தற்கால  அரசியல்  நிலைமை

 

தொழிலாள  சோதரர்களின்  ÷க்ஷமத்திற்கு  இவ்வூரில்  மாதம்  ஒரு முறை  பூர்ண  ஓய்வு  ஏற்படுத்தி  இருப்பது  போற்றத்தக்கதாகும்.  இவ்விழாவைக்  கண்டு  நான்  பெரிதும்  சந்தோஷம்  கொண்டேன்.  அவர்களுடைய  நாளில்  அவர்களைப்  பற்றியே  பேச  நான்  விரும்பி  வந்தேன்.  ஆனால்  இங்கு  வந்த  பின்னர்  விருதுநகர்  வாசிகள்  “தற்கால  அரசியல்  நிலைமை’  ஜஸ்டிஸ்  கட்சி  ஆகியவைகளைப்  பற்றியும்  எடுத்துக்  கூறும்படி  கேட்பதால்  அதைக்கூற  வேண்டியவனாய்  இருக்கிறேன்.  இந்த  சமயத்தில்  இவைகள்  எவ்வளவு  முக்கியமானவைகளாக  இருக்கின்றதோ,  அவ்வளவு  குழப்பமான  விஷயங்களாகவும்  இருக்கின்றன.

“அரசியல்  என்பது  மக்களை  ஏமாற்றும்  இழிவான  சூட்சி’

அரசியலின்  பெயரால்  இன்று  உலகில்  எங்கும்  திருட்டு,  புரட்டு,  கொள்ளை,  கொலை,  பாமர  மக்களை  ஏமாற்றுதல்  முதலாகிய  இழிகாரியங்கள்  எல்லாம்  நடக்கின்றன.  கலகங்கள்  கூட  சிலவிடங்களில்  நடக்கின்றன.  எப்படி  என்றால்  அரசியல்  சம்பந்தமான  பிரசார  கூட்டங்களில்  கலகம்  ஏற்பட்டு  விடுகின்றது.  மதத்தின்  பெயரால்  þ  திருட்டு,  புரட்டு  சகலமும்  நடந்த  காலத்தில்  மக்கள்  குருட்டு  நம்பிக்கையிலிருந்தார்கள்.  மக்களுக்கு  பகுத்தறிவு  ஏற்பட்டு  சரி  தப்பு  என  அறியும்  யோக்கியதை  வந்தபிறகு  சோம்பேரி  சுயநலக்  கூட்டத்தார்களால்  மக்களை  ஏமாற்ற  வேறுவித  தந்திரம்  பண்ணவேண்டுமென்ற  நோக்கத்துடன்  செய்யப்பட்டு  அரசியலின்  பெயரால்  மக்கள்  ஏமாற்றப்பட்டு  வருகின்றார்கள்.  ஒருவன்  மதபக்தியின்  யோக்கியதையை  விளக்கினால்  எப்படி  மதத்துரோகி  என  அழைக்கப்பட்டானோ  அது  போலவே  இன்று  தேசபக்தியின்  யோக்கியதையை  விளக்கினால்  தேசத்  துரோகி  என  நாமம்  சூட்டப்  பெறுகின்றான்.  ஜாதி,  மதம்  என்று  முன்தெரியாத  காலத்தில்  ஏமாற்றிய  கூட்டம்  இன்று  அதை  விட்டு  விட்டு  தேசம்,  சுயராஜ்யம்  என்று  ஏமாற்றுகிறார்கள்.  இன்றைய  அரசியலில்  விளம்பரத்திற்கு  அளவில்லை.  அதைப்பற்றி  ஜனங்களுக்குச்  செய்யப்படும்  மோசப்  பிரசாரத்திற்கும்  குறைவில்லை.  இந்நாடு  அரசியல்  என்னும்  வார்த்தையின்  கீழ்  சுயராஜ்ய  வேலை  என்பது  செய்ய  தகுதியுடையதா?  என்பதைக்  கவனிக்க  வேண்டும்.  வெளிதேசக்காரர்  எப்படி  நடுநிலைமையா யிருந்து  கவனிப்பாரோ  அவ்வாறு  கவனித்தால்தான்  உண்மை  விளங்கும்.  இங்குள்ள  பிரிவுகளைப்  பாருங்கள்.  இதை  மறந்துவிட  முடியாது.  மதப்பிரிவின்  தன்மை  எப்படி  இருக்கின்றது?  காந்தியார்கூட  “நான்  ஹிந்து  மதத்திற்காகத்தான்  உயிர்  வாழ்கின்றேன்’  எனக்கூறி  உள்ளார்.  முஸ்லீம்  வீரர்கள்  அலி  சகோதரர்கள்  பேசுகையில்  தாங்கள்  முதலில்  முஸ்லீம்  என்றும்  இரண்டாவது  தான்  இந்தியன்  என்றும்  பேசுகிறார்கள்.  கிறிஸ்தவன்  தங்கள்  தங்கள்  வேத  கட்டளை  தான்  பிரதானமென்றும்,  முதலில்  கிறிஸ்துவன்  என்றும்,  இரண்டாவதுதான்  இந்தியன்  என்றும்  பட்டவர்த்தனமாகப்  பேசுகிறார்கள்.

