Category: அறிக்கைகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை இவற்றிற்கு எதிரான “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்’’ என்கின்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மூன்று முனைகளிலிருந்து தொடங்கும் பரப்புரை நடைபெற உள்ளது. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பகுதிகளுக்குச் சென்று கலந்தாய்வு செய்தனர்.

08.07.2026 அன்று மதியம் நிறைவு மாநாடு நடைபெற உள்ள காரைக்குடிக்கு சென்று கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துவை சந்தித்து மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பேரணி தொடங்கும் இடத்தையும் பார்வையிட்டு இறுதி செய்தனர். மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் தோழர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாநாட்டிற்கான விளம்பரம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். மாலை 05.00 மணியளவில் பேராவூரணி சென்று தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் அவர்களை சந்தித்து பேராவூரணியில் 06.08.2026 அன்று கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரைப் பயண தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர்.

07.08.2026 அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற உள்ள உடையநாடு, மல்லிப்பட்டினம், மற்றும் அன்றைய நிறைவு கூட்டம் நடைபெற உள்ள அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு இறுதி செய்தனர். இந்நிகழ்வில் பேராவூரணி திருவேங்கடம், கலைச்செல்வன், அதிராம்பட்டினம் கவிமணி ஆகியோர் தலைமைக் கழகக்குழுவினருடன் சென்றனர்.

09.07.2026 அன்று காலை அதிராம்பட்டினத்தில் கவிமணியின் தந்தையார் எதிர்பாராத விதமாக காலமானார் என்ற செய்தியறிந்ததும் காலையில் அதிராம்பட்டினம் சென்று அய்யா அவர்களுக்கு பொருளாளர் துரைசாமி அவர்களும், பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சித.திருவேங்கடம், கு.பாரி, வடசேரி சிவசுப்பிரமணியம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். பரப்புரைப் பயணம் நடைபெற உள்ள இடங்களான துவரங்குறிச்சி, பரவக்கோட்டை, மதுக்கூர், வடசேரி, மன்னார்குடி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு இறுதி செய்தனர். நீடாமங்கலம், நாச்சியார் கோவில், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பரப்புரை நடைபெற உள்ள இடங்களைத் தேர்வு செய்தனர். அதன் பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவ்வமயம் பல்வேறு திராவிடர் இயக்க நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். நாச்சியார் கோவில் தோழர் வெங்கடேசன் அவர்கள் தான் புதியதாக கட்டிய வீடு திறப்பு விழா மகிழ்வாக கழக ஏடான புரட்சி பெரியார் முழக்கம் இதழுக்கு ரூபாய் 5000/- த்தை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமியிடம் வழங்கினார்.

10.07.2026 அன்று காலை சிவகங்கை சென்று ஆசிரியர் புலவர் இளங்கோவை சந்தித்து 11.08.2026 அன்று சிவகங்கையில் பரப்புரை நடைபெற உள்ள பகுதியினைத் தேர்வு செய்து உறுதிபடுத்தினர். ஆசிரியர் இளங்கோ தேனீர் வழங்கி உபசரித்ததோடு, முன் ஏற்பாட்டு குழுவினர் வழி செலவிற்காக ரூபாய் 5000/- வழங்கினார். சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை ராமசந்திரன் அவர்கள் நினைவாக பேரறிஞர் அண்ணா அவர்களால் திறக்கப்பட்ட பூங்காவில் உள்ள இராமச்சந்தினார் சிலையைத் தோழர்கள் பார்வையிட்டனர்.

மதியம் மதுரையில் மாவட்டக் காப்பாளர் தளபதி அவர்களின் இல்லத்தில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மதுரை முருகேசன் ஆகியோரிடம் பரப்புரைச் செய்யும் இடம் மற்றும் தோழர்கள் தங்குமிடம் குறித்தும் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்கள் தோழர்களைச் சந்தித்து பரப்புரைப் பயணம் குறித்து ஆலோசனை மற்றும் தோழர்கள் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதும் தோழர்கள் உற்சாகமாக பயணம் வெற்றி பெற பணியாற்ற உறுதியளித்ததும் பரப்புரைப் பயணம் – மாநாடு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் தலைமைக் கழகக் குழுவினர் விடைபெற்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் தலைமைக் குழு உறுப்பினருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் அய்யப்பன் அவர்களும் உடன் இருந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

இந்து இந்தியாவின் தேசியக் கடவுளாக பகவான் பாலராமனை முன்னிறுத்தியது ஒன்றிய பாஜக ஆட்சி. அந்தத் தேசியக் கடவுளுக்கே நாமம் போட்டு இருக்கிறார்கள் ராமரின் பக்தர்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கைப் பணம் களவாடப்பட்டு இருக்கிறது; வெள்ளி நகைகள் காணாமல் போயிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 70 முறை காணிக்கைப் பணத்தை களவாடியதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன. வேறு வழியின்றி உ.பி. ராமராஜ்யம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இதுவரை வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது.

பாபர் மசூதிக்குள் இந்து ராமன் கோயில் இருந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி தனது கனவில் ராமன் வந்து இந்தத் தீர்ப்பை வழங்கும்படி கூறினார் என்று கூறினார். இந்தக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியவர் பிரதமர் `மோடி.’ கோயிலுக்கு கொடியேற்றம் செய்தவர் பிரதமர் `மோடி’ கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கோயிலைத் திறந்து விட வேண்டும் என்று அவசரம் காட்டி கோயிலுக்குள் பாலராமனை நிறுவும் சடங்கை நடத்தியவர் `மோடி’ இந்த கோயிலுக்கான அறக்கட்டளையை நிறுவியவரும் `மோடி’தான்.

இந்த அறக்கட்டளைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு தந்த வரும் `மோடி’தான் ஆனால் இந்த ஊழல் திருட்டு குறித்து இதுவரை வாய் திறக்காதவரும் `மோடி’தான். இப்போது உச்ச நீதிமன்றமே தலையிட்டு ஒன்றிய ஆட்சியின் விளக்கத்தைக் கேட்டு இருக்கிறது. பகவான் ராமனே தன்னுடைய கனவில் வந்து கோயில் திறப்புக்கான தேதியை அறிவித்துவிட்டு போனார் என்று பேசினார் மோடி. தலைமை நீதிபதி கனவிலும் மோடியின் கனவிலும் வந்த ராமன் இப்போது மோடி கனவில் வந்து தனது காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுவதை முறையிட்டதாக மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. பகவான் ராமனின் உண்மையான பக்தர்களே கோயில் நிர்வாகிகளாக ஊழியர்களாக சலித்து சலித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்து பக்தர்களின் காணிக்கையை உண்மையான இந்து பக்தர்களே சூறையாடுகிறார்கள் என்றால், இது இந்து அவமதிப்பு பட்டியலில் சேராதா?
கோயிலைக் கட்டுவதே தனது `பிறவிப்பயன்’ என்று சபதம் ஏற்று செயல்பட்ட பிரதமர் மோடி வாய்மூடி கிடப்பது ஏன்?

இந்துக்களை புண்படுத்துவதாக வீதிகளில் இறங்கிப் போராடுவதையும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதையும் முழு நேர வேலையாக செய்து கொண்டிருந்த கடவுள்களின் `போர்க்கள நாயகர்கள் எங்கே போனார்கள்?
`கண்டா வரச் சொல்லுங்க!.’
பெரியார் முழக்கம் இதழ் 23072026

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை.

திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை?

இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில் முன்னோடியாகத் திகழ்கிறது.

“கர்நாடகா திருமணத் தேர்வு சுதந்திரம் மற்றும் ஆணவம், பாரம்பரியம் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தடைசெய்யும் சட்டம், 2025 (Karnataka Freedom of Choice in Marriage and Prevention and Prohibition of Crimes in the Name of Honour and Tradition Act, 2025) பொதுவாக “எவ நம்மவா” (Eva Nammava)” சட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டம் 16-ஆம் நூற்றாண்டு தத்துவஞானி பசவண்ணர் அவர்களின் வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறது:

“அவர்கள் யார் என்று கேட்காதீர்கள்; அவர்கள் நம்மவர்களே.” என்பது பசவண்ணா கூற்று. இந்தச் சட்டத்தின் பிரிவு 4-ன் படி, திருமணம் செய்ய விரும்பும் இரு வயது வந்த சம்மதமுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் பாதுகாப்பு கோரி அணுகலாம். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது சமூக அமைப்புகளின் அழுத்தத்தின் பேரில் அந்தத் தம்பதியினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதபடி உள்ளூர் காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசுகள் இதுபோன்ற தனிச்சட்டத்தை இயற்றுவதில் தயக்கம் காட்டி வந்துள்ளன. அண்மையில் சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு, நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் என்று கூறினார். ஆனால் இந்தக் கருத்தை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்டதாகவும், தற்போது இத்தகைய சட்டத்தை இயற்றுவதில் அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்கப் பணிபுரியும் ஒரு தன்னார்வ அமைப்பு, 2016-இலேயே, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜாதி மறுத்து திருமணம் செய்ததற்காக 80-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இந்தச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எடப்பாடி கே. பழனிசாமி அரசிடம் தனிச்சட்டம் கொண்டுவர வலியுறுத்தியது. ஆனால் அப்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானவை என்று கூறி தனிச்சட்டத்தை எதிர்த்தார்.

லதா சிங் எதிர் உத்தரப் பிரதேச அரசு (2006) வழக்கில் உச்சநீதிமன்றம், ஜாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எதிரான வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தது. ஜாதி அமைப்பு `நாட்டின் சாபம்’ என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஜாதி மறுப்பு திருமணங்கள் தேசிய நலனுக்குப் பயன்படுகின்றன என்றும், அவை ஜாதித் தடைகளை உடைக்க உதவுகின்றன என்றும் கூறியது. மேலும், ஒவ்வொரு வயது வந்த நபருக்கும் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் அடிப்படை உரிமை இருப்பதாகவும், பெற்றோர் விரும்பவில்லை என்றால் உறவைத் துண்டிக்கலாம்; ஆனால் மிரட்டவோ, தொந்தரவு செய்யவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தியது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய தம்பதிகளுக்கு காவல்துறையும் நிர்வாகமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர்களை மிரட்டுபவர்கள் அல்லது தாக்குபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இருப்பினும், ஒன்றிய அரசு இதுகுறித்து மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங்கியதைத் தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை. 2009-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஆணவக் கொலைகள் தொடர்பான தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் தேசிய குற்றப் பதிவுத் துறையிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் குடும்ப விவகாரங்களாக மறைக்கப்படுவதால் அவற்றை தனி வகையாகப் பதிவு செய்வது கடினம் என்றும் அவர் கூறினார். பின்னர் நீதிபதி பி.வி. ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் தனது 242-வது அறிக்கையில், ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பரிந்துரைத்தது. திருமணங்களை எதிர்த்து சமூகக் கூட்டங்கள் நடத்துதல் அல்லது சமூகப் புறக்கணிப்பை திணித்தல் போன்றவை சட்டவிரோதக் கூட்டமாகக் கருதப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கு கட்டாய குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் “Prevention of Crimes in the Name of Honour and Tradition Bill, 2010” என்ற மசோதாவையும் மத்திய அரசு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது.

2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தனிச்சட்டம் கோரி அழுத்தம் கொடுத்தன. இதையடுத்து நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், “காதலுக்கு சிவப்பு நாடா முறை இருக்காது” என்று அறிவித்து, திருமணப் பதிவு எளிதாக நடைபெறும் என உறுதியளித்தார். திருமணப் பதிவுக்கு பெற்றோரின் சம்மதம் அல்லது வருகை தேவை என்ற முந்தைய அரசின் சுற்றறிக்கையும் சட்டவிரோதமானது என ரத்து செய்யப்பட்டு, துணைப் பதிவாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் திருமணங்களைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டனர்.

ஆனால், முற்போக்கான அறிவிப்புகள் இருந்தபோதிலும், ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. நீதிபதி கே.என். பாஷா குழுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் நடுப்பகுதியில் முடிவடைய உள்ளது. அது நீட்டிக்கப்படுமா? என்பதும் தெளிவாக இல்லை. உண்மையில், இத்தகைய சட்டம் தேவையா? என்று தொடர்ந்து விவாதிப்பதை விட, இந்தப் பிரச்சினைக்கு உறுதியான சட்டரீதியான தீர்வை உருவாக்குவதே காலத்தின் தேவை.

எனவே, கர்நாடகாவின் `எவ நம்மவா’ சட்டத்தின் சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலும் அதேபோன்ற ஒரு சட்டத்தை இயற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சமூக நீதியின் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், அந்தச் சட்டத்திற்கு `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் வரியைப் பெயராக வைப்பதைவிட பொருத்தமானது வேறு எதுவும் இருக்க முடியாது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு சட்டத் தேவையாகும்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார். குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது.

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களைக் கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்கப் பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள். இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை போட வேண்டும் என்று இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியதாக வரலாறு இல்லை. அப்படி தடை போட்டு இருந்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

“நெரிசல் மிகுந்த மேடை போடப்பட்டிருந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்,அந்தப் பகுதிக்கு முன்பாகவே பேசி விடுங்கள்” என்று காவல்துறை எச்சரித்ததை ஆதவ் அர்ஜுனாவும் அவர்களது சகாக்களும் கேட்க மறுத்து, “ஏற்பாடு செய்த இடத்தில் தான் பேசுவோம்” என்று அடம்பிடித்து பேச வைத்தார்கள். கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கும்போதே விஜய் பேசிக் கொண்டே இருந்தார். இது காவல்துறை சதியா அல்லது விஜய் தெரிந்தே நடத்திய சதியா என்று கேட்டால் விஜய் அதற்கு என்ன பதிலைக் கூறுவார்?

விஜய் கட்சிக்கு எதிராக திமுக எந்த ஒரு எதிர் நிலையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.விஜய் கட்சி ஒரு வலிமையான எதிர்ப்பு சக்தி என்பதை திமுக கருதி பார்க்க வில்லை. அதன் காரணமாகவே தேர்தல் களத்தில் தவெக என்ற கட்சியையோ விஜய் பெயரையோ மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்திலும் உச்சரிக்கவே இல்லை. சொல்லப்போனால் விஜய் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கினால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதே திமுகவின் தேர்தல் வியூகமாக இருந்தது. இதனால் விஜய் கட்சிக்கு எந்த இடையூறும் அரசுத் தரப்பில் இருந்து செய்யப்படவில்லை என்பதே உண்மை. கரூர் சம்பவத்திற்குப் பிறகும் விஜய் மீது மு.க.ஸ்டாலின் நேரடி குற்றம் சாட்டவில்லை. புஸ்ஸி ஆனந்தையும் விஜயையும் கைது செய்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்தும் கைது செய்யவில்லை.

அதே கரூர் கூட்டத்தில் பேசிய விஜய் காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்ததைப் பாராட்டினார். இப்போது சதித்திட்டம் புரியாமல் பாராட்டியதாக நாடகமாடுகிறார். சதி நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்களை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவர் திரட்டி வைத்திருக்கிறார்? அந்த ஆதாரங்களை ஏன் கரூர் கூட்டத்தில் பேசவில்லை?
உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதற்குப் பின்னால் உண்மைகளை மறைக்க முடியும் என்ற கடந்த கால மன்னர் ஆட்சி திரைப்படக்கதைகளை இப்போது மக்கள் நம்ப மாட்டார்கள்.
விடுதலை இராசேந்திரன்,
11.07.26
பெரியார் முழக்கம் இதழ் 16072026

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று”
இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது.
ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்.
ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா?

பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை; இது திணிக்கப்பட்ட அடையாளம். சொல்லப்போனால் விலையில்லாமல் கிடைக்கும் இலவசம். கேட்காமலே ஒட்டிக் கொள்ளும் ஜாதி எப்படி வந்தது தெரியுமா?
இதோ ஒரு சிறு விளக்கம்: பார்ப்பனர்கள் உருவாக்கிய மாபெரும் சதி! சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட விரும்பியவர்கள் ஒரு கதையை உருவாக்கினார்கள். கதையின் ஹீரோ பிரம்மா எனும் கடவுள்; அந்த கடவுள் தனது தலையில் இருந்து பிராமணர்களையும், அதற்குக் கீழே தோளிலிருந்து சத்திரியர்களையும், அதற்குக் கீழே தொடையிலிருந்து வைசியர்களையும், எல்லோருக்கும் கீழே காலில் இருந்து அடிமைக் கூட்டமாக சூத்திரர்களையும் படைத்ததாக ஒரு கதையை எழுதினார்கள். ‘ரிக்’ வேதத்தின் புருஷ சூக்தம் 16-வது பிரிவிலும், சுக்ல, யஜுர் வேதத்தில் 22- ஆவது பிரிவிலும், அதர்வண வேதத்தில் 16-வது பிரிவிலும் இருக்கிறது இந்த புருஷ சூக்தம் என்ற இழிவு. இந்த வேதத்திற்கு விளக்கம் கூற அரச கட்டளைகளைப் போல் வந்தது‌ மனு சாஸ்திரம் என்ற கொடூரமான சட்டம். ‘பிராமணன்’ எந்த குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக் கூடாது; வணங்க வேண்டும்; கடவுளே அவனது வேத மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் என்று கூறியது அந்த சாஸ்திரம். சூத்திரனுக்கு எந்த உரிமையும் இல்லை; அவன் அடிமை, பிராமணர்களின் உல்லாசக் காதலிகளான வைப்பாட்டிகளுக்குப் பிறந்தவர்கள் என்று சூத்திரர்களை அது இழிவு செய்தது.
ஆனால் இந்த வர்ணாசிரம பாகுபாடுகளையும் தாண்டி சமூகத்திலேயே உறவுகள் நிகழ்ந்தன; குழந்தைகளும் பிறந்தன; அந்த குழந்தைகளை மீண்டும் எந்த வர்ணத்திலும் சேர்க்க முடியாது என்பதால் ஜாதிகளை உருவாக்கினார்கள் பார்ப்பனர்கள்; அதற்குத் தொழிலையும் வரையறுத்தார்கள். பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் போராட்டத்தால் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் வந்தன. ஜாதித் தொழில் கட்டமைப்பு கலகலக்கத் தொடங்கியது. ஆனால் ஜாதியின் கோரத்தாண்டவம் தொடர்கிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி ஜாதி அடையாளங்கள் இருக்கிறதா? இல்லை; ஆனால் செயற்கையாக இந்து தர்மம் பூணூலையும், விபூதி, நாமத்தையும் போட வைத்து இருக்கிறது.
உறுப்பு மாற்று மருத்துவம் வந்துவிட்டது; ஒரு ஜாதிக்காரரின் உறுப்பு வேறு ஒரு ஜாதிக்காரருக்கு பொருத்தி உயிர் காப்பாற்றப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு ஜாதிக்காரர் உறுப்பை எனது ஜாதிக்கு பொருத்த வேண்டாம் என்று கூறுவார்களா? நிச்சயம் கூற மாட்டார்கள்!‌
தனது ஜாதிக்குள் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்கும் வணிகர்களும், தொழில் முனைவோரும், மருத்துவரும்,பொறியாளரும், தங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே வணிகம் செய்வோம் என்று கூறுவார்களா?
மதத்தில் பார்ப்பனியம்
” நாம் அனைவரும் இந்துக்கள்; அதுவே நமக்கு அடையாளம்; அதுவே நமக்கான நாடு” என்ற மதவெறி இப்போது பரப்பப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
இந்து என்ற ஒரே அடையாளத்துடன் தான் நாம் வாழ்கிறோமா?
இந்து என்பதைவிட ஜாதி தான் இப்போது முதன்மையான அடையாளம்.இந்து ஒற்றுமை பேசுகிறவர்கள் ஜாதி வேண்டாம் என்று பேசுகிறார்களா?
வெவ்வேறு ஜாதி இந்துக்களுக்குள் நடக்கும் திருமணத்தை ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? அது இந்துக்களுக்கு இடையே நடக்கும் திருமணம் தானே!
இந்துக்களுக்குள்ளேயே நடக்கும் ஆணவப் படுகொலைகளை ஏன் கண்டிப்பதில்லை?
பெரும்பான்மையான இந்துக்கள் அசைவ உணவையே உண்கிறார்கள். ஆனால் இந்து மதம் இந்த உணவு முறையை புனிதமற்றது என்று ஏற்க மறுக்கிறது. உழைக்கும் இந்துக்களின் மாட்டுக்கறி உணவை தண்டிப்பதோடு அவர்களை கொலை செய்யவும் தயங்குவதில்லை!
பெரும்பான்மை இந்துக்கள் பேசும் தமிழ் மொழியை கடவுளின் மொழியாக ஏற்க ஏன் மறுக்க வேண்டும்?
சமஸ்கிருதம் தான் கடவுள் மொழி என்று ஏன் திணிக்க வேண்டும்?
அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக முடியாது; பிராமண இந்துக்கள் மட்டுமே கடவுளிடம் நெருங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவது ஏன்?
இந்து மதச் சடங்குகளை செய்யும் அனைத்து உரிமைகளும் பார்ப்பன இந்துக்களுக்கு மட்டும்தானா? பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் அதிகாரம் படைத்தவர்கள் கூட சட்டை போடாமல் பூணூல் மேனியுடன் காட்சி அளிக்கும் “பிராமண” இந்துக்களிடம் தான் ஆசி பெற வேண்டுமா?
இந்துக்களையும்- இந்து மதத்தையும்- மொழியில், உணவில்,வழிபாடுகளில், பண்பாடுகளில் பார்ப்பனியமே ஆட்டிப் படைக்கிறது! எத்தனை ஆண்டு காலம் பெரும்பான்மை இந்துக்கள் இதை அனுமதிக்கப் போகிறார்கள்? சுயமரியாதையுடன் போராட வேண்டாமா?
வாழ்வியலில் மூடநம்பிக்கை
சனாதனம் விதித்த தடைகளை எதிர்த்து தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் கல்வி முன்னேற்றமே வந்தது. கிடைத்த கல்வி குடும்பத்தில் பெண்கள் உரிமையைக் கொண்டு வந்து விடவில்லை; மூடநம்பிக்கைகளையும் ஒழித்து விடவில்லை.
சாமியாரிடம் போய் பெண்கள் நகைகளைப் பறி கொடுப்பதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இதுவரை எந்த ஒரு சாமியாரும் அற்புதங்களை நிகழ்த்தவில்லை! இயற்பியல் விதிகளுக்கு மாறாக எந்த ஒரு அற்புதமும் நடக்காது என்பதுதான் அறிவியல். கடவுளே வந்தாலும் அவர் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும். அனைத்து சாமியார்களுமே போலி சாமியார்கள் தான்; நல்ல சாமியார் என்று எவரும் இல்லை!
அறிவியலுக்கு எதிரானது வாஸ்து; வாஸ்து பார்த்து கட்டப்படும் வீட்டில் வாழும் குடும்பங்களில் பிரச்சனைகளே இல்லையா? பெரும் வெள்ளம் வரும் போதும் நிலநடுக்கம் வரும்போதும் வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வீடுகள் சிதைந்து விடாமல் தப்பி விடுகின்றனவா? இல்லையே!
விவாகரத்து வழக்குகளில் ஜோதிடப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் திருமணங்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன்?
இறந்து போன உறவினர்களின் ஆன்மா வானத்தில் உலவுகிறது என்ற மூடநம்பிக்கையில் பார்ப்பனர்களை அழைத்து திதி கொடுப்பது ஏன்? கிரகங்களுக்கு விண்வெளிப் பயணம் போகிற விஞ்ஞானிகள் யாராவது அங்கே ஆன்மாக்கள் உலவுகின்றன என்று இதுவரை கூறியதே இல்லையே! சொர்க்கம் நரகம் என்ற கிரகங்கள் இல்லையே; சமஸ்கிருத மந்திரத்தின் சக்தி பொருட்களை `மோட்சத்தில்’ கொண்டு சேர்க்கிறது என்று இந்த அறிவியல் யுகத்திலும் நம்ப முடியுமா?
– இப்படி எத்தனையோ மூடநம்பிக்கைகள் சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றன.
ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்வோம்!
சமுதாயத்தில் மக்களிடம் ஏற்படும் மாற்றங்கள் தான் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறந்து வைக்கும்.
ஆட்சிகள் மாறலாம்;சட்டங்கள் வரலாம்; ஆனால் சமுதாய மாற்றம் வரும் போது தான் சட்டங்களே வெற்றி பெறும்.‌ இந்த மாற்றத்துக்கான சிந்தனைகளைப் பரப்புவதே இந்தப் பயணத்தின் நோக்கம்!
தடைகளைத் தகர்ப்போம்! சமத்துவ வாழ்வியலை முன்னெடுப்போம்!
– திராவிடர் விடுதலைக் கழகம்
(பரப்புரைக்கான துண்டறிக்கை)
பெரியார் முழக்கம் இதழ் 16072026

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும் இந்த ஜாதி அவலங்களைப் பேசுவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. கட்சி மாறினால் பதவியும் பணமும் கிடைக்கும். ஜாதி மாறி காதலித்து வாழ விரும்பினால் மரணம் பரிசாக கிடைக்கும். இதுதான் இங்கே சனாதன தர்மம்!
பெரியார் முழக்கம் இதழ் 09072026

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழுவில் மாற்றங்கள் செய்ய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். இவ்வேளையில் பெரியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி பணிமூப்பில் முதல்நிலையிலுள்ள பேராசிரியர் ஒருவரைத் துணைவேந்தர் பொறுப்பில் நியமனம் செய்யலாம் என்ற விதிப்படி பணிமூப்பில் முதலாவதாகவுள்ள பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டுகிறோம். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டியலினப் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக இருந்துள்ளார். எனவே, இடைக்கால ஏற்பாடாக அரசு தற்போது துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதுவே சமூகநீதியாகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரே ஜாதியின் ஆதிக்கம் முடிந்து, துணைவேந்தர் நிருவாகக்குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக நிருவாகக்குழு பல்வேறு பாராட்டத்தக்க சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை துறைத்தலைவர் மாற்றம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிப்பதிலிருந்த இடர்ப்பாடுகள் களைதல், அனைவருக்கும் நிருவாகப் பொறுப்புகள் என நிருவாகக்குழுவின் பணிகள் சிறப்பாகவே இருந்தன. இந்நிலையில் தற்போதுள்ள நிருவாகக்குழுவை அரசு மாற்ற உள்ளதாக அறிகிறோம். அதில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பேராசிரியர் ஒருவர் அப்பதவிக்கு வர தீவிரம் காட்டி வருவதாக அறிகிறோம். அப்படியான முயற்சிக்கு உயர்கல்வித்துறை துணைபோகக் கூடாது. மேலும், அந்தச் சர்ச்சைக்குரிய பேராசிரியர் இந்தப் பதவியைக் குறிவைத்து நிருவாகத்திற்கு எதிராகப் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பதவியைக் குறிவைத்தே அவர் இப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நிருவாகக்குழுவில் மாற்றம் செய்யும்போது இது போன்ற சர்ச்சைக்குரிய நபர்களுக்கு அரசு இடமளிக்கக்கூடாது.

மேலும், பல்கலைக்கழக விதிகளின்படி மூத்தப் பேராசிரியரைத் துணைவேந்தர் பொறுப்பாக நியமிக்க வேண்டும். அதற்கான நல்வாய்ப்பாகப் பல்கலைக்கழகத்தின் மூத்தப் பேராசிரியராகப் பட்டியலினப் பேராசிரியரே பணிமூப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் நாடறிந்த அறிவியலாளராகவும், நிருவாகியாகவும் இருந்துள்ளார். எனவே, அரசு உடனடியாகப் பட்டியலினப் பேராசிரியரைப் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
05.07.26
பெரியார் முழக்கம் இதழ் 09072026

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம்
* வாழ்வில் மூடநம்பிக்கை
தடை, அதை உடை……
* மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம்
பெரியார் முழக்கம் இதழ் 02072026

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 28.06.26 ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள், பரப்புரை பயணம், கருத்தரங்குகள் நடத்துவது, குடும்ப விழாக்கள் நடத்துவது ஆகியவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிறைவாக தலைமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. “குரலற்ற மனிதர்களுக்கான குரல்”

சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளில் இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசு பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாமல் அமிழ்த்தபட்டுக் கொண்டிருக்கும் சமூகத்து மக்களின் பாடுகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நோக்கத்துடன் “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி அரசின் கவனத்திற்கும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

2. பரப்புரை பயணத் திட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 14-ம் ஆண்டு பரப்புரை பயணத்தை தென் மாவட்டங்களில் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் பரப்புரை பயணம் 2026 ஆகஸ்டு 6ம் தேதி திருச்சி, பேராவூரணி, நாகர்கோயில் ஆகிய 3 முனைகளில் இருந்து தொடங்கி கழகம் தொடங்கிய நாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி காரைக்குடியில் பயண நிறைவு மாநாடு நடத்துவது முடிவு செய்யப்பட்டது.

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்கின்ற தந்தை பெரியாரின் கருத்தின் அடிப்படையில் இந்த பரப்புரை பயணம் அமைய உள்ளது.

ஒரே ஜாதி திருமணங்கள், மதத்தில் சமஸ்கிருதம், பார்ப்பனர்கள் திணிக்கும் இழிவுகள், குடும்பத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து இளம் தலைமுறையினர் விடுவித்துக் கொண்டு அறிவியல் சமத்துவ வாழ்வியலுக்கான மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பயணத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள், தெருமுனைக் கூட்டங்களாக இப்பரப்புரைப் பயணம் நடைபெறும்.

3. குடும்ப விழாக்கள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று அந்தந்த மாவட்ட கழகங்களின் சார்பில் கழக தோழர்களின் குடும்பங்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் விழாக்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் கழகக் குடும்பங்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டு செயலாளர் கோபி இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன், சென்னை உமாபதி, மேட்டூர் கோவிந்தராஜ், காலாண்டியூர் ஈஸ்வரன், பேராவூரணி திருவேங்கடம், திருச்சி மனோகரன், கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர்செல்வம், வேலூர் சிவா ஆகிய தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 02072026

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு முதல்வர் விஜய்யிடம் இருந்து ஏன் திட்டவட்டமான மறுப்பு வரவில்லை? பூசி மெழுகி அதை கடந்து செல்வதற்கு இவர் ஏன் முயற்சிக்கிறார்? தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடி தொடங்கும் மரபு தமிழ் நாட்டில் நீடிக்கிறது. “தமிழ்த்தாய் வாழ்த்து” தான் தமிழ்நாடு அரசின் பாடல் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்திருக்கிறார். அதேபோல் சட்டமன்ற நிகழ்வு தொடங்குவதற்கு முன்பும் “தமிழ்த் தாய் வாழ்த்து” தான் பாடப்பட்டு வந்தது இதில் “ஜன கன மன” தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்டும் ? “வந்தே மாதரம்” பாடலைப் போல் தமிழ் வாழ்த்துப் பாடலும் ஒரு விருப்ப தேர்வுதானே தவிர சட்டபூர்வ தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்டபூர்வமான பாடல் என்ற கருத்தியலை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

மாநில உரிமையை அடகு வைத்து விட்ட இந்த செயலை மறைப்பதற்கு ஒரு ஆதாரத்தை தேடித் தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது முதலில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப் பெற்றது என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். இந்த ஓட்டைவாதம் மக்களிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அவரே இதற்கான பதிலையும் கூறிவிட்டார் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் தேசிய கீதம் பாடி இருக்கலாம் என்று அவரே அதற்கு விளக்கமும் கூறியிருக்கிறார். பிறகு இதில் குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கிறது?

சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இருந்த மரபை தமிழ்நாடு அப்படியே ஏற்காது ; தேசிய கீதத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் இணைத்து இங்கே பாட வேண்டும் என்று அதிலும் மாநில உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் அன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின். இதற்கு நேர் மாறாக தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் கொண்டு வந்து இணைத்து தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை சிதைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் எடுத்து வைத்த எந்த குற்றச்சாட்டுக்கும் முதல்வரிடம் இருந்து பதில் வரவில்லை.மாறாக வசை மொழிகளை முதல்வர் என்ற தகுதியிலிருந்து கீழே இறங்கி வீசி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இல்லாத போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பேசலாமா? என்று அவரே கேட்டுக் கொண்டு அதற்கு பேரவை தலைவர் அனுமதியையும் வாங்கிக்கொண்டு பிறகு தனது “ஜிக்கு புக்கு” வசனங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.பொதுவாக சட்டமன்ற உரைகளில் மேடைப் பேச்சு போல உரத்த குரலில் முதல்வர்கள் பேசுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் காதில் விழ வேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பேசுகிறேன் என்றும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும் என்றும் உலக சட்டமன்ற வரலாற்றில் எந்த முதலமைச்சரும் கேட்காத ஒரு அனுமதியை முதல்வர் விஜய் கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதியும் வழங்கிய ஒரு அதிசய காட்சியும் சட்டமன்றத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இத்துடன் கூடுதலான ஒரு கோரிக்கையையும் முதலமைச்சர் வைத்திருக்கலாம்; உரத்த குரலில் பேசும்போது அவையில் ஒலிபெருக்கிகளை அணைத்து விட வேண்டும் என்றும் கேட்டு இருக்கலாம். அதேபோல் உரையின் இறுதியில் தான் ஒரு “ஆக்க்ஷன்” நடிப்பு செய்யப் போவதாகவும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். உடனே பேரவைத் தலைவர் உங்கள் விருப்பப்படி எந்த “ஆக்க்ஷனையும்” செய்து கொள்ளுங்கள் என்றும் அனுமதி அளித்திருக்கிறார். முதல்வர் விஜய் நிகழ்த்திய அந்த ஆக்க்ஷன் என்ன தெரியுமா? கழுத்தை சீவுவது போல ஒரு ஆக்க்ஷன்! பின் வரிசையில் அமர்ந்திருந்த அவரது கட்சி உறுப்பினர்களும் இந்த அரியகாட்சியை கண்டு ரசிப்பதற்கு ஒரு டிஜிட்டல் திரையை ஏற்பாடு செய்திருக்கலாம். பேரவைத் தலைவர் இந்த ஆக்க்ஷனை சபை குறிப்பேட்டில் எப்படி பதிவு செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆக்ஷனை நேரில் பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சரா என்று தலைகுனிய வைத்து விட்டது முதல்வரின்
சவுண்ட் – ஆக்‌ஷன்-டயலாக்.

விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
23.06.2026

பெரியார் முழக்கம் இதழ் 25062026

பள்ளிகளில் ஜாதிக் கயிறு, மத அடையாளங்களை மாணவர்கள் அணிய அனுமதி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம்.

பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதிக் கலவரங்கள் தாக்குதல்கள் நடந்ததை ஒட்டி திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் அமைத்த குழு அளித்த முக்கிய பரிந்துரைகளில் இது ஒன்றாகும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படுத்தும் என்று அறிவித்திருப்பதையும் பாராட்டி வரவேற்க வேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் முதல் எதிர்ப்பு பாஜக தலைவர் நயினாரிடம் இருந்து வந்திருக்கிறது.”ஜாதி மத அடையாளங்கள் தமிழர் மரபு என்றும் பாரம்பரியம் என்றும் அதில் கை வைக்கஅனுமதிக்க மாட்டோம்” என்றும் மிரட்டுகிறார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே தமிழரின் அடையாளம், ஜாதியும் மதமும் அல்ல. ஆரிய பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் திணிக்கப்பட்ட அடிமைச் சின்னங்களை தமிழர் மரபு என்று பாஜக கொண்டாடலாம் ஆனால் தமிழ் இன உணர்வாளர்கள் ஒருபோதும் அதை ஏற்க மாட்டார்கள். மாணவர்களிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். பூணூல், உச்சிக் குடுமி அடையாளங்களுடன் பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களைக் கற்பிக்கும் குருகுலங்கள் மட்டுமே இந்த நாட்டில் இருந்தன.இதற்கு மாற்றாக அனைத்து சமூகப் பிரிவு மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரே பாட நூலை படிக்கும் பள்ளிக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியில் மெக்காலே என்ற அதிகாரி தான். பார்ப்பனியத்தின் மத அடையாளங்களையும் பாகுபாடுகளையும் ஒழிக்க வந்த பள்ளிக்கல்வி முறையில் ஜாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் மீண்டும் திணிப்பது பள்ளிக்கல்வி நோக்கத்திற்கே எதிரானதாகும். மிரட்டலுக்கு பணிந்து விடாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதியோடு இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.” – “விடுதலை இராசேந்திரன்”,

(குறிப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அதற்குப் பிறகு விபூதி, குங்குமம் அணியலாம்; ஜாதிக்கயிறு மட்டுமே தடை செய்யப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதாலோ என்னவோ அமைச்சர் இப்படி ஒரு மறுஅறிவிப்பை வெளியிட்டிருப்பார் போல் தெரிகிறது. )
பெரியார் முழக்கம் இதழ் 18062026

தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான (super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடையச் செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது.

இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில் த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இதை வலிமையாக மறுத்திருக்க வேண்டும் ஏன் மறுக்கவில்லை? அரசின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்துவிடக் கூடாது; இது மிகவும் ஆபத்தானது!
மருத்துவமனையிலேயே பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இவை. இந்தியாவிலேயே சிறப்புமிக்க உயர் மருத்துவர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு! இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டை நோக்கி சிகிச்சைக்கு வருகிறார்கள். இதேபோல்தான் மோடி ஆட்சி மருத்துவ மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்தபோது;தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டுத் தந்தார் என்பது வரலாறு!

புதிய ஆட்சி இப்படி ஒரு சமூக அநீதிக்கு துணை போய் இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீண்டும் பறிகொடுத்த இடங்களை மீட்டுத் தருவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது!

-விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு. ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி 6.10 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமும், மராட்டிய மாநிலத்திற்கு நிதி 3.99 சதவீதத்திலிருந்து 6.44 சதவீதமும், குஜராத்துக்கு அளிக்கப்படும் நிதி 1.49 சதவீதத்தில் இருந்து 3.76 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிலுவைத் தொகையான ரூ.4,034 கோடியை (கூலி மற்றும் பொருட்கள் பங்கு) ஒன்றிய அரசு நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் இழுத்தடித்தபோது திமுக சார்பில் மாநிலம் தழுவிய பிரமாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கல்வி நிதியை சமக்ர சிக்‌ஷா அபியான் முடக்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை தராமல் தாமதிப்பது மற்றும் வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு தகுந்த பங்களிக்காமல் புறக்கணிப்பது என பல்வேறு தளங்களில் ஒன்றிய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையைமு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவாரா அல்லது போராட்டங்களை முன்னெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 வருடத்தில் ரூ.87 ஆயிரம் கோடி நிதி

கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.87,639 கோடியை பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த நிதியில் 10 சதவீதம் பங்கினை தமிழ்நாடு மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போதைய புதிய சட்ட மாற்றங்கள் இந்த நிதிப் பகிர்வை பாதியாகக் குறைத்துள்ளன. கடந்த காலங்களை பொறுத்தவரை 2023 -24 நிதியாண்டில் ரூ.12,698 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.10,156 கோடி, 2025-26 நிதியாண்டில் ரூ.5,878 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– “விடுதலை இராசேந்திரன்,”
பெரியார் முழக்கம் இதழ் 11062026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் `உச்சிப்பிள்ளையார் கோயிலில் அல்ல, மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் சர்வே கல் பகுதியில்தான் விளக்கு ஏற்ற வேண்டும், அந்த சர்வே கல்தான் தீபத்தூண்’ என இந்து அமைப்புகள் கலவரத்திற்கு வித்திட்டு வருகின்றன. முந்தைய திராவிட மாடல் அரசு இவ்விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்படும் என்பதை உறுதி செய்தது. நீதிமன்றப் படியேறிப் பார்த்தும், சங்கிகளின் கலவர முயற்சி நடக்கவில்லை. மலையை முற்றுகையிட்டு கலவரம் செய்ய காவிகள் முயற்சித்த நொடியில் கூட, We are not allowing..we will face the consequences… என்று காவல்துறையை வைத்து தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது அன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போதைய புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உயர்நீதிமன்றக் கிளை. தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, இவ்விவகாரத்தில் துணிச்சலாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இது தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல் என்று அறியாமல் பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு செய்யும் சண்டை என்பதாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பு, இத்தகைய பதிலை ஒரு அரசாக சொல்ல முடியாது என்ற நிலையில் தெளிவான விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

தவம் – தமிழ் தாசன் ஆகியோர் இணைந்து திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். திமுக ஆட்சிக்காலத்திலேயே வெளி வந்துவிட்ட இந்த ஆவணப்படம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறிவிட்ட சூழலில், புதுக்கோட்டையில் இந்த ஆவணப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. மேலிட உத்தரவு என்று காவல்துறை கூறியிருக்கிறது. மேலிடம் என்றால் அது யார்? தமிழ்நாடு அரசா அல்லது ஒன்றிய அரசா என தெளிவுபடுத்தவில்லை. இந்தத் திரையிடலை எப்படித் தடுக்கலாம் என கழகப் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது பதிவு சென்னை திவிக முகநூல் பக்கத்தில் முடக்கப்பட்டது.

அதுவும் அரசுத்தரப்பில் இருந்து முறையிடப்பட்டதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உறுதியோடு செயல்படுத்திக் காட்டிய மதுரை காவல் ஆணையர் லோகநாதன், தேர்தலுக்குப் பிறகு 25 நாட்களுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, தற்போது தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய போக்குகளால் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மின்சாரத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசின் நடைமுறையே தொடரும் என விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்தச் சூழல் இருந்ததோ, அதையேதான் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்” என தெளிவுபடுத்தியுள்ளார். இவர் முன்பு பாஜகவில் இருந்தபோது மிக மோசமான மதவாத கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தியவர். ஆனால் இன்று தனது போக்கில் இருந்து மாறுபட்டு, தவெகவின் நிலைப்பாடாக கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. அதேசமயம் பத்திரிகையாளர்களிடம் அளித்த இந்த உறுதியை, ஜூன் 22 -ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் தெளிவுபடுத்த வேண்டும். முந்தைய திமுக ஆட்சியைப்போல எவ்வித சமரசமும் இல்லாமல் இவ்விவகாரத்தில் தவெக அரசும் உறுதிகாட்ட வேண்டும். ஒவ்வொரு விவகாரத்திலும் நெருக்கடிகள் முற்றிய பிறகு தனது கருத்தை வெளிப்படுத்துகிற போக்கில் இருந்து வெளி வந்து, எந்தவொரு சிக்கலிலும் தனது கொள்கைப்பார்வையை தெளிவோடு தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது.

பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது.

இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் திரண்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியும் நிர்வாகம் ஜாதி வெறியர்களுக்கு பணிந்து நின்றது. தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு இந்த தீண்டாமை பிரச்சனை குறித்து தோழர்கள் கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் தந்த பிறகும் நிர்வாகம் சில நாட்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்திருக்கிறது. கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் இந்த ஒற்றை கோரிக்கைக்காகவே தொடர்ந்து பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். இப்பிரச்சினையில் கவலையோடு தலையிட்டு செயல்பட்ட அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் பட்டியல் இனத்தின் தலைவர் போராளி சுந்தரலிங்கம் பெயரை தென் மாவட்டங்களில் போக்குவரத்துக் கழகத்திற்கு சூட்டிய போது அந்தப் பெயர் சூட்டிய பேருந்துகளை தங்கள் ஊருக்கு வரக்கூடாது என்று ஜாதி வெறியர்கள் தடுத்து நிறுத்தி பெரும் கலவரத்தில் இறங்கினர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கலைஞர் கூட்டி அனைத்து மாவட்டப் பேருந்துகளுக்கும் சூட்டப்பட்ட அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் முடிவை எடுத்ததோடு பெரியார் சமத்துவபுரம் திட்டத்தை அறிவித்தார். இது ஊர் சேரி பாகுபாட்டை ஒழிக்கும் ஒரு முன்னோடித் திட்டம். இந்தியாவில் இதுபோன்று ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பெரியார் திராவிடர் கழகமாக “தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் உடைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அகமண முறை எதிர்ப்பு, ஜாதி வாழ்வியல் எதிர்ப்பு” என்று தமிழ்நாடு முழுதும் பரப்புரை இயக்கங்களை, போராட்டங்களை கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நடத்தியது வரலாறு. திராவிடர் விடுதலைக்கழகம் “சுயஜாதிப்பற்றோடு ஜாதி எதிர்ப்பு பேசுவது ஜாதி எதிர்ப்பல்ல!” என்ற கருத்தில் உறுதியோடு நிற்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இப்போது இந்தப் பேருந்து தீண்டாமையை முடிவிற்கு கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த லட்சிய பயணத்தை நோக்கி இறுதி வரை மேலும் வேகத்தோடு களத்தில் கழகம் போராடும்.
அரசியல் அதிகாரம் மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வராது என்ற பெரியார் கொள்கை வெளிச்சம் பெரியார் இயக்கங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. பெரியார் இயக்கமான சமுதாய இயக்கம் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. உயர் ஜாதிப்பற்றுடன் வெளியிடும் அவதூறு அறிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.
விடுதலை இராசேந்திரன்,
பொதுச்செயலாளர்
தன் கவனத்துக்கு வந்தவுடன் அங்கு பேருந்து செல்ல உத்தரவிட்டு – அடுத்த சில நாட்களிலேயே 06.06.26 அன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது. அதை வெற்றிகரமாக செயல்படுத்திய மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கத்தியின்றி – இரத்தமின்றி பெரியாரின் வழி நின்று போராடிய திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு கிடைத்தது வெற்றி; இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்த “திராவிடர் விடுதலைக் கழகம்” இதற்கான தீர்வை நோக்கி பல முனைகளில் ஓடியது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்கான பலன் 06.06.2026 இன்று கிடைத்திருக்கிறது. “பலன்” என்பதையும் விட கெம்பனூர் அண்ணா நகர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த “விடுதலை” என்றே சொல்லலாம். இதன் மூலம் கெம்பனூர் ஆதிக்க ஜாதிவெறி அரசியல் சக்திகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்பு பணியில் இது ஒரு மைல்கல்.

பேருந்து அண்ணாநகர் சென்று வந்ததை ஒட்டி கழகத் தோழர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், எண்-21, பேருந்தில் பயணித்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பேருந்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை, மேற்கொண்டனர். தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் வெங்கட், சிவராசு, கிருஷ்ணன், சதீஷ், சத்தியமூர்த்தி தரணி, நவீன் கதிரவன், ஸ்டாலின்ராஜா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட சிறுவாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறை தாக்குதலாகி 8 பேருக்கு அரிவாள் வெட்டு என இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதியிலும் பேசு பொருளாகியுள்ளது. கண்ணில் பட்டோரை எல்லாம் வெட்டிப்போடும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என விசாரிக்கும் போது பிளக்ஸ் பேனர் கதையினை சொல்கிறார்கள். பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 6-பேர் கடும் காயங்களோடு நெல்லை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களோடு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு இளைஞரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. கால், கை என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் நெட்டூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நிரந்தர தீர்வை ஆலோசித்து தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நெட்டூர் சுற்றுவட்டாரங்களில் கல்வி இடை நிற்றல் அதிகம் என்பதாலும் போதைக்கு அடிமையாவதும் தான் முக்கியகாரணம் என்பதை அறியமுடிகிறது. இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே தொடர் கலவரங்கள் போன்ற வன்முறைகள் நடைபெறாமலிருக்கும். ஜாதிக்கு எதிரான பரப்புரையை அரசு செய்திட வேண்டும். ஜாதி கெளரவம் என பேசும் இளைஞர்களிடம் ஜாதி இழிவு என்பதை புரிய வைக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொல்வதை நாகரீக சமூகமாக நாம் பார்க்க முடியவில்லை.

