‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!’-ஏன்? – துண்டறிக்கை

இதைத்தான் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தமிழர் சமுதாய இளைஞர்களிடம் எடுத்துக் கூற உரிமையுடன் வந்திருக்கிறோம்.
பரம்பரை பரம்பரையாக நமது பாட்டன், பாட்டி காலங்களிலிருந்து நமக்கு ஜாதியைத்தான் சொல்லி சொல்லி வளர்த்தார்கள். ஜாதிப் பெருமையெல்லாம் பேசினோம்; என்ன பயன் கண்டோம்?
இப்போதும் – தமிழர்கள் ஒன்று திரள விடாமல் நம்மைத் தடுப்பது எது? ஜாதிதான்! சொந்த ஜாதிகளுக்குள்ளேயே பங்காளிகளுக்குள் சண்டை; சொத்து சண்டை; ஊருக்குள் ஜாதிச் சண்டை; தாழ்த்தப்பட்டோர் மீது பிற்படுத்தப்பட்டவர்கள் நடத்தும் ஜாதிய ஒடுக்குமுறை; “கைகட்டி நின்ற பயல் நிமிர்ந்து போகிறானே, என்ன திமிர்?” என்ற ஜாதி ஆதிக்க சிந்தனை, சக மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்க வைக்கிறது ஜாதி.
கீழ் ஜாதி, படிக்கக் கூடாத ஜாதி, கூலிக்கார ஜாதி, எடுபிடி ஜாதி, அப்பன் தொழிலைச் செய்ய வேண்டிய ஜாதிகளாகக் கிடந்ததுதானே. நமது சமுதாயம். நமது சகோதரிகள் – வீட்டில் அடிமைகளாக்கப்பட்டு, பெண்கள் என்றால் வீட்டுக்கான வேலையாள் என்று தானே வளர்த்தோம்; இவையெல்லாம் எப்படி மாறியது?
இந்த அடிமைப்பட்ட சமுதாயத்துக்கு – மானம் கிடைக்க, அறிவு பெற, பெரியார் என்ற தலைவர் நமக்காகப் போராடினார். வடநாட்டில், அம்பேத்கர் என்ற தலைவர் போராடினார். பெரியார் வாழ்நாள் முழுதும் 95 வயதிலும் மரணத்தைத் தழுவும் வரை ஒவ்வொரு நாளும் ஊர் ஊராகச் சுற்றி நமது சமுதாயத்தைத் தட்டியெழுப்பினார். “ஜாதியை விட்டொழியுங்கள்; தாழ்த்தப்பட்டோர் உரிமைகளை மதித்து செயல்படுங்கள்; பெண்களை சமமாக நடத்துங்கள்; அவர்களை கட்டாயம் படிக்கச் செய்யுங்கள்; மூடநம்பிக்கைகளை விட் டொழியுங்கள்; பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக இருக்காதீர்கள்; தமிழர்களாய் சுயமரியாதையுடன் வாழுங்கள்” என்று காலம் முழுதும் பேசினார்; போராடினார்; சிறைச் சென்றார்; அடக்கு முறைகளை சந்தித்தார்.
நாங்கள் பெரியாரைப் பார்த்திராத இளைஞர்கள். ஆனால், இப்போது பெரியார் இல்லாத தமிழ்நாட்டில் ஜாதி மோதல், மதக்கலவரம், ஜாதிக் கட்சிகள் வளர்ச்சி, பொது ஒழுக்கக் கேடுகள், சுற்றுச் சூழலைச் கெடுக்கும் திட்டங்கள், கனிம வளங்கள் கொள்ளை, படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத அவலம் – என்று பிரச்சினைகள் நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம்.