இது போலவே  நமது  தேசீயப்  பார்ப்பனர்களும்  தாங்கள்  முதலில்  வருணாச்சிரமப்  பிராமணர்கள்  பிறகுதான்  இந்தியர்  என்கிறார்கள்  இந்தியன்  எனும்  ஒரு  தலைப்பின்  கீழ்  யாவரும்  வருவதற்குள்  தங்கள்  தங்கள்  மதத்திற்கு  பந்தோபஸ்து  செய்யப்பார்க்கின்றார்கள்.  காந்தியார்  முதல்  அதையே  தான்  சுயராஜ்யம்  என்கின்றார்கள்.  நான்  இவ்விடத்தில்  மிகைப்படுத்தி  கூறுவதாக  எண்ணக்கூடாது.  இந்தியர்  தலைவிதியை  நிர்ணயிக்கக்கூடிய  லண்டன்  மகாநாடுகளில்  என்ன  தாண்டவமாடிற்று?  மத  விஷயங்களேதான்.

ஒருக்கால்  இந்தியர்கள்  இப்படி  சண்டை போடட்டுமென அப்படிப்பட்டவர்களை  சர்க்கார் அழைத்ததாய்க்  கூறலாம்.  ஆனால்  மத சம்பந்தமுடையவர்களைக் கூப்பிடாவிட்டால் நாஸ்திகர்களையா  கூப்பிடுவது?  பிறகு  அது புகார்  செய்யப்படுமல்லவா?  முஸ்லீம்  லீக்    ஏற்படுத்தப்பட்டு உழைத்துவருகின்றது. கிறிஸ்தவர்கள்  தாங்கள் சொற்ப  தொகையினர்  என்று  கூறி  தங்கள்  விகிதாச்சாரம்  பற்றி பேசுகின்றார்கள்.  பார்ப்பனர்கள்  வருணாச்சிரமம்; வருணாச்சிரம  சுயராஜ்ய    சங்கம்,  இந்து  மகாசபை  முதலியவை  ஏற்படுத்தி  வேலை  செய்துவருகிறார்கள்.  வகுப்பு  சம்பந்தமாய்  வந்த தீர்ப்பு  விஷயமாய்  நடைபெறும்  விஷயம்  யாவரும்  அறிந்ததே.  மாளாவியாஜியும்  அது காரணமாகவே  விலகிக் கொண்டார்.

பிராமணரல்லாதார்  இயக்கம்

ஹிந்துக்களில்  தென்னாட்டில்  சென்ற  18  வருட காலமாய் பிராமணர்  பிராமணரல்லதார்  விவகாரம்  நடந்து  வருகின்றது. அரசியல் கிளர்ச்சி  சம்பந்தமாய்  நம் மக்களுக்கு  பெருத்த   பதவிகள்,  பட்டங்கள், (ராஜா,  பரம்பரை  ராஜா  பட்டங்கள்)  கிடைக்கும்  படியான நிலைமை  ஏற்பட்டிருக்கின்றது.  ஆனால் ஏழை  மக்கள்  கஞ்சிக்குத் திண்டாடுகிறார்கள்.  தொடக்  கூடாத கிட்ட  வரக்கூடாத  பறையர்கள், சூத்திரர்கள்  இன்னும் இருந்துதான்  வருகிறார்கள்.  அவர்களின்  பிரதிநிதியாய்  சென்று இருப்பவருக்கு  மாதம்  5000, 6000  சம்பளம் கிடைக்கின்றது. வருணாச்சிரமமும் ஜெயித்து  விட்டது. “நாட்டிற்கு  நல்ல  துரை  வந்தாலும்  தோட்டிக்கு புல் சுமக்கும் தொழில்  போகாது’  என்னும் பழைய  காலப்  பாட்டி  மொழிபோல்  தோட்டிக்கு  இன்றும் இன்னும் வரப்போகும்  (ராமராஜ்ய)  சுயராஜீயத்தாலும்  புல்  சுமக்கும்  வேலையும்,  கக்கூசு  அள்ளும் வேலையும்  தான் இருக்கப்  போகின்றது.  தோட்டிக்கும்,  பார்ப்பானுக்கும்  எவ்வித மாறுதலும்  ஏற்படவில்லை, ஏற்படப்   போவதுமில்லை.  நம் பணத்தை  வெளி நாட்டிற்குப் போகாமல்  தடுத்து  உள்நாட்டில்  விட்டு வைத்தால்,  உள்நாட்டு  முதலாளிகளும்,  வக்கீல்களும்,  டாக்டர்களும்,  வியாபாரிகளும்,  புரோகிதர்களும்  சுகமடையலாம்.  பகல்  முழுவதும்  உழைத்தும்,  பலராலும்,  இழிவுபடுகின்ற  கஷ்டமடைகின்ற  அவனுக்கு  விடுதலை  உண்டாகும்படியான  திட்டம்  அதில்  என்ன  என்று பாருங்கள்.

