பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்கு மூலம் 3 வருஷம் கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம்

 

சென்னை, டிச. 5

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14-வது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117-வது 7(1) ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11-25 மணிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட்டு 4-வது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10-45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு பி.எ. பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.எ.பி.எல்., தாமோதரம்பிள்ளை, ராவ்சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார் பி.எ., பி.எல்., சி. பாசுதேவ் பி.எ. பி.எல். திருவெற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக்தம்பி மரைக்காயர், ஜமால் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி சிதம்பரனார், திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி நாயுடு, ஈரோடு வேணுகோபால் பி.எ.பி.எல்., ஆகியோர் வந்திருந்தனர்.

கோர்ட்டில் எல்லோரையும் அனுமதிக்காததால் ஏராளமான தமிழ் மக்கள் கோர்ட்டிற்கு வெளியே பீச் ரோட்டில் நின்று வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கினர். பெரியார் ஈ.வெ.ரா. வந்திறங்கியதும் மக்கள் ஆரவாரித்து வாழ்த்தொலி செய்தனர்.

~subhead

பெரியாருக்கு பிராசிக்கியூஷன் மரியாதை

~shend

நீதிபதி 11.25 மணிக்கு வந்து வழக்கை ஆரம்பித்தார். கிரவுன் பிராசிகூடர் தோழர் டி.எஸ். அனந்தராமன் சாட்சிகளை விசாரித்தார். கோர்ட்டார் பெரியாரைக் கூப்பிட்டதும் பெரியார் ஈ.வெ.ரா. எழுந்து நின்றார். உடனே கிரவுன் பிராசிக்கூட்டர் நீதிபதியிடம் தோழர் நாயக்கரவர்கள் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று வேண்டினார். பின்னர் பெரியாரும் உட்கார்ந்து கொண்டார்.

ஆரம்பத்திலேயே ஈ.வெ.ரா. அவர்கள் தான் எதிர் வழக்காடப் போவதில்லை என்றும், தனக்கு யாரும் வக்கீல் இல்லை என்றும் கூறிவிட்டார்.

~subhead

முதல் சாட்சி வாக்குமூலம்

~shend

சர்க்கார் தரப்பின் முதல் சாட்சியான சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர் தோழர் கேசவமேனன் தனது சாட்சியத்தில் கூறியதாவது:-

“நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மெண்டில் தமிழ் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டராக சென்ற 5-வருடங்களாக இருந்து வருகிறேன். எனக்குத் தோழர் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை நன்றாகத் தெரியும். அவரது சொந்த ஊர் ஈரோடு. அவர் 1923-ம் வருஷம் வரை காங்கரசிலிருந்தார்.

பின்னர் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் பார்ப்பனரல்லாதாரின் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவும், பார்ப்பனரை எதிர்க்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஜஸ்டிஸ், சுயமரியாதை இவை இரண்டும் ஒரே கொள்கை கொண்டுள்ளவை.

21.4.38ந் தேதிய 911நெ. இந்திக் கட்டாய பாட சர்க்கார் உத்தரவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த உத்தரவிற்குப் பிறகே ஒரு பகுதி தமிழர்கள் இந்தி எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்து கட்டாயபாட உத்தரவை ரத்து செய்யுமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி வருகின்றனர். பின்னர் சென்னை நகரத்திலும், சென்னைக்கு வெளியிலும் இந்தியைக் கண்டித்துப் பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

~subhead

சென்னையில் முதல் கூட்டம்

~shend

சென்னையில் இந்தி எதிர்ப்பு முதல் கூட்டம் 31-5-38 அன்று தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பிற்கென கட்டப்பட்ட புதுக்கட்டடத்தில் (நிலையம் ந.நி) அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாலை 6-30 முதல் 9-30 வரை நடைபெற்றது. ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு தலைமைவகித்தார். தோழர் எஸ். முத்தையா முதலியார் தமிழ்க்கொடி ஏற்றினார். நான் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அன்று எதிரியும், முதல் சர்வாதிகாரி சி.டி. நாயகமும், மற்றும் பல இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் பேசினர். பல்லடம் பொன்னுசாமியை அவர் நாளை உண்ணாவிரதமிருக்கப் போவதாக தோழர் சி.டி. நாயகம் கூட்டத்திற்கு அறிமுகப் படுத்தினார். அடுத்த நாள் காலை 6-30 மணிக்குப் பல்லடம் பொன்னுசாமி, முதன் மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்தார். அப்படியே 2 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். 3-6-38 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் “பேச” தொண்டர்கள் மறியலுக்காக வந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்க பட்டனர். இதேபோல் 1-7-38 அன்று இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பும் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கினர். 3 மாதம்வரை முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் நடந்து வந்தது. தொண்டர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இரண்டு இடங்களிலுமாக நவம்பர் கடைசிவரை கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 400. இதில் முதன் மந்திரி வீட்டின் முன்பு கைதியானவர்கள் சுமார் 165. தியாகராய நகரிலிருந்த இந்தி எதிர்ப்பு நிலையம் பிரிக்கப்படும் வரை அங்கேயே மறியல் தொண்டர்கள் தங்கியும், உணவு உண்டும் வந்தனர்.

மே 28-ந் தேதி திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத்தில் எதிரி இந்தி எதிர்ப்புக்கமிட்டியின் ஒரு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 60-பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், மலையாளத்தில் 11 பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றது. கட்டாய இந்திக்கு மலையாளத்திலும், ஆந்திராவிலும் எதிர்ப்பில்லை. எதிரி முதன் முதல் 31-5-38 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்புப்பிரசாரம் செய்தார். பின்னர் இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஆதரவில் நடைபெற்ற பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் “விடுதலை” தினசரியும், “குடி அரசு” வார வெளியீடும் எனக்குத் தெரியும். தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவைகளின் வெளியிடுவோரும் ஆசிரியருமாவர். 13-11-38 ஒற்றைவாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மகாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.

~subhead

நீதிபதி கேள்விக்கு பெரியார் பதில்

~shend

நீதிபதி: நீங்கள் ஏதாவது சாட்சியைக் கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா: அவர் கூறியது என் காதில் சரியாக விழவில்லை. இருந்தாலும் இந்தக் கோர்ட்டில் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கை யில்லை. எனவே சாட்சியை நான் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. கேட்பதாலும் ஒன்றும் பயனில்லை.

~subhead

2-வது சாட்சி வாக்கு மூலம்

~shend

பின்னர் 2-வது சாட்சியாக தோழர் எ. கிருஷ்ணய்யர் (சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் சென்ற 20 வருஷங்களாக சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றேன். சென்னையில் 13-11-38 அன்று நடந்த தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு மாலை 2-45-க்கு ஆரம்பித்து இரவு 8-15-க்கு முடிவுற்றது. நான் கடைசிவரை இருந்தேன். மாநாட்டிற்கு வந்திருந்த 1500 பேரில் 700 பெண்கள் ஆகும். நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெற்றன. தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அம் மாநாட்டில் எதிரி பேசினார். அவர் பேசும்பொழுதும் நான் அங்கிருந்தேன். நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் தமிழ் நெட்டழுத்தில் எழுதினேன். அவர் பேச்சை ஒழுங்காகவே குறிப்பெடுத்தேன். மறுநாள் 14-11-38 பெத்துநாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன் சாமி – அருணகிரிநாதர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். அக்கூட்டம் மாலை 6-15க்கு ஆரம்பித்து 9-15க்கு முடிவுற்றது. அங்கு எதிரியும் பேசினார். அவர் பேச்சை சிறிதும் விடாது குறிப்பெடுத்தேன். அவரது பேச்சுகள் பொது மக்களிடையே மிகுந்த உணர்ச்சியை உண்டாக்கின. பின்னர் சாட்சி பெரியார் ஈ.வெ.ராவின் 2 பிரசங்கங்களையும் கோர்ட்டில் படித்தார்.

நீதி: இதில் ஏதாவது தவறிருக்கின்றனவா? சாட்சியை ஏதாவது கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா: பல தவறுகள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நான் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.

~subhead

3-வது சாட்சி வாக்கு மூலம்

~shend

பின்னர் 3-வது சாட்சியாகத் தோழர் ரஞ்சித்சிங் (சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் செக்ஷனில் சுருக்கெழுத்தாளனாக இருக்கிறேன். 13-11-38ல் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கடைசிவரை இருந்தேன். அம்மாநாட்டிற்கு மறுநாள் 14ந் தேதியன்று பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் மறியல் செய்தனர். அப்பெண்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் அபராதம் செலுத்தவில்லை. இந்தி எதிர்ப்புக் கழக ஆதரவில் அன்று மாலை காசி விசுவநாதர்கோயில் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் கிரவுன் பிராசிக்கூடர் இந்தப் பிரசங்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டியிருப்பதால் வாய்தா கொடுக்கவேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி: பிரசங்கங்கள் விளக்கமாக இருப்பதால் இதற்கு வாய்தா வேண்டியதில்லை. சில மணி நேரங்களில் மொழி பெயர்த்து விடலாம் என்று கூறினார்.

பின்னர் சர்க்கார் சாட்சிகள் மீண்டும் கிரவுன் பிராசிகூடரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

~subhead

குறுக்கு விசாரணை

~shend

குறுக்கு விசாரணையில் முதல் சாட்சி கேசவமேனன் கூறியதாவது:- இந்தி உத்தரவை எடுக்குமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி முதன் மந்திரி வீட்டின் முன்பும் தியாலாஜிக்கல் பள்ளி முன்பும் மறியல் நடந்தன. அப்பள்ளியில் இந்தி கட்டாயபாடமாக்கப்பட்டிருப்பதால் பையன்களை படிக்கவிடாது தடுக்கவே மறியல்நடைபெறுகிறது. அப்படி பையன்கள் போகாவிட்டால் பள்ளிக்கூடம் மூடப்படும் என்று கருதியே இம்மறியலால் ஏற்படும் கூச்சல் ஆசிரியர்களையும் வகுப்பு நடத்த முடியாமல் தடை செய்கிறது.

~subhead

3-வது சாட்சி தோழர் ரஞ்சிட்சிங் கூறியதாவது:-

~shend

14-11-38 அன்று 5 பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் நின்று இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! என்று கூறி மறியல் செய்தனர். இதனால் ஆசிரியரும், பையன்களும் உள்ளே புக முடியாமலும், நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பு மேலும் நடைபெறாமலும் தடைப்படுகின்றது. வேடிக்கை பார்க்க ஆசிரியர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

நீதி: நீங்கள் ஏதாவது வாக்கு மூலம் கொடுக்கின்றீர்களா?

ஈ.வெ.ரா: சிறிது அவகாசம் கொடுத்தால் சாட்சியங்களைப் பார்த்து வாக்கு மூலம் கொடுக்கின்றேன்.

நீதி: சாட்சிக் காப்பிகள் மாலை தான் கிடைக்கும். எனவே வழக்கை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கிறேன்.

மீண்டும் வழக்கு நாளை நடைபெறும்.

1-30 மணிக்கு வழக்கு முடிந்து பெரியார் கீழே வரும் வரை வெளியில் ஏராளமான மக்கள் காத்துக்கொண்டே நின்றனர். பெரியார் காரில் ஏறியதும் மக்கள் “பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க” என ஆரவாரம் செய்தனர். மக்கள் காட்டிய உணர்ச்சி அளவு கடந்ததாயிருந்தது. கோர்ட்டிலும் வெளியிலும் பலமான போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது.

~subhead

(மறுநாள் நடவடிக்கை)

~shend

சென்னை, டிச. 6-

சென்னை அரசாங்கத்தாரால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மீது 117-வது செக்ஷன் கீழ்க்கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது மாகாண நீதிபதி தோழர் மாதவராவ் முன்பு இன்று காலை 11-30 மணிக்கு மீண்டும் விசாரணைக் கெடுத்துக் கொள்ளப்பட்டது.

~subhead

பெரியார் வருகை

~shend

சரியாகப் 11-மணிக்குப் பெரியார், ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியவர்களுடன் படுக்கை சகிதமாகக் கோர்ட்டிற்கு வந்து சேர்ந்தார். கோர்ட்டிற்கு வெளியில் நின்றிருந்த பதினாயிரக்கணக்கான மக்கள் கைதட்ட வாழ்த்தொலி செய்தனர். இன்றும் கோர்ட்டுக்கு அருகில் யாரையும் வரவிடாது பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருந்தது. நேற்று இரவு 10 மணிக்குத்தான் பெரியாருக்கு சர்க்கார் சாட்சியத்தின் நகல் கிடைத்ததாகையால் கோர்ட்டில் வந்தும் விரைவாக வாக்கு மூலத்தின் எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

~subhead

ரசாக்கான் சாட்சியம்

~shend

ஆரம்பத்தில் கிரவுன் பிராசிக்கூட்டர், சப் இன்ஸ்பெக்டர் தோழர் ரசாக்கானை சர்க்கார் சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவர் இந்து தியாலாஜிகல் பள்ளி இருக்கும் செக்ஷனின் சப்இன்ஸ்பெக்டர் என நீதிபதியைக் கேட்டார்.

நீதிபதியும் சம்மதிக்க, தோழர் சப்பின்ஸ்பெக்டர் ரசாக்கான் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் யானை கவுணிபோலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர். இந்து தியாலாஜிக்கல் பள்ளி எனது ஜúரிஸ்டிக்ஷனில் உள்ளது. நாடோறும் நடைபெறும் மறியல் காலத்து நேரில் பள்ளி முன் இருந்து வருகிறேன். 14-11-38 அன்று 5-பெண்கள் பெரிய ஊர்வலமாக வந்து, பள்ளியின் வாசற்படிக்கு அருகில் நின்று கொண்டு “தமிழ் வாழ்க” “இந்தி வீழ்க” எனக் கூச்சலிட்டு மறியல் செய்தனர். அன்றும் நான் அங்கிருந்தேன். 2000 அல்லது 3000 பேர் ஊர்வலமாக வந்தனர். எதிரியும் ஊர்வலத்துடன் அன்று வந்தார். பெண்கள் மறியலால் ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே போகத் தடங்கலாயிற்று. வகுப்பு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் வெளியே வந்து விட்டனர். பெண்களை அங்கிருந்து போய்விடுமாறு நான் எச்சரித்தும், இந்தி ஒழிந்தால் ஒழிய போக மாட்டோமென்றனர். பின்னர் அவர்களைக் கைது செய்தேன். எதிரியும் நான் கைது செய்யும் வரை அங்கேயே இருந்தார். பின்னர் இரண்டாவது மாகாண நீதிபதி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பெண்கள் தண்டனை பெற்றனர்.

பெண்கள் அபராதங் கொடுக்க மறுத்தனர். கோர்ட்டிலும் எதிரி ஆஜராகியிருந்தார். இதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் மறியல் செய்து வருகின்றனர். 21-11-38 அன்று 8-பெண்கள் மறியல் செய்தனர். அன்றும் பெரிய ஊர்வலமாக அவர்கள் வந்தனர். மேலும் அவர்கள் செய்யும் மறியலால் பெருங்கூட்டம் கூடி, போக்கு வரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. அவர்களையும் நான் எச்சரித்தேன். கேட்காததால் கைது செய்தேன். அவர்களும் தண்டனை பெற்றார்கள். அன்று வழக்கு முடிந்த பிறகு வழக்கைப் பார்க்க வந்திருந்த ஏராளமான மக்கள் திரும்பி 2 மணிக்கு வீட்டிற்குச் செல்லும்போது பல இடங்களில் கல்லெறிந்து பலருக்கு நஷ்டம் உண்டாக்கியிருக்கின்றனர். முதன் முதலில் தினமணி ஆபீஸ் மீது கல்லெறிந்ததாக அறிந்தேன். அதற்குப் பின் மற்றும் சில இடங்களில் குழப்பம் நேரிட்டதாகத் தெரிகிறது. ஆனால், நேரில் நான் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.

~subhead

கிராஸ் செய்ய பெரியார் மறுப்பு

~shend

ஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

நீதி: உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றதாகையால் வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்மந்தப்படாத வெளி விஷயங்களை நான் ஏற்க மாட்டேன்.

ஈ.வெ.ரா: நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங்களைக் காதில் கேட்டேன். பார்த்தேன். பதில் கூறுகிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவைகளையே கூறுகின்றேன்.

பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்கு மூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரி யெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ் வழக்கில் தண்டனையளிக்க வசதியாயிருக்கும் பொருட்டு எதிரியின் பேச்சுகளில் ஆட்சேபகரமானவற்றை சிகப்பு மையினால் மார்க் செய்கிறேன் என்று கூறி, மார்க் செய்து அப்பகுதிகளைக் கோர்ட்டில் வாசித்துக் காண்பித்தார்.

அதன் பின் நீதிபதி குற்றப்பத்திரிகை வாசித்தார்.

~subhead

தீர்ப்புக்கூற ஒத்தி வைப்பு

~shend

பெரியார் தான் குற்றவாளியல்லவென்றார்.

மணி 1-30 ஆனமையால் தீர்ப்புக் கூற வழக்கை மாலை 2 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

வழக்கைக் கவனிக்க வந்திருந்த முக்கிய பெரியார்கள் ஸர்.எ.டி. பன்னீர்செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், டி. சுந்தரராவ் நாயுடு பி.ஏ.பி.எல்., டி. ஷண்முகம் பிள்ளை, பாரிஸ்டர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார், எம். தாமோதரம் நாயுடு பி.எ.பி.எல்., ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.எ.வி. நாதன், சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம், டி.ஆர். கோதண்டராம முதலியார், சாமி அருணகிரிநாதர், கடலூர் தெய்வசிகாமணி முதலியார், சேலம் சித்தையன், சர்வாதிகாரி எஸ். சம்பந்தம், எர்னஸ்ட் காவேரி பாக்கம் சம்பந்தம் முதலிய பல பெரியார்களாகும்.

~subhead

தண்டனை

~shend

சரியாக மாலை 3-25 மணிக்கு நீதிபதி வந்து தீர்ப்பை வாசித்தார்.

“இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற்றத்திற்கு 1 வருஷம் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கிறேன்” என்றார். ஆக இரண்டு குற்றங்கட்கு 2 வருடம் 2000 ரூபாய் அபராதம் அல்லது மேலும் 1 வருஷம் ஆக 3 வருஷம் கடுங்காவல் தண்டனையாகும்.

இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறினார்.

பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருஷக் கடுங்காவல் தண்டனையைப் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

~subhead

ஸர். பன்னீர்செல்வம் கண்ணீர்

~shend

தண்டனை பெற்ற பெரியாரை ஸர். எ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் கோர்ட்டிலேயே கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டார்.

பெரியார் அவர்கள் தான் இனி ஒரு கைதி (கணூடிண்ணிணஞுணூ) என சிரித்துக்கொண்டே கூறினார்கள்.

பின்னர் கோர்ட்டிற்கு வந்திருந்த எல்லா பெரியார்களும் வக்கீல்களும் தோழர்களும் பெரியார் ஈ.வெ.ரா. பாதத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.

~subhead

சிறைக்குப் புறப்பாடு

~shend

காலையிலேயே பெரியார் படுக்கை பெட்டியுடன் வந்திருந்தார். அவைகளை எடுத்துக்கொண்டு மாலை 3-45 மணிக்கு “மோட்டார் வேனில்” ஏறும்போது வெளியே ஆவலாகக் காத்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரியார் வாழ்க” என்று ஆரவாரித்துக் கரகோஷம் செய்தனர். பெரியாருக்கு மாலைகளிடப்பட்டன. பெரியார் “ஈ.வெ.ரா. வாழ்க” என்ற வானலாவிய ஒலியினிடை பெரியார் ஏறியிருந்த கார்புகுந்துசென்றது. வழக்கைக் கவனிக்க காலை 10 மணிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 4 – மணிக்கு வழக்கு முடியும் வரை மத்தியானம் சாப்பிடக்கூடப் போகாமல் காத்து நின்றனர். பெரியார் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கரை கொள்ளாததாயிற்று.

~subhead

சென்னை நகரத்தார் துயரம்

~shend

இச் செய்தியைக் கேட்டு சென்னைத் தமிழர்களனைவரும் எல்லையில்லாத் துயரமடைகின்றனர். இச் செய்தி சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டுத்தீபோல் நகரெங்கும் பரவிவிட்டது. வழக்கைக் கவனிக்க ஏராளமான பார்ப்பன வக்கீல்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.

~subhead

பெரியார் வாக்குமூலம்

~shend

பெரியார் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

நான் சம்மந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது காங்கரசிற்கு விரோதமானது என்றும், காங்கரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல் மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக் கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கோர்ட்டு காங்கரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

~subhead

அடக்குமுறைக் காலத்து நியாயமேது?

~shend

தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்கவேண்டுமென்பதில் காங்கரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம் அநியாயம் பார்க்கவேண்டியதில்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில் இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

~subhead

பொது மக்களுக்கு அறிக்கை

~shend

பொது மக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற்கும் தப்பு வழியில் செல்லாமலிருப்பதற்கும், நான் நிரபராதி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் ஒரு அறிக்கை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டிக்கொள்ளுகிறேன்.

நான் இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை. வக்கீல் வைக்கவில்லை.

சர்க்கார் கட்சி வக்கீல் ஆங்கிலத்தில் பேசினார். நான் எட்டி இருந்ததனாலும் ஆங்கிலம் சரியாய்த் தெரியாததனாலும் அவர்கள் பேசினதும் சில சாòகள் சொன்னதும் சரியாய்ப் புரியவில்லை. ஆனால் பின்னால் நடந்த சங்கதிகளைக் கவனித்தேன். ஒரு அளவுக்குப் புரிந்தது.

இவற்றுள் பிராதில், முதலாவதாக 21-4-38-ல் கவர்ன்மெண்ட்டார் இந்தி கட்டாயமாய்ப் படிப்பிப்பதை அமலுக்குக் கொண்டுவர உத்தரவு பிறப்புவித்தார்கள் என்றும், அதற்குப் பிறகு சில சுயநலக்காரர்களால் தாங்களே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிப் பிரசாரகர் என்று பெயர் சூட்டிக்கொண்டு கனம் முதல் மந்திரியாரை நிர்ப்பந்தப்படுத்தி அந்த உத்தரவைக் கேன்சல் செய்யச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு கனம் மந்திரியாரின் உரிமையைத் தடைப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

~subhead

இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்போது?

~shend

இது முழுவதும் உண்மைக்கு நேர் மாறானதாகும். மந்திரியார் ஜி.ஓ. 21-4-38-ல். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், கிளர்ச்சி ஸ்தாபனமும் அதற்கு முன்பே ஏற்பட்டதாகும். 1930-ல் நடந்த நன்னிலம் சுயமரியாதை மகாநாட்டில் இந்தி புகுத்தும் நோக்கத்தையும், இந்தி புகுத்துவதால் ஏற்படும் கெடுதியையும் பற்றி இன்றைய காங்கரஸ் விளம்பர மந்திரியார் கனம் ராமநாதன் அவர்களே தீர்மானம் கொண்டு வந்து கண்டித்துப் பேசி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

~subhead

இந்தியை எதிர்ப்போர்

~shend

தமிழ்ப் பண்டிதரும், தமிழ்ப் பாஷை, கலைகள் ஆகியவற்றில் நிபுணருமான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இந்திப் பொதுமொழியாகுமா? என்று கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.

அண்ணாமலை சர்வகலாசாலைப் புரபசர் எஸ். சோமசுந்தர பாரதிப் பெரியார் அவர்களும் 1937-ம் வருஷத்திலேயே இந்தியைக் கண்டித்து கனம் முதல் மந்திரியாருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

1937 டிசம்பரில் மாகாணத் தமிழர் மகாநாடு கூடி சென்னை மாகாண கவர்னர் பிரபுகளிடம் தூது சென்று இந்திக் கட்டாயத்தை மாற்றும்படிக் கேட்டுக்கொள்ளத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல பெரியார்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன் பின் 1938 பிப்ரவரி வாக்கில் காஞ்சிபுரத்தில் ஒரு தமிழர் மகாநாடு சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் தலைமையில் கூடி காலம் சென்ற சர்.எம். கிருஷ்ணன் நாயரால் திறக்கப்பட்டுப் பல பெரியார்கள் முன்னிலையில் பல தீர்மானங்கள் இந்தியைக் கட்டாய பாடமாய்ப் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆதலால் கனம் முதல் மந்திரியாருடையவோ, சர்க்காருடையவோ ஜி.ஓ.வுக்குப் பிறகு சுயநலக்காரர்கள் கூடிக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்பது தவறு.

~subhead

எதிர்ப்பின் நோக்கம்

~shend

கனம் முதல் மந்திரியார் இந்த வேண்டு கோள்களையும் பொதுஜன அபிலாஷைகளையும் லôயம் செய்யாமல் இவற்றை அலòயப் படுத்துவதற்குச் சாக்காக “இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி (அவரது) நண்பர் ஒரு இராமசாமி நாயக்கர் தான் செய்கிறாரே தவிர இது பொது ஜனக்கிளர்ச்சி அல்ல” என்று சட்டசபையிலேயே சொல்லி விட்டதால் பொது ஜனங்கள், இதைப் பொது ஜனங்களது கிளர்ச்சியென்று கனம் முதல் மந்திரியாரும், கவர்னர் பிரபுவும் அறிய வேண்டும் என்பதற்காகவே, இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (ஈஞுட்ணிணண்tணூச்tடிணிண) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

~subhead

காரியக் கமிட்டித் தீர்மானம்

~shend

அன்றியும் இந்தியைப் பொது பாஷையாக்கக் கூடாதென்றும், பள்ளியில் வைப்பது முதலிய இந்திப் பிரசாரம் செய்வது வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்றதென்றும், காங்கரஸ் கூட்ட நடவடிக்கைகளுக்கு இந்தி தெரிந்து கொள்ளும்படிச் செய்தால் போதுமென்றும், காங்கரஸ் காரியக்கமிட்டி தீர்மானித்திருக்கிறது.

சென்னை மாகாணத்தில் நடக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இந்தி மீதுள்ள அபிப்பிராய பேதத்தால் நடைபெறுவதாகவும் அதை விளக்கிக் காட்டிச் சரிசெய்யும்படிக் காங்கரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டுமிருக்கிறது. ஆகவே இந்தக் கிளர்ச்சி காங்கரஸ் துவேஷத்தால் செய்யப்படுவதும் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் போதுமென நினைக்கிறேன்.

1938 ஜüன் மாதம் முதல் தேதி கனம் முதல் மந்திரியார் வீட்டிற்கு முன் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நடவடிக்கைகளுக்கும் எனக்குமாவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்காவது யாதொரு சம்பந்தமுமில்லை.

~subhead

எதிர்ப்பாளர் கொள்கை

~shend

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கைகளில் சட்டம் மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும்.

முதன் மந்திரியார் வீட்டிற்கு முன் தொண்டர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டும் போகக்கூடாதென்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறேன். அந்த வேண்டுகோள் பொது ஜனங்களாலும், தொண்டர்களாலும் மதிக்கப்பட்டு, அது முதல் முதன் மந்திரியார் வீட்டின் முன் தொண்டர்கள் செல்லவில்லை. அதற்குப் பிறகு, பள்ளிக்கூடத்திற்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் காரியங்களும் சரியல்ல. அங்கு தொண்டர்கள் செல்வது உபாத்தியாயர்களையும், பிள்ளைகளையும் தடுப்பதற்காக வல்ல. இந்தியைப் பொதுஜனங்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும். எந்த உபாத்தியாயரும் எந்த பிள்ளைகளும் தங்களைத் தடுத்ததாகவோ அல்லது இந்தக் காரியத்தால் தங்கட்குப் பள்ளிக் கூடத்திற்குப் போக முடியாமல் போயிற்றென்றோ, இனியும் உபாத்தியாயரோ மாணாக்கரோ இதனால் ஒரு நாளாவது “ஆப்சென்ட்” ஆனதாகவோ சொல்லப்படவோயில்லை; ருசுக்களோ இல்லை. பிராதில் குறிப்பிட்ட விஷயங்கள் சரியல்ல. சட்டத்திற் கண்டபடி, குற்றமாவதற்கு ஜோடித்தவைகளேயாகும். நான் பேசியிருப்பதாய்ச் சொல்லப்படும் 2 பேச்சுகளிலும் சட்டம் மீறும்படி நான் யாரையும் தூண்டவேண்டுமென்றோ, தூண்டும்படியான கருத்துக் கொண்டோ பேசவில்லை. அந்தக் கருத்துகள் கொண்ட வாக்கியம் பேசியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையல்ல. ஏனெனில் நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப்படி சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சிசெய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும்.

மற்றும் அப்பேச்சுகளில் சட்டம் மீறக்கூடாது, யாருக்கும் எவ்வித தடையும், சங்கடமும் மனநோவும் உண்டாக்கக் கூடாது. துவேஷ உணர்ச்சி கட்டுப்பாட்டிற்கு விரோதமான உணர்ச்சி கூடாதென்றெல்லாம் வியக்தமாய்ப் பேசியிருப்பதை அதில் காணலாம்.

~subhead

பெண்கள் மகாநாட்டுத் தீர்மானம்

~shend

என் பேச்சிற்குப் பிறகே பெண்கள் பள்ளிக்கு முன் போய் நின்றார்கள் என்று சொல்வதும் சரியல்ல. நான் பேசுவதற்கு முன்பேயே மகாநாட்டில் தீர்மானம் ஆகியிருக்கிறது. அதையும் என்பேச்சிலேயே காணலாம்.

பெண்களும் எவ்வித தடங்கலான காரியம் செய்தார்களென்றும் எவ்விதக் குற்றமான காரியங்கள் செய்தார்களென்றும் எப்போதும் ருசு செய்யப்படவில்லை. ஏதாவது ஒரு கிளர்ச்சி நடக்க வேண்டுமென்றால் ஒரு முறை கொண்டுதான் நடத்த வேண்டும். அம்முறையால் குற்றம், தடை, பலாத்காரம், துவேஷம் உண்டாகும்படி இருக்கக்கூடாது என்பதில் நான் எப்போதும் கவலை கொண்டிருக்கிறேன்.

~subhead

குற்றச்சாட்டு சரியானதல்ல

~shend

நான் சம்பந்தப்பட்ட எந்த ஸ்தாபனத்திலும் இவ்வித தப்பான கொள்கைகட்கு இடம் கொடுக்கவே யில்லை. காங்கரஸ்காரர்கள், காங்கரஸ் மந்திரிகள் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் பல தடையான காரியங்கள் அதாவது கிராம்பு மறியல் முதற்கொண்டு பிரசாரக் கூட்டங்கள் நடைபெறாமல் தடை, குழப்பம், பலாத்காரம் முதலியன நடத்துவது வரையில் நடந்த காரியங்கள் குற்றமாகக் கருதப்படவில்லை. காங்கரஸ் சர்க்காரும் அவை கூடாதென்று உத்தரவு போட்டதில்லை. தவிரவும் என்மீது சுமத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவும் கொஞ்சமும் சரியானதல்ல. இது ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்கை ஆகியவைகளைத் தடுப்பதற்கு என்பதும் அதையும் பொது மக்களும் குறிப்பாகக் காங்கரஸ்காரர்களும் வெறுத்துக் குறைகூறிக் கண்டித்த தென்பதும் பொது மக்கள் அறிந்ததேயாகும். அப்படியிருக்க அந்தச் சட்டத்தை ஒரு நியாயமான உரிமையுள்ள காரியத்தைச் செய்ய தடுப்பதற்கு உபயோகப்படுத்துவது அந்தச் சட்டத்தின் தத்துவத்திற்கே முரண்பட்டதாகும்.

சாட்சி சுயமரியாதை இயக்கம் பார்ப்பனருக்கு விரோதமான உணர்ச்சி ஊட்டக் கூடியது என்று சொன்னார். தோழர் வக்கீலும் அந்த உணர்ச்சி இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலுமிருப்பதாகக் கருதும்படிச் செய்யப் பிரயத்தனப்பட்டார். அந்தக் கருத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் என் இரண்டாவது பேச்சாகக் கோர்ட்டில் ஒப்புவிக்கப்பட்ட சர்க்கார் ஆதாரத்திலேயே இருக்கிறது.

~subhead

அறிக்கை வெளியிட்டதின் நோக்கம்

~shend

ஆகவே, இந்த விஷயங்களைத் தங்கள் கவனத்திற்கு என்றே நான் சமர்ப்பிக்கவில்லை. தங்களால் காங்கரஸ் மந்திரிகள் இடத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரியட்டும் என்றும், நான் சட்டம் மீறினேனென்றும் மற்றவர்கள் கருதி அதைச் செய்யத் துணிந்துவிடக் கூடாது என்பதற்கும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எவ்வித முயற்சியும் செய்கையும் இன்று வரையிலும் கூடச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்மதப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவே யாகும். ஆகவே, கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

~subhead

லôயத்துக்கு விலை

~shend

மற்றும் வழக்கை வக்கீல் முடித்துவிட்ட பிறகும் சட்டப்படிக் குற்றம் ஏற்படத் தகுந்த மாதிரி, வக்கீல் சாட்சியை மிரட்டி வாக்குமூலம் வாங்கி சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற தென்பதாகவும் எழுதிக் கொடுத்தார்.

எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

(ஒப்பம்)

ஈ.வெ. ராமசாமி.

குடி அரசு – நீதிமன்றத்தில் அறிக்கை – 11.12.1938

You may also like...