நெட்டூர் பகுதிகளில் உயர் கல்வியோ, பாலிடெக்னிக், அய்.டி.அய். போன்ற எந்த கல்வி நிறுவனமும் இல்லை. அதனை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நெட்டூரில் காவல் நிலையம் அமைத்திட வேண்டும்; காவல்துறை தொடர் கண்காணிப்பில் இப்பகுதி இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவாகள் மீது விரைவான விசாரணை, விரைவான தண்டனை என்பதை உறுதி செய்ய வேண்டும். இளம் சிறார்களும் இந்த ஜாதிவெறியாட்டத்தில் பங்குபெற்றிருப்பதை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். தற்போதைய சம்பவத்திற்கு தக்க நடவடிக்கையும் நிரந்தர தீர்விற்கு ஒரு குழு அமைத்து விசாரித்து அதன் பரிந்துரையை நடைமுறைபடுத்துவதன் மூலமே இந்த ஜாதிய கலவரங்களை தடுக்க முடியும். வழக்கப்போல் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தாமல் தமிழ்நாடு அரசு மௌனம் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 04062026

அமர்நாத் இராதகிருஷ்ணன் தந்த கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை முடக்கி வைக்காமல் ஒன்றிய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், ஓவியா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அறிக்கையின் விவரம்.

2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.

ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து, அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை. அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இதுதான் இச்சிக்கலின் சாரம்.

ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது. எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது. தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு
கண. குறிஞ்சி (தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)
பெரியார் முழக்கம் இதழ் 04062026

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது.

`திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டிக்கிறோம்.

கழகப் பொதுச்செயலாளரின் அறிக்கை `திவிக தென்சென்னை’ முகநூல் பக்கத்தில் செய்தி கார்டு வடிவில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதனை இந்தியாவில் யாரும் பார்க்க முடியாத வகையில் முடக்கியுள்ளது முகநூல் நிர்வாகம். முடக்கப்பட்டதற்கான காரணத்தில், ‘இந்தப் பதிவைத் தடுக்கச் சொல்லி வந்த ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு முடக்கியுள்ளோம்’ என பதிலளித்துள்ளது முகநூல் நிர்வாகம். தடை செய்யச்சொல்லி கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசா? அல்லது ஒன்றிய அரசா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், கருத்துரிமைக்கு எதிரான மிகமோசமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயலுக்கு தமிழ்நாடு டிஜிட்டல் ஊடலவியலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 04062026

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை:

கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர்.

அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன்.

தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து இருந்தது பொம்மலாட்டம் மட்டுமல்ல; நாடகம், மேடை அலங்காரம், குழந்தைகளுக்கான பயிற்சி அளித்தல், சுற்றுச்சூழல் கருத்துக்களை பரப்புதல், மனித உரிமைகளுக்கான கருத்து பரப்புதல் என்று பன்முக ஆற்றல் கொண்டவர்.

பெரியார் கொள்கை உணர்வுடனே தனது குடும்பத்தையும் வளர்த்தார்; இரண்டு மகன்களுக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். நான் திராவிடர் கழகத்தில் இருந்த போது வீதிநாடகங்கள் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு அவரிடம் கூறியபோது போது அவரே முன்வந்து கழக இளைஞர்களுக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கினார். அப்போது கவிஞர் காளமேகம் உருவாக்கிய நாடகக் குழுவில் நானும் தோழர்களும் பங்கேற்று நடித்தோம். கலைவாணனும் எங்களோடு இணைந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களில்; தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டங்களிலும் அவர் பங்கு மிகப்பெரிது! பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் அருகே ஒரு மலைப்பகுதியில் தோழர்களுக்கு 10 நாள் நாடகப் பயிற்சி அளித்தார். பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் மேடைகளில் பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். குழந்தைகளிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சேர்க்கும் நூல்களை குழந்தைகள் விரும்பி படிக்கும் வடிவத்தில் எழுதி உருவாக்கி வெளியிட்டவர். அவரது கற்பனைத் திறனும் அதை வடிவமைக்கும் ஆற்றலும் வியக்கத்தக்கது.

மாணவர் நகலக உரிமையாளர் எங்கள் அன்புத் தோழர் சவுரிராஜன் தமிழர்களின் தாள இசைப் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு பெரும் பொருட்செலவில் நடத்திய “மகுடம்” நிகழ்ச்சியில் கலைவாணனின் பங்களிப்பு அளப்பரியது. சேலத்தில் ஏப்ரல்-2023 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” பொம்மலாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

பயணமும் சுற்றுலாவும் போகும் போதெல்லாம் கலைவாணன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோழர்களால் விரும்பப்பட்டவர். அவரது கலகலப்பு சிரிப்பு, உரையாடல்கள் எப்போதும் கொள்கை சார்ந்தவை. தனது விரல்களாலும் குரல்களாலும் பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்தவர். அவரது இருப்பு இன்னும் நீண்ட காலம் இருந்திருக்க வேண்டும். நட்பு சக்திகளை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தவர் இப்போது கண்ணீர் கலங்க வைத்து விட்டார்.கலைவாணனுக்கு புகழ் வணக்கம்!

பொம்மலாட்டக் கலைஞர், பெரியார் தொண்டர், திராவிடர் கழகப் பொறுப்பாளர் கலைமாமணி மு. கலைவாணன் அவர்கள் மே-22, 2026 இரவு 11 மணிக்கு முடிவெய்தினார். ‌அவருக்கு கழகத்தின் சார்பில், 23/5/26 மதியம் 4 மணிக்கு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் இயக்க தோழமைகளான தோழர் சைதை மா.அன்பரசன் (திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் சரஸ்வதி (பியூசிஎல்), அண்ணன் பேரறிவாளன், தோழர் சவுரிராஜன் (மாணவர் நகலகம்), ஊடகவியலாளர் குணசேகரன் (சன் நியூஸ்) ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ரவிபாரதி, சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தோழர்கள் குகன், கார்த்திஸ்வரன், ஏழுமலை, அசோக், சு. கோபிநாத் (பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி.

எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன்.

எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதைப் போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்.சி எஸ்.டி பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெறும் வகையில் (அதிகபட்சம் ரூ.1.5 கோடி )ஆண்டுக்கு ரூ.200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.

சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டியல் இன மாணவர்கள் பயில ரூ.36 இலட்சம் முதல் ரூ.24 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமும், பழங்குடியினருக்கு தொல்குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெரியார் முழக்கம் இதழ் 29052026

இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை !

“தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும், 4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act) கொண்டுவரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது.

பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்து மதம் இப்போது ஒற்றை மதமாக்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது. அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை கிடையாது.அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்கள்.

இப்போதும் கோயில் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் காத்துக் கிடக்க, பல்லக்கிலும் தேரிலும் இரண்டு அல்லது மூன்று பார்ப்பனர்கள் சட்டை இல்லாமல் பூணூல் அடையாளத்தை காட்டிக் கொண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்து மதமும் இந்துக்களும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத் தானே?

இந்து மதத்தை மட்டுமல்ல,அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறையையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்த்துவதாகத் தான் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த பார்ப்பன அமைச்சர் ஏற்கனவே ஒரு பதிவில் பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார்.அதாவது கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை கேட்பவர்கள் ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை நோக்கி அந்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.

இப்படி பாஜக மனநிலை கொண்ட ஒருவரை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்திருப்பது ஏற்கத் தக்கது அல்ல. இந்த முடிவு தமிழ்மக்களின் உளவியலுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

(குறிப்பு: அறநிலையத்துறையின் செயலாளராக இருந்த பார்ப்பன பெண் அதிகாரி மாற்றப்பட்டு குமரகுருபன் என்ற பார்ப்பனரல்லாத அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது பாராட்டுக்குரியது!)

– “கொளத்தூர் மணி,”
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
22.05.26
பெரியார் முழக்கம் இதழ் 29052026

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை!

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக.

2017-ல் கோவாவில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சி மாற வைத்து ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதலமைச்சரானார்; அவர் மரணம் அடைந்தார்; 2019ல் 10 காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது பாஜக. 1967-ல் தேர்தலில் `கயா ராம்’ என்பவர் அடிக்கடி கட்சி தாவல் செய்து கொண்டிருந்தார். எனவே இந்த கட்சித் தாவலுக்கு `ஆயா ராம் கயா ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை அவர் வெளிநாடு சென்ற காலத்தில் பாஸ்கர் ராவ் என்பவர் இரண்டாக உடைத்து துரோகம் செய்தார். நாடு திரும்பிய என்.டி. ராமராவ் கட்சி தாவியவர்களை மீண்டும் இணைத்து குடியரசுத் தலைவர் முன்நிறுத்தி இழந்த ஆட்சியை மீட்டார் என்பது வரலாறு!

பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அஇஅதிமுகவினரை தவெகவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்த காங்கிரஸ்; இப்போது பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒரு பிரிவினரை குதிரை பேரம் நடத்தி தன் பக்கம் தவெக எடுத்திருக்கிறது இதை காங்கிரஸ் தலைவர் மாணிக் தாகூர் நியாயப்படுத்துகிறார். அதே கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி எதிர்க்கிறார்.

மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து மெஜாரிட்டி எண்ணிக்கையைக் காட்டுவதற்கு தங்கள் கட்சி வாக்குகளை அளிக்க முன்வந்தார்கள். ஆட்சியைக் கவிழ்க்கக் கூடாது என்பதாலேயெ திமுகவும் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் வேறுபட்ட நிலையை எடுத்தது. வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறகு காங்கிரஸ் கட்சியின் வழியில் கூட்டணி அமைச்சரவையில் இணையும் முடிவை எடுத்து அனைவரையும் வியப்படையச் செய்து விட்டார்.

அம்பேத்கர் கூறிய அதிகாரத்தில் பங்கு என்பது என்ன? அரசியல் அதிகாரத்தின் தேவையை உணர்த்திய அம்பேத்கர் தேர்தல் ஜனநாயகம் மட்டும் வெற்றியைத் தேடி தராது; சமூக ஜனநாயகம் அதைவிட முக்கியம் என்றார். 33 பேர் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைச்சராகி மக்களுக்கான அதிகாரத்தை மீட்டு விடமுடியுமா? 120 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள்.

இனி எதிர்காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுக் கொண்டு தவெக கூட்டணியில் இல்லை என்று கூறுவதில் கூட்டணி நேர்மை இல்லை. இந்தியாவில் மாநிலங்கள் ஒரு நகரசபை போலத்தான் அதிகாரமற்று இயங்குகின்றன. எனவே தமிழ்த்தேசிய அரசியலே உண்மையான அதிகாரத்தை மீட்டெடுக்கும் என்ற உண்மையான கருத்தை பேசிவந்த கட்சி மாநிலத்தில் ஒரு அமைச்சர் பதவியை ஏற்பதை அதிகாரத்தில் பங்கு என்று கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?.

பெரும்பான்மை எண்ணிக்கைக்குத் தேவையான இடங்கள் கிடைத்த பிறகு அஇஅதிமுக கூட்டணியை உடைக்கும் முயற்சிகளில் தவெக ஏன் இறங்க வேண்டும்? உறுப்பினர்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள் என்ற கருத்து மக்களை ஏமாற்றுவதாகும். காங்கிரசை உடைத்த பாஜக இதே கருத்தை தான் கூறியது. அமைச்சர் செங்கோட்டையன் போல் தேர்தலுக்கு முன் தானாக போய் சேர்ந்தார்களா? தங்களது கட்சி வெற்றி பெறவில்லை, தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாமல் போனதாலும் பதவி ஆசையால் உருவான விருப்பத்தை எப்படி தானாக வந்த விருப்பமாக கூறமுடியும்?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேலுமணி அணியை மட்டும் தனிமைப்படுத்தி முதலமைச்சர் ஜோசப். விஜய் சந்தித்து ஆடை போர்த்தி வரவேற்றார். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்தது போல அஇஅதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சந்திக்கவில்லை? அதற்கு மாறாக பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய எதிர்ப்பு அணியை மட்டும் ஏன் முதலமைச்சர் சந்தித்தார்? இதிலிருந்து அவர் கட்சியை உடைக்கவே விரும்புகிறார் என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிட முடியும். பெரும்பான்மையை எட்டிய நிலையில் ஊழல்வாதிகளாக குற்றம்சாட்டப்பட்டவர்களை ஏன் சேர்க்க வேண்டும்?

பேரவைத் தலைவரிடம் விலகல் கடிதத்தை தந்த உடனேயே அவர்களுக்காக ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த தவெக கட்சி உறுப்பினர் அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து பிண்னனியில் தவெக இருக்கிறது உறுதியாகிறது. 20 நாட்களுக்கு முன்பு எந்த விசில் சின்னத்தை எதிர்த்து ஓட்டு கேட்டார்களோ அதே விசில் சின்னத்துக்கு ஓட்டு கேட்பது வழியாக வாக்களித்த மக்களை இவர்கள் அவமதிக்கிறார்கள்?

தேர்தல் ஆணையம் தேர்தலை உடனே நடத்துமா? வழக்கு நீதிமன்றம் போவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் எவ்வளவு காலம் வழக்கு நடக்கும்? நீதிமன்றத்தினுடைய முடிவு என்னவாக இருக்கப் போகிறது.

தூய சக்தி என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக ஆதரவை பெற மாட்டோம் என்று ஆதரவு சக்திகளிடம் உறுதியளித்துவிட்டு அக்கட்சிகளை உடைக்க முயற்சிப்பதுதான் தூய சக்தியா? இது பாஜக வழியில் நடைபோடுவதாகும். இனி எப்போது அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது? இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? என்ற துடிப்புதான் மேலோங்கி இருக்கிறது. வட மாநிலங்களில் நடக்கும் கட்சி தாவல் கலாச்சாரம் தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது தமிழ்நாட்டை தலைகுனிய வைத்து விட்டது என்பது மட்டும் உண்மை!
பெரியார் முழக்கம் இதழ் 29052026

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

கொளத்தூர் மணி
கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார்.

தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்.அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் தோழமை உணர்வு பாராட்டி அரவணைத்து அழைத்துச் சென்றவர். தன்னை சந்திக்க வருபவர்களிடமெல்லாம் பெரியார் குறித்தும், திராவிடர் இயக்க வரலாற்றுச் சம்பவங்களையும் செய்திகளையும் நினைவூட்டி இடையறாது பேசி வந்தவர்.

மேட்டுப்பாளையத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான பரப்புரையில் தாக்குதலை நேர் கொண்டு சந்தித்து அவர்களின் இடையூறை முறியடித்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டவர். இப்படியான ஆற்றல்மிகு செயல்வீரரை இழந்திருப்பது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு பேரிழப்பு ஆகும்.தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழரின் இன இழிவு ஒழிப்புப் பணியை தொடர்ந்து தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இறுதி மரியாதை ஆகும்.

விடுதலை இராசேந்திரன்
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் முடிவடைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கலங்க செய்துவிட்டது. மிகுந்த மன அழுத்தத்துடன் இந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.

திராவிடர் கழக காலத்தில் இருந்து பெரியார் கொள்கையை தனது வாழ்க்கையாக சுமந்து கொண்டு பயணித்த தீவிர பெரியார் தொண்டர். என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் உறவு கொண்டவர்; மாதத்திற்கு இருமுறையாவது அலைபேசியில் அழைத்து என்னிடம் பேசுவது அவரது வழக்கம்; அந்த உரையாடல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்; அத்தனையும் இயக்கத்தில் பழைய வரலாறுகள் தொடர்புடையதாகவே இருக்கும் பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு இயக்கத்தில் எனக்கு கிடைத்த ஒரே தோழர் அவராகவே இருந்தார்.

