ஜாதிமுறை

 

 

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே!

“குடி அரசு” தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்றும் சொல்லப்பட்டதோடு அந்த சாதிகள்தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் þ சாதிக்கிரமத்தை அதாவது ஆதி சாதி என்பவைகளான, பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டும் தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக்கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக்கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக்கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக்கொண்டு அப்படிப்பட்டவர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டுசெய்ய – அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள்தான் “பள்ளு பறை பதினெட்டு சாதிகள்” என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். (இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப்படி பார்த்தாலும் சரி, தென் மொழிப்படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4-வது சாதி என்பதை ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதிலிருந்து அறியக்கிடக்கின்றது.)

அந்தப்படி கூறப்படும் பள்ளு பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் “பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார்” என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல் தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)

ஆனால் இதே பதினெண் மக்களை அபிதானகோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் “ஏவலாள்களாக சிவிகையர் (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்,) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியார், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் “கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும் உப்பமைப்பவர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இவை ஒருபுறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளை காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் “சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினர், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள், இவர்கள் சோழபுரத்தார், சித்தக்காட்டார், பஞ்சுக்காரர் முதலிய பலதிறப்பட்டவர்கள். இதற்கடுத்த படியிலுள்ளோர் கார்காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர், இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தபடியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பல வகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாம்ச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம்படியர், அவரிற் றாழ்ந்தோர் மறவர், அவரிற் றாழ்ந்தோர் கள்ளர், அவறிற்றாழ்ந்தோர் இடையர், இவர்கட்கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள் கம்மவர்கள் என இந்தப்படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும் தாழ்வுக்கிரமமும் சந்தேகமோ, ஆக்ஷேபணையோ சொல்லுவதற்குச் சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தால் ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர்களிலும், வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆக்ஷேபணைகளும் க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியக்ஷமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப்பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக்கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டவர்கள் தான் என்பதை நிலைநிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டு பிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.

எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள் அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும், அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது “விபசாரம்” “கீழ் மேல் ஜாதிக் கலப்பு” என்று சொல்லும்படியான “இழி தன்மை”யில் பிறந்தவர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவமாயிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாதென்று உறுதி கூறுவோம்.

மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக்கொள்ளக் கூடுமே தவிர ஜாதிக்கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆக்ஷேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல் பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய்ச் சொல்லுவோம்.

இவை ஒருபுறமிருக்க இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும், உரிமைகளையும், பார்ப்போமானால் கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதிப்பேரை சொல்லிக்கொள்ள முடியாதபடியும், அதைத் கனவிலும் நினைக்க முடியாதபடியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது நாலாவது ஜாதியார்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்கு பார்ப்பனர்கள் ஏற்படுத்தியிருக்கும் உரிமையானது எப்படியிருக்கின்றது என்று பார்த்தால் இப்போது “பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்” (அதாவது கிரிமினல் ட்ரைப்ஸ்) என்று சொல்லக்கூடியவர்களுக்கு சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்ப்பந்தத்திற்கும், சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிதுகூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரியாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரணமாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.

அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.

“ஸ்நாதமஸ்வம், கஜமத்தம், ரிஷபம் காமமோ ஹிதம்.

சூத்தரமக்ஷர சம்யுக்தம், தூரதப் பரிவர்ஜ்ஜையேல்.”

அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் – மதம் கொண்ட யானையையும் – காம விகாரம் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக்கூடாது என்பது கருத்தாகும்.

“ஜப, ஸ்தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ்ஜய, மந்தர சாதனம்,

தேவதாராதனம் சசய்வ ஸ்திரீ சூத்திர பததானிஷள்”.

அதாவது ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும், சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக்கூடாது என்பது கருத்தாகும்.

“நபடேல் சமஸ்கிருதம் வாணீம்.”

(சூத்திரன்) சம்ஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.

“நைவ சாஸ்திரம்படே நைவ கருணுயாத் வைதிகரக்ஷரம்

நஸ்நாயாது தயால் பூர்வம் தபோமந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்”

(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூர்ய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.

“இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி”

இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.

“சாதுர்வர்னியம் மயாசிருஷ்டம் பரிசரியாத்மகம்

கர்மம் சூத்ரஸ்ஸியாயி பாவனாம்”.

(கீதா ஸ்லோகம்)

நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்கு பிராம்மண சிசுருஷை தான் தர்மம் என்பது கருத்து.

இதுபோல் ஆயிரக்கணக்காக எழுதிக்கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்படவேண்டியவை என்று வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டியதல்லாத ஒரு ஆò இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி அவற்றை நிலை நிறுத்திக்கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

எதோ “பொல்லாத விதிவசத்தினால்” இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் தோழர் காந்தியாரும் வருணாச்சிரமத்தைக் கோரும் “தேசீய” தலைவர்களும் கேட்கும் சுயராஜ்யம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக்கூடும் என்பதையும் சற்று யோசித்துப்பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப்பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒருக்காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

இன்றைய தினம் தேசியவாதிகளாயிருக்கின்றவர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசையுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள்ளைக்கார ஆòயிருக்கும்போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும்படியான ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியது தான் அறிவுள்ள வேலையாகும். அதை விட்டுவிட்டு முதலில் “நீ போய்விடு நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம்” என்று சொன்னால் அது “தான் சாவதற்கு தானே மருந்து குடித்தது” போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொருவரும் “மேல் ஜாதி” ஆகவேண்டுமென்று ஆசைப்படுவதும் தனக்கு கீழ் பல ஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் இருக்கும் பல செளகரியங்களை ஒழித்து விட்டு வருணாச்சிரம கொள்கையும் ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆòயும், பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதிக்கொடுமைகளும் அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும் என்பதை யோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.

இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒருநாளும் அன்னியர் ஆòக்கோ, அடிமைத்தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது. நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதையெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்படடு பின் அயலானை வெளியில் போகச்சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றைய தினம் உள்ள இழிவையும், கொடுமையையும், அடிமைத்தனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதிவைப்போம்.

பகுத்தறிவு (மா.இ.) – கட்டுரை – சனவரி 1937

You may also like...