வேலூர் சிவா இணைக்கப்பட்டுள்ளார்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் தலைவர் அவர்களின் ஆலோசனைகளுடன் தலைமைக் குழு நிறைவடைந்தது. இத்தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், அன்பு தனசேகரன், சென்னை உமாபதி, மேட்டூர் சக்திவேல், கோவிந்தராஜ், காவலாண்டியூர் ஈஸ்வரன், மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார், பேராவூரணி திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

You may also like...