இளைஞர்கள் மீது பெரியார் நம்பிக்கை வைத்திருந்தார். எதிர்கால இளைஞர்கள் உறுதியாக போராட வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
“இது பிரச்சாரக் காலம். எந்தக் காரியமும் பிரச்சாரம் மூலம் நடைபெறுவதுதான் சாத்தியமா யிருக்கிறது. எனவே பிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன்வரவேண்டும்” என்று அழைத்தார். அந்த அழைப்பைத்தான் நாங்கள் செயல் வடிவமாக்குகிறோம்!
நம்மை சுற்றி நிற்கும் நெருக்கடிகளை நினைத்துப் பாருங்கள்!
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. எந்த ஆட்சிக்கும் அதுபற்றி கவலையும் இல்லை. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 75 இலட்சத்தி லிருந்து 89 இலட்சமாக உயர்ந்துவிட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நமது மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 97 இலட்சம் பேர். அரசு வேலை வாய்ப்புகள் அருகிப் போய் விட்டன; பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படுகின்றன; பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் படை எடுக்கின்றன; அங்கே நமக்கு வேலை வாய்ப்பு உரிமைகள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. ‘நோக்கியா’ நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டு, பல்லாயிரம் தொழிலாளர்களை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது. ‘டி.சி.எ°.’ கணினி நிறுவனம் 25,000 பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சலுகைகளையும் மான்யங்களையும் தாராள மாகப் பெற்றுக் கொள்கின்றன. விவசாயிகளின் நிலத்தை அரசு கைப்பற்றி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கலாம் என்று மோடி அரசு சட்டம் கொண்டுவந்து விட்டது. கல்லூரி மாணவன், வங்கிகளில் படிப்புக்குக் கடன் கேட்டால் நிபந்தனை மேல் நிபந்தனை போட்டு வாட்டி வதைக்கும் வங்கி நிர்வாகம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடனை வாரி வழங்கி, பிறகு ‘வாராக் கடன்’ என்று தள்ளுபடி செய்கிறது. இப்படி அரசு பொதுத் துறை வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை இதுவரை 3 இலட்சம் கோடி ரூபாய்! வங்கிகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் உயர் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனர்-பனியாக்கள் தான்.
தஞ்சை விவசாயத்தையே அழித்து பாலைவன மாக்கும் ஆபத்துதான் ‘மீத்தேன்’ எடுக்கும் திட்டம். காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், தமிழ் நாட்டின் நியாயங்களை எடுத்துக் கூறினாலும், காவிரியின் குறுக்கே கருநாடகம் (மேகேதாட்டு, இராசி மணல்) அணை கட்டி, தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுக்கப் பார்க்கிறது. உலகம் முழுதும் கைவிடப்படும் அணுமின் திட்டத்தை இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன. ஆனால், கடல்வாழ் உயிரினங்களை அழித்து, மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய இந்த அணுமின் திட்டங்களை கூடங்குளத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று வரிசை வரிசையாக ஏமாந்த தமிழர்களின் தலைமீது மத்திய அரசு திணிக்கிறது.
திட்டத்தை நியாயப்படுத்துகிறவர்கள் அனை வரும் பார்ப்பனர்கள், பார்ப்பன அதிகாரிகள். திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து எதிர்த்துப் போராடு வோர் – பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள். மற்றொரு பக்கம், நமது கனிம வளங்கள் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், மருத்துவ சோதனைகளுக்கு நமது மக்களின் உயிரைப் பகடைக்காய்களாக பயன்படுத்து கின்றன. அய்ரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்திய சந்தையில் விற்பதும் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏழ்மையிலும், அறியாமையிலும் தவிக்கும் நமது மக்களின் உடல்தான் பன்னாட்டுக் கம்பெனிகளின் மருந்துகளை சோதித்துப் பார்க்கக் களமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் மிக உயர்தர மருத்துவமனை என்று கூறப்படும் புதுடில்லியிலுள்ள ‘எய்ம்°’ மருத்துவ விஞ்ஞானக் கழகம், பார்ப்பன ஆதிக்கத்தில் இயங்கும் நிறுவனம். சமூக நீதியான இடஒதுக்கீட்டை மறுக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் மருந்து களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 49 குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் அம்பலமாகி இருக்கிறது. இப்படி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4142 குழந்தைகளில் 2728 குழந்தைகள் ஒரு வயதுக்கு உட்பட்டவர்கள். என்னே கொடுமை! இது மட்டுமா? நமது தமிழர்களின் சில்லறை வணிகத்தை ஏப்பமிட கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன.
