காங்கரசின் நாசகாலம்

 

கொஞ்ச நேரத்தில் சாகப்போகும் காயலா பிரயாணிக்கு ஒருவித ஜன்னிவந்தால் 10 பேர்பிடித்து அமுக்கினாலும் திமிறிக்கொண்டு கை, கால்களை உதறும்படியான பலம் ஏற்படுவதை நாம் பிரத்தியக்ஷத்தில் காணுகிறோம். அந்தப் பலம் என்பது வியாதியின் கூறும் சாவுகுறியுமே ஆகுமே அல்லாமல் அப்பலத்தினால் அப்பிணியாளிக்கு உயிர் வாழ சவுகரியமோ வேறு யாதொரு காரியமும் செய்ய சாத்தியமோ ஏற்பட்டு விடாது என்பதும் நாமெல்லோரும் அறிந்ததேயாகும்.

அது போலவே காங்கரசுக்கு இன்று சாவுக்குறி ஜன்னி ஏற்பட்டு விட்டது. அந்த ஜன்னிக்கு யாருடைய பேச்சும் அபிப்பிராயமும் மறுப்பும் சிறிதும் லôயம் இல்லாமல் இருக்கிறது இயற்கைதானே. அதற்குக் காரணம் அது பார்ப்பன ஆதிக்கத்தில் பட்டுவிட்டதாலும் பார்ப்பனரல்லாதார்களில் நிபந்தனை அற்ற அடிமைகளாகப் பார்த்து தனக்கு சகாவாக தெரிந்தெடுத்துக் கொண்டதாலும் இப்பொழுது சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம் என்பது போல் காணப்படுகிறது. தமிழ் மக்கள் இதற்காக பயந்துவிட வேண்டிய அவசியமில்லை. வெகு சீக்கிரத்தில் பார்ப்பன ஆதிக்கமும் காங்கரசும் மணல் வீடு சரிவதுபோல் சரிந்து தரை மட்டமாகி விடப்போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. உதாரணமாக காங்கரஸ் ஹிந்தி வாரம் கொண்டாடிய கொண்டாட்டக் கூட்டங்களே அதற்குத் தகுந்த ருஜúவாகும்.

ஹிந்தி வாரம் கொண்டாடப்பட்ட கூட்டங்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்ட கூட்டங்களில் காங்கரஸ்காரர்களுக்குள்ளாகவே கலவரங்கள் நடந்திருப்பதோடு பல கூட்டங்கள் ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களாக மாறிவிட்டதும் ஹிந்தியை மறுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதும் போதுமான ருஜúவாகும்.

இவைகள் போதாது என்று யாராவது கருதுவார்களானால் பிரதம மந்திரி முதல் 10 மந்திரிகளும், அவர்களது 10 காரியதரிசிகளும் செல்லுமிடங்களில் பஹிஷ்கரிக்கப்படும் யோக்கியதைகளும் அவர்கள் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடி தெருவில் நின்று பின்புறம் ஓட்டம் பிடிக்கும் தன்மைகளும் நடுநிலைமையில் இருந்து ஊன்றிப்பார்த்தால் நன்றாய் விளங்கும்.

ஆனால் பொதுப் பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன பத்திரிகைகளும் அவர்களது கால்களை நக்கிப் பிழைக்கும் “குலாம்” பத்திரிகைகளும் உண்மையை சரியாக எழுதுவதில்லை என்பதோடு அப்பத்திரிகைகள் பலவற்றிற்கும் பார்ப்பனர்களே நிருபர்களாய் இருப்பதால் விஷயங்களை திரித்தும் பொய் விஷயங்களை கற்பனை செய்தும் உண்மைகளை வேண்டுமென்றே மறைத்தும் சேதிகள் வெளியாக்கப்படுவதால் பொது ஜனங்கள் உண்மையை அறிய சற்று காலதாமத மேற்பட்டு விடுகிறது.