அவரோடு உரையாடி இயக்க வரலாறுகளை மலரும் நினைவுகளாக பேசுவதில் மிகுந்த மன ஆறுதலும் உற்சாகமும் இருவருக்குமே கிடைக்கும். இயக்கத்தின் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரோடு நெருக்கமாக பழகியவர்.

மன்னார்குடியில் பெரியார் நடத்திய தமிழ்நாடு விடுதலை மாநாட்டில் அவர் பங்கேற்றதை நினைவு கூறுவார். கடந்த கால பெரியார் இயக்க வரலாறுகளோடு பயணித்த பெருமைமிக்க பெரியார் தொண்டர்களின் மிச்சமாக அவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருந்து வந்தார்.

பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தில் இந்த தீவிர பெரியாரியவாதி தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களோடு தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். அண்மையில் அவரது மகனின் அகால மரணம் மிகப் பெரும் துயரம் அதில் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளானார். ஆனாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொள்கை உணர்வுகளே ஆறுதல்களை வழங்கியது. பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்தபோது மேட்டுப்பாளையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார். கொள்கை எதிரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றினார். இந்து முன்னணிகளின் சலசலப்புகளை எதிர்கொண்டு மேட்டுப்பாளையத்தில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தை இப்போதும் மறக்க முடியாது! மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சி தோழர்களாலும் மதிக்கப்பட்டவர். அவருக்கான நட்பு வட்டாரம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். நிறைய நூல்களைப் படிப்பார் படித்துக் கொண்டிருக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

சேலத்தில் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொண்டார். எனக்கு இப்போது வயது 80; அவரது வயது 83. மாணவப் பருவத்தில் இருந்து இயக்க உணர்வோடு நான் வளர்ந்தவன். அந்த உணர்வுகளையும் வரலாறுகளையும் எனது வயதை ஒத்த அவரோடு பகிர்ந்து கொள்வதிலும் உரையாடுவதிலும் உற்சாகமும் மன அமைதியும் கிடைத்தது. இனி அந்த உணர்வுகள் இல்லாமல் போய்விட்டதே! என்று கவலைப்படுகிறேன் எனது புகழ் வணக்கத்தை கண்ணீரோடு அர்ப்பணிக்கிறேன்!.

பால்.பிரபாகரன்

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் இன்று (17.05.2026) கோவை அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்ற செய்தி பெரும் துயர் கொள்ள செய்தது.

யாருக்கும் எந்த நிலையிலும் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை வைரம் அவர். சிறியவராக இருந்தாலும் தந்தை பெரியார் போன்று வாங்க என மரியாதையாக அழைக்கும் பண்பு கொண்டவர். மன்னார்குடியில் பிறந்தாலும் தன் பெயருக்கு பின்னால் மேட்டுப்பாளையம் என்ற தான் வாழ்ந்த ஊரையே அடையாளமாக்கியவர் சாதாரண தோழர்களையும் மேடையில் பேச வைக்க மேடை போட்டு கொடுத்து அழகு பார்த்தவர். திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரிடமும் பழகியவர்.

கழகம் சார்பில் பரப்புரைப் பயணம் அவர் பகுதிக்கு செல்லும் பொழுது எல்லாம் சிறப்பான ஏற்பாட்டை இளைஞர் போன்று செய்து முடிக்கும் கடமை தவறா பெரியார் தொண்டர். அகவை முதிர்வு காரணமாக மறைவுற்றாலும் ஏற்க மனமில்லை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தந்தை பெரியாருடன் அய்யா இராமசந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பின்பகுதியில் இருக்குமாறு எடுங்கள் என்றார். எப்பொழுதும் கொள்கை பேசும் வேழம் தன் பரப்புரையை முடித்துக் கொண்டார். இனி என்று காண்போம் அய்யா இராமச்சந்திரனை! கொள்கை மாறா தலைவனை கொள்கைக்கு புறம்பான செயலின்றி அவர் கனவை நிறைவேற்றுவதே குடும்பத்தார் இயக்கத் தோழர்கள் அனைவரும் அவருக்குச் செய்யும் இறுதி வணக்கமாகும். கொள்கை மாவீரருக்கு புகழ் வணக்கம்!

அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 5.00 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இராமச்சந்திரன் உடலிற்கு புகழ் வணக்கம் செலுத்தினார்.

இராமச்சந்திரன் அவர்களின் விருப்பப்படி அவரின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தோழர் இராமச்சந்திரன் அவர்களின் உடல் கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 3-வது குழந்தை பெற்றால் ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் 40,000 தருவதாக அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு. இது முட்டாள்தனமான கண்டிக்கத்தக்க அறிவிப்பு. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாக இழிவுபடுத்துகிறார். உலகம் முழுவதும் “குழந்தைகள் வேண்டாம்” என்ற இயக்கத்தை நோக்கி பெண்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணங்களுக்கு மாற்றாக “ஒன்றாக வாழ்தல்” என்ற முறையை தேர்வு செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதற்கு சட்ட அங்கீகாரம் தருகின்றன.

ஒன்றிய பாஜக ஆட்சி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான தொகுதிகளைக் குறைக்கிறது என்றால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, கூடுதலாக குழந்தை பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. சந்திரபாபுவின் இந்த அறிவிப்புக்கு எதிராக அம்மாநிலத்தில் எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை என்பது வெட்கக்கேடானது.
பெரியார் முழக்கம் இதழ் 21052026

நீட் வினாத்தாள் கசிவு இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒருமுறை கசிந்தது. வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்தவர்களே இதற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி 5432 மய்யங்களில் இருந்து தேர்வு எழுதிய 22.79 இலட்சம் மாணவர்கள் மீண்டும் ஜூன்-21ல் தேர்வு எழுத வேண்டும். மிகுந்த மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை “ஆன்லைன்” வழியாக தேர்வு நடத்தப்படும் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இருவருமே நீட் தேர்வு கூடாது; பிளஸ்டு (+2) மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். கல்விக் கட்டமைப்பையே சீரழித்து வரும் நீட் வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் ஒருமித்த குரல்!
பெரியார் முழக்கம் இதழ் 21052026

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட “திராவிட மாடல்” ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது. ஆனாலும் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது.இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடலோரங்களில்இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் “திராவிட மாடல்” ஆட்சியே முதலிடத்தைப் பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கான விருதை ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜயிடம் டிட்கோ அதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர். வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர் இப்போதாவது உணரட்டும்!
பெரியார் முழக்கம் இதழ் 21052026

“ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது சுமத்தியுள்ள விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம்

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் நினைவூட்டலுக்காக சில “நாகரிக” சொற்றொடர்கள் கீழே:

“ஜஸ்டிஸ் கட்சியுடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.”

“சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.”

“1935 மார்ச் 10ஆம் நாள் `குடிஅரசு’ மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.”

“1942 வாக்கில் ப.ஜீவானந்தம் நம் ஆள்தான் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ….. …. …. வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப் பிடிக்க முயன்றது”. “இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சட்டசபை தேர்தல் வந்தது. என்னைப் போன்றவர்களுக்கும் கூட ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர் திராவிடர் கழகத்தார்.”

“இங்கிலாந்தில் லான்ஸ்பரி என்ற பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஆற்றிய உரைக்கு விடை கூறும் முறையில் ஈவெரா பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈவெரா படித்தார்.”

“ராஜாஜி இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்த கிழவிக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது. ஈவெரா சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தார். கட்டாய இந்தியை எதிர்த்து காங்கிரஸ் மந்திரி சபைக்கு ஓரளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடிந்தது”.

“முதலில் இந்தி எதிர்ப்பு வீர்ர்களை எடுத்துக் கொள்வோம். ……… …………. ……… ஈ.வெ.ரா எந்த சாக்கிலும் காங்கிரசைத் திட்டி திட்டியே சாவதென்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்து அந்த ‘புனித’ கைங்கரியத்திலே தனது ‘பொன்னான’ நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்… ……… …….. ……… ஏகாதிபத்தியத்தின் தாஸானுதாசர். ஏகாதிபத்திய எஜமானர்களின் மேஜைகளிலிருந்து விழும் ரொட்டித் துண்டுக்கு நாக்கில் ஜலம் ஊற அண்ணாந்து நிற்கும் அரசியல் பிற்போக்காளர்.”

தோழர் ஜீவாவின் புனைவுகளையும், பொருந்தா வாதங்களையும், உண்மையல்லாத வீரப்பிரதாபங்களையும் பற்றி இதுவரை விளக்கி வந்திருக்கிறோம்; இன்னும் எழுதுவதற்கும் திறனாய்வு செய்வதற்கும் ஏராளம் இருந்தாலும் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம்.

சீமானுடன் ஜீவாவை ஒப்பிட்டு பேசியதற்காக சினமுற்று சீறினார்கள். சீமான் மீது சுமத்தப்பட்ட தனிமனித ஒழுக்கம் குறித்த குற்றச்சாட்டுகள் ஜீவா மீதும் சுமத்தப்பட்டுள்ளன. நம்மால் எடுத்துக் கூற முடியும் என்றாலும் அந்தத் திறனாய்வு நமது நோக்கம் அல்ல!

இதுவரை வைக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கும், திறனாய்வுகளுக்கும் ஏதேனும் விளக்கமும், வழக்கமான சுடுமொழி பின்னூட்டமும் வருமேயானால் அதற்கும் விளக்கம் கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.

பெரியார் என்ற அந்த மாமனிதர் ஜீவாவின் அந்த நூலைப் படித்திருக்க மாட்டார் என்று நாம் யாரும் நம்ப மாட்டோம்; ஆனால் ஜீவாவின் இழிவான அவதூறுகளை புறந்தள்ளிவிட்டுதான் பெரியார் இயங்கி இருக்கிறார்; ஜீவாவோடு இறுதி நாட்கள்வரை பழகியும் வந்திருக்கிறார்; தேர்தலிலும் அவருக்கு ஆதரவளித்துள்ளார். ஆனாலும் ஒரு பயிற்சி வகுப்பில் தோழர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் சொகுசு பொதுமையர் ஒருவர் பூர்ஷ்வா பார்வை என்கிறார்; கிண்டல் சிரிப்பு என்கிறார்.

Zeal of the new convert (புதிதாக மதம் மாறியவர்களின் உற்சாக சேட்டைகள் அதிகமாகவே இருக்கும். அப்படி பல்வேறு ’புரட்சிகர’ அமைப்புகளில் இடம்பெற்று ’புரட்சிகளை’ முழுமையாக நடத்தி முடித்துவிட்டு, அண்மையில் தேர்தல் அரசியலுக்காக இந்திய பொதுவுடைமைக் கட்சிக்குள் வந்திருக்கும் ’ஒரு முழு புரட்சியாளர்’ இப்படி பதிவிட்டிருக்கிறார். என்னை உளவுத்துறைக்கும் ‘ரா’வுக்கும் இரகசிய உளவாளி என்று தனது காதில் வழியும் மூளையில் இருந்து கண்டுபிடித்து கூறியிருக்கிறார். ஜீவாவின் மீது விமர்சனம் வைத்தாலே அது உளவுத்துறையின் சதியாம்!.

அதேபோல் ஜீவாவுக்காக மற்றொருவர் சீறிப்பாய்ந்தார். அவர் இப்போது திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். குறைகூற முடியாத குணக்குன்று ஜீவாவை எப்படி விமர்சிக்கலாம்? என்று கொதித்து எழுந்த அவர் கொளத்தூர் மணி ’அற்ப மானுட பதர்’ ‘செக்கு எது? சிவலிங்கம் எது? என்று தெரியாயத பிராணி’ என்று தனது ’தத்துவமொழியில்’ கழிவைக் கொட்டியிருக்கிறார்.

கடந்த 16 வாரங்களாக ஜீவாவின் உண்மை முகத்தை கிழித்துக்காட்டி ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். சீமான் பெரியார் மீது சுமத்திவரும் இழிவுகளையும் அவதூறுகளையும் விட மிஞ்சி நிற்கிறது ஜீவாவின் எழுத்தும் பேச்சும். பெரியார் மீதான ஜீவாவின் இந்த கீழ்த்தரமான கருத்துக்களை நம்மை குற்றம் சாட்டுகிறவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? நாம் சுட்டிக்காட்டிய ஜீவாவின் பொய்மையை, நேர்மையின்மையை அவர்களால் மறுக்க முடியமா? இதற்கு ஏதேனும் விடைகூற முன்வந்தால் அதற்கும் விளக்கம் அளிப்பதற்கு நாம் தயராகவே இருக்கிறோம் என்ற உறுதியான அறிவிப்புடன் இந்த தொடரை நிறைவு செய்கிறோம். -நிறைவு

ஜீவாவின் இழிவான அவதூறுகளை புறந்தள்ளிவிட்டுதான் பெரியார் இயங்கி இருக்கிறார்; ஜீவாவோடு இறுதி நாட்கள்வரை பழகியும் வந்திருக்கிறார்.

பெரியார் முழக்கம் இதழ் 14052026

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார். விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது. மற்றபடி சிபிஅய், சிபிஎம், இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான் ஏற்கனவே நாமும் வலியுறுத்தி பதிவிட்டோம்.

முதன்மையான எதிரி இந்துத்துவாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு திமுக தலைவர் மேற்கொண்ட அணுகுமுறை வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதிய ஆட்சியை ஆளுநர் அனுமதிக்க வேண்டும்; இதுகாலத்தின் கட்டாயம் என்றும்; ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார் மு. க.ஸ்டாலின் திமுக தலைவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை இந்த கருத்து உயர்த்தி விட்டது. பாசிச கருத்தை மிகவும் மலினப்படுத்தி அரசியல் புரிதல் இல்லாமல் பாயாசமாக கேலி செய்த விஜய்; பாசிசத்தின் அடக்குமுறைகளை இப்போதாவது உணர்வாரா? என்பது தெரியவில்லை! கொள்கைப் பார்வையில் முதன்மை முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியலை அணுகும் தெளிவை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்பார்க்க முடியாது!
– விடுதலை இராசேந்திரன்
09.05.2026
பெரியார் முழக்கம் இதழ் 14052026

தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து கழக தலைவர் “கொளத்தூர் மணி” அறிக்கை:

“தமிழக வெற்றிக் கழகத்துக்கு” பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஒன்றிய ஆட்சியின் தூதுவராகி அதிக பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க மறுத்து வருகிறார். ஆளுநர் உருவாக்கும் இந்த குழப்பத்தால் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. மக்களால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அஇஅதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதித்து அந்த ஆட்சிக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.இது உண்மையாக இருந்து விடக்கூடாது என்று நாம் அஞ்சுகிறோம்.

இந்திய அரசியலில் கொள்கைக்கான இலட்சியத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். மாநில அடையாளங்களை அழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இன்றி அவர் போராடுகிறார். இந்தியாவிலேயே மாநிலங்களுடைய உரிமைக்குப் போராடும் ஒரே தலைவராக இன்றைக்கு பல்வேறு கட்சிகளிலும் அவர் மதிக்கப்படுகிறார். மக்கள் ஆதரவோடு அதிக இடங்களை பெற்று இருக்கிற த.வெ.க ஆட்சி அமைய தடையாக இருக்க மாட்டோம் என்றும், நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றும், ஆறு மாத காலம் இந்த ஆட்சியின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்போம் என்றும் மிகுந்த அரசியல் நேர்மையோடு தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுகவில் குழப்பங்கள் உருவாகி கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து நின்றது. அப்போது வலிமையான உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்து இருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதற்கு அவர் தயாராக இல்லை முழுமையாக ஆட்சி காலம் முடியும் வரை காத்திருந்தார். அதே பார்வையோடு தான் இப்போதும் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று சரியான முடிவை எடுத்துள்ளார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கி திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும் நிலையை எடுத்தால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய பாதிப்புகளையும் கருதிப் பார்க்க வேண்டும்.

