Category: அறிக்கைகள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட முடிவுகள் தலைமைக் குழுவில் எடுக்கப்பட்டன.

2026 தேர்தல் நிலைப்பாடு
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலோடு சமூக மேம்பாட்டு கண்ணோட்டத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு மட்டும் அல்லாமல், இந்திய ஒன்றியத்தையே ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரம், மொழி என அனைத்து நிலைகளிலும் பாசிசத் தன்மையைப் புகுத்தி ஆர்.எஸ்.எஸ்-ன் கனவான இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பாஜக அரசிற்கு எதிராக தேர்தல் அரசியல் களத்திலும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை, அடிப்படை தத்துவங்களைப் பற்றுறுதியுடன் கடைபிடித்து கருத்தியல் தளத்திலும் இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்திலேயே வலிமையான கட்சியாக விளங்கி பெரும்பான்மையான மக்கள் துணையோடு ஆட்சி புரியும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசுக்கு வரும் 2026 தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என தலைமைக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை ஒட்டி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1000 தெருமுனை கூட்டங்கள் மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக இக்கருத்துகளை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இணையதள செயல்பாடுகள்
நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றங்களினால் கருத்துப் பரப்பல் மூலம் கருத்துருவாக்கம் செய்வதிலும், செய்திகளைப் பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் இணையதளம் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை எட்டி இருக்கிறது என்பதால் இணையதள செயல்பாடுகளை இன்னும் வீச்சுடன் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான செயல்பாடுகளாக புதிய புதிய யுக்திகளோடு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் இணையதளத்தில் ஆர்வமுள்ள கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
தலைமைக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று சந்தித்து மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது,அதன் மூலம் இயக்கப் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 29 கோவை ஆர்ப்பாட்டத்தின் தாக்கங்கள்:
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டறிந்து அதனை ஆவணப்படுத்தி சான்றுகள் ஆவணங்களுடன் தலைமைக்கு அனுப்பும்படி கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை வடிவங்கள் குறித்து கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் அனுப்பிய செய்திகள், காணொளிகள் அடிப்படையில் தீண்டாமை கடைபிடிக்கப்படும் அந்தந்த பகுதிகளில் அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்தி டிச-29 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. மிகப்பெரிய எழுச்சியுடன் நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு பிறகு தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அச்சத்துடன் இருந்த நிலை மாறி அவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்வதற்கு இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு மன வலிமையை கொடுத்து இருக்கிறது என்கின்ற செய்தியை தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். ஏற்கனவே இதற்கு முன்பு கழகத்தின் சார்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் நடத்திய பகுதிகளில் இன்றளவும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இல்லாத நிலையை தோழர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் டிசம்பர் 29, 2025 கோவை போராட்டம் காரணமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட தேநீர்க் கடை மூடப்பட்டதையும் மக்கள் பயத்தை தயக்கத்தை உடைத்து தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து வெளியில் வந்து பேசுவதற்கு கழகத்தின் போராட்டம் தூண்டுகோலாக அமைந்திருப்பது நல்லதொரு முன்னேற்றமாக இருந்ததை தோழர்கள் குறிப்பிட்டனர். இன்னும் தொடர்ந்து பரப்புரைகள், போராட்டங்கள் வாயிலாக தீண்டாமைக்கு எதிராக கழகம் தொடர்ந்து களத்தில் பணியாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முழக்கம் சந்தா சேர்க்கை

கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் சந்தாக்களை அதிகப்படுத்து குறித்தும் முழக்கம் சந்தாதாரர்களுக்கு மிகச் சரியாக சென்று சேர்வதை உறுதிப்படுத்த மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் புரட்சிப் பெரியார் முழக்கம் இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நூலகங்களில் முழக்கம் இடம்பெறுவதையும் குறிப்பிட்டு மேலும் அந்தந்த மாவட்ட கழக பகுதிகளில் உள்ள அரசு நூலகங்களில் பெரியார் முழக்கம் இதழ் இடம் பெறுவதை உறுதி செய்து அவ்வாறு இடம் பெறவில்லை எனில் மாவட்டக் கழக நிர்வாகிகள் நூலக பொறுப்பாளர்களை சந்தித்து முழக்கம் நூலகங்களில் இடம்பெற ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய தலைமைக் குழு உறுப்பினராக வேலூர் சிவா இணைக்கப்பட்டுள்ளார்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் தலைவர் அவர்களின் ஆலோசனைகளுடன் தலைமைக் குழு நிறைவடைந்தது. இத்தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், அன்பு தனசேகரன், சென்னை உமாபதி, மேட்டூர் சக்திவேல், கோவிந்தராஜ், காவலாண்டியூர் ஈஸ்வரன், மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல்குமார், பேராவூரணி திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழின அழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

கடந்த சனவரி 11 -ஆம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்துப் பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும். தமிழீழத் தாயகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது ஈழத் தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு நிற்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான இந்த 16 ஆண்டுகளில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்புக்கு ( Structural Genocide) ஆளாகிவருகின்றனர்.

நிலப்பறிப்பு, பெளத்த விகாரைகளை நிறுவி பண்பாட்டுத் திணிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், படைக் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப் படுகின்றன. அத்தகைய ஓர் கட்டமைப்பு வகைப்பட்ட இனஅழிப்பின் பகுதியாகத்தான் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தப் பார்க்கின்றது சிங்கள பெளத்தப் பேரினவாதம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி அரசமைப்பு மாற்றப்பட்டு கூட்டாட்சி ஏற்பாடு தமிழர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு பன்னாட்டு சட்டநெறிகளின்படி ஈடுசெய் நீதியாக (Remedial Justice) தமிழர்களின் இறைமை மீட்டளிக்கப்பட வேண்டும்.

கடிதத்தில் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது தமிழர்களின் கூற்று மட்டுமல்ல, நம்மைத் தாண்டி பலரும் அதை அறிந்தேற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2011 ஆம் ஆண்டு அய்.நா. அமைத்த மூவல்லுநர் குழு 40,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு அய்.நா. உள்ளக ஆய்வறிக்கை 70,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது. கனடா மே 18 ஆம் நாளை தமிழின அழிப்பு நாளாக ஏற்றுள்ளது. அண்மையில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிந்தேற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு குற்றங்களுக்குப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை துச்சமாக மதித்து சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு துணை செய்தே வந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை நினைவுபடுத்தி, இனஅழிப்பையும் கருத்தில் கொண்டு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம். மேலும், இனஅழிப்புக்கு நீதியும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பும் கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை பன்னாட்டு அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு தனித்தும் இந்திய அரசின் வழியாகவும் தொடர்ந்து முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்காகவும் இனஅழிப்புக்கு நீதி பெறவும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
கொளத்தூர் மணி, தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

பெரியார் முழக்கம் இதழ் 22012026

அனைவருக்கும் வணக்கம்,

28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான்.

அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும்.

அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்றுதான் ஜீவா அவர்கள் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி வரை ‘ஜனநாயகம்’ என்ற இதழில் எழுதிய கட்டுரைத் தொகுப்பே ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலாகும்.

அந்த நூலினைப் படித்தவர்களுக்குத் தெரியும். பெரியாரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு உள்நோக்கம் கொண்டே செய்யப்பட்டன என்றும், ஆங்கிலேயர் அரசின் ஆதரவு பெற – ஜமீன்தார், பெரு முதலாளிகளின் ஆதரவைப் பெற – காங்கிரசுக்கு எதிராக இயங்க – மாகாண ஆளுநரின் நட்பைப் பெற என்ற பல்வேறு சுயநல எண்ணங்களோடு தான் அனைத்துச் செயல்பாடுகளும் பெரியாரிடம் இருந்தது என்பதாகத்தான் அது இருக்கும்.

மேலும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல “ஈரோட்டுப் பாதை நூலில் இடையறாது ஓடும் ஒரு சரடு, திராவிடர் கழகம் இடைநிலை ஜாதிகளின், நிலச்சுவான்தார்களின், லேவாதேவிக்காரர்களின், பெரும் பணக்காரர்களின் இயக்கமாகவும் அது இருந்தது” என்பது.

சுருக்கமாக தோழர் ஜீவா அவர்கள் பெரியாரோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை, கம்பராமாயணம் போன்ற புராண நூல்கள் மீதான எதிர்ப்பரப்புரைகள் ஆகிய அனைத்துக்கும் எதிராகச் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறியவுடன் செயல்பட்டார்.

எப்படி சீமான் பெரியார் இயக்கத்தோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, திராவிடர் அடையாளம், போன்ற கருத்துக்களை அமைப்பிலிருந்து விலகித் தனி இயக்கம் கண்ட பின்னர் நேர் எதிராகப் பேசினாரோ அவ்வாறே தான் தோழர் ஜீவா அவர்களும் பேசினார்; செயல்பட்டார்.

அதைக் குறிப்பிடவே ‘சீமானின் முன்னோடி’ ‘அன்றைய சீமான்’ என்ற சொற்களை நான் அதில் பயன்படுத்தியிருந்தேன். அச்சொற்றொடர்தான் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவிட்டு இருந்ததை எனக்கு தோழர்கள் அனுப்பி வைத்தனர் (எனக்குத் தனியாக முகநூல் கணக்கு இல்லாததால்).

அதில் வில்லன் சிரிப்பு, நிலப்பிரபுத்துவ ஆணவம், பண்ணையார்த்தனம், கழிசடை, அற்ப மானுடப் பதர், செக்கின் மேல் காலைத்தூக்கும் ஒன்று, பிரபாகரன் கடைசி நாளில் என்னை ஒதுக்கி வைத்தார், பெரியார் சிலைகளுக்கு முன்னர் திருமணங்கள் நடத்தி வைத்து பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தது போன்ற சொற்களோடு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.

ஒரு பயிலரங்கில் தன்னுடைய அமைப்பின் தோழர்கள் தங்கள் இயக்கத் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனம் குறித்து அறிந்து கொள்வதற்கு வினா எழுப்புவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதும் தவறான ஒன்றாகப் பார்க்கப்படுவது, அதுவும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் என்பதே அதிர்ச்சியான ஒன்றுதான்.

இந்திய சுதந்திரம் குறித்து ‘விடுதலை’யும் ‘ஜனசக்தி’யும் 1947 ஜூலையிலிருந்து 1949 வரை விவாதித்திருக்கின்றன. அதுபோலவே திராவிட நாடு, சுயநிர்ணய உரிமை, வடநாட்டுச் சுரண்டல், பார்ப்பனியம் ஆகியவை குறித்தும் 1952 ஆகஸ்ட் முதல் 1953 பிப்ரவரி வரை தொடர் விவாதம் நடந்திருக்கிறது.

அவ்வகை விவாதம் நடந்தால் அது பல செய்திகளை இருதரப்பாரும் புரிந்து கொள்ளவும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதே என் கருத்தாகும். தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல இது ஒரு வளர் முரணாக அமைந்து புதிய கருத்து நிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.

வரலாற்றை மீண்டும் நினைவு கூறுவதோ, சுட்டிக் காட்டுவதோ ஒருவரை இழிவாக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்து நாம் விலகி நின்று தொடர்ந்து விவாதிப்போம். தோழர் ஜீவா அவர்களின் “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைக்கப்பட்டுள்ள விமரிசனங்கள் குறித்து என்னுடைய கருத்துக்களை எங்கள் இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நான் முன்வைக்க இருக்கிறேன். அதுவரை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்வினை ஆற்றாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவுடமையாளர்களில் சிலர் நமக்கு எதிராகக் கூட இருக்கலாம்; ஆனால் பொதுவுடமை கொள்கை நமக்கு எதிரானது அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த இதழில் தொடங்குகிறது…

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
10.10.25.
பெரியார் முழக்கம் இதழ் 16102025

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற தலைப்பின் கீழ் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவும் இல்லை என்கிற உயரிய கருத்துக்கள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன” என்றும், பக்கம் 58-இல் “இந்து என்கிற சொல்லின் பொருள் என்ற தலைப்பில் சனாதன தர்மம் என்றால், அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்” என்றும், ஒரு உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால் அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாக கருதி அகற்ற முன்வருபவனே இந்து ஆவான் என்றும், அதே 58-ம் பக்கத்தில் “இந்து சமயம் என்கிற தலைப்பின் கீழ் இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும்” என்றும், பக்கம் 58 மற்றும் 59-ல் ஆன்மா, கர்மா, புனர்ஜென்மம் அதாவது மறுபிறப்பு, வீடுபேறு அதாவது மோட்சம் பற்றிய பல்வேறு இந்துமத கருத்துகளும் கூறப்பட்டுள்ளன. வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பற்றி பல்வேறு பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கம் 59-ல் இந்துதர்மம் என்கிற தலைப்பின்கீழ் சமூகம் பிராமணர், சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை சமூகத்திற்கான தொழில் கடமைகள் ஆகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 43 மற்றும் 44-ல் பிராமணர்கள் என்கிற தலைப்பின் கீழ் கல்வி கற்பது சமய சடங்குகள் செய்வது வெகுமதிகளை பெறுவது சமுதாயத்திற்கு நல்வழி உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும் என்றும், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்கிற தலைப்புகளின் கீழ் முறையே நாட்டை ஆள்வதும், வணிகம் செய்வதும் அவர்களது கடமை மற்றும் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சூத்திரர்கள் என்கிற தலைப்பின் கீழ் “முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளை செய்வது இவர்களது பணிகள் ஆகும்” என்று சூத்திரர்களை தாழ்ந்தவர்களாகவே குறிப்பிடுகிறது.

