சுயமரியாதை இயக்கத் தத்துவம் கடவுள் மத ஆபாசங்கள்

 

தோழர்களே!

இந்த நாமக்கல் கொஞ்சகாலமாகவே காங்கரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் இங்கு எப்படியோ ஒரு மகாநாடு கூட்டிவிட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சு.ம. மகாநாடு அவ்வளவு திருப்திகரமாய் நடக்காது என்றும், காங்கரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்றும் உள்ளூர் பொது ஜனங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலையில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாகமும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது.

கண்டறியா அருங்குணம்

தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கரஸ்காரர்கள் போகக் கூடாது என்றும், போனாலும் எவ்வித கேள்வி கேட்பதோ, கலவரம் ஏற்படும்படி செய்வதோ ஆகிய காரியம் கண்டிப்பாய் நடத்தக் கூடாது என்றும் புத்தி புகட்டப்பட்ட ஒரு துண்டு நோட்டீஸ் காங்கரஸ்காரர்களால் வினியோகிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப்புத்தி காங்கரசுக்காரர்களுக்கு எப்படி வந்தது, ஏன் வந்தது என்கின்ற காரியம் எனக்கு ஒரு யுக்திகணக்கு போட்டி பரிசு மாதிரியாகவே இருக்கிறது. சென்ற வருஷம் வந்தபோது கழுதை கழுத்தில் அட்டை கட்டி அதில் எங்களைப் பற்றி கேவலமாய் எழுதி விரட்டி விட்டார்கள். போன மாதத்தில் வந்த போதும் கூட்டத்தில் காலித்தனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் ஒரு வழியில் சமாளித்தோம் என்றாலும் இப்போது இந்த புத்தி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அரசியலிலோ சமுதாயத்திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும் விரோதியில்லை, யாரிடமும் துவேஷமில்லை. மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் கொள்ள முடியாது. சரியாகவோ தப்பாகவோ அபிப்பிராய பேதம் ஏற்படுவது மனிதனுக்கு இயற்கையேயாகும். ஒருவருக்கொருவர் அபிப்பிராயத்தை மதிக்காவிட்டாலும் ஏற்காவிட்டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியதானது மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும்.

உதாரணமாக ஈரோட்டில் எங்கள் எதிரிகள் யாராவது எப்படிக் கத்தினாலும் நாங்கள் கீச்சு மூச்சு சத்தம் ஏற்படக்கூட இடம் கொடுப்பதில்லை.

எனினும் ஒரு விஷமம்

ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு அந்தப் புத்தி இருந்ததை நான் இதுவரை ஒரு ஊரில் கூடப் பார்த்ததில்லை. இன்று இந்த ஊரில் பார்க்கிறேன் என்றாலும் இதிலும் ஒரு விஷமத்தை காண்கின்றேன். என்னவெனில் இன்று இங்கு சு.ம. மகாநாடு நடப்பதும் இந்த பொதுக்கூட்டம் இன்று ஏற்பாடு செய்திருப்பதும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே தெரிந்திருந்தும் இந்த ஊர் காங்கரஸ்காரர்கள் இன்றைய தினத்திலேயே வேறு ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்து அதில் “அநேக காங்கரஸ் தலைவர்கள் வருகிறார்கள்” என்று நோட்டீசு ஏராளமாய் வினியோகிக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு அந்த கூட்டம் போட்டால் என்ன முழுகிப் போகும். உண்மையிலேயே நோட்டீசில் வெளியிட்ட அத்தனை “தலைவர்களும்” வரப்போகிறார்களா? வேண்டுமென்றே விஷமத்துக்கு அதாவது இந்த கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் இருக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணம் தவிர இதுவேறு எதுவாய் இருக்க முடியும்? அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு பேர் – 3000 பேர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மேலும் காங்கரஸ்காரர்கள் இங்கு வினியோகித்த துண்டு நோட்டீசில் “காங்கரசு ஒன்றுதான் மக்களுக்கு சுதந்தரமும் விடுதலையும் அளிக்கும்” என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இவர்கள் நாங்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு சொன்னால் என்ன? இன்றைக்கே சொல்லுவானேன்? இருந்த போதிலும் நாளைக்கும் அவர்கள் கூட்டம் ஒன்று உண்டு என்றும் தெரிகிறது. சுவர் விளம்பரமும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்று நீங்கள் நான் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு அவர்கள் சொல்லுவதையும் கவலையுடனும் பொறுமையுடனும் கேளுங்கள். பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