திமுக எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை கொள்கை அடிப்படையில் திரும்பப் பெற்றால்கூட பிறகு அதிமுகவும் தவெகவும் கூட்டணி சேரும் நிலைதான் உருவாகும். மற்றொரு கசப்பான உண்மையையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தற்போது திமுகவில் கொள்கைக்காக பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.இப்படி அதிகாரத்திற்காக இருக்கிறவர்கள் தான் இப்படி ஒரு விபரீத யோசனைகளை முன் வைக்கிறார்கள் என்று கருதுகிறோம். அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்களை கொள்கைக்காக இருப்பவர்களாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருக்கிறது. இந்தியாவில் கொள்கை அடையாளத்தோடு நேர்மையான அரசியல் பிம்பத்தோடு நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிம்பம் குலைந்து விடக்கூடாது என்ற கவலையோடு இதை எழுதுகிறோம். மு.க.ஸ்டாலின் உறுதியாக இந்த விபரீத முடிவுகளை எடுக்க மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு.”
(குறிப்பு: இடதுசாரிகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு முன்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது இந்த அறிக்கை. கழகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அறிக்கை என்பதால் கழக இதழில் பதிவு செய்யப்படுகிறது.)
– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
08.05.26
பெரியார் முழக்கம் இதழ் 14052026

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை.
காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில் கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.

பாஜகவின் தலைவரான வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாக பாஜக ஆட்சியின் செயல் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமை காப்பாற்றப்பட்டது; அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டது; பிற மதத்தினர் மீது இந்துமத கொள்கைகளைத் திணிக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முறை தடுத்து நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வலியுறுத்திய குறைந்தபட்ச செயல்திட்டம்தான் இதற்குக் காரணம்.

ஒன்றியத்தில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஒற்றை ஆட்சியை நோக்கி இந்துராஷ்டிரத்தை அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் தனது ஆட்சியின் கீழ் பாஜக கொண்டு வந்துவிட்டது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியால் இதை முறியடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த `திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டுமே இந்த ஆதிக்கத்தை எதிர்த்து துணிவுடன் களத்தில் நின்று போராடியது. தேர்தல் களத்திலும் இதே விளக்கத்தை முன்வைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இல்லாமல் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெகுமக்கள் ஆதரவோடு தனித்து போட்டியிட்ட ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். ஆனால் ஆட்சி அமைப்பதற்குரிய 118 எண்ணிக்கையை எட்ட முடியாமல் 10 இடங்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை குறைவுதான் இப்போது மிகப்பெரும் அரசியல் மாற்றங்களை, நெருக்கடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஒன்றிய பாஜக ஆட்சியை தனது வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் பொதுவான உணர்வாக இருந்தது.

குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவும் மீண்டும் ஒரு தேர்தல் திணிப்பை எதிர்கொள்ளக்கூடாது என்ற கருத்திலும் திமுகவும் மதச்சார்பற்ற கட்சிகளும் உறுதியாக இருந்தன. அந்த அடிப்படையில் தான் திமுக அணியில் இருந்த மதச்சார்பற்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் சரியான முடிவை எடுத்தன. திராவிடர் விடுதலைக் கழகம் இதே கருத்தை வலியுறுத்தியது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களும் இந்தப் பிரச்சனையில் பாஜகவின் ஊடுருவலுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்ற கொள்கைப் பார்வையோடு தோழமைக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் முயற்சிக்கு ஆதரவாகவே இருந்தார்.

இடையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் ஒரு திட்டத்தை அதிமுக முன்வைத்த போது திமுகவின் பரிசீலனைக்கு பிறகு அது கைவிடப்பட்டு கருவிலேயே சிதைக்கப்பட்டது. இதுகுறித்து செய்திகள் கசிந்தவுடன் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு எதிரானது; தமிழ்நாடு முதலமைச்சரின் மாண்பை சீர்குலைத்து விடும் என்று தனது எதிர்ப்பை அறிக்கையின் வழியாக பதிவு செய்தார். மக்கள் ஆதரவோடு தேர்வு பெற்றுள்ள ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் தனது கருத்துக்களை நாகரிகமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டு மக்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அமித் ஷாக்கள் தான் கலங்கிப் போய் அடுத்த சதி திட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

தனது கட்டுப்பாட்டில் உள்ள அஇஅதிமுகவை இரண்டாக உடைத்து ஒரு அணியை ஆட்சிக்கு ஆதரவாக மாற்றி ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள். திரு.வேலுமணி தலைமையில் ஒரு அணி ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்காமலே அவர்களாகவே முன்வந்து இந்த ஆதரவை தந்திருக்கிறார்கள். மற்ற தலைவர்களை சந்தித்தது போல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தி கொண்டு தனி அணியாக செயல்பட தொடங்கிய சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பை நேரில் சென்று சந்திருக்கிறார் விஜய். மறுநாள் சட்டமன்றத்தில் அந்த அதிருப்தி தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக செய்த இந்த கட்சி உடைப்பு அரசியல் தமிழ்நாட்டில் தவெகவால் நடந்திருக்கிறது. இதன் மூலம் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி விஜய் ஆட்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பாஜகவின் பக்கம் முதலமைச்சர் ஜோசப் விஜய் சாய விரும்பவில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட்டாலும், எதிர்காலத்தில் இவர் உறுதியாக `திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மு.க ஸ்டாலின் போல் உறுதியாக எதிர்த்து நிற்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது!

பேரவைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடந்திருக்கிறது. போட்டியை உருவாக்க திமுக விரும்பவில்லை. சட்டமன்றத்தில் பேசிய அனைத்துக்கட்சி தலைவர்களும் `தமிழ், தமிழ்நாடு’ என்ற கருத்தோட்டத்தை மய்யமாக வைத்தே பேசியுள்ளனர். குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் உரிமைக்கு இந்த அவை ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, `ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும், எதிரி கட்சியாக செயல்படாது’ என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பதவியேற்பு விழாவில் `வந்தே மாதரம்’ பாடப்பட்டதுபோல் ஆளுநர் உரையில் அதை அனுமதிக்க கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். `சனாதனத்தை வீழ்த்துவோம்’ என்ற முழக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு உணர்வுபூர்வாக அனைவரையும் ஈர்த்தது.

இந்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இனி பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் பிரச்சனைகள் எடுபடாது என்று கூறியிருக்கிறார். அருண்ராஜ், நிர்மல்குமார் ஆகிய தீவிர மோடி ஆதரவாளர்கள் இருவரும் அமைச்சரகளாகி இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயின் சோதிடர் நாதன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஒரு சோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியிருப்பது சரிதானா? சட்டமன்றத்தில் விசிகவின் வன்னிஅரசு, தேமுதிகவின் பிரேமலதா ஆகியோர் சுட்டிக்காட்டியதால் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சோதிடரின் ஆலோசனைப்படிதான் முதலமைச்சர் பொட்டு வைத்து வருகிறார் போலும்!

மும்மொழி திட்டத்தின் ஒரு பகுதியான “பி.எம்.ஸ்ரீ “திட்டத்தை ஒன்றிய ஆட்சி ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது. நீட் தேர்வின் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு புதிய ஆட்சி எப்படி முகம் கொடுக்கப் போகிறது? என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப திமுக கொள்கை இளமையோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டி ஆக வேண்டும். பெரியார் கருத்தியலுக்கு எப்போதும் மிக நெருக்கமாகவும் அருகிலும் இருப்பது திமுகவின் தலைமைதான் என்பதில் நாம் உறுதியாகவே இருப்போம்!
பெரியார் முழக்கம் இதழ் 14052026

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர்.

ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே மோகன் (வட்டச் செயலாளர் திமுக) ,லைனர் பிரபு (வட்டச் செயலாளர்), வெங்கடேஷ் (மாவட்டச் செயலாளர் விசிக), மதன் (விசிக) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, மடத்துகுளம் ஒன்றிய தலைவர் சிவானந்தம், சங்கீதா, இராவணன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் எட்வின் பிரபாகரன், தட்சணா மூர்த்தி, ஜெயபிரகாஷ் (இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பிரகாசு (நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்), திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத் (பகுதி தலைவர்), ராஜேஷ் (பகுதி செயலாளர்), சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் இரண்யா, அசோக், மயிலை சிவா, பிரவீன், மாரி (திக), மகிழவன், லட்சுமணன், குறளரசி, பிரபாகரன் (சேலம் இளைஞரணி), கவியரசு( தமிழ்நாடு மாணவர் கழகம் சேலம்), மயிலை அருண், வீரா, பிரகாஷ் மாஸ்டர், ப்ரித்தி, ஏசு, அஸ்வின், மேட்டூர் முத்துராஜ், மோகன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 07052026

ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது.

தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை.

இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல;‌‌ இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் உரிமைகளை கிடைக்கச் செய்தன.

புதிய புதிய மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மிக நேர்த்தியான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இதை பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு குழுவினர் வந்து நேரில் கண்டறிந்து தங்கள் மாநிலங்களில் பின்பற்றினர்.

இப்படி இவர் நடத்திய ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; ஏனைய மாநிலங்களுக்கும் பயன்களை. கிடைக்கச் செய்தன. கொள்கை மாறுபாடு கொண்டவர்களையும் அவர் நேசித்தார்; அவர்களுக்கு பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

தமிழர் நாகரிகத்துக்கு முந்தையது கங்கைச் சமவெளி நாகரிகம் என்ற ஆரிய வரலாற்றுப் புரட்டை உடைத்த கீழடி நாகரீக ஆய்வுகளுக்கு ஆதரவாக நின்றார். அதற்கான அருங்காட்சியகத்தை உருவாக்கி ஆரிய புரட்டுகளுக்கு பதிலடி தந்தார்.

இந்தியாவிலேயே ஒன்றிய ஆட்சியின் மதவாத அரசியலுக்கும் மாநில உரிமை பறிப்புக்கும் எதிராக இவரது குரல் மட்டும் தான் சிங்கமாக கர்ஜித்தது. இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் பாஜகவின் அரசியலுக்கு கடும் நெருக்கடி தந்து வருகிறார் என்று எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆட்சியை மைனாரிட்டியாக மாற்றி அமைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு; ஒரு இடத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாமல் தடுத்து நிறுத்தினார் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொகுதி “மறுவரையறை” சதி தடுத்து நிறுத்தப்பட்டு அதன் பயன் தென்னகம் முழுவதற்கும் கிடைத்தது.

ஆக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் உரிமை மீட்பராக; வழிகாட்டியாக செயல்பட்டு திராவிட மாடலுக்கு மகுடம் சூட்டினார்.

அரசியல் ரீதியாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்த, முடியாமல் தீய சக்தி என்ற வெற்று முழக்கத்தோடு திரைப்பட பிம்பம் வழியாக கட்டமைக்கப்பட்ட மலிவான எதிர்ப்பு இப்போது வெற்றி பெற்று இருக்கிறது.

அடுத்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன ஆகுமோ? என்று அச்சமாக இருக்கிறது. வளர்ச்சிக்கான திட்டங்கள் சீர்குலைந்து போய்; தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி விடுமோ? என்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் திரைப்பட பிம்பம் என்ற மாய வலையில் சிக்கிய வாக்காளர்கள் திமுக ஆட்சி தொடரவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த மக்கள் தீர்ப்பை வரவேற்போம் என்று சொல்வதற்கு நாம் தயாராக இல்லை. இந்த தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு மக்களை தயார் செய்வோம்! அதற்கான களத்தை தீவிரப்படுத்துவோம்! தமிழ்நாட்டின் பெருமையாக நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன்பை விட இன்னும் தீவிரமான ஆதரவை வழங்க உறுதி ஏற்போம்.

மு.க.ஸ்டாலின் அவர்களே! “லட்சியங்களும் கொள்கைகளும் தான் எனக்கு முக்கியமே தவிர வெற்றி தோல்விகள் மட்டுமல்ல”என்று நீங்கள் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை உங்களின் தலைமைப் பண்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறது.
களத்தில் தோற்கலாம்; போராட்டம் தொடர்கிறது!

பெரியார் முழக்கம் இதழ் 07052026
-விடுதலை இராசேந்திரன், 05.05.2026

மக்­கள் தீர்ப்­பைத் தலை­வ­ணங்கி ஏற்கிறோம் என­வும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்­றும், சிறப்­பான எதிர்க்­கட்சியாகச் செயல்படுவோம் என­வும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்துள்ள அறிக்கை வரு­மாறு:

கடந்த ஐந்­தாண்டு காலத்­தில் ஏரா­ளமான திட்டங்­களை உருவாக்கி, தமிழ்­நாட்டு மக்களுக்கு நல்­லாட்­சியை வழங்கினோம். தமிழ்­நாட்டை அனைத்து வகை­யிலும் உயர்த்­தி­னோம். தேர்­தல் களத்­தில் எங்­க­ளது சாத­னை­க­ளைச் சொல்லியே வாக்­கு­களைக் கேட்­டோம். மக்­க­ளுக்குச் செய்து கொடுத்த நலத்­திட்­டங்­கள் தொட­ரு­வ­தற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்­புரை செய்­தோம்.

அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் உண்­மை­யான ஆட்­சி­யைத் தந்­தேன்! திராவிட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட் ட­ணியை ஆத­ரித்து வாக்க­ளித்த தமிழ்­நாட்டு மக்கள் அனை­வ­ருக்­கும் நான் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, வாக்­க­ளிக்க மறந்­த­வர்­க­ளுக்­கும் சேர்த்தே ஆட்சி நடத்­தி­னேன். அனைத்து மக்­க­ளுக்­கும் உண்­மையாக இருந்­தேன். நான் எனது மனச்­சாட்­சிப்­ப­டியே செயல்­பட்­டேன். நான் எனது சக்­தியை மீறி உழைத்தேன். என்­னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயி­ரோடு கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன் பி­றப்­புகள் அனை­வ­ருக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்றி! எங்­க­ளோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்­கத் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி!

எனது அர­சி­யல் பொது­வாழ்­வில் அதி­கப்­ப­டி­யான வெற்றியையும் பார்த்­துள்­ளேன்; தோல்­வி­க­ளை­யும் சந்­தித்­துள்­ளேன். இலட்சியமும் கொள்கையும்தான் முக்­கி­யம் எனச் செயல்படுபவன்! எனவே இலட்­சி­ய­மும் கொள்­கை­யும்­தான் முக்­கி­யமே தவிர, வெற்றி தோல்­வி­கள் மட்­டு­மல்ல என்று செயல்­ப­டக் கூடி­யவன் நான்.

அத­னால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அர­சி­யல் பயணம் தொய்­வில்­லா­மல் தொட­ரும். இது­வரை மக்­க­ளுக்­கா­கச் சிறப்பான ஆளும்­கட்­சி­யா­கச் செயல்­பட்ட தி.மு.க. – இனி சிறப்­பான எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­ப­டும் என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்பிட்­டுள்­ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 07052026

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட முடிவுகள் தலைமைக் குழுவில் எடுக்கப்பட்டன.