இந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள 264 பக்கங்களில் பெரும்பான்மை பக்கங்கள் இந்து மதத்தை, இந்துமத வேதங்களை, உபநிடதங்களை ராமாயணத்தை, மகாபாரதத்தை பேசுவதாக இருக்கிறது. ஆனால் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சமயங்களுக்கு பெயருக்காக வெறும் மூன்று நான்கு பக்கங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தேசிய கல்விக் கொள்கை 2020இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் கருத்துக்கள் என பல்வேறு வகையில் இந்த தமிழ்நாடு அரசின் கீழே இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம், தேசியக் கல்விக் கொள்கை 2020 உடன் ஒத்துப் போகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டு இருந்ததும் அதற்கு எதிராக நாடு முழுவதும் அவர் மீது நடத்தப்பட்ட கருத்தியல் தாக்குதலை சட்ட ரீதியாக எதிர்கொண்டதும் தங்களுடைய கொள்கைத் தெளிவையும் அதிலுள்ள உறுதிப்பாட்டையும் காட்டியதாகப் பார்க்கப்பட்டது.

ஒருபுறம் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்லிவிட்டு மறுபுறம் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கருத்துக்களை தமிழ்நாடு அரசு தன்னுடைய பாடப்புத்தகத்தில் வைத்திருப்பதற்கு “தமிழ்நாடு மாணவர் கழகம்” எங்களுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதற்கான உரிய விளக்கத்தை தருவதோடு அறியவியலுக்கு எதிரான, இந்து மதக் கருத்துகளை திணிக்கிற இப்படியான கருத்துக்களை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத பட்சத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
-பேரன்பு,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்.
பெரியார் முழக்கம் இதழ் 02102025

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம்.
1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர்.
தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன்.
திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன்.
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து அவர் வைத்த விமர்சனத்திற்காக, எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் கடுமையான பதிலடியைக் கொடுத்த துணிச்சல்காரர். கந்தசஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வலையொளியில் வெளியான காணொளிகளுக்காக, அதில் பணிபுரிந்த தோழர்கள் மீது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிந்து கைது செய்தபோது, அந்த கைதைக் கண்டித்து கந்த சஷ்டி கவசத்தில் என்ன உள்ளது என்று பேசி காணொளிகளை வெளியிட்டு எதிர்வினையாற்றியவர் வேலு பிரபாகரன். அதற்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையிலும் இருந்தார்.
தொலைக்காட்சி விவாதங்கள், வலையொளிகள் மூலமாக பெரியாரின் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்தவர். பெரியார் போலவே வேடமணிந்துகொண்டு, பெரியார் குரலிலேயே பேசி காணொலிகளை வெளியிட்டு வந்தார். பெரியாரியலுக்காக தனிமனிதராக ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தார் என்றால் மிகையல்ல. வேலு பிரபாகரன் மறைவு திரைப்படத்துறையினருக்கும், முற்போக்காளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் சீரிய பெரியாரியராக, தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!
*கொளத்தூர் மணி,*
*தலைவர்,*
*திராவிடர் விடுதலைக் கழகம்.*
18.07.25
பெரியார்முழக்கம்இதழ்24072025

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது.

நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது செயல்படுவது சட்ட விதிமீறலாகும்.மனித நேயமே இல்லாமல் இன்று வேலை நடந்தால் போதும் என்கின்ற நிலையில் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வகுப்பினராக இருப்பதால் அதிகாரிகளும், தூய்மை பணியினை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவன ஊழியர்களும் ஜாதியப் பார்வையோடு கையாள்வது தெரிகிறது.

டிஜிட்டல் உலகமாக மாறிவரும் நிலையில் / கம்யூட்டர் யுகமாக மாறிய நிலையில் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பதற்கு ஒரு கருவியை வாங்க முடியவில்லை தூய்மைத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் நிறுவனங்கள் இந்த மனித அவலத்தை பற்றி கண்டு கொள்வதில்லை.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணியத்த கூலியை விட மிக குறைந்த கூலியை கொடுப்பதும், தூய்மைத் தொழிலாளர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் செலுத்தாமல் தொகையை நிலுவை வைத்தும் தூய்மைத் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் இந்த நிறுவனங்களை கண்டுகொள்ளாத உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இது போன்ற பாதாள சாக்கடை விசவாயு சாவுகள் தொடருகின்றன.

இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக திகழும் தமிழ்நாடு மலக்குழி மரணம் விசயத்தில் இந்தியாவில் 2-வது இடம் வகிப்பது. தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானமாகும்.

திருச்செந்தூர் தூய்மைப் பணியாளர் சாவுக்கு காரணமான நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த சுடலை மணியின் சாவிற்கு நீதி வேண்டும், சுடலை மணி குடும்பதிற்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் 19062025இதழ்

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்”

ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின் அரசாணையை மேற்கோளாகக் காட்டி “பதிவாளர் தேர்வினை நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரியில் அரசுக்கு கடிதம் எழுதியதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.பேராசிரியர் வைத்தியநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியோ செய்தியோ கொடுக்காத நிலையில் அரசுக்குக் கடிதம் அனுப்பியதை வைத்து எப்படி பணியிடை நீக்கம் செய்ய முடியும்? துணை வேந்தரின் அனைத்து ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்த ஒரே காரணத்தை வைத்து பணி இடை நீக்கம் செய்ததை ஏற்க முடியாது. உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வைத்தியநாதன். மேலும் ஊழலுக்கு எதிராக சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் விசாரணையிலும் இவர் ஒரு சாட்சியாக இருந்துள்ளார். உயர்நீதி மன்ற நீதியரசர் வேல்முருகன் தனது உத்திரவில் ஜெகன்னாதன் சாட்சிகளைக் கலைக்கவோ மிரட்டவோ கூடாது என்ற உத்திரவிற்கு எதிராக துணை வேந்தர் சாட்சிகளை மிரட்டி உள்ளார்.

தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு மே19ஆம் நாள் பணி நிறைவு ஆக உள்ள துணை வேந்தரின் ஆணையின் அடிப்படையில் -செய்யப்பட்டுள்ள பேரா.வைத்தியநாதன் அவர்களின் இடை நீக்கத்தை -உடனடியாக ரத்து செய்ய வேண்டுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

– கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,

பெரியார்முழக்கம்22052025இதழ்

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம்.

மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார் என்பதும் கூடுதல் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஏனெனில் உயர்கல்வியில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்ற ஆணவத்தோடு ஆளுநர், துணைவேந்தர்களாக இந்துத்துவாதிகளை நியமிப்பதும், அவர்கள் வழியாக தேவையற்ற இந்துத்துவ செயல்பாடுகளை நிறைவேற்றுவதும், தனியாக துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகிற நூல்கள் கூட முன் அனுமதி பெறாததைக் காரணமாகக் காட்டி நடவடிக்கை எடுப்பதுமான திமிர் நடவடிக்கைகளில் துணைவேந்தர்கள், குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபடுவதற்குப் பெரும் உந்துதலாகவும் ஆளுநர் இருந்திருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விதி மீறல்களுக்காகவும், ஊழல் நடவடிக்கைகளுக்காகவும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான மேல் நடவடிக்கை இல்லாமலும், அவரது காலக்கெடு முடிந்த பின்னாலும் அதை நீட்டிப்பதும் என்றவாறு ஒரு இந்துத்துவவாதியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் ஆன பல நடவடிக்கைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடந்து கொண்டே இருந்தன.

ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக இருந்து வரும் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர்மீது, பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டுமாறு கோருகிறோம்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை தமிழ்நாடு அரசு நியமித்த பழனிச்சாமி இ.ஆ.ப தலைமையிலான விசாரணைக் குழு உறுதி செய்து அரசிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையினை அரசு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இன்று வரை ஆளுநர் அதன்மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கவில்லை.

200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நூலகர், உடற்கல்வி இயக்குநர் பணி நியமனங்கள் நடைபெற்றன.

தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி போலிச் சான்றிதழ் விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் ஆட்சிக் குழுவில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காமல் துணை வேந்தர் ஒரு தனித் தீர்மானத்தை கொண்டு வந்து பெரியசாமி மீதான விவகாரம் மீது எவ்வித நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அது இன்னமும் கிடப்பில் உள்ளது.

200 புள்ளி இட ஒதுக்கீட்டில் பட்டியலின அருந்ததியினருக்கு கிடைக்க
வேண்டிய தமிழ்த் துறை பேராசிரியர் பதவி பட்டியலினத்திற்கு கிடைக்கவில்லை; மாறாக பொதுப் போட்டிக்கு சென்றது.

அதேபோல் மேலாண்மைத் துறை இணைப்பேராசிரியர் யோகானந்தன், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சுந்திரமூர்த்தி, நூலக அறிவியல் பேராசிரியர் முருகன் ஆகியோர் அருந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டினை அவர்களுக்கு கிடைக்காமல் பொதுப் போட்டி மூலம் நிரப்பப் பட்டு ஆதாயம் பெற்றுள்ளனர். இது முற்றிலும் இட ஒதுக்கீட்டிற்கு முரணானது. இதன் மீது வேந்தராக ஆகி உள்ள முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் பெரியார் பல்கலைக் கழக வேந்தராக ஆகி உள்ள தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது.
– “கொளத்தூர் மணி,” தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
08.04.25 பெரியார் முழக்கம் 10042025இதழ்

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம்.

சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கான அடிப்படை சிவில் உரிமைகளைப் பறித்து வைத்திருக்கின்றன. தீண்டாமையை பல வடிவங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். ரேசன் கடை நடத்துதல், முடி திருத்தும் கடை நடத்துதல், உணவகங்கள் நடத்துதல், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தல் போன்ற அன்றாட வாழ்வு முறையில் திணிக்கும் இந்த தீண்டாமைக் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கண்டும் காணாத போக்கு நீடிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் மாநில உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளைக் கடந்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாநாடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

அதேபோல் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்களைக் கழகத் தோழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒத்த கருத்துள்ள இயக்கத் தோழர்களையும் அழைத்துப் பேச வைக்கலாம்.

கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை‌ இராசேந்திரன், பொதுச்செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்.

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர்.

இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க வேண்டியது நம் வெவ்வெருவரின் இலட்சியக் கடமை என்ற உணர்வோடு மயிலாடுதுறை மாநாட்டிற்குப் பெரும் திரளாக திரண்டு வருமாறு தோழர்களையும், உணர்வாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம். மயிலாடுதுறை கருஞ்சட்டைக் கடலாகட்டும்! திரளுங்கள் தோழர்களே!

கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர்.
திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 20032025இதழ்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை:

“மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”
பெரியார் முழக்கம் 13032025இதழ்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!”

இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது.
முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம். இந்த முனைவர் பட்ட சேர்க்கைத் தகுதி என்பது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாகும்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்காத நிலையில் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மட்டும் ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக செயல்படுத்த முயல்வதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசு, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திணிப்பை எதிர்க்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் விடுத்துள்ள இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டு உயர் கல்வியில் படிக்கும் மாணவர்கள் 10+2+3+2 பதினேழு ஆண்டுகளில் தான் முனைவர் பட்டத்தில் சேரமுடியும். ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் படிக்கும் மாணவர்கள் 10+2+4 = 16ஆண்டுகளில் முனைவர் பட்டத்தில் சேரலாம். இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள். மேலும் 2 ஆண்டு முதுநிலையில் ஒரு குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்துத் தேர்வு ஆவதால் நமது மாணவர்களின் கல்வித் தரமானது புதிய கல்விக் கொள்கையின் கீழ் படித்த மாணவர்களின் கல்வித் தரத்தை விட கூடுதலாக இருக்கும்.

அவ்வாறான தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர், பதிவாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
03.02.25
பெரியார் முழக்கம் 07022025 இதழ்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்!

இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:-

பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது.

ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல், கல்வியியல் பண்பாட்டியல் போன்ற தலைப்புகளில் அந்த ஒளிபரப்பு அல்லது செய்தி ஏடுகளுக்கு எழுதுகிற கட்டுரைகள் இருக்குமாயின் அதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றும்  உட்பிரிவு (2) கூறுகிறது.

ஆனால், ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப்பேராசிரியரும் பெரியார் அண்ணா கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறுப்பாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற முனைவர் இரா. சுப்பிரமணி அவர்கள் எழுதியிருந்த பெரியாரின் போர்க்களங்கள்,   மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன் என்ற நூல்கள் குறித்து விளக்கங்கள்  கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் பெறப்பட்டு நிலுவையில் இருக்கிற இந்த சூழலில் மீண்டும் அவரை குறி வைத்து இதை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக நாம் கருதுகிறோம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை என்று ஒன்று கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்திருந்தும் அதன் வழியாக இதுவரை  பெரியார் குறித்த 60 பக்க நூல் ஒன்று வெளியிட்டதைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வு மையத்தின் தலைவர் இதழியல் துறையின் பார்வையிலான பெரியார் குறித்த ஒரு நூலை எழுதுவதும், நவீன கல்விக்கு முன்னோடியாக கருதப்படுகிற மெக்காலே குறித்து அதாவது கல்வியியல் குறித்து எழுதியதும்  தவறானது என்பதைப் போல ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சுட்டிக் காட்டப்படும் பல்கலைக்கழக விதிகள், வானொலி தொலைக்காட்சி விவாதங்கள்,  செய்தி வார ஏடுகளில்  எழுவது குறித்து உள்ள விதிகளைச் சுட்டிக்காட்டி துறை சார்ந்த நூல்கள் கல்வியியல் சார்ந்த, பண்பாட்டு புரட்சி சார்ந்த விதிவிலக்கு அளித்திருக்கும் துறைகளில் எழுதுவதற்கும் விளக்கம் கேட்பதும், அவர் மீதான நடவடிக்கை எடுக்கத் துடிப்பதும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற மதவாத சிந்தனை போக்குக்கு எதிரானவை என்ற கருத்தில் இருப்பதால்தான் என்றுதான் யூகிக்க முடிகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற இந்துத்துவ மதவாத சிந்தனை போக்குக்கு எதிரான கருத்துகள் கொண்டவற்றை எழுதுவதை குற்றமாக்கத் துடிக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச போக்குதான் வெளிப்படுகிறது.

மேலும் புத்தூடகங்கள் பல்வேறு பரிமாணங்களை எட்டி செல்லிடப்பேசி வழியாகவும்,செயலிகள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் கற்றல்- கற்பித்தல் நிகழ்ந்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என்பது என்ன வகையான சிந்தனை வளர்ச்சி எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்கள் என்பவை சுதந்திரமான சிந்தனைகளையும், பன்முகத் திறன்களை மாணவர்களிடையேயும், பொது தளத்திலும் உருவாக்கும் அறிவின் மையமாகும். அங்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி பெற வேண்டும் என விதிகள் இருப்பதாகக் கூறுவது கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

எழுதுவதும், உரையாடுவதும் தான் ஆசிரியப் பணிக்கான அடிப்படை கடமைகளாகும். அதனைத் தடுக்க முனைவது ஆபத்தான போக்காகும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு கடந்த 5.2.2024 அன்று வெளியிட்டிருக்கிற அந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,

தலைவர்,

திராவிடர் விடுதலைக் கழகம்.

08.02.2024.

பெரியார் முழக்கம் 15.02.2024

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது.  2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில் பல ஆய்வு நூல்களை  வெளியிடுவது வழக்கமானது தான். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பெரியார் துறை தலைவராக இருந்த எஸ்.வி.ஆர் பேராசிரியர் சக்குபாய் பெரியார் குறித்த ஆய்வரங்குகளை நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். எம்.அய்.டி பேராசிரியர்களான எம்.எஸ்.எஸ் பாண்டியன், முனைவர் வெங்கடாசலபதி  முறையே பெரியார், பாரதி, வ.உ.சி குறித்து ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் பல்கலை துணைவேந்தரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்பிரமணி உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறுகிறார். பெரியார், மெக்காலே குறித்த ஆய்வுகள், இதழியல் சார்ந்தவை, இதழியல் சார்ந்த வெளியீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை  என்று பல்கலை விதிகள் தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை எதிரிகளாக ஆபத்தான 5 பேரில் மெட்டீரியலிஸ்ட் (பொருள்முதல்வாதம், கடவுளை மறுப்போர்) மெக்காலே ஆகியோரும் அடங்குவர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் துணைவேந்தர், முறைகேடாக பல்கலை விதிகளுக்கு நேர்முரணாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலையில் பெரியார் இருக்கையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் பெரியார் பற்றிய வரலாற்றை இதழியல் கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு தடை போடுவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கூறினார்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.

2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம்.

இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள் எடுக்கப்படுவதும் வைக்கப்படுவதுமான செயல்பாடுகள் நடக்கின்றன என்றாலே சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார் என்று தான்பொருள். அவ்வாறாயின் புதிய நிபந்தனைகளையாவது அறிவித்தாக வேண்டும் அல்லது உரிய காப்பு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அதோடு பல்கலைக்கழகத்தில் எதுவும் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்து தான் தீர வேண்டும்.

நாம் ஏற்கனவே பலமுறை துணைவேந்தர் மீது விசாரணை நடத்துகிற போது ஒரு பொறுப்புள்ள அய்.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து அவர் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்குவற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்; அப்போதுதான் அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை நிரூபிக்க முடியும் என்ற காரணத்தால் இந்த வேண்டுகோளை கைதுக்கு முன்னதாகவே பல வேளைகளில் நாம் வைத்திருக்கிறோம்.

இப்போது உள்ள நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வேண்டுகிறோம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் இல்லாமல் இருக்கிற நிலையும் அவர்களுடைய முறைகேடுகளை சரியாக விசாரிப்பதற்கு ஏதுவாகவும் பல்கலைக்கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பில் இயங்கச் செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசையும் உயர் கல்வித் துறையையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறோம்.

கொளத்தூர் மணி,

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

02.01.2024

பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பணி நியமனம் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றாமை, விதிகளை மீறி பாரபட்சமாய் நடந்து கொள்ளுதல்,உரிமை கேட்போரை இடைநீக்கம், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் பல ஆர்ப்பாட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு முன் கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறது.

மேலும்  பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கி அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் பல்வேறு முறையீட்டு மனுக்களையும் அனுப்பி இருக்கிறது.

1)           அண்மையில் நடந்த உடற்கல்வி இயக்குனர், நூலகர் போன்ற பணி நியமனங்களில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் நியமனம் செய்தது.

2)           போலியான கல்விச் சான்றிதழ்கள் என தெரிந்தும் போலி சான்றிதழ் அளித்தவர் களையே பணியில் அமர்த்தியது.

3)           துறைத்தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்காதது.

4)           துணைவேந்தர் முன்னரே முடிவு செய்தவர்களை பணி நியமனம் செய்தது

5)           இந்துத்துவ ஆதரவு பரப்புரைகளில், செயல் பாடுகளில் ஈடுபடுவதை துணைவேந்தரே ஊக்குவிப்பது,தாமே ஈடுபடுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

இப்போது அவற்றை விசாரித்து நட வடிக்கை எடுப்பதற்காக உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர்,இணைச் செயலாளர் ஆகியோரை  உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமித்திருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இந்த விசாரணைக் குழு முன்னர் எழுப்பப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிமைக்கு குரல் கொடுத்த ஆசிரியர் சங்கப் பொறுப் பாளரை – பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ததையும் விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

மேலும் விசாரணை முடிந்ததும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

ஆணையத்தின் இந்த விசாரணையும் அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளும் ஆளுநரின் ஆதரவு இருக்கிறது என்ற ஆணவத்தோடு நடந்து கொள்ளும் துணை வேந்தரின் போக்குக்கும், பெரியார் பல்கலைக் கழக முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நம்புகிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பெரியார் முழக்கம் 19012023 இதழ்


பெரியார்_சிலை_அவமதிப்பு,
#கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து
கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி :

“தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் படித்துக் காண்பித்துள்ளார்
ஒரு மாணவனிடம் பாடப்புத்தகத்தைக் கொடுத்து அதைப் படித்தால் அதைக் குற்றம் என்று சொல்வது எப்படி தவறானதோ,
அதுபோலத்தான் இதுவும்.

நான் கேட்கிறேன் இவர்கள் தமிழ்க் கடவுள் முருகனை ஸ்கந்தனாக்கி கந்தனிடம் வேண்டுவது போல ஆண்பெண் குறிகளை குறிப்பிட்டு அதனை காக்கவேண்டும்.வட்டக் குதத்தை வடிவேல் காக்க வேண்டும் என்றெல்லாம் மிக இழிவான வார்த்தைகளைச் சொல்லி கடவுளிடம் வேண்டுவதாக பாடல் எழுதி உள்ளார்கள். அதை அவர்கள் மறுக்க முடியுமா? அல்லது அப்போது நாகரிகம் வளராத காலத்தில் இருந்தவர்கள் தவறாக எழுதி விட்டார்கள். நாங்கள் இப்போது இருப்பவர்கள் அந்த ஆபாச வார்த்தையை மறுக்கிறோம் என்றாவது சொல்வார்களா?

பார்ப்பனர்கள் முருகனை கந்தன் ஆக்கினார்கள்.அவர்களில் யாராவது முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா? ஏன் வைப்பதில்லை? முருகன் தமிழர் கடவுள் என்பதால்தானே? ஆனால் கந்தர் பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார்களே! அது அவர்கள் என்பதால்தானே? இப்போதும் புராணங்களில் உள்ள ஆபாசத்தை நீக்காமல் இந்து என்கிற பெயரில் திணித்து வருகிறார்களே ?
பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் வேசி மக்கள் என்று இழிவுபடுத்தி வருகிறார்களே? அது சரியா?
நான் கேட்கிறேன் வால்மீகி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பில் ராமன் பிறப்பு பற்றியும் அஸ்வமேத, புத்திரகாமேஷ்டி யாகம் குறித்தும் உள்ளதை பொதுமக்கள் முன்பு இவர்களால் படித்து காட்ட முடியுமா ?
அதேபோல லிங்க புராணத்தையும் இவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காட்டி அதை புனிதம் என்று சொல்ல முடியுமா?
இந்து என்று சொல்லி அனைத்து இழிவுகளையும் இந்துக்கள் தலையில் சுமத்துவதால் புரிந்தவர்களுக்குக் கோபம் வருகிறது. இது நியாயமான கோபமே ஆகும்.

தமிழக அரசும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கான அரசாக உள்ளதா அல்லது பார்ப்பன இந்துத்துவ அரசியலுக்கான அரசாக இது செயல்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.”

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும்.

ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி; ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்; ஆகஸ்டு 13- நாகை – கடலூர்; ஆகஸ்டு 14 – விழுப்புரம்- திருவண்ணாமலை; ஆகஸ்டு 18 -புதுக்கோட்டை – சிவகங்கை; ஆகஸ்டு 19 – மதுரை – தேனி; ஆகஸ்டு 20 – விருதுநகர்- தூத்துக்குடி; ஆகஸ்டு 21 – திருநெல்வேலி – கன்னியாகுமரி; ஆகஸ்டு 29 – தருமபுரி- கிருட்டிணகிரி; ஆகஸ்டு 30 – வேலூர் – காஞ்சிபுரம்; ஆகஸ்டு 31 – சென்னை.

பெரியார் முழக்கம் 23072015 இதழ்