பொதுக்கூட்டம் ஒரு சர்வகலாசாலை

அதிலும் எவ்வித குழப்பமும் மீட்டிங்கு ஒழுக்கத்துக்கு விரோதமான காரியமும் செய்யாதீர்கள். இன்று உலகம் உள்ள நிலைமையில் நாட்டுக்கு இப்படிப்பட்ட கூட்டங்கள் மாறி மாறி நடக்க வேண்டியதும் நீங்கள் கேட்க வேண்டியதும் மிக்க அவசியமாகும். உங்களுக்கு இக்கூட்டங்கள் ஒரு சர்வகலாசாலை போன்றதாகும். உலக நடப்பையும் மக்கள் யோக்கியதையையும் கண்டறிய ஒரு பரீøை கருவியாகும். பள்ளிக் கூடத்தில் இவைகளைப் படித்து விட முடியாது. பெரிய கலாசாலை பட்டம் பெற்று விடுவதினாலும் இந்தப் படிப்பு வந்து விடாது. உலக கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி பருப்பு காய்கறி செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான். ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகிவிடாது.

நீங்கள் நான் சொல்லுவதைக் கேளுங்கள். ஆனால் உடனே நம்பி விடாதீர்கள். நாளை நமது எதிர் அபிப்பிராயக்காரர்கள் வருவார்கள். அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். இதுதான் எங்கள் ஆரம்பப் பிரார்த்தனை – எங்கள் முதல் வேண்டுகோள்.

சுயமரியாதை இயக்கம்

இன்று சுயமரியாதை இயக்கம் பற்றியும் காங்கரஸ் பற்றியும் பேசுகிறேன். முதலில் நாங்கள் யார்? வயிற்றுப் பிழைப்பு பிரசாரகரல்ல. சுய நலத்துக்கு பதவி மோகத்தால் பிரசாரம் பண்ணுகிறவர்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரசாரத்தில் வயிறுவளர்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் பதவி எனக்கு மிகவும் தூரமானதல்ல. நான் ஒரு வியாபாரியாய் இருந்தவன். கெளரவ பதவிகளில் முனிசிபல் சேர்மெனாய் ஜி.போ., தா.போ. மெம்பராய் மற்றும் பல பதவியிலிருந்து ஒரே கடுதாசியில் 5, 6 பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு காங்கரசில் சேர்ந்தவன். நானும் கனம் ராஜகோபாலாச்சாரியாரும் 18 வருஷங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் பேசியே இருவரும் சேர்மென் பதவிகளை ஏக காலத்தில் ராஜிநாமாச் செய்தோம். அப்பொழுது எனக்கு 27 கெளரவ பதவிகள் இருந்தன. அந்தக்காலத்தில் சேர்மென் வேலைக்கு இருந்த மதிப்பும் கெளரவமும் இந்தக் காலத்தில் மந்திரி வேலைக்குக் கூட இல்லை. இப்போது எவ்வளவு சாதாரண மனிதனும் மந்திரியாகலாம். மந்திரிவேலைக்கு நாணயமோ, செல்வாக்கோ எதுவும் வேண்டியதில்லை என்பதை நீங்கள் பிரத்தியட்சத்திலேயே பார்க்கிறீர்கள். ஆதலால் நான் பதவி வேண்டுமானால் அதற்காக இவ்வளவு பாடுபட வேண்டியதில்லை. நிற்க, நானும் காங்கரசில் கொஞ்ச காலம் இருந்து தேச பக்த – தேசீயவீர பரீøையில் முதல் வகுப்பில் தேறியவன்தான். நான் காங்கரசை விட்டு வரும்போது காங்கரசில் மாகாண காரியதரிசி, தலைவர் ஆகிய பெருமையுள்ள பதவியில் இருந்து வந்தவன். பலபேர் என்னை வருந்தி வருந்தி கூப்பிடக் கூப்பிட திமிறிக்கொண்டு காங்கரசை விட்டு வெளி வந்தவன். இன்றைய தோழர் கனம் ராமநாதனும் மற்றும் பலரும் என் பின் என்னைத் தொடர்ந்து வெளியில் வந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியானவர்.