உதாரணமாக 2 வாரங்களுக்கு முன் ஆம்பூருக்கு ஒரு மந்திரியார் சென்றிருந்த காலத்தில் மந்திரியை வரவேற்க 50 பேர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் 5000 பேர்கள் மந்திரியை பகிஷ்கரிப்பதாகக் கூறிக்கொண்டு கறுப்புக் கொடியுடன் வந்து எதிரில் நின்று தங்கள் மறுப்பை காட்டி இருக்கிறார். இவ்வைபவத்தை ஜில்லா கலெக்டர் அவர்களும் நேரில் இருந்து பார்த்து சர்க்காருக்கும் கவர்னர் பிரபுவுக்கும் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாவது இதை வெளிப்படுத்தவே இல்லை.

அதற்கு அடுத்த வாரம் அதே ஆம்பூருக்கு சுயமரியாதை மகா நாட்டின் பேரால் சென்ற “காங்கரஸ் எதிர்ப்பாளர்களுக்கு” 2-மைல் ஊர்வலமும் 5000க்கணக்கான மக்களின் வரவேற்பும் பூமாலைகளும் ஜே கோஷமும் ஆரவாரமும், மந்திரி சபை ஒழிய, பார்ப்பன சூழ்ச்சி ஒழிய முதலிய சப்தங்கள் வானத்தை இடிக்கவுமான காரியங்களும் நடந்ததை பொதுப் பத்திரிகைகள் என்பவைகள் அடியோடு மறைத்து இருக்கின்றன. இவை பூனை கண்ணை மூக்கொண்டு பால் குடிப்பது போன்ற முட்டாள்தனமான காரியம் என்றுதான் சொல்லப்படுமே தவிர மற்றபடி நடந்த காரியம் உலகம் அறியாமல் போகவோ அதனால் ஏற்படும் பயனை மறைத்து விடவோ ஒருவராலும் முடியப்போவதில்லை. ஆனால் மெயில் பத்திரிகையில் மாத்திரம் (பார்ப்பன சூழ்ச்சியுடன் செய்திகளை வெளியிடப்பட்டிருந்தாலும்) 2 நாள் மகாநாட்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆகவே பார்ப்பன பத்திரிகைகள் செய்திகளை மறைத்து விடுவதாலேயே காங்கரஸ் நிலைமையையும் பார்ப்பன ஆதிக்க கொடுமைகளையும் மக்கள் அறியாமல் செய்து விடலாம் என்று கருதுவது முட்டாள்தனம் என்பதற்கு ஆக இதை எடுத்துக்காட்டுகிறோம்.

மற்றும் ஆம்பூர் சுயமரியாதை மகாநாட்டில் முஸ்லீம்களுடைய ஒத்துழைப்பு மிகவும் பாராட்டக்கூடிய அளவில் இருந்திருக்கிறது.

மாஜி மந்திரி கான்பகதூர் கலிபுல்லா சாயபு எம்.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ. அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகித்து ஆற்றிய சொற்பொழிவில் முஸ்லீம்கள் சு.ம. இயக்கத்தில் சேர்ந்து தொண்டாற்ற வேண்டிய அவசியத்தை தெள்ளத் தெளிய குறிப்பிட்டிருப்பதோடு முஸ்லீம்களுக்கு இந்த காங்கரசும் சிறப்பாக இந்த மந்திரிசபையும் மிகமிக ஆபத்தானது என்பதையும் முடிவுரையில் எடுத்துக்காட்டி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஆம்பூர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் முக்கியமானவை 3 ஆகும். அவை ஹிந்தி மறுப்பு தீர்மானமும் காந்தி கல்வித்திட்ட மறுப்பு தீர்மானமும் வந்தேமாதரப் பாட்டு மறுப்பு தீர்மானமுமாகும். இம்மூன்றிலுமே காங்கரஸ் கண்டிப்பாய் தோல்வி அடையப்போவது நிச்சயம் என்பது நமதபிப்பிராயம். இம்மூன்று முயற்சிகளுமே காங்கரசையும் நாசமாக்கப் போகிறது என்பதும் நமது உறுதி.

காங்கரஸ்காரர்களும் பார்ப்பன மந்திரிகளும் தமிழர்களை நாசமாக்கவும் முஸ்லிம்களை ஒழித்துவிடவும் வருணாச்சிரம ஆட்சியை புனருத்தாரணம் செய்யவும் இந்த சூழ்ச்சியும் நாசகரமுமான திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம் என்றாலும் இம்மூன்று தீர்மானங்களும் அவர்களுக்கே கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வது போன்ற கேடான காரியம் என்பதை மாத்திரம் மறுமுறையும் எச்சரிக்கையோடு வலியுறுத்தி வைக்கிறோம்.

பார்ப்பன சூழ்ச்சி இதுவரை ஒன்றுகூட தவறாமல் வெற்றியடைந்து வந்திருக்கிறதென்றும் எதிர்த்தவர்கள் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்றும் சில பார்ப்பனரும் அவர்களது கூலிகளும் “ஆனந்த விகடன்” போன்ற பத்திரிகைகளும் கூவித் திரிகிறதை நாம் அறிவோம். ஆனாலும் பார்ப்பன சூழ்ச்சிகள் இதுவரை ஒன்று கூட வெற்றியடையவில்லை என்பதை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க நம்மால் முடியும்.

உதாரணமாக பார்ப்பன சூழ்ச்சிகளையும் கொடுமைகளையும் வெட்டவெளிச்சமாய் வெளிப்படுத்தி அறிவுரைக் கொத்து என்னும் புத்தகத்தை பள்ளிப்பாடத்தில் இருந்து எடுத்துவிட பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சநஞ்சமல்ல. அது அவ்வளவும் கடைசியில் ஒரு சிறிதும் பயன்படாமல் செய்யப்பட்டு விட்டது.

மற்றும் தமிழ் பாஷையின் மீது ஆதிக்கம் செலுத்தவும் தமிழ் பாட புத்தகம் முதல் தமிழ் கலைகள் வரை எல்லாவற்றையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ளவும் செய்யப்பட்ட மாபெரும் சூழ்ச்சியாகிய தமிழ் அன்பர்கள் மகாநாடு என்னும் ஒரு பார்ப்பன அன்பர் – ஆரிய அன்பர் – பார்ப்பன அடிமைகளால் கூட்டப்பட்ட ஒரு மகாநாடு, அதற்கு பார்ப்பன அடிமை மந்திரி ஆதரவும், பார்ப்பன அடிமை ராஜா சர். உதவியும், பார்ப்பன தலைவர் மகாகனம் அனுசரணையும் மற்றும் சர்க்கார் தலைவர்கள் கவர்னர்கள் முதல் ஆசீர்வாதமும் இருந்தும் அந்த சூழ்ச்சியானது கர்ப்பத்திலேயே செத்து சத்திர சிகிச்சை (ஆப்ரேஷன்) செய்து வெளியாக்கப்பட வேண்டியிருந்ததும் யார்தான் அறியாதார்?

மற்றும் சமீப காலம் வரை காங்கரஸ் பார்ப்பனர்கள் கனம் ஆச்சாரியார் முதல் தோழர் சத்தியமூர்த்தியார் வரையில் “ஐஸ்டிஸ் கட்சியை வெட்டி 5000 கஜ ஆழத்தில் புதைத்தாய் விட்டது” என்று கூறி பொய் மகிழ்ச்சி காட்டி மக்களை ஏமாற்றி வந்தாலும் ஓடிணஞ் டிண் ஞீஞுச்ஞீ எணிஞீ ண்ச்திஞு tடஞு ஓடிணஞ் என்பது போல அதாவது ராஜா செத்துப் போனார் கடவுள் ராஜாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் போல் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டு விட்டது ஜஸ்டிஸ் கட்சியின் தொல்லை நம்மால் பொறுக்க முடியவில்லை என்று ஆச்சாரியாரும், மூர்த்தியாரும், மற்ற பார்ப்பன கூலிகளும், அவர்களது பத்திரிகைகளும் ஓலமிட்டு ஒப்பாரி அளந்து அழுவதைப் பார்க்கின்ற ஒவ்வொருவருமே ஜஸ்டிஸ் கட்சி செத்துவிட்டதா என்பதை உணரலாம்.

ஒரு கவனிக்கத்தக்க சமாச்சாரம் என்னவெனில் தோழர் சத்திய மூர்த்தியும் கனம் ஆச்சாரியாரும் பொப்பிலி அரசரையோ, சர் உஸ்மானையோ, குமார ராஜா முத்தய்ய செட்டியாரையோ மற்றும் இவர்கள் போன்றவர் களையோ தங்களது ஆரிய புராண சூழ்ச்சி முறையை கையாடிக் கொன்று 5000 கஜ ஆழத்தில் புதைத்து இருக்கலாம் அல்லது அவர்களை வேறு வகையில் வசப்படுத்தி செத்துப் போனவர்கள் போல் வேஷம் போட்டு மற்றவர்களை ஏய்ப்பதற்கு ஆக பிணம் மாதிரி பேச்சு மூச்சில்லாமல் படுகிடையாய் படுத்திருக்கும்படியான சூழ்ச்சி செய்திருக்கலாம். ஆனால் இதனால் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டதாக ஆகிவிடுமா? மற்றும் தோழர் ராமனாதன் போன்றவர்களுக்கு மந்திரி உத்தியோகம் முதலானவைகள் கொடுத்து வசப்படுத்தி தங்கள் வாய் உதடுகளாக்கி தங்கள் இஷ்டப்படி ஆடச் செய்வதினாலேயே சுயமரியாதை இயக்கம் ஒழிந்து போய்விட்டதாகச் சொல்லிவிட முடியுமா? மற்றும் தோழர் தாவுத் ஷா, கனம் யாகூப்ஹாசன் சாயபு, உபயத்துல்லா ஆகியவர்களை வசப்படுத்தி முஸ்லீம்களையே வைய்யச் சொல்வதால் முஸ்லீம் லீக்கு அழிக்கப்பட்டதாக ஆகிவிட முடியுமா?

ஆகவே இதுவரை பார்ப்பனர்கள் தான் தாங்கள் கையாண்ட எந்த சூழ்ச்சிகளிலும் வெற்றி பெறவில்லையே ஒழிய நம்மைப் பொறுத்தவரை நாம் எடுத்துக்கொண்ட எந்த முயற்சியிலும் இதுவரை தோல்வி அடையவில்லை என்பதை கல்லின் மேல் எழுத்துப் போல் காட்டத் தயாராய் இருக்கிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும் முஸ்லீம் லீக்கும் சில தனிப்பட்ட ஆட்களுடையது என்று கருதிக்கொண்டே பார்ப்பனர்கள் தனிப்பட்ட ஆட்களின் மீது பாய்ந்து விஷமப் பிரசாரங்கள் செய்து அந்த ஆட்களுக்கு தொல்லையும் ஹிம்சையும் கொடுப்பதில் பார்ப்பனர்கள் காலத்தைச் செலவழித்து செலவழித்து ஏமாற்றமடைந்து வருகிறார்கள். இது அவர்களது வடிகட்டிய முட்டாள்தனமே யாகும். இம்மூன்று இயக்கங்களும் சில கொள்கைகளை குறைபாடுகளை மனித பொது சமூக முன்னேற்றத்துக்கு ஆன பல சீர்திருத்த முறைகளைக் கொண்டிருப்பவை களாகுமே ஒழிய எந்த தனிப்பட்ட சமூகத்துக்கோ, தனி நபருக்கோ ஆக இருப்பவை அல்ல. இவைகள் வெற்றி பெற்று திருத்தப்பாடு ஆகும்வரை ஆயிரம் பொப்பிலியைக் கொன்றாலும், இரண்டாயிரம் ராமசாமியைக் கொன்றாலும், ஐயாயிரம் ஜின்னாக்களைக் கொன்றாலும் தானாக செத்துத் தீரவேண்டிய இந்த ஆட்கள் ஒரு 10 நாளைக்கு முன் சாகடிக்கப்படலாமே ஒழிய மற்றபடி அக்கொள்கைகளின் அவசியத்தை கொன்றுவிட முடியுமா? என்று கனம் ஆச்சாரியாரை கேட்கின்றோம்.

இன்று காங்கரசும் பார்ப்பனர்களும் தங்களுடைய நாசத்துக்கு மேல் அதிகமான கேடுவிளைவிக்கத் தகுந்த எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த எதிரிகளும் எதிர்க்க எதிர்க்க எதிர்ப்பவர்கள் பலமும் தனக்கே வந்து சேரும்படியான தன்மையுள்ளவர்களாக இருந்து வருகிறார்கள்.

ஆகவே பார்ப்பனர்கள் இனி செத்தை அரித்துக்கொண்டு தான் இருக்க வேண்டுமே ஒழிய குளிர் காய சற்றும் அவர்களுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. எத்தனைதான் மானங்கெட்ட கூலி ஆட்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு நம் மீது ஏவி விட்டாலும் இந்த வேலை ஒழிந்த உடனோ அல்லது தங்களால் இந்த வேலை செய்ய இனி சாத்தியப்படாது என்று தெரிந்த உடனோ அவர்கள் பார்ப்பனர்கள் மீதுதான் பாயக்கூடும். அதாவது பார்ப்பனர்களுக்கு தங்களின் கூலிக்கூட்டத்திலிருந்தே எதிரிகள் பெருகப் போகிறார்கள் என்பதும் உறுதி. ஆகவே மற்ற தோழர் சத்தியமூர்த்தி போன்றார்களைப் பற்றி நாம் கவலைப்பட வில்லையானாலும் தோழர் கனம் ஆச்சாரியார் போன்றவர்களைப் பற்றி உண்மையிலேயே நாம் கவலைப்படுகிறோம். சூழ்ச்சியில் உள்ள நம்பிக்கையை அவர் இனியாவது விட்டுவிடும்படி வேண்டிக்கொள்ளுகிறோம். சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது. (அதாவது வெற்றியும் பயன்படாது) அதாவது சூதாடி சம்பாதிக்கும் பணம் சூதுக்கு அழுகவே சரியாய் இருக்கும் அல்லது சாகும்வரை சூதே ஆடச்சொல்லும்.

மனிதன் பிறந்தான், சூழ்ச்சியில் வல்லவனானான், உலகத்தையே ஏமாற்றும் சக்தி பெற்றான், அப்புறம் என்ன? சூழ்ச்சி விருத்தி உணர்ச்சியிலேயே செத்தான் என்ற முடிவு ஏற்பட்டால் அதுவே மனிதனுக்கு போதுமா?

கனம் ஆச்சாரியார் இனியும் 100 வயது இருந்து சாவதானாலும் சாகும் போது என்ன நிலையில் சாகப்போகிறார். “ஆச்சாரியார் மகா கெட்டிக்காரர், மகா தந்திரசாலி, கவர்னரையும ஏய்க்கும் படியான திறமை வாய்ந்தவர் செத்துப்போய் விட்டார்” என்று தான் மக்கள் சொல்லப் போகிறார்களே ஒழிய வேறு என்ன விதமாய் ஆச்சாரியாரைப் பற்றி மக்கள் பேசும்படி ஆச்சாரியார் இதுவரை நடந்துகொண்டிருக்கிறார் என்று கேட்கிறோம். அல்லது மக்கள் நலனுக்கு இதுவரை என்ன செய்தார் – சொன்னார் என்று கேட்கிறோம். இவ்வளவு புகழத் தக்க புத்தி – அறிவு எதற்குப் பயன்படுத்தப்படுகிறது? அய்யோ பாவம்! அதைப்பற்றிப் பேசுவது பயனற்றதும் “சோம்பேறி வேதாந்தமு”மாகும் என்றே விட்டுவிடுகிறோம்.

ராஜாளிக்கு – கழுகுக்கு கண் சிறிது என்றாலும் அதற்கு ஒருமைல் தூரத்தில் இருந்து கூட நிலத்தில் என்ன சாமான் கிடக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியும். இவ்வளவு சக்தியுள்ள கண்ணைக்கொண்ட அவை என்ன செய்யுமென்றால் கெட்டுப்போன வஸ்து, அழுகின மாம்ஸம், மலம், சக்தியற்ற ஜீவன்களான சிறு உயிர்ப்பிராணி ஆகியவைகளைத்தான் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் கண் சக்தி வேறு திரேகக் கூறான அறிவுச் சக்தி வேறு. இது இயற்கையின் மாண்பு. ஆகையால் இவைகளைப் பற்றியும் பேசுவது மெனக் கேடும் “கோழைத்தன”முமாகும் என்றுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதுடன் விட்டுவிட்டு பொது மக்களுக்கு நாம் ஒன்று கூறி இதை ஒழிக்க முயற்சிக்கிறோம்.

அதாவது “தினமணி” பத்திரிகையில் முதல் தேதி தலையங்கத்தில் மக்களை பலாத்காரத்திற்கு தூண்டிவிட்டு உசுப்படுத்தி இருக்கிறது.

என்னவென்றால் “சில சுயமரியாதைக்காரர்கள் காங்கரஸ் கூட்டங்களில் கலாட்டா செய்ய முயற்சிக்கிறார்களாம். சுயமரியாதைக்காரர்கள் இம்மாதிரி கலாட்டா செய்தால் பொது ஜனங்களுக்கு கோபம் வந்தால் அப்புறம் மோசமான நிலைமை ஏற்பட்டு விடும்” என்று மிரட்டுவதுடன் பலாத்காரத்துக்கு தயாராகும்படி மக்களை தூண்டுகிறது. அப்படிப்பட்ட பலாத்காரம் ஏற்பட்டால் நாம் சிறிது கூட பயப்பட இடமில்லை என்பதோடு இன்னும் அதிகமான வெற்றி மாலையும் சூட்டப்படபோவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அப்படிப்பட்ட கோபம் “பொது ஜனங்களுக்கு” வரும்போது “தினமணி” ஆசிரியர் அடுப்பாங்கரைக்கும் அவருக்கு கூலி கொடுத்து இப்படி எழுதச் செய்கிறவர்களான பார்ப்பனர்கள் கக்கூஸ் குழிக்குள்ளும் போய் ஒளிந்து கொள்ளுவார்கள். அவர்களுக்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. ஆனால் தமிழ்மக்களே ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். இதை உத்தேசித்தே வந்த கூட்டத்திலும் காங்கரஸ் கூலிகள் எவ்வளவு தொல்லையும், காலித்தனமும் செய்தாலும் பலாத்காரம் ஏற்பட இடமில்லாமல் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றே இந்த 15 வருஷ காலமாக கூறியும், எழுதியும் வருகிறோம்.

எப்போதாவது மீறி பலாத்காரம் ஏற்பட்டு விடுமேயானால் அதனால் பார்ப்பன கூலிகளுக்கு ஏதாவது ஹிம்சை ஏற்பட்டுவிடுமானால் அதற்குக் காரணம் “தினமணி” போன்ற பொறுப்பற்ற பத்திரிகையின் விஷமச் செய்கையே ஒழிய மற்றபடி எதிர்ப்புக்காரர்களோ, ஜஸ்டிஸ்காரரோ, சுயமரியாதைக்காரரோ முஸ்லீம்களோ அல்ல என்பதை கவர்னர் பிரபுவுக்கும் மற்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சுயமரியாதைக்காரர்கள் பலாத்காரர்கள் அல்ல என்பதற்கு அனேக உதாரணம் காட்டுவோம்.

தோழர்கள் கனம் ஆச்சாரியார் சத்தியமூர்த்தியார் போன்றவர்கள் பார்ப்பனத் தலைவர்களை நாய்கள், கழுதைகள், துடப்பக்கட்டைகள் ராக்ஷதர்கள், அசுரர்கள் என்று பேசும் போதெல்லாம் கூட சு.ம. காரர்கள் பொறுமையுடன் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அதை சு.ம.காரர்கள் திருப்பிச்சொல்லுவதும் கிடையாது. ஆகவே ஒரு சமூகக் கல்விக்கும் அறிவுக்கும் சுயமரியாதை உணர்ச்சிக்கும் மாறாக ஹிந்தியும் கல்வித்திட்டமும் போட்டுக்கொண்டு இதை மறுக்கக் கூடாது என்றும் மறுப்பின் அறிகுறி கூட காட்டக்கூடாது என்று தடுப்பதும் மற்றவர்கள் மீது பலாத்காரத்துக்கு மக்களை ஏவி விடுவதென்றால் இது ரஷ்ய சார் கொடுமையை விட மோசமான தென்றும் இதனால் யாருடைய முயற்சியும் இல்லாமலும் யாருடைய தடுப்பையும் லôயம் செய்யாமலும் சரணாகதியே அடையவேண்டி வந்துவிடும் என்றும் உண்மையாகவே பயப்படுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 05.12.1937

You may also like...