கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது.

போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது.

கழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள்.

நாகர்கோவில் அணி:

சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன் மாலை 6.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கத்தோடு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. பயணக் குழுத் தோழர்களுக்கு இரவு உணவு சேலம் மாநகரத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் 06.08.2026 மாலை 5.00 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் முதல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஜா. சூசையப்பா தலைமை வகித்தார். குமரி மாவட்டப் பொருளாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். குமரி மாவட்டச் செயலாளர் நீதியரசர் வரவேற்புரை ஆற்றினார். திமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் ஆர். மகேஷ் பரப்புரையைத் துவக்கி வைத்தார்.

கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு ப.இரத்தினசாமி, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழரசன், தமிழ் மதி, கோபிசெட்டிப்பாளையம் ரமேஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, திராவிட தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சங்கர் ஆகியோர் பரப்புரையின் நோக்கத்தை பொதுமக்களிடத்தில் எடுத்துரைத்தனர். நிறைவாக கொளத்தூர் ராஜா நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. பயணக் குழு தோழர்களுக்கு இரவு உணவு திமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் ஏற்பாடு செய்தார். பயணக் குழு தோழர்களுக்கு பயனாடை அணிவித்தார்.

இரண்டாம் நாள்: மக்கள் பேராதரவுடன் நாகர்கோவில் பகுதியில் 07.08.2026 வெள்ளி காலை 10.00 மணிக்கு தக்கலை பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு ஆற்றூர் பகுதியிலும் கூட்டம் நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, பெரியார் தொழிலாளர் கழகத்தின் விவசாய அணித் தலைவர் ரவி ஆகியோர் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக மேட்டூர் சீனி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. பயணக் குழுத் தோழர்களுக்கு உணவு ஏற்பாடுகளை குமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மூன்றாம் நாள்: ஏர்வாடியில் சங்கிகளின் சலசலப்பைத் தகர்த்து பரப்புரை ஆக-8, சனி காலை 10.00 மணிக்கு குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு பணகுடி, மாலை 5.00 மணிக்கு ஏர்வாடி பகுதியில் நடைபெற்றது.

மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பை ஒட்டிய கழகப் பரப்புரைப் பாடலான “ஜாதியும் மதமும் வேர் விட்டு வளருது சனாதானம் நம்மை ஆளத் துடிக்குது” “நூற்றாண்டு கால திருப்பரங்குன்றம் கலவரவம் தொடங்க பார்க்குது சங்கிகள் கூட்டம்” என்ற பாடல் பாடும்போது அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ்- காரர் வேகமாக மேடைக்கு அருகில் வந்து இந்து முஸ்லீம் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்கள் இப்படி பாடக் கூடாது என்றும், அங்கு சுற்றி இருந்தவர்களை வேடிக்கை பார்க்காதீர்கள் இவர்களை விரட்டுங்கள் என்றும் மக்களை நோக்கி அந்த நபர் கலவரத்தை தூண்டும் விதமாக கூச்சலிட்டார். இதற்கு தோழர்கள் உடனடியாக தக்க பதிலடி கொடுத்து, அதன்பிறகு 2 மணி நேரம் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் கடைசி வரை கலையாமல் கை தட்டி உற்சாகப்படுத்தி பெரும் ஆதரவு அளித்தனர்.கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் தலைமை வகித்தார். குமரி மாவட்டச் செயலாளர் நீதி அரசர் முன்னிலை வகித்தார். சுடர் மணி வரவேற்புரை ஆற்றினார். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக கொளத்தூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

பயணக் குழுத் தோழர்களுக்கு காலை உணவு குமரி மாவட்ட நீதியரசர் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு மற்றும் இரவு உணவு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

தோழர்கள் கொளத்தூர் கணேசன், ராஜா தலைமையில் ராமச்சந்திரன், அம்ஜத் கான், கோபிசெட்டிபாளையம் தோழர்கள் துரைசாமி, நடராஜன், மயில்சாமி, கொளத்தூர் குமரேசன், வனவாசி நகர தலைவர் செந்தில் ஆகியோர் கடைவீதி வசூல் மூலம் ரூ.11,137 நிதி திரட்டினர். கழக வெளியீடுகள் ரூ. 2,270 விற்பனையானது. புத்தக விற்பனைப் பணியை தோழர்கள் தங்கதுரை,கோகுல், தேவராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.

அனைத்து பரப்புரைக் கூட்டங்களிலும் ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களை மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன் ஆகியோர் உணர்ச்சியுடன் பாடினர்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், பயண ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் கவியரசு, கொளத்தூர் செந்தமிழ் கலையமுதன், பெரியார் நம்பி, குமரி மாவட்டத் தோழர்கள் சாகுல் ஹமீத், மஞ்சு குமார், ஐசக் ராஜ், திருநெல்வேலி மாவட்டக் கழகத் தோழர்கள் கசமுத்து, தாஸ், முகைதீன், ஜாகிர் உசேன், சுரேஷ், குணசீலன், வெள்ள பாண்டி, நம்பிராஜன், முருகன், திமுக சார்பில் நாகர்கோவில் நகர கிழக்குப் பகுதிச் செயலாளர் துரை, வட்டச் செயலாளர்கள் பாலா, ஜீவா மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம், ஜோனி, ராஜேஷ் ரத்தினமணி, நாஞ்சில் ராஜ், சத்ய சாய்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...