திருப்பூர் காதிவஸ்திராலயத்தையும், புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தையும், இதே நாமக்கல் கதர்க்கடையையும் இந்தக் கையாலேயே திறந்து வைத்தவன் நான் தான். நான் காங்கரசை விட்டு வெளிவரும்போது “உங்கள் காங்கரஸ் புரட்டுகளை உணர்ந்தே நான் வெளியில் போகிறேன். வெளியில் போய் உங்கள் வண்டவாளங்களை வெளியாக்குகிறேன்” என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தவன். நான் இந்தப்படி சொல்லி வெளியில் வந்து விட்டபிறகும் என்னை மாகாணக் காங்கரஸ் கமிட்டி நிர்வாக சபையில் தெரிந்தெடுத்தார்கள். கதர் சங்கங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். சட்ட சபைக்கு காங்கரஸ் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நிற்கும்படி கனம் ஆச்சாரியாரே வந்து பலதடவை கூப்பிட்டு இருக்கிறார். கனம் ராமநாதன் அவர்கள்தான் என்னை தடுத்து மறுபடியும் காங்கரசுக்கு போகக்கூடாது என்று சொன்னவர். இவை எல்லாம் மாஜி பதிவிரதை கதையல்ல அல்லது மாஜி விவசாரிகளாய் குச்சுக்காரிகளாய் இருந்து கிழடு பாய்ந்து இப்போது கிராக்கி வராது என்று கருதி பதிவிரதை ஆன கதையும் அல்ல. நான் யாரை பதிவிரதைகள் என்று நம்பினேனோ அவர்கள் தாம்பிர நாணய குச்சுக்காரிகள் என்று கண்டு விலகி வந்து பிறகு இங்கு வந்து நின்று பேசும் கதையாகும். இவற்றை தோழர்கள் ராஜ கோபாலாச்சாரியார், கல்யாணசுந்தர முதலியார், எஸ். சீநிவாசய்யங்கார் ஆகியவர்களைக் கேட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ் எச்சிலைகளுக்கு நியாயமாகப் பேசி நான் சொல்லும் விஷயங்களை மறுக்க யோக்கியதை இல்லாமல் அயோக்கியதனமாய் தன்னைப் பெற்ற தாயாருக்கு பண வரும் படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல் கன்னா பின்னா என்று நம்மை வசைபாடுவதன் மூலம் உங்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். நான் காங்கரசால் தள்ளப்பட்டேன் என்றும் பணம் எடுத்துக் கொண்டேன் என்றும் அதனால் காங்கரசை குறை கூறுகிறேன் என்றும் மாஜி பதிவிரதை என்றும் இப்படி பேசுவார்கள். அந்தப் படியே இதே மேடையில் சிலர் பேசினார்களாம். அதற்கு ஆகவே இதை சொல்லுகிறேன். இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இனி சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? காங்கரசு என்றால் என்ன? என்பதை பற்றி தலைவர் கட்டளைப்படி சிறிது பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம்

நான் ஆரம்பத்தில் கூறியபடி முதலில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன்? என்பதைப்பற்றி பேசிவிட்டு பிறகு காங்கரஸ் என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும் கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.

நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் போனதற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதிலும் அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும் உண்மையிலேயே சு.ம. இயக்கம் சிறிதும் ஒளிமறைவில்லாமல் பாடுபடுகிறது.

இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங்களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண்டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சு.ம. இயக்கம் சிறிதும் பின் வாங்காது. இதைப்பற்றிப் பேசும்போது முதலில் மதம் என்று சொல்லப்படுவது எது? கடவுள்கள் என்று சொல்லப்படுபவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது என்ன?

“மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்துக்கும் ஏற்றவிதிகளைக் கொண்டதேயாகும்” என்று சொல்லப் படுமானால் அம்மாதிரி மதங்களைப் பற்றி சு.ம. இயக்கம் அதிக கவலைப்படுவது கிடையாது. அதற்கு சுயமரியாதை இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் “மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்கு ஆக மதம் ஏற்பட்டது” என்றால் அதைப் பற்றியும் சு.ம. இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும். ஏனெனில் அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும் தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து பொது முன்னேற்றத்தையும் சுதந்தரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்க சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான பல மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். “நம்முடைய மதம்” என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.

இந்து மதம்

இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதியாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் பறையன் என்பதாக பிரிவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இந்த 20-வது நூற்றாண்டில் – நேற்று சென்னையில் மகா மேதாவிகளான பி.ஏ.பி.எல் . சாஸ்திரிகள், மகா பண்டித சாஸ்திரிகள் ஒன்று கூடிக்கொண்டு “கீழ் ஜாதியானை மேல் ஜாதியான் தொடுவது என்பது அதாவது தீண்டாமை ஒழிவது என்பது செத்தால் தான் போகுமே ஒழிய இந்த ஜன்மத்தில் ஜாதி பேதம் போக்கடிக்கப்பட முடியாது” என்று பேசியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசி இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும் ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லீம் ஆகாத எந்த பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும் சுதந்தரமும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியது தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்ற உடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய மதம் மக்களுக்கு செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது.

சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம்?

சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல் மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப்பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும் நோகாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்க வில்லையா? உலக செல்வமும் போக போக்கியமும் சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும் சோம்பேறி வாழ்க்கை யாருக்கும் சரீரப்பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும் வயிற்றுச் சோற்று அடிமையாகவும் கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும் பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக்கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

பகுத்தறிவற்ற பò மிருகம் பூச்சி புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

மிருகங்களுக்கு ஜாதி வித்தியாச முண்டா?

கழுதையில், நாயில், குரங்கில், எருமையில் பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை என்றும் பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன? இந்த மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும் சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால் மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மதம் கற்பிக்கும் முட்டாள் தனம்

மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள். செத்துப் பொசுக்கப்பட்டு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும் சுகமடையவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்கு சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? பெற்றோர்களை – இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானுக்கு ஏன் அழுக வேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்கவேண்டும்? இது மதக்கட்டளை, மத தத்துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

கல்யாணம் கருமாதி கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழுகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?

வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாம்சபிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள் மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மதவிரோதிகள் என்று வைவதில் என்ன பிரயோஜனம்? மனிதனுக்கு இன்று இருக்கும் கேவல நிலைக்கு காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதை சொல்லுகிறேன்.

மதத்தால் மக்களைச் சுரண்டிக்கொள்ளை அடித்து நோகாமல் வயிறு வளர்த்து போக போக்கிய மனுபவிக்கும் சோம்பேறி அயோக்கியக் கூட்டம் நம்மை மதத்தை பற்றி சிந்தித்து திருத்துப்பாடு செய்து கொள்ளுவதற்குக் கூட இடம் கொடாமல் நம் ஈன நிலைமைக்கு அரசாங்கத்தை – வெள்ளையரைக் கைகாட்டி விட்டு தப்பித்துக்கொள்ளுகிறது. இது சாமர்த்தியமுள்ள திருடன் திருடிவிட்டு அதோ திருடன் ஓடுகிறான் என்று வேறு ஒருவனைக் கைகாட்டி தப்பித்துக்கொள்ளுவது போலவே இருக்கிறது. நான் சொல்லுவது உங்களில் சிலருக்கு புதிதாய் இருக்கலாம். நீங்கள் இதற்குமுன் இவ்விஷயங்களைப் பற்றி சரியாய் சிந்தித்து இருக்கமாட்டீர்கள் என்றே இவ்வளவு பேசினேன். ஆகவே நாங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறோம்? எந்த மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

இனி நமது கடவுள்கள் என்பதைப்பற்றியும் சிறிது பேசிவிட்டு அரசியலைப்பற்றிப் பேசுகிறேன்.

நமது கடவுள்கள்

இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள் தன்மை

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி தாசி விபசாரித்தனம் ஆகாரம் உறக்கம் புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.

திருவிழா ஆபாசம்

கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20-வது நூற்றாண்டில் செய்யக்கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு மொழக்கு ஆடம்பரம் பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒருமனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?

படையல் யார் வயிற்றில் போகிறது

ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்சந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு உடல் கேடு ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா தீமையா என்று கேட்கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித்தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.

மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக்கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக்கொள்ளுவதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?

கோவில்கள் எதற்கு?

மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை ஐ.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜி திவான்களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.

உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?

இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படியானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை – நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம்நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.

(தொடர்ச்சி 26.12.1937 குடி அரசு “காங்கரசும் அரசியலும்”)

குறிப்பு: 12.12.1937 ஆம் நாள் நாமக்கல் திரையரங்கில் நடைபெற்ற நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 19.12.1937

You may also like...