2026 தேர்தல் நிலைப்பாடு
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலோடு சமூக மேம்பாட்டு கண்ணோட்டத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல், இந்திய ஒன்றியத்தையே ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரம், மொழி என அனைத்து நிலைகளிலும் பாசிசத் தன்மையைப் புகுத்தி ஆர்.எஸ்.எஸ்-ன் கனவான இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பாஜக அரசிற்கு எதிராக தேர்தல் அரசியல் களத்திலும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை, அடிப்படை தத்துவங்களைப் பற்றுறுதியுடன் கடைபிடித்து கருத்தியல் தளத்திலும் இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்திலேயே வலிமையான கட்சியாக விளங்கி பெரும்பான்மையான மக்கள் துணையோடு ஆட்சி புரியும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசுக்கு வரும் 2026 தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என தலைமைக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை ஒட்டி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1000 தெருமுனை கூட்டங்கள் மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக இக்கருத்துகளை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இணையதள செயல்பாடுகள்
நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றங்களினால் கருத்துப் பரப்பல் மூலம் கருத்துருவாக்கம் செய்வதிலும், செய்திகளைப் பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் இணையதளம் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை எட்டி இருக்கிறது என்பதால் இணையதள செயல்பாடுகளை இன்னும் வீச்சுடன் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான செயல்பாடுகளாக புதிய புதிய யுக்திகளோடு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் இணையதளத்தில் ஆர்வமுள்ள கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
தலைமைக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று சந்தித்து மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது,அதன் மூலம் இயக்கப் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 29 கோவை ஆர்ப்பாட்டத்தின் தாக்கங்கள்:
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டறிந்து அதனை ஆவணப்படுத்தி சான்றுகள் ஆவணங்களுடன் தலைமைக்கு அனுப்பும்படி கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை வடிவங்கள் குறித்து கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் அனுப்பிய செய்திகள், காணொளிகள் அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படும் அந்தந்த பகுதிகளில் அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்தி டிச-29 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியுடன் நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு பிறகு தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அச்சத்துடன் இருந்த நிலை மாறி அவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்வதற்கு இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு மன வலிமையை கொடுத்து இருக்கிறது என்கின்ற செய்தியை தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். ஏற்கனவே இதற்கு முன்பு கழகத்தின் சார்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் நடத்திய பகுதிகளில் இன்றளவும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இல்லாத நிலையை தோழர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் டிசம்பர் 29, 2025 கோவை போராட்டம் காரணமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட தேநீர்க் கடை மூடப்பட்டதையும் மக்கள் பயத்தை தயக்கத்தை உடைத்து தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து வெளியில் வந்து பேசுவதற்கு கழகத்தின் போராட்டம் தூண்டுகோலாக அமைந்திருப்பது நல்லதொரு முன்னேற்றமாக இருந்ததை தோழர்கள் குறிப்பிட்டனர். இன்னும் தொடர்ந்து பரப்புரைகள், போராட்டங்கள் வாயிலாக தீண்டாமைக்கு எதிராக கழகம் தொடர்ந்து களத்தில் பணியாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முழக்கம் சந்தா சேர்க்கை

கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் சந்தாக்களை அதிகப்படுத்து குறித்தும் முழக்கம் சந்தாதாரர்களுக்கு மிகச் சரியாக சென்று சேர்வதை உறுதிப்படுத்த மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் புரட்சிப் பெரியார் முழக்கம் இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நூலகங்களில் முழக்கம் இடம்பெறுவதையும் குறிப்பிட்டு மேலும் அந்தந்த மாவட்ட கழக பகுதிகளில் உள்ள அரசு நூலகங்களில் பெரியார் முழக்கம் இதழ் இடம் பெறுவதை உறுதி செய்து அவ்வாறு இடம் பெறவில்லை எனில் மாவட்டக் கழக நிர்வாகிகள் நூலக பொறுப்பாளர்களை சந்தித்து முழக்கம் நூலகங்களில் இடம்பெற ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய தலைமைக் குழு உறுப்பினராக வேலூர் சிவா இணைக்கப்பட்டுள்ளார்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் தலைவர் அவர்களின் ஆலோசனைகளுடன் தலைமைக் குழு நிறைவடைந்தது. இத்தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், அன்பு தனசேகரன், சென்னை உமாபதி, மேட்டூர் சக்திவேல், கோவிந்தராஜ், காவலாண்டியூர் ஈஸ்வரன், மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார், பேராவூரணி திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழின அழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

கடந்த சனவரி 11 -ஆம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்துப் பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும். தமிழீழத் தாயகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஈழத் தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு நிற்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான இந்த 16 ஆண்டுகளில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்புக்கு ( Structural Genocide) ஆளாகிவருகின்றனர்.

நிலப்பறிப்பு, பெளத்த விகாரைகளை நிறுவி பண்பாட்டுத் திணிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், படைக் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப் படுகின்றன. அத்தகைய ஓர் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்பின் பகுதியாகத்தான் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தப் பார்க்கின்றது சிங்கள பெளத்தப் பேரினவாதம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி அரசமைப்பு மாற்றப்பட்டு கூட்டாட்சி ஏற்பாடு தமிழர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு பன்னாட்டு சட்டநெறிகளின்படி ஈடுசெய் நீதியாக (Remedial Justice) தமிழர்களின் இறைமை மீட்டளிக்கப்பட வேண்டும்.

கடிதத்தில் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது தமிழர்களின் கூற்று மட்டுமல்ல, நம்மைத் தாண்டி பலரும் அதை அறிந்தேற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2011 ஆம் ஆண்டு அய்.நா. அமைத்த மூவல்லுநர் குழு 40,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு அய்.நா. உள்ளக ஆய்வறிக்கை 70,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது. கனடா மே 18 ஆம் நாளை தமிழின அழிப்பு நாளாக ஏற்றுள்ளது. அண்மையில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிந்தேற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு குற்றங்களுக்குப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை துச்சமாக மதித்து சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு துணை செய்தே வந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை நினைவுபடுத்தி, இனஅழிப்பையும் கருத்தில் கொண்டு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம். மேலும், இனஅழிப்புக்கு நீதியும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பும் கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை பன்னாட்டு அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு தனித்தும் இந்திய அரசின் வழியாகவும் தொடர்ந்து முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காகவும் இனஅழிப்புக்கு நீதி பெறவும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
கொளத்தூர் மணி, தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

பெரியார் முழக்கம் இதழ் 22012026

அனைவருக்கும் வணக்கம்,

28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான்.

அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும்.

அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்றுதான் ஜீவா அவர்கள் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி வரை ‘ஜனநாயகம்’ என்ற இதழில் எழுதிய கட்டுரைத் தொகுப்பே ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலாகும்.

அந்த நூலினைப் படித்தவர்களுக்குத் தெரியும். பெரியாரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு உள்நோக்கம் கொண்டே செய்யப்பட்டன என்றும், ஆங்கிலேயர் அரசின் ஆதரவு பெற – ஜமீன்தார், பெரு முதலாளிகளின் ஆதரவைப் பெற – காங்கிரசுக்கு எதிராக இயங்க – மாகாண ஆளுநரின் நட்பைப் பெற என்ற பல்வேறு சுயநல எண்ணங்களோடு தான் அனைத்துச் செயல்பாடுகளும் பெரியாரிடம் இருந்தது என்பதாகத்தான் அது இருக்கும்.

மேலும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல “ஈரோட்டுப் பாதை நூலில் இடையறாது ஓடும் ஒரு சரடு, திராவிடர் கழகம் இடைநிலை ஜாதிகளின், நிலச்சுவான்தார்களின், லேவாதேவிக்காரர்களின், பெரும் பணக்காரர்களின் இயக்கமாகவும் அது இருந்தது” என்பது.

சுருக்கமாக தோழர் ஜீவா அவர்கள் பெரியாரோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை, கம்பராமாயணம் போன்ற புராண நூல்கள் மீதான எதிர்ப்பரப்புரைகள் ஆகிய அனைத்துக்கும் எதிராகச் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறியவுடன் செயல்பட்டார்.

எப்படி சீமான் பெரியார் இயக்கத்தோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, திராவிடர் அடையாளம், போன்ற கருத்துக்களை அமைப்பிலிருந்து விலகித் தனி இயக்கம் கண்ட பின்னர் நேர் எதிராகப் பேசினாரோ அவ்வாறே தான் தோழர் ஜீவா அவர்களும் பேசினார்; செயல்பட்டார்.

அதைக் குறிப்பிடவே ‘சீமானின் முன்னோடி’ ‘அன்றைய சீமான்’ என்ற சொற்களை நான் அதில் பயன்படுத்தியிருந்தேன். அச்சொற்றொடர்தான் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவிட்டு இருந்ததை எனக்கு தோழர்கள் அனுப்பி வைத்தனர் (எனக்குத் தனியாக முகநூல் கணக்கு இல்லாததால்).

அதில் வில்லன் சிரிப்பு, நிலப்பிரபுத்துவ ஆணவம், பண்ணையார்த்தனம், கழிசடை, அற்ப மானுடப் பதர், செக்கின் மேல் காலைத்தூக்கும் ஒன்று, பிரபாகரன் கடைசி நாளில் என்னை ஒதுக்கி வைத்தார், பெரியார் சிலைகளுக்கு முன்னர் திருமணங்கள் நடத்தி வைத்து பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தது போன்ற சொற்களோடு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.

ஒரு பயிலரங்கில் தன்னுடைய அமைப்பின் தோழர்கள் தங்கள் இயக்கத் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனம் குறித்து அறிந்து கொள்வதற்கு வினா எழுப்புவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதும் தவறான ஒன்றாகப் பார்க்கப்படுவது, அதுவும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் என்பதே அதிர்ச்சியான ஒன்றுதான்.

இந்திய சுதந்திரம் குறித்து ‘விடுதலை’யும் ‘ஜனசக்தி’யும் 1947 ஜூலையிலிருந்து 1949 வரை விவாதித்திருக்கின்றன. அதுபோலவே திராவிட நாடு, சுயநிர்ணய உரிமை, வடநாட்டுச் சுரண்டல், பார்ப்பனியம் ஆகியவை குறித்தும் 1952 ஆகஸ்ட் முதல் 1953 பிப்ரவரி வரை தொடர் விவாதம் நடந்திருக்கிறது.

அவ்வகை விவாதம் நடந்தால் அது பல செய்திகளை இருதரப்பாரும் புரிந்து கொள்ளவும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதே என் கருத்தாகும். தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல இது ஒரு வளர் முரணாக அமைந்து புதிய கருத்து நிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.

வரலாற்றை மீண்டும் நினைவு கூறுவதோ, சுட்டிக் காட்டுவதோ ஒருவரை இழிவாக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்து நாம் விலகி நின்று தொடர்ந்து விவாதிப்போம். தோழர் ஜீவா அவர்களின் “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைக்கப்பட்டுள்ள விமரிசனங்கள் குறித்து என்னுடைய கருத்துக்களை எங்கள் இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நான் முன்வைக்க இருக்கிறேன். அதுவரை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்வினை ஆற்றாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவுடமையாளர்களில் சிலர் நமக்கு எதிராகக் கூட இருக்கலாம்; ஆனால் பொதுவுடமை கொள்கை நமக்கு எதிரானது அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த இதழில் தொடங்குகிறது…

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
10.10.25.
பெரியார் முழக்கம் இதழ் 16102025

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற தலைப்பின் கீழ் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவும் இல்லை என்கிற உயரிய கருத்துக்கள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன” என்றும், பக்கம் 58-இல் “இந்து என்கிற சொல்லின் பொருள் என்ற தலைப்பில் சனாதன தர்மம் என்றால், அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்” என்றும், ஒரு உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால் அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாக கருதி அகற்ற முன்வருபவனே இந்து ஆவான் என்றும், அதே 58-ம் பக்கத்தில் “இந்து சமயம் என்கிற தலைப்பின் கீழ் இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும்” என்றும், பக்கம் 58 மற்றும் 59-ல் ஆன்மா, கர்மா, புனர்ஜென்மம் அதாவது மறுபிறப்பு, வீடுபேறு அதாவது மோட்சம் பற்றிய பல்வேறு இந்துமத கருத்துகளும் கூறப்பட்டுள்ளன. வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பற்றி பல்வேறு பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கம் 59-ல் இந்துதர்மம் என்கிற தலைப்பின்கீழ் சமூகம் பிராமணர், சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை சமூகத்திற்கான தொழில் கடமைகள் ஆகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 43 மற்றும் 44-ல் பிராமணர்கள் என்கிற தலைப்பின் கீழ் கல்வி கற்பது சமய சடங்குகள் செய்வது வெகுமதிகளை பெறுவது சமுதாயத்திற்கு நல்வழி உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும் என்றும், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்கிற தலைப்புகளின் கீழ் முறையே நாட்டை ஆள்வதும், வணிகம் செய்வதும் அவர்களது கடமை மற்றும் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சூத்திரர்கள் என்கிற தலைப்பின் கீழ் “முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளை செய்வது இவர்களது பணிகள் ஆகும்” என்று சூத்திரர்களை தாழ்ந்தவர்களாகவே குறிப்பிடுகிறது.

இந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள 264 பக்கங்களில் பெரும்பான்மை பக்கங்கள் இந்து மதத்தை, இந்துமத வேதங்களை, உபநிடதங்களை ராமாயணத்தை, மகாபாரதத்தை பேசுவதாக இருக்கிறது. ஆனால் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சமயங்களுக்கு பெயருக்காக வெறும் மூன்று நான்கு பக்கங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தேசிய கல்விக் கொள்கை 2020இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் கருத்துக்கள் என பல்வேறு வகையில் இந்த தமிழ்நாடு அரசின் கீழே இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம், தேசியக் கல்விக் கொள்கை 2020 உடன் ஒத்துப் போகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டு இருந்ததும் அதற்கு எதிராக நாடு முழுவதும் அவர் மீது நடத்தப்பட்ட கருத்தியல் தாக்குதலை சட்ட ரீதியாக எதிர்கொண்டதும் தங்களுடைய கொள்கைத் தெளிவையும் அதிலுள்ள உறுதிப்பாட்டையும் காட்டியதாகப் பார்க்கப்பட்டது.

ஒருபுறம் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்லிவிட்டு மறுபுறம் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கருத்துக்களை தமிழ்நாடு அரசு தன்னுடைய பாடப்புத்தகத்தில் வைத்திருப்பதற்கு “தமிழ்நாடு மாணவர் கழகம்” எங்களுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதற்கான உரிய விளக்கத்தை தருவதோடு அறியவியலுக்கு எதிரான, இந்து மதக் கருத்துகளை திணிக்கிற இப்படியான கருத்துக்களை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத பட்சத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
-பேரன்பு,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்.
பெரியார் முழக்கம் இதழ் 02102025

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம்.
1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர்.
தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன்.
திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன்.
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து அவர் வைத்த விமர்சனத்திற்காக, எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் கடுமையான பதிலடியைக் கொடுத்த துணிச்சல்காரர். கந்தசஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வலையொளியில் வெளியான காணொளிகளுக்காக, அதில் பணிபுரிந்த தோழர்கள் மீது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிந்து கைது செய்தபோது, அந்த கைதைக் கண்டித்து கந்த சஷ்டி கவசத்தில் என்ன உள்ளது என்று பேசி காணொளிகளை வெளியிட்டு எதிர்வினையாற்றியவர் வேலு பிரபாகரன். அதற்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையிலும் இருந்தார்.
தொலைக்காட்சி விவாதங்கள், வலையொளிகள் மூலமாக பெரியாரின் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்தவர். பெரியார் போலவே வேடமணிந்துகொண்டு, பெரியார் குரலிலேயே பேசி காணொலிகளை வெளியிட்டு வந்தார். பெரியாரியலுக்காக தனிமனிதராக ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தார் என்றால் மிகையல்ல. வேலு பிரபாகரன் மறைவு திரைப்படத்துறையினருக்கும், முற்போக்காளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் சீரிய பெரியாரியராக, தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!
*கொளத்தூர் மணி,*
*தலைவர்,*
*திராவிடர் விடுதலைக் கழகம்.*
18.07.25
பெரியார்முழக்கம்இதழ்24072025

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது.

நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது செயல்படுவது சட்ட விதிமீறலாகும்.மனித நேயமே இல்லாமல் இன்று வேலை நடந்தால் போதும் என்கின்ற நிலையில் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வகுப்பினராக இருப்பதால் அதிகாரிகளும், தூய்மை பணியினை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவன ஊழியர்களும் ஜாதியப் பார்வையோடு கையாள்வது தெரிகிறது.