அரசுப் பள்ளிக் கூடங்கள், அரசு கல்லூரிகள் மூடப்படுகின்றன. கல்வி வணிகக் கொள்ளையாகி விட்டது. இப்படி ஆபத்துக்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! சமூக நீதியை, வாழ் வுரிமையை, கல்வியை, வேலை வாய்ப்புகளை பறிக் கொடுத்துக் கொண்டு சுற்றுச் சூழல் ஆபத்துகளையும் விவசாய நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வரும் ஒரு சூழலில் நாம் மூச்சுத் திணறி நிற்கிறோம்.
இந்த ஆபத்துகளை எதிர்கொண்டு போராட வேண்டிய நம் இனம், ஜாதிப் பெருமைகளில் முகம் புதைப்பதும், ஜாதிக் கலவரங்களுக்கு ஆயுதம் எடுப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களை அடிமை களாக்குவதில் பெருமை கொள்வதும் தமிழனுக்கு பெருமையா? இது தேவையா? இந்த கேள்வியை உங்கள் சிந்தனைக்கு கொண்டு வரவே இந்தப் பயணம்.
ஒரே ஜாதியில் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனமாகவும், மன வளர்ச்சியற்றவர்களாகவும் பிறப்பதை விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் ஒரே ஜாதி முறைக்குள் திருமணம் செய்வதை நாம் நிறுத்தக் கூடாதா? சந்ததிகளை ஆரோக்கியமாக வளரவிடக் கூடாதா?
ஜாதி கடந்து ஒருவரை ஒருவர் விரும்பும் காதலர்களை ஏன் தடுக்க வேண்டும்? வாழ அனுமதிக்கக் கூடாதா? ஜாதியைக் கடந்து காதலித்ததற்காக பெற்றோர்களே சொந்த மகளைக் கொலை செய்து, “ஜாதிப் பெருமையைக்” காப்பாற்றிய 42 “கவுரவ (ஆணவ)க் கொலைகள்” கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழர்களில் நடந்துள்ளன. நாம் எங்கே போகிறோம்? குடும்பத்தில் பாசத்தை ஊட்டி வளர்த்த அன்புச் செல்வங்களையே பிணமாக்கி மகிழ்வதுதான் ஜாதிப் பெருமை என்றால், இந்த ஜாதியும், ஜாதிப் பெருமையும் தேவைதானா?
சிந்தியுங்கள், தமிழர்களே! ஆகவேதான் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்!
எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்களுக்கு சுயமரியாதை வாழ்வுரிமை வேண்டும்! ஜாதியைக் கடந்த தோழமை வேண்டும்! ஜாதி கடந்து திருமணங்கள் பெருக வேண்டும்! எங்கள் நாட்டின் உரிமைகள் சுரண்டப்படாமல் தடுக்கப்பட வேண்டும்!
ஜாதிய – பார்ப்பனிய – மதவெறி சக்திகளே! புதுயுகம் காண புறப்பட்டு விட்டோம்! புதிய தலைமுறைக்கு வழி விடுங்கள்!
இது, ஒரு விழிப்புணர்வுப் பயணம்.
தமிழின இளைஞர்களை ஒன்று சேர்க்கும் பயணம்.
எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்து நிற்காத பயணம்.
தோழமையுடன் இணைய அழைக்கிறோம்!
– திராவிடர் விடுதலைக் கழகம்
(பரப்புரைப் பயணங்களில் வழங்கப்படும் துண்டறிக்கை)

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply