பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை
இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும் விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...