டிஜிட்டல் உலகமாக மாறிவரும் நிலையில் / கம்யூட்டர் யுகமாக மாறிய நிலையில் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பதற்கு ஒரு கருவியை வாங்க முடியவில்லை தூய்மைத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் நிறுவனங்கள் இந்த மனித அவலத்தை பற்றி கண்டு கொள்வதில்லை.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணியத்த கூலியை விட மிக குறைந்த கூலியை கொடுப்பதும், தூய்மைத் தொழிலாளர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் செலுத்தாமல் தொகையை நிலுவை வைத்தும் தூய்மைத் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் இந்த நிறுவனங்களை கண்டுகொள்ளாத உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இது போன்ற பாதாள சாக்கடை விசவாயு சாவுகள் தொடருகின்றன.

இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக திகழும் தமிழ்நாடு மலக்குழி மரணம் விசயத்தில் இந்தியாவில் 2-வது இடம் வகிப்பது. தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானமாகும்.

திருச்செந்தூர் தூய்மைப் பணியாளர் சாவுக்கு காரணமான நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த சுடலை மணியின் சாவிற்கு நீதி வேண்டும், சுடலை மணி குடும்பதிற்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் 19062025இதழ்

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்”

ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின் அரசாணையை மேற்கோளாகக் காட்டி “பதிவாளர் தேர்வினை நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரியில் அரசுக்கு கடிதம் எழுதியதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.பேராசிரியர் வைத்தியநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியோ செய்தியோ கொடுக்காத நிலையில் அரசுக்குக் கடிதம் அனுப்பியதை வைத்து எப்படி பணியிடை நீக்கம் செய்ய முடியும்? துணை வேந்தரின் அனைத்து ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்த ஒரே காரணத்தை வைத்து பணி இடை நீக்கம் செய்ததை ஏற்க முடியாது. உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வைத்தியநாதன். மேலும் ஊழலுக்கு எதிராக சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் விசாரணையிலும் இவர் ஒரு சாட்சியாக இருந்துள்ளார். உயர்நீதி மன்ற நீதியரசர் வேல்முருகன் தனது உத்திரவில் ஜெகன்னாதன் சாட்சிகளைக் கலைக்கவோ மிரட்டவோ கூடாது என்ற உத்திரவிற்கு எதிராக துணை வேந்தர் சாட்சிகளை மிரட்டி உள்ளார்.

தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு மே19ஆம் நாள் பணி நிறைவு ஆக உள்ள துணை வேந்தரின் ஆணையின் அடிப்படையில் -செய்யப்பட்டுள்ள பேரா.வைத்தியநாதன் அவர்களின் இடை நீக்கத்தை -உடனடியாக ரத்து செய்ய வேண்டுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

– கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,

பெரியார்முழக்கம்22052025இதழ்

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம்.

மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஏனெனில் உயர்கல்வியில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்ற ஆணவத்தோடு ஆளுநர், துணைவேந்தர்களாக இந்துத்துவாதிகளை நியமிப்பதும், அவர்கள் வழியாக தேவையற்ற இந்துத்துவ செயல்பாடுகளை நிறைவேற்றுவதும், தனியாக துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகிற நூல்கள் கூட முன் அனுமதி பெறாததைக் காரணமாகக் காட்டி நடவடிக்கை எடுப்பதுமான திமிர் நடவடிக்கைகளில் துணைவேந்தர்கள், குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபடுவதற்குப் பெரும் உந்துதலாகவும் ஆளுநர் இருந்திருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விதி மீறல்களுக்காகவும், ஊழல் நடவடிக்கைகளுக்காகவும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான மேல் நடவடிக்கை இல்லாமலும், அவரது காலக்கெடு முடிந்த பின்னாலும் அதை நீட்டிப்பதும் என்றவாறு ஒரு இந்துத்துவவாதியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் ஆன பல நடவடிக்கைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடந்து கொண்டே இருந்தன.

ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக இருந்து வரும் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர்மீது, பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமாறு கோருகிறோம்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை தமிழ்நாடு அரசு நியமித்த பழனிச்சாமி இ.ஆ.ப தலைமையிலான விசாரணைக் குழு உறுதி செய்து அரசிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையினை அரசு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இன்று வரை ஆளுநர் அதன்மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கவில்லை.

200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நூலகர், உடற்கல்வி இயக்குநர் பணி நியமனங்கள் நடைபெற்றன.

தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி போலிச் சான்றிதழ் விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் ஆட்சிக் குழுவில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காமல் துணை வேந்தர் ஒரு தனித் தீர்மானத்தை கொண்டு வந்து பெரியசாமி மீதான விவகாரம் மீது எவ்வித நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அது இன்னமும் கிடப்பில் உள்ளது.

200 புள்ளி இட ஒதுக்கீட்டில் பட்டியலின அருந்ததியினருக்கு கிடைக்க
வேண்டிய தமிழ்த் துறை பேராசிரியர் பதவி பட்டியலினத்திற்கு கிடைக்கவில்லை; மாறாக பொதுப் போட்டிக்கு சென்றது.

அதேபோல் மேலாண்மைத் துறை இணைப்பேராசிரியர் யோகானந்தன், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சுந்திரமூர்த்தி, நூலக அறிவியல் பேராசிரியர் முருகன் ஆகியோர் அருந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டினை அவர்களுக்கு கிடைக்காமல் பொதுப் போட்டி மூலம் நிரப்பப் பட்டு ஆதாயம் பெற்றுள்ளனர். இது முற்றிலும் இட ஒதுக்கீட்டிற்கு முரணானது. இதன் மீது வேந்தராக ஆகி உள்ள முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் பெரியார் பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது.
– “கொளத்தூர் மணி,” தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
08.04.25 பெரியார் முழக்கம் 10042025இதழ்

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம்.

சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கான அடிப்படை சிவில் உரிமைகளைப் பறித்து வைத்திருக்கின்றன. தீண்டாமையை பல வடிவங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். ரேசன் கடை நடத்துதல், முடி திருத்தும் கடை நடத்துதல், உணவகங்கள் நடத்துதல், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தல் போன்ற அன்றாட வாழ்வு முறையில் திணிக்கும் இந்த தீண்டாமைக் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கண்டும் காணாத போக்கு நீடிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் மாநில உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளைக் கடந்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாநாடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

அதேபோல் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்களைக் கழகத் தோழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒத்த கருத்துள்ள இயக்கத் தோழர்களையும் அழைத்துப் பேச வைக்கலாம்.

கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை‌ இராசேந்திரன், பொதுச்செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்.

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர்.

இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க வேண்டியது நம் வெவ்வெருவரின் இலட்சியக் கடமை என்ற உணர்வோடு மயிலாடுதுறை மாநாட்டிற்குப் பெரும் திரளாக திரண்டு வருமாறு தோழர்களையும், உணர்வாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம். மயிலாடுதுறை கருஞ்சட்டைக் கடலாகட்டும்! திரளுங்கள் தோழர்களே!

கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர்.
திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 20032025இதழ்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை:

“மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”
பெரியார் முழக்கம் 13032025இதழ்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!”

இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது.
முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம். இந்த முனைவர் பட்ட சேர்க்கைத் தகுதி என்பது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாகும்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்காத நிலையில் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மட்டும் ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக செயல்படுத்த முயல்வதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசு, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திணிப்பை எதிர்க்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் விடுத்துள்ள இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டு உயர் கல்வியில் படிக்கும் மாணவர்கள் 10+2+3+2 பதினேழு ஆண்டுகளில் தான் முனைவர் பட்டத்தில் சேரமுடியும். ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் படிக்கும் மாணவர்கள் 10+2+4 = 16ஆண்டுகளில் முனைவர் பட்டத்தில் சேரலாம். இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள். மேலும் 2 ஆண்டு முதுநிலையில் ஒரு குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்துத் தேர்வு ஆவதால் நமது மாணவர்களின் கல்வித் தரமானது புதிய கல்விக் கொள்கையின் கீழ் படித்த மாணவர்களின் கல்வித் தரத்தை விட கூடுதலாக இருக்கும்.

அவ்வாறான தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர், பதிவாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
03.02.25
பெரியார் முழக்கம் 07022025 இதழ்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்!

இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:-

பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது.

ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல், கல்வியியல் பண்பாட்டியல் போன்ற தலைப்புகளில் அந்த ஒளிபரப்பு அல்லது செய்தி ஏடுகளுக்கு எழுதுகிற கட்டுரைகள் இருக்குமாயின் அதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றும்  உட்பிரிவு (2) கூறுகிறது.

ஆனால், ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப்பேராசிரியரும் பெரியார் அண்ணா கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறுப்பாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற முனைவர் இரா. சுப்பிரமணி அவர்கள் எழுதியிருந்த பெரியாரின் போர்க்களங்கள்,   மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன் என்ற நூல்கள் குறித்து விளக்கங்கள்  கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் பெறப்பட்டு நிலுவையில் இருக்கிற இந்த சூழலில் மீண்டும் அவரை குறி வைத்து இதை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக நாம் கருதுகிறோம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை என்று ஒன்று கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்திருந்தும் அதன் வழியாக இதுவரை  பெரியார் குறித்த 60 பக்க நூல் ஒன்று வெளியிட்டதைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வு மையத்தின் தலைவர் இதழியல் துறையின் பார்வையிலான பெரியார் குறித்த ஒரு நூலை எழுதுவதும், நவீன கல்விக்கு முன்னோடியாக கருதப்படுகிற மெக்காலே குறித்து அதாவது கல்வியியல் குறித்து எழுதியதும்  தவறானது என்பதைப் போல ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சுட்டிக் காட்டப்படும் பல்கலைக்கழக விதிகள், வானொலி தொலைக்காட்சி விவாதங்கள்,  செய்தி வார ஏடுகளில்  எழுவது குறித்து உள்ள விதிகளைச் சுட்டிக்காட்டி துறை சார்ந்த நூல்கள் கல்வியியல் சார்ந்த, பண்பாட்டு புரட்சி சார்ந்த விதிவிலக்கு அளித்திருக்கும் துறைகளில் எழுதுவதற்கும் விளக்கம் கேட்பதும், அவர் மீதான நடவடிக்கை எடுக்கத் துடிப்பதும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற மதவாத சிந்தனை போக்குக்கு எதிரானவை என்ற கருத்தில் இருப்பதால்தான் என்றுதான் யூகிக்க முடிகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற இந்துத்துவ மதவாத சிந்தனை போக்குக்கு எதிரான கருத்துகள் கொண்டவற்றை எழுதுவதை குற்றமாக்கத் துடிக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச போக்குதான் வெளிப்படுகிறது.

மேலும் புத்தூடகங்கள் பல்வேறு பரிமாணங்களை எட்டி செல்லிடப்பேசி வழியாகவும்,செயலிகள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் கற்றல்- கற்பித்தல் நிகழ்ந்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என்பது என்ன வகையான சிந்தனை வளர்ச்சி எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்கள் என்பவை சுதந்திரமான சிந்தனைகளையும், பன்முகத் திறன்களை மாணவர்களிடையேயும், பொது தளத்திலும் உருவாக்கும் அறிவின் மையமாகும். அங்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி பெற வேண்டும் என விதிகள் இருப்பதாகக் கூறுவது கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

எழுதுவதும், உரையாடுவதும் தான் ஆசிரியப் பணிக்கான அடிப்படை கடமைகளாகும். அதனைத் தடுக்க முனைவது ஆபத்தான போக்காகும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு கடந்த 5.2.2024 அன்று வெளியிட்டிருக்கிற அந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,

தலைவர்,

திராவிடர் விடுதலைக் கழகம்.

08.02.2024.

பெரியார் முழக்கம் 15.02.2024

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது.  2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில் பல ஆய்வு நூல்களை  வெளியிடுவது வழக்கமானது தான். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பெரியார் துறை தலைவராக இருந்த எஸ்.வி.ஆர் பேராசிரியர் சக்குபாய் பெரியார் குறித்த ஆய்வரங்குகளை நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். எம்.அய்.டி பேராசிரியர்களான எம்.எஸ்.எஸ் பாண்டியன், முனைவர் வெங்கடாசலபதி  முறையே பெரியார், பாரதி, வ.உ.சி குறித்து ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் பல்கலை துணைவேந்தரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்பிரமணி உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறுகிறார். பெரியார், மெக்காலே குறித்த ஆய்வுகள், இதழியல் சார்ந்தவை, இதழியல் சார்ந்த வெளியீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை  என்று பல்கலை விதிகள் தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை எதிரிகளாக ஆபத்தான 5 பேரில் மெட்டீரியலிஸ்ட் (பொருள்முதல்வாதம், கடவுளை மறுப்போர்) மெக்காலே ஆகியோரும் அடங்குவர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் துணைவேந்தர், முறைகேடாக பல்கலை விதிகளுக்கு நேர்முரணாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலையில் பெரியார் இருக்கையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் பெரியார் பற்றிய வரலாற்றை இதழியல் கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு தடை போடுவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கூறினார்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.

2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம்.

இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள் எடுக்கப்படுவதும் வைக்கப்படுவதுமான செயல்பாடுகள் நடக்கின்றன என்றாலே சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார் என்று தான்பொருள். அவ்வாறாயின் புதிய நிபந்தனைகளையாவது அறிவித்தாக வேண்டும் அல்லது உரிய காப்பு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அதோடு பல்கலைக்கழகத்தில் எதுவும் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்து தான் தீர வேண்டும்.

நாம் ஏற்கனவே பலமுறை துணைவேந்தர் மீது விசாரணை நடத்துகிற போது ஒரு பொறுப்புள்ள அய்.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து அவர் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்குவற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்; அப்போதுதான் அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை நிரூபிக்க முடியும் என்ற காரணத்தால் இந்த வேண்டுகோளை கைதுக்கு முன்னதாகவே பல வேளைகளில் நாம் வைத்திருக்கிறோம்.

இப்போது உள்ள நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வேண்டுகிறோம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் இல்லாமல் இருக்கிற நிலையும் அவர்களுடைய முறைகேடுகளை சரியாக விசாரிப்பதற்கு ஏதுவாகவும் பல்கலைக்கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பில் இயங்கச் செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசையும் உயர் கல்வித் துறையையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறோம்.

கொளத்தூர் மணி,

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

02.01.2024

பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பணி நியமனம் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றாமை, விதிகளை மீறி பாரபட்சமாய் நடந்து கொள்ளுதல்,உரிமை கேட்போரை இடைநீக்கம், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் பல ஆர்ப்பாட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு முன் கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறது.

மேலும்  பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கி அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் பல்வேறு முறையீட்டு மனுக்களையும் அனுப்பி இருக்கிறது.

1)           அண்மையில் நடந்த உடற்கல்வி இயக்குனர், நூலகர் போன்ற பணி நியமனங்களில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் நியமனம் செய்தது.

2)           போலியான கல்விச் சான்றிதழ்கள் என தெரிந்தும் போலி சான்றிதழ் அளித்தவர் களையே பணியில் அமர்த்தியது.

3)           துறைத்தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்காதது.

4)           துணைவேந்தர் முன்னரே முடிவு செய்தவர்களை பணி நியமனம் செய்தது

5)           இந்துத்துவ ஆதரவு பரப்புரைகளில், செயல் பாடுகளில் ஈடுபடுவதை துணைவேந்தரே ஊக்குவிப்பது,தாமே ஈடுபடுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

இப்போது அவற்றை விசாரித்து நட வடிக்கை எடுப்பதற்காக உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர்,இணைச் செயலாளர் ஆகியோரை  உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமித்திருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இந்த விசாரணைக் குழு முன்னர் எழுப்பப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிமைக்கு குரல் கொடுத்த ஆசிரியர் சங்கப் பொறுப் பாளரை – பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ததையும் விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

மேலும் விசாரணை முடிந்ததும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

ஆணையத்தின் இந்த விசாரணையும் அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளும் ஆளுநரின் ஆதரவு இருக்கிறது என்ற ஆணவத்தோடு நடந்து கொள்ளும் துணை வேந்தரின் போக்குக்கும், பெரியார் பல்கலைக் கழக முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நம்புகிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பெரியார் முழக்கம் 19012023 இதழ்