சுயராஜ்யம்  என்றால்  என்ன?

சுயாட்சி  என்பதற்கு  அடிமைத் தனத்தை  நீக்கி,  நாட்டை  நாமே ஆள்வது  என  பொருள் வைத்துக் கொள்வோம். அயல்  நாட்டார்  போய்விடுகின்றார்கள்.  பின்னர் யார்  கையில் நாடு இருக்கும்? நம்நாட்டு  முதலாளிகள்,  ஜமீன்தார்கள்,  டாக்டர்கள்,  வக்கீல்கள்,  புரோகிதர்கள்  ஆகியவர்களிடமேதான்  இருக்கும். அதனால்  ஏழைகளுக்கு  லாபமென்ன?

அவ்வாறு  அயலானிடம் ராஜ்யமில்லாமல்  தன்கையில்   ராஜ்யத்தை  வைத்திருக்கும்  இங்கிலாந்து   தேசத்தை  எடுத்துக்  கொள்வோம். அங்கு  4லீ  கோடி  மக்கள்  இருக்கின்றார்கள்.  ஒருவரும்  அங்கு போய்  சுரண்டவில்லை.  அவர்கள்தான்   வெளி இடங்களிலிருந்து  சுரண்டி போய்  கொட்டுகின்றார்கள்.  அவர்கள்  பணம் வெளியே  போவதில்லை. அந்த  தேச  ராஜாவே,  பார்லிமெண்டு  மெம்பர்களே ஆளுகிறார்கள்.  அப்படி இருந்தும்  அங்கு கஷ்டமடைகின்றவனுக்கு  சுபிட்சம்  ஏற்படவில்லை.  70 லக்ஷ  மக்கள்  உடல் வலி  இருந்தும்  வேலையற்று உணவில்லாது  திண்டாடுகின்றார்கள்.  அதை ராஜா  ஆள்கின்றார் எனக்  கூறலாம். முடி மன்னர்களை  துரத்தியடித்து  “”குடிகளே  ஆளும்  குடி அரசு”  நாடுகளைப் பாருங்கள்.  கெய்சர்  சக்கரவர்த்தியை  விரட்டி  அடித்த  ஜெர்மனியில்   தெருக்களில்  உணவு கிடைக்காமல்   பலர் திரிகின்றார்கள்.  வேலைக்குத் தக்க  கூலியும்  கிடையாது.  ஆனால்  அது  யுத்தத்தினால்  கடன்பட்டு   கஷ்டப்படுகின்றதென்று வாதிக்கலாம்.  உலகத்தில்  குபேர நாடு  என  மதிக்கப்படும்  அமெரிக்க  குடியரசு நாட்டைப்  பாருங்கள்.  அது அன்னிய  நாட்டு  ஆட்சியை  ஒழித்து  அந்நாட்டுக் குடிகளால்  கோடிக்கணக்கில்  ஓட்டுப்  பெற்ற  குடிஅரசு  பிரசிடெண்டேதான்  இருந்து ஆட்சி நடத்துகிறார்.  அந்நாட்டு வியாபாரிகள் மணிக்கு  ஆயிரக்கணக்கில்  டாலர்கள்  சம்பாதிக்கின்றார்கள்.  அந்நாட்டு  நிலச்சுவான்தாரர்கள்  விளைவில்  ஏக்கராவுக்கு  500  ரூ.  600  ரூ.  வெள்ளாமை  அனுபவிக்கிறார்கள்.  50, 60 மாடி  உள்ள  வீடுகளில்  முதலாளிகள்  வசிக்கின்றனர்.  10, 15  மாடி  வீடுகளை  ஒரு  தெருவிலிருந்தும் மற்றொரு  தெருவிற்கு  ரதம் போல் நகர்த்திக்  கொண்டு   போகின்றார்கள்.  பெரிய  ரசாயன  நிபுணர்கள் வாழ்கின்றார்கள். அங்கும் 2 கோடி மக்கள் வேலையில்லாது  திண்டாடு கின்றார்கள். 1  ஜதை  உடுப்புடன்  6, 7  பேர்களைக் கொண்ட  குடும்பம் காலம்  தள்ளுகின்றது. மக்கள்  படுக்க இடமின்றித்  தவிக்கின்றனர்.  அன்னார்களுக்காக  என்ன  நடக்கிறது? வேலை  நேரத்தைக்  குறைத்து  அதன்  மூலம்  சிலருக்கு  வேலை  கொடுக்கின்றனர். தொழிலாளர்களுக்கு  சர்க்காரே  சம்பளம்  நிர்ணயம்  செய்கின்றது.  எப்படி  இருந்தும் அவர்கள்  கஷ்டம்  நீங்கினபாடில்லை.  இங்கு  சுயராஜ்யம்  வந்தாலும்,  குடிஅரசு  ஆனாலும் யார்  வந்தாலும்  கஷ்டப்படுகின்றவர்களுக்கு  என்ன  பயன் ஏற்படும்?  ஒரு உதாரணம்  பாருங்கள்.  படிப்பு  இலாகா நம்  கையிலிருந்து  சென்ற  40  வருடத்தில்  100க்கு  6  என்பது  8  ஆக   உயர்ந்துள்ளது.  நம் மாகாணத்தில் தான்  ஜஸ்டிஸ்  கட்சி  இருக்கின்றது.  அது துரோகக்கட்சி.  ஆதலால்  ஒன்றும்  செய்யவில்லை யென்று  வைத்துக்  கொள்வோம்.  பம்பாய்  ஐக்கிய மாகாணம்  கல்கத்தா   ஆகிய  மாகாணங்களின்  நிலைமை  என்ன?  இங்கு  கல்வி  மந்திரியாய்  “”ஜஸ்டிஸ்  தேசத்  துரோக”  தோழர்  குமாரசாமி  ரெட்டியார்  இருந்தார்.  ஆனால்  பம்பாயில்  தேசபிரியர் தான்  இருந்தார்களே  என்ன  ஆச்சுது?  அரசியல்  கஷ்டப்படுகிறவர்கள்  ஏழைகள் தான்,   உயிர்  விடுபவர்களும்  ஏழைகள் தான்;  அனுபவிப்பவர்கள்  கோடீஸ்வரர்களும்,  புரோகிதர்களுந்தான்.

என்ன  சொல்லி  ஜெயித்தார்கள்?

இந்திய சட்ட சபைத்  தேர்தலில்  காங்கிரஸ்வாதிகள்  ஜெயித்தார்கள்.  என்ன  சொல்லி  வாக்கு கேட்டார்கள்.  “”சமூக  சம்மந்தமாய்  சபையில்  ஏதாவது  தீர்மானம்  வந்தால்  ஆதரிப்பதில்லை. அப்படி  மசோதா  கொண்டு  வருவதுமில்லை”  என்றும்  “”ஒடுக்கப்பட்டவர்கள், ஜாதி, தீண்டாமை,  உயர்ஜாதி, யோக்கியம்  ஆகியவைகள்  நிரந்தரமாயிருக்க  பந்தோபஸ்தும்”  கூறினர்.  தோற்ற  ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி சொல்லுவதில்  எனக்கு அனுதாபமுண்டு.  சுயமரியாதை இயக்கத்துக்கு அவர்கள், சென்ற 8 வருடங்களாக ஆதரவு அளித்து வந்திருக்கின்றார்கள்.  முதலில் பெண்கள் ஓட்டுரிமை பற்றி கேட்டவர்கள் ஜஸ்டிஸ்  கட்சியார்களே.  ஏழைகளுக்குக் கட்டாயப்  படிப்பு  கொடுக்க  ஏற்பாடு  செய்தவர்கள்  ஜஸ்டிஸ்காரர்களே.  எல்லா  ஜாதி மதத்திற்கும் அரசியல்  சமசுதந்திரம்  கொடுத்தது  ஜஸ்டிஸ்  கட்சி.   அப்படியிருக்க  ஜஸ்டிஸ்  கட்சி  துரோகக்  கட்சி  எனக்  கூறி  விஷமப்பிரசாரம்  செய்து தேர்தலில்  ஜெயித்தார்கள்.

குறிப்பு:            09.12.1934  இல்  விருதுநகர்  வெயிலு  காத்தம்மன்  கோயிலுக்கு  முன்புறம்  நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில்  ஆற்றிய  உரை.

பகுத்தறிவு  சொற்பொழிவு  23.12.1